பாடல் #1845

பாடல் #1845: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

சமைய மலசுத்தி தன்செய லற்றிடு
மமையும் விசேடமு மானமந் திரசுத்தி
சமையநிறு வாணங் கலாசுத்தி யாகு
மவைமின்னு ஞான மானாரபி டேகமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சமைய மலசுததி தனசெய லறறிடு
மமையும விசெடமு மானமந திரசுததி
சமையநிறு வாணங கலாசுததி யாகு
மவைமினனு ஞான மானாரபி டெகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சமைய மல சுத்தி தன் செயல் அற்று இடும்
அமையும் விசேடமும் ஆன மந்திர சுத்தி
சமைய நிருவாணம் கலா சுத்தி ஆகும்
அவை மின்னும் ஞானம் ஆனார் அபிடேகமே.

பதப்பொருள்:

சமைய (சமயம் சொல்கின்ற முறைப்படி) மல (அழுக்குகள்) சுத்தி (தம்மை விட்டு நீங்கும் படி) தன் (தமது முனைப்பால் எந்தவிதமான) செயல் (செயலும்) அற்று (செய்வது இல்லாமல்) இடும் (தியானத்தில் வீற்றிருக்கும் உயிர்களுக்கு) மல – அழுக்கு (உதாரணம் தீட்சிதர்கள்)

அமையும் (இறையருளால் தானாகவே வந்து பொருந்துகின்ற) விசேடமும் (மேன்மையுடைது) ஆன (ஆக கிடைப்பது) மந்திர (எண்ணங்களில் எந்தவிதமான அழுக்கும் இல்லாத) சுத்தி (சுத்தமான நிலை ஆகும்) விசேடம் – மேன்மை, சிறப்பு

சமைய (சமயம் சொல்கின்ற முறைப்படி அமைக்கப்பட்ட) நிருவாணம் (முறைகள் அனைத்தும் நீங்கிச் சென்று) கலா (அறிவும்) சுத்தி (சுத்தமாக) ஆகும் (ஆகிவிடும்)

அவை (அப்படிப்பட்ட சுத்தமான நிலையில்) மின்னும் (மிகுந்து நிற்கும்) ஞானம் (உண்மை ஞானம்) ஆனார் (ஆகிவிட்ட அடியவர்களே) அபிடேகமே (இறைவனின் திருமுடியாக விளங்குகின்றார்கள்).

விளக்கம்:

ஆசையாகிய பற்றுக்களால் கட்டி உருவான பிறவியில் தம்மோடு சேர்ந்து இருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான அழுக்குகளும் தம்மை விட்டு நீங்க வேண்டும் என்று தாம் முயன்று எதுவும் செய்யாமல் தியானத்தில் செயல் அற்று இருக்கின்ற அடியவர்களுக்கு இறையருளால் தானாகவே கிடைக்கின்ற மிகவும் மேன்மையான நிலையானது எண்ணங்களிலும், உள்ளிலும், வெளியிலும் எந்தவிதமான அழுக்குகளும் இல்லாமல் சுத்தமாக இருக்கின்ற நிலையாகும். அப்படிப்பட்ட சுத்தமான நிலையில் உண்மை ஞானமாகியது அவர்களிடம் மிகுந்து இருக்கும். அந்த உண்மை ஞானத்தால் இறை நிலையை அடைந்த அடியவர்களே இறைவனின் திருமுடியாக விளங்குகின்றார்கள்.

பாடல் #1844

பாடல் #1844: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

பெருந்தன்மை நந்தி பிணக்கிரு ணேமி
யிருந்தன்மை யாலுமென் னெஞ்சிடங் கொள்ள
வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெருநதனமை நநதி பிணககிரு ணெமி
யிருநதனமை யாலுமென னெஞசிடங கொளள
வருநதனமை யாளனை வானவர தெவர
தருநதனமை யாளனைத தாஙகிநின றெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பெரும் தன்மை நந்தி பிணக்கு இருள் நேமி
இரும் தன்மை ஆலும் என் நெஞ்சு இடம் கொள்ள
வரும் தன்மை ஆளனை வானவர் தேவர்
தரும் தன்மை ஆளனை தாங்கி நின்றேனே.

பதப்பொருள்:

பெரும் (மிகவும் பெருமைக்கு உரிய) தன்மை (இயல்பைக் கொண்ட) நந்தி (குருநாதனாகிய இறைவன்) பிணக்கு (உயிர்கள் தமது வினைகளை அனுபவிக்கும் படி பெருங்கருணை கொண்டு பாசத்தால் கட்டி) இருள் (மாயையாகிய இருள்) நேமி (சூழ்ந்து இருக்கும் படி பிறப்பித்தான்)

இரும் (அவன் எமக்குள் மறைந்து வீற்றிருக்கின்ற) தன்மை (மாபெரும் கருணையாகிய இயல்பை) ஆலும் (அவனருளால் யாம் அறிந்து கொண்டதால்) என் (எமது) நெஞ்சு (நெஞ்சத்தை) இடம் (அவன் விரும்பித் தங்குகின்ற இடமாக) கொள்ள (ஏற்றுக் கொள்ளும் படி செய்து)

வரும் (தானாகவே அடியவர் உள்ளத்திற்குள் விரும்பி வருகின்ற) தன்மை (இயல்பை கொண்டு) ஆளனை (அடியவர்களை அன்பால் ஆளுகின்றவனை) வானவர் (விண்ணுலகத்தில் இருக்கின்ற) தேவர் (தேவர்களுக்கும்)

தரும் (தமது பேரருளை தந்து அருளுகின்ற) தன்மை (இயல்பைக் கொண்டு) ஆளனை (அவர்களையும் ஆளுகின்றவனை) தாங்கி (எமது உள்ளத்திற்குள் ஆதாரமாக தாங்கி) நின்றேனே (நிற்கின்றேன் யாம்).

விளக்கம்:

அனைத்து உயிர்களும் போற்றுகின்ற மாபெரும் பெருமைக்கு உரியதாகிய இயல்பும், அடியவர்களின் உள்ளத்திற்குள் தாமே விரும்பி வருகின்ற இயல்பும், அவர்களைத் தமது பேரன்பினால் ஆட்கொண்டு அருளுகின்ற இயல்பும், விண்ணுலகத்தில் இருக்கின்ற தேவர்களுக்கும் தமது பேரருளைத் தந்து ஆட்கொள்ளுகின்ற இயல்பும் கொண்டு குருநாதனாக விளங்குகின்ற இறைவன், எமது வினைகளை அனுபவிக்கும் பொருட்டு எம்மை பாசத்தால் கட்டி, மாயையாகிய இருள் சூழ்ந்து இருக்கும் படி தமது பெருங்கருணையால் பிறவி எடுக்க செய்தான் என்றாலும் அவனது பேரருளாலேயே எமது உடலுக்குள் அவன் மறைந்து இருக்கின்ற இயல்பைக் காட்டி அருளினான். அதை அறிந்து கொண்டதால் யாமும் எமது நெஞ்சத்தை அவன் விரும்பி வீற்றிருக்கும் இடமாகச் செய்து அங்கே அவனை ஆதாரமாக தாங்கி நிற்கின்றேன்.

பாடல் #1843

பாடல் #1843: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

சாணகத் துள்ளே யழுந்திய மாணிக்கங்
காணு மளவுங் கருத்தறி வாரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாணகத துளளெ யழுநதிய மாணிககங
காணு மளவுங கருததறி வாரிலலை
பெணிப பெருககிப பெருககி நினைவொரககு
மாணிகக மாலை மனமபுகுந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாண் அகத்து உள்ளே அழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்து அறிவார் இல்லை
பேணி பெருக்கி பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம் புகுந்தானே.

பதப்பொருள்:

சாண் (ஒரு சாண் [ஒன்பது அங்குலம்] அளவிற்கு) அகத்து (உடலுக்கு) உள்ளே (உள்ளே) அழுந்திய (புதைந்து மறைவாக இருக்கின்ற) மாணிக்கம் (சிவந்த மாணிக்கமாகிய ஆன்மாவை)

காணும் (அதன் உண்மை நிலையை பார்க்கும்) அளவும் (அளவிற்கும்) கருத்து (அதை உணர்ந்து அறிவதற்கும்) அறிவார் (ஏற்ற உண்மை அறிவு பெற்றவர்கள்) இல்லை (எவரும் இல்லை)

பேணி (அப்படி உண்மை நிலையை உணர்ந்து பார்க்கும் அறிவு பெற்றவர்கள் அதை இறைவனின் அம்சமாக உணர்ந்து போற்றி) பெருக்கி (தமது புறமாகிய உடலையும் உடல் சார்ந்த உணர்வுகளையும் குறைத்து ஆன்மாவின் நிலையை பெரிதாக வெளிவரும் படி) பெருக்கி (அதிகமாக்கி) நினைவோர்க்கு (அதிலேயே தியானித்து இருக்க முடிந்தால்)

மாணிக்க (அவர்களை தமது திருமார்பில் அணிந்து கொள்ளும் மாணிக்க) மாலை (மாலையாக ஏற்றுக்கொண்டு இறைவன்) மனம் (அவர்களின் மனதிற்குள்) புகுந்தானே (புகுந்து வீற்றிருப்பான்).

விளக்கம்:

உயிர்களின் உடலுக்குள்ளே ஒரு சாண் (ஒன்பது அங்குலம்) அளவிற்கு ஆழமாக புதைந்து மறைந்து இருக்கின்ற சிவந்த மாணிக்கமாகிய ஆன்மாவின் உண்மையான நிலையை பார்க்கவும் அதை உணர்ந்து அறிவதற்கும் ஏற்ற உண்மையான அறிவு பெற்றவர்கள் இல்லை. அப்படி உண்மை அறிவைப் பெற்று தமக்குள் புதைந்து மறைந்து இருக்கின்ற ஆன்மாவானது இறைவனின் அம்சமே என்பதை உணர்ந்து, அதைப் போற்றி வணங்கி தமது புற உடலையும் வெளிப்புற உணர்வுகளையும் குறையச் செய்து, தமக்குள்ளே இருக்கும் ஆன்மாவின் அம்சத்தை பெரியதாக்கி வெளிப்படச் செய்து, அதிலேயே தியானித்து இருக்க முடிந்தால், அவர்களை தமது திருமார்பில் அணிந்து கொள்ளும் மாணிக்க மாலையாக ஏற்றுக்கொண்டு இறைவன் அவர்களின் மனதிற்குள் புகுந்து வீற்றிருப்பான்.

பாடல் #1842

பாடல் #1842: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

ஆவிக் கமலத்தினைப் புனத் தின்புற
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடை
தாவிக்கு மந்திரந் தாமறி யாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆவிக கமலததினைப புனத தினபுற
மெவித திரியும விரிசடை நநதியைக
கூவிக கருதிக கொடுபொயச சிவததிடை
தாவிககு மநதிரந தாமறி யாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆவி கமலத்தினை புனத்து இன்பு உற
மேவி திரியும் விரி சடை நந்தியை
கூவி கருதி கொடு போய் சிவத்து இடை
தாவிக்கும் மந்திரம் தாம் அறியாரே.

பதப்பொருள்:

ஆவி (உயிர்களின் உயிர்ப்பு ஆற்றலாகிய) கமலத்தினை (சகஸ்ரதளத்தின் உச்சியில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரினை) புனத்து (சென்று சேரும்படி மூச்சுக்காற்றை கொண்டு சென்று அடைந்து) இன்பு (பேரின்பம்) உற (உருவாகுவதற்கு)
மேவி (அந்த தாமரை மலரின் மேல் பிரகாசமாக திகழும் ஜோதியாக வீற்றிருந்து) திரியும் (அதிலிருந்து அனைத்திற்கும் பரவுகின்ற ஒளிக் கதிர்களைப் போன்ற) விரி (விரிந்த) சடை (சடையைக் கொண்ட) நந்தியை (குரு நாதனாகிய இறைவனை)
கூவி (தாம் செய்கின்ற பூஜையின் மூலம் போற்றிப் புகழ்ந்து அழைத்தும்) கருதி (இறைவன் மேல் எண்ணங்களை வைத்து) கொடு (அந்த எண்ணங்களை கொண்டு) போய் (போய்) சிவத்து (சகஸ்ரதளத்தில் ஜோதியாக வீற்றிருக்கும் இறைவனின்) இடை (இடத்தில்)
தாவிக்கும் (நிலை பெற்று இருக்கும் படி சேர்க்கின்ற) மந்திரம் (மந்திரம் எதுவென்று) தாம் (தாங்கள்) அறியாரே (அறியாமல் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

உயிர்களின் உயிர்ப்பு ஆற்றலாகிய சகஸ்ரதளத்தின் உச்சியில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரினை சென்று சேரும்படி மூச்சுக்காற்றை கொண்டு சென்று அடைந்து, அதன் பயனால் அமிழ்தம் சுரந்து பேரின்பம் உருவாகும் பலனை அனைத்து உயிர்களும் அடைய வேண்டும் என்ற கருணையினால் அந்த தாமரை மலரின் மேல் பிரகாசமாக திகழும் ஜோதியாக வீற்றிருந்து அதிலிருந்து அனைத்திற்கும் பரவுகின்ற ஒளிக் கதிர்களைப் போன்ற விரிந்த சடையைக் கொண்ட குரு நாதனாகிய இறைவன் அமர்ந்து இருக்கின்றான். அந்த இறைவனை தாம் செய்கின்ற பூஜையின் மூலம் போற்றிப் புகழ்ந்து அழைத்தும், இறைவன் மேல் எண்ணங்களை வைத்தும், அந்த எண்ணங்களை கொண்டு போய் சகஸ்ரதளத்தில் ஜோதியாக வீற்றிருக்கும் இறைவனுடன் நிலை பெற்று இருக்கும் படி சேர்க்கின்ற மனதின் திறமைக்கு திறவு கோலாக இருப்பது எதுவென்று தாங்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.

பாடல் #1841

பாடல் #1841: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

சாத்தியும் வைத்துஞ் சயம்புவென் றேத்தியு
மாத்தியை நாளு மிறையை யறிகிலா
ராத்தி மலாகிட்டதற் கழுக்கற்றக் கால்
மாத்திக்கே செல்லும் வழியது வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாததியும வைததுஞ சயமபுவென றெததியு
மாததியை நாளு மிறையை யறிகிலா
ராததி மலாகிடடதற கழுககறறக கால
மாததிககெ செலலும வழியது வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாத்தியும் வைத்தும் சயம்பு என்று ஏத்தியும்
ஆத்தியை நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மல் ஆக்கு இட்டு அதற்கு அழுக்கு அற்ற கால்
மா திக்கே செல்லும் வழி அது ஆமே.

பதப்பொருள்:

சாத்தியும் (நறுமணமிக்க மலர்களை அணிவித்தும்) வைத்தும் (அறுசுவை உணவு படைத்தும்) சயம்பு (தானாகவே தோன்றிய மூர்த்தி) என்று (என்று) ஏத்தியும் (போற்றி வணங்கியும்)
ஆத்தியை (அடைவதற்கு மிகப் பெரும் செல்வமாகியவனை) நாளும் (தினம் தோறும் பூஜை செய்தும்) இறையை (இறைவனை) அறிகிலார் (யாரும் அறிந்து கொள்வது இல்லை)
ஆத்தி (உலக பற்றுக்களில் உள்ள ஆசையுடன்) மல் (மன உறுதியோடு போர் புரிந்து) ஆக்கு (அந்த ஆசைகளை பக்தியாக மாற்றி) இட்டு (இறைவன் மேல் எண்ணங்களை வைத்து) அதற்கு (அந்த எண்ணங்களில்) அழுக்கு (எந்தவிதமான மாசும்) அற்ற (இல்லாமல் போகும்) கால் (காலத்தில்)
மா (சென்று அடைவதற்கு மிகப்பெரிய) திக்கே (திசையாகிய முக்திக்கு) செல்லும் (செல்லுகின்ற) வழி (வழியாக) அது (அதுவே) ஆமே (ஆகி விடும்).

விளக்கம்:

நறுமணமிக்க மலர்களை அணிவித்தும், அறுசுவை உணவு படைத்தும், தானாகவே தோன்றிய மூர்த்தி என்றுபோற்றி வணங்கியும், தினம் தோறும் பூஜை செய்தும் அடைவதற்கு மிகப் பெரும் செல்வமாகிய இறைவனை யாரும் அறிந்து கொள்வது இல்லை. அதற்கு காரணம் உலகப் பற்றுக்களில் சிக்கி இறைவன் மேல் முழு பக்தி இல்லாமல் போவதே ஆகும். ஆகவே, உலக பற்றுக்களில் உள்ள ஆசைகளோடு மன உறுதியுடன் போர் புரிந்து அந்த ஆசைகளை பக்தியாக மாற்றி இறைவன் மேல் போகும் படி எண்ணங்களை வைத்து வந்தால் ஓரு காலத்தில் அந்த எண்ணங்களில் எந்தவிதமான மாசும் இல்லாமல் போகும். அப்போது சென்று அடைவதற்கு மிகப்பெரிய திசையாகிய முக்திக்கு செல்லுகின்ற வழியாக அதுவே ஆகி விடும்.

பாடல் #1840

பாடல் #1840: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

வென்று விரைந்து விரைபணி யென்றனர்
நின்று பொருந்த யிறைப்பணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடிற்
கொன்றிடு நித்தலுங் கூறிய தன்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெனறு விரைநது விரைபணி யெனறனர
நினறு பொருநத யிறைபபணி நெரபடத
துனறு சலமலர தூவித தொழுதிடிற
கொனறிடு நிததலுங கூறிய தனறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வென்று விரைந்து விரை பணி என்றனர்
நின்று பொருந்த இறை பணி நேர் பட
துன்று சல மலர் தூவி தொழுதிடில்
கொன்று இடும் நித்தலும் கூறியது அன்றே.

பதப்பொருள்:

வென்று (ஐந்து புலன்களினால் ஆசை மயக்கத்தை வென்று) விரைந்து (வாழ்க்கைக்கு உடனடியாக செய்ய வேண்டியது) விரை (நறுமணம் மிக்க தூபத்தை காட்டி) பணி (இறைவனுக்கு தொண்டு செய்வதே) என்றனர் (என்று சான்றோர்கள் சொன்னார்கள்)
நின்று (இறைவன் மேல் கொண்ட பக்தியில் தன்னையே மறந்து நின்று) பொருந்த (மனம் இறைவனோடு பொருந்தி இருக்க) இறை (இறைவனுக்கான) பணி (பூஜைகளை) நேர் (சிறிதும் தவறாமல்) பட (நிகழும் படி)
துன்று (இறைவனோடு பொருந்தி) சல (தூய்மையான நீரால் அபிஷேகம் செய்து) மலர் (காலைப் பனி பூத்திருக்கும் நறுமணம் மிக்க மலர்களை) தூவி (தூவி அருச்சனை செய்து) தொழுதிடில் (தொழுது வந்தால்)
கொன்று (இறையருளானது வினைகளை கொன்று) இடும் (நீக்கிவிடும்) நித்தலும் (தினம்தோறும்) கூறியது (என்று சான்றோர்கள் சொன்னது) அன்றே (முன் காலத்தில் ஆகும்).

விளக்கம்:

ஐந்து புலன்களின் வழியே செல்லும் ஆசைகளில் சிக்கிச் சுழலாமல் அதை மன உறுதியால் வென்று மனித வாழ்க்கையில் உடனடியாக செய்ய வேண்டியது இறைவனுக்கு தூப தீபங்கள் காட்டி வழிபடுவதே என்று சான்றோர்கள் சொல்லுவார்கள். அவர்கள் சொல்லியபடி இறைவன் மேல் கொண்ட பக்தியில் தன்னையே மறந்து இறைவனோடு தம் மனமும் பொருந்தி இருக்கும் படி நின்று தூய்மையான நீரால் அபிஷகம் செய்தும் காலைப் பனி பூத்திருக்கும் நறுமணம் மிக்க மலர்களால் அருச்சனை செய்தும் தினந்தோறும் இறைவனை தொழுது வந்தால் இறைவனது திருவருளானது அடியவர்களின் வினைகளை அழித்து நீக்கிவிடும். இதை முன் காலத்திலேயே சான்றோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

பாடல் #1839

பாடல் #1839: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

உழைக்கு முன்னே நெடுநீர் மலரேந்திப்
பிழைப்பின்றி யீசன் பெருந்தவம் பேணி
யிழைக்கொண்ட பாதத் தினமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உழைககு முனனெ நெடுநீர மலரெநதிப
பிழைபபினறி யீசன பெருநதவம பெணி
யிழைககொணட பாதத தினமலர தூவி
மழைககொணடல பொலவெ மனனிநில லீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உழைக்கும் முன்னே நெடு நீர் மலர் ஏந்தி
பிழைப்பு இன்றி ஈசன் பெரும் தவம் பேணி
இழை கொண்ட பாதத்து இன மலர் தூவி
மழை கொண்டல் போலவே மன்னி நில்லீரே.

பதப்பொருள்:

உழைக்கும் (காலையில் எழுந்த பிறகு தங்களின் தொழில் செய்வதற்கு) முன்னே (முன்பு) நெடு (அவசரமின்றி நிதானமாக) நீர் (தூய்மையான நீரையும்) மலர் (நறுமணமிக்க மலர்களையும்) ஏந்தி (இரு கைகளில் ஏந்திக் கொண்டு)
பிழைப்பு (எந்தவிதமான குற்றமும்) இன்றி (இல்லாமல்) ஈசன் (இறைவனை சிரத்தையோடு பூசை செய்கின்ற) பெரும் (மிகப்பெரும்) தவம் (தவத்தை) பேணி (ஒரு நாளும் தவறாமல் கடைபிடித்து)
இழை (அழகிய சிலம்புகளை) கொண்ட (அணிந்து கொண்டு இருக்கின்ற) பாதத்து (இறைவனின் திருவடிகளுக்கு) இன (ஒரே வகையான) மலர் (நறுமலர்களை) தூவி (தூவி அருச்சனை செய்து)
மழை (மழை பொழிகின்ற) கொண்டல் (கருத்த மேகத்தை) போலவே (போலவே தூய்மையான நீரால் அபிஷேகம் செய்து) மன்னி (நிலையாக) நில்லீரே (நில்லுங்கள்).

விளக்கம்:

காலையில் எழுந்த பிறகு தங்களின் தொழில் செய்வதற்கு முன்பு அவசரமின்றி நிதானமாக தூய்மையான நீரையும் நறுமணமிக்க மலர்களையும் இரு கைகளில் ஏந்திக் கொண்டு, எந்தவிதமான குற்றமும் இல்லாமல் இறைவனை சிரத்தையோடு பூசை செய்கின்ற மிகப்பெரும் தவத்தை ஒரு நாளும் தவறாமல் கடைபிடித்து, அழகிய சிலம்புகளை அணிந்து கொண்டு இருக்கின்ற இறைவனின் திருவடிகளுக்கு ஒரே வகையான நறுமலர்களை தூவி அருச்சனை செய்து, மழை பொழிகின்ற கருத்த மேகத்தை போலவே தூய்மையான நீரால் அபிஷேகம் செய்து நிலையாக நில்லுங்கள்.

உட் கருத்து:

இறைவனுடைய திருவடிகளில் எப்போதும் இழைந்து (உராய்ந்து) கொண்டே இருக்கின்ற அழகிய சிலம்புகளைப் போலவே அடியவர்கள் தங்களின் மனதிற்குள் இறைவனின் திருவடிகளை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பது ஒரு மிகப் பெரிய தவம் ஆகும். அந்த தவத்தை சிரத்தையோடு இடைவிடாது கடை பிடித்தால் கருமையான மேகங்களுக்குள் மழை நீர் மறைந்து இருப்பது போலவே அடியவரது எண்ணத்திற்குள் இறைவனின் திருவருளானது எப்போதும் நிறைந்து நிற்கும்.

பாடல் #1838

பாடல் #1838: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

தேவர்க ளோடிசை வந்துமண் ணாடோறும்
பூவோடு நீர்சுமந் தேத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தெவரக ளொடிசை வநதுமண ணாடொறும
பூவொடு நீரசுமந தெததிப புனிதனை
மூவரிற பனமை முதலவனாய நினறருள
நீரமையை யாவர நினைககவல லாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தேவர்களோடு இசை வந்து மண் நாள் தோறும்
பூவோடு நீர் சுமந்து ஏத்தி புனிதனை
மூவரில் பன்மை முதல்வன் ஆய் நின்று அருள்
நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே.

பதப்பொருள்:

தேவர்களோடு (விண்ணுலகத்தில் வாழும் தேவர்களின் அம்சமாகிய அடியவர்களோடு சேர்ந்து நின்று) இசை (அவர்கள் இசைக்கின்ற பலவித மந்திரங்களாகிய பாடல்களை) வந்து (மனம் ஒன்றிப் பாடி) மண் (இந்த மண்ணுலகில்) நாள் (தினம்) தோறும் (தோறும்)
பூவோடு (நறுமணம் மிக்க மலர்களோடு) நீர் (தூய்மையான நீரையும்) சுமந்து (கைகளில் எடுத்து வந்து) ஏத்தி (போற்றி துதித்து) புனிதனை (தூய்மையானவனாகிய இறைவனை)
மூவரில் (பிரம்மன், திருமால், உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளில்) பன்மை (பலவித தன்மைகள் கொண்டவனைப் போல பிரிந்து இருந்தாலும்) முதல்வன் (அனைத்திற்கும் முதல்வன்) ஆய் (ஆகவே) நின்று (நின்று) அருள் (திருவருள் புரிகின்றவனின்)
நீர்மையை (பெருங் கருணை குணத்தை) யாவர் (எவர்) நினைக்க (நினைத்து பார்க்கும்) வல்லாரே (வல்லமை பெற்றவர்களாக இருக்கின்றார்கள்?).

விளக்கம்:

விண்ணுலகத்தில் வாழும் தேவர்களின் அம்சமாகிய அடியவர்களோடு சேர்ந்து நின்று, அவர்கள் இசைக்கின்ற பலவித மந்திரங்களாகிய பாடல்களை மனம் ஒன்றிப் பாடி, இந்த உலகத்தில் தினம் தோறும் நறுமணம் மிக்க மலர்களோடு தூய்மையான நீரையும் கைகளில் எடுத்து வந்து, தூய்மையானவனாகிய இறைவனை போற்றி துதித்து, பிரம்மன், திருமால், உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளாக தனித்தனி தன்மைகளோடு பிரிந்து இருந்தாலும் அனைத்திற்கும் முதல்வனாகவே நின்று திருவருள் புரிகின்ற இறைவனின் பெருங் கருணை குணத்தை நினைத்து பார்க்கும் வல்லமை பெற்றவர்கள் யார்?

பாடல் #1837

பாடல் #1837: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்
றார்த்தெம தீசனருட் சேவடி யென்றன்
மூர்த்தியை மூவா முதலுரு வாய்நின்ற
தீர்த்தனை யாருந் திதித்துண ராரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஏததுவர மாமலர தூவித தொழுதுநின
றாரததெம தீசனருட செவடி யெனறன
மூரததியை மூவா முதலுரு வாயநினற
தீரததனை யாருந திதிததுண ராரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏத்துவர் மா மலர் தூவி தொழுது நின்று
ஆர்த்து எமது ஈசன் அருள் சேவடி என்றன்
மூர்த்தியை மூவா முதல் உரு ஆய் நின்ற
தீர்த்தனை யாரும் திதித்து உணராரே.

பதப்பொருள்:

ஏத்துவர் (இறைவனை போற்றி துதித்து) மா (நறுமணம் மிக்க) மலர் (மலர்களை) தூவி (தூவி) தொழுது (அருச்சனை செய்து) நின்று (கை கூப்பி நின்று)
ஆர்த்து (பெரும் கூச்சலிட்டு) எமது (எமது பெருமானாகிய) ஈசன் (இறைவனின்) அருள் (திருவருள் வேண்டி) சேவடி (அவனின் சிவந்த திருவடியை வணங்குவார்கள்) என்றன் (எமது)
மூர்த்தியை (தலைவனாகிய இறைவனை) மூவா (முதுமை என்பதே இல்லாதவனை) முதல் (அனைத்திற்கும் முதலான ஆதியின்) உரு (வடிவம்) ஆய் (ஆகவே) நின்ற (நின்று அருள்கின்றவனை)
தீர்த்தனை (பரிசுத்தமான புண்ணியனை) யாரும் (எவரும்) திதித்து (தமது ஆசைகளையும் புலன்களையும் அடக்கி ஒழுக்கத்தை கடைபிடித்து) உணராரே (உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

இறைவனின் திருவருளை வேண்டி போற்றி துதித்து, நறுமணம் மிக்க மலர்களை தூவி அருச்சனை செய்து, கை கூப்பி நின்று, திருநாமத்தை சொல்லி பெரும் கூச்சலிட்டு இறைவனின் சிவந்த திருவடிகளை வணங்குகின்றார்கள். ஆனால் எமது தலைவனும், அனைத்திற்கும் முதல்வனும், முதுமை என்பதே இல்லாதவனும், அனைத்திற்கும் முதலான ஆதியின் வடிவமாகவும் இருக்கின்ற பரிசுத்தமான புண்ணியனாகிய இறைவனை தமது ஆசைகளையும் புலன்களையும் அடக்கி ஒழுக்கத்தை கடைபிடித்து உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

பாடல் #1836

பாடல் #1836: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்கரன் றானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யானடி சேர
வயனங்க ளாலென்றும் வந்துநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பயனறி வொனறுணடு பனமலர தூவிப
பயனறி வாரககரன றானெ பயிலும
நயனஙகள மூனறுடை யானடி செர
வயனஙக ளாலெனறும வநதுநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பயன் அறிவு ஒன்று உண்டு பன் மலர் தூவி
பயன் அறிவார்க்கு அரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்று உடையான் அடி சேர
வயனங்கள் ஆல் என்றும் வந்து நின்றானே.

பதப்பொருள்:

பயன் (பூஜை செய்து பெறுகின்ற பலன்களைப் பற்றிய) அறிவு (அறிவு) ஒன்று (ஒன்று) உண்டு (இருக்கின்றது அதை பெறுவதற்கு) பன் (பலவிதமான) மலர் (நறுமணம் மிக்க மலர்களைத்) தூவி (தூவி அருச்சனை செய்து)
பயன் (அதன் மூலம் பெறுகின்ற நற்பலன்களை) அறிவார்க்கு (அறிந்து கொள்கின்றவர்களுக்கு) அரன் (இறைவன்) தானே (தாமாகவே) பயிலும் (படிப்படியாக அனுபவங்களைக் கொடுத்து அருள்வான்)
நயனங்கள் (திருக் கண்கள்) மூன்று (மூன்று) உடையான் (உடைய இறைவனின்) அடி (திருவடியை) சேர (முழுவதுமாக சரணடைய)
வயனங்கள் (அவர்கள் எந்த வகையில் வழிபடுகின்றார்களோ அந்த வகையின்) ஆல் (மூலமே) என்றும் (எப்போதும்) வந்து (இறைவன் அடியவருக்குள் வந்து) நின்றானே (நிற்பான்).

விளக்கம்:

பூஜை செய்து பெறுகின்ற பலன்களைப் பற்றிய அறிவு ஒன்று உண்டு. பல விதமான நறுமணம் மிக்க மலர்களை தூவி இறைவனுக்கு அருச்சனை செய்வதன் மூலம் பெறுகின்ற நற்பலன்களை அறிந்து கொள்கின்ற அடியவர்களுக்கு இறைவன் தாமாகவே படிப்படியாக பல அனுபவங்களை கொடுத்து அருள்வான். மூன்று கண்களைக் கொண்ட இறைவனின் திருவடியே கதியென்று முழுவதுமாக சரணடைந்த அடியவர்களுக்கு அவர்கள் எந்த வகையில் வழிபடுகின்றார்களோ அந்த வகையிலேயே இறைவன் வந்து நிற்பான்.