பாடல் #999: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்திற்
பாங்கு படவே பலாசப் பலகையிற்
காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்துவிட்
டோங்காரம் வைத்திடு உச்சாட னத்துக்கே.
விளக்கம்:
வடமேற்கில் சிவபெருமானின் அழிக்கும் முகத்தில் ஒன்றாகிய ஐயனார் கோயிலில் அழகாகத் தெரியும்படி பட்டுப்போகாத பூவரசம் பலகையின் மேல் ஓலையை வைத்து அதை நெருப்பிலிருந்து வரும் புகை மேல் காட்டி முழுவதும் கரி படரும் வரை வைத்து அதன்மேல் விஷத்தினைப் பூச வேண்டும். அதன் பிறகு ஓலை மேல் ஓங்காரம் எழுதி வைத்து மந்திரம் செபித்து வந்தால் உச்சாடனம் எனும் வாக்கு பலிதம் உண்டாகும்.
குறிப்பு: ஐயனார் கோயில் என்பது ஊரின் வட மேற்கு எல்லையைக் குறிக்கும். வாக்கு பலிதம் என்றால் சாதகர் சொல்லும் வார்த்தைகள் அப்படியே நடப்பதாகும்.
