பாடல் #1845: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)
சமைய மலசுத்தி தன்செய லற்றிடு
மமையும் விசேடமு மானமந் திரசுத்தி
சமையநிறு வாணங் கலாசுத்தி யாகு
மவைமின்னு ஞான மானாரபி டேகமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சமைய மலசுததி தனசெய லறறிடு
மமையும விசெடமு மானமந திரசுததி
சமையநிறு வாணங கலாசுததி யாகு
மவைமினனு ஞான மானாரபி டெகமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சமைய மல சுத்தி தன் செயல் அற்று இடும்
அமையும் விசேடமும் ஆன மந்திர சுத்தி
சமைய நிருவாணம் கலா சுத்தி ஆகும்
அவை மின்னும் ஞானம் ஆனார் அபிடேகமே.
பதப்பொருள்:
சமைய (சமயம் சொல்கின்ற முறைப்படி) மல (அழுக்குகள்) சுத்தி (தம்மை விட்டு நீங்கும் படி) தன் (தமது முனைப்பால் எந்தவிதமான) செயல் (செயலும்) அற்று (செய்வது இல்லாமல்) இடும் (தியானத்தில் வீற்றிருக்கும் உயிர்களுக்கு) மல – அழுக்கு (உதாரணம் தீட்சிதர்கள்)
அமையும் (இறையருளால் தானாகவே வந்து பொருந்துகின்ற) விசேடமும் (மேன்மையுடைது) ஆன (ஆக கிடைப்பது) மந்திர (எண்ணங்களில் எந்தவிதமான அழுக்கும் இல்லாத) சுத்தி (சுத்தமான நிலை ஆகும்) விசேடம் – மேன்மை, சிறப்பு
சமைய (சமயம் சொல்கின்ற முறைப்படி அமைக்கப்பட்ட) நிருவாணம் (முறைகள் அனைத்தும் நீங்கிச் சென்று) கலா (அறிவும்) சுத்தி (சுத்தமாக) ஆகும் (ஆகிவிடும்)
அவை (அப்படிப்பட்ட சுத்தமான நிலையில்) மின்னும் (மிகுந்து நிற்கும்) ஞானம் (உண்மை ஞானம்) ஆனார் (ஆகிவிட்ட அடியவர்களே) அபிடேகமே (இறைவனின் திருமுடியாக விளங்குகின்றார்கள்).
விளக்கம்:
ஆசையாகிய பற்றுக்களால் கட்டி உருவான பிறவியில் தம்மோடு சேர்ந்து இருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான அழுக்குகளும் தம்மை விட்டு நீங்க வேண்டும் என்று தாம் முயன்று எதுவும் செய்யாமல் தியானத்தில் செயல் அற்று இருக்கின்ற அடியவர்களுக்கு இறையருளால் தானாகவே கிடைக்கின்ற மிகவும் மேன்மையான நிலையானது எண்ணங்களிலும், உள்ளிலும், வெளியிலும் எந்தவிதமான அழுக்குகளும் இல்லாமல் சுத்தமாக இருக்கின்ற நிலையாகும். அப்படிப்பட்ட சுத்தமான நிலையில் உண்மை ஞானமாகியது அவர்களிடம் மிகுந்து இருக்கும். அந்த உண்மை ஞானத்தால் இறை நிலையை அடைந்த அடியவர்களே இறைவனின் திருமுடியாக விளங்குகின்றார்கள்.









