பாடல் #1738

பாடல் #1738: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

தத்துவ மாவ தருவஞ் சராசரந்
தத்துவ மாவ துருவஞ் சுகோதைய
தத்துவ மெல்லாஞ் சகலமு மாய்நிற்குந்
தத்துவ மாகுஞ் சதாசிவந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தததுவ மாவ தருவஞ சராசரந
தததுவ மாவ துருவஞ சுகொதைய
தததுவ மெலலாஞ சகலமு மாயநிறகுந
தததுவ மாகுஞ சதாசிவந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தத்துவம் ஆவது அருவம் சராசரம்
தத்துவம் ஆவது உருவம் சுகோதையம்
தத்துவம் எல்லாம் சகலமும் ஆய் நிற்கும்
தத்துவம் ஆகும் சதா சிவம் தானே.

பதப்பொருள்:

தத்துவம் (முப்பத்தாறு தத்துவங்கள்) ஆவது (ஆக இருப்பதே) அருவம் (உருவம் இல்லாமல்) சராசரம் (அசையும் பொருள் அசையாத பொருள் என்று அனைத்திலும் இருக்கின்றது)
தத்துவம் (முப்பத்தாறு தத்துவங்கள்) ஆவது (ஆக இருப்பதே) உருவம் (உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உருவம் கொடுத்து) சுகோதையம் (அவை இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது)
தத்துவம் (முப்பத்தாறு தத்துவங்கள்) எல்லாம் (எல்லாமே) சகலமும் (அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்தும்) ஆய் (ஆக) நிற்கும் (நிற்கின்றது)
தத்துவம் (முப்பத்தாறு தத்துவங்கள்) ஆகும் (ஆக இருப்பதே) சதா (சதா) சிவம் (சிவப் பரம்பொருள்) தானே (தான் ஆகும்).

விளக்கம்:

உருவம் இல்லாமல் அசையும் பொருள் அசையாத பொருள் என்று அனைத்திலும் இருப்பதும், உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உருவம் கொடுத்து அவை இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்கு ஆதாரமாக இருப்பதும், அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்துமாகவும் இருப்பதே முப்பத்தாறு தத்துவங்களாகும். இந்த முப்பத்தாறு தத்துவங்களாகவும் இருப்பது சதா சிவப் பரம்பொருளே ஆகும்.

பாடல் #1737

பாடல் #1737: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

சத்தி தராதல மண்டஞ் சதாசிவஞ்
சத்தி சிவமிக்க தாபர சங்கமஞ்
சத்தி யுருவ மருவஞ் சதாசிவஞ்
சத்தி சிவந்தத்துவ முப்பத்து ஆறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததி தராதல மணடஞ சதாசிவஞ
சததி சிவமிகக தாபர சஙகமஞ
சததி யுருவ மருவஞ சதாசிவஞ
சததி சிவநதததுவ முபபதது ஆறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தி தராதலம் அண்டம் சதா சிவம்
சத்தி சிவம் மிக்க தாபரம் சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதா சிவம்
சத்தி சிவம் தத்துவம் முப்பத்து ஆறே.

பதப்பொருள்:

சத்தி (சக்தி) தராதலம் (பூமியாகிய நிலத்திலும்) அண்டம் (அண்டமாகிய ஆகாயத்தில்) சதா (சதா) சிவம் (சிவப் பரம்பொருளும் இருக்கின்றார்கள்)
சத்தி (சக்தியும்) சிவம் (சதாசிவப் பரம்பொருளும்) மிக்க (பரிபூரணமாக) தாபரம் (சதாசிவ இலிங்கத்தில்) சங்கமம் (ஒன்றாக சேர்ந்து இருக்கின்றார்கள்)
சத்தி (சக்தி) உருவம் (உருவமாகவும்) அருவம் (அருவமாக) சதா (சதா) சிவம் (சிவப் பரம்பொருளும் இருக்கின்றார்கள்)
சத்தி (சக்தியும்) சிவம் (சிவமும்) தத்துவம் (தத்துவங்கள்) முப்பத்து (முப்பத்து) ஆறே (ஆறாகவும் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

சக்தி பூமியாகிய நிலத்திலும் சதாசிவப் பரம்பொருள் அண்டமாகிய ஆகாயத்தில் இருக்கின்றார்கள். சக்தியும் சதாசிவப் பரம்பொருளும் பரிபூரணமாக சதாசிவ இலிங்கத்தில் ஒன்றாக சேர்ந்து இருக்கின்றார்கள். சக்தி உருவமாகவும் சதாசிவப் பரம்பொருள் அருவமாகவும் இருக்கின்றார்கள். சக்தியும் சிவமும் முப்பத்தாறு தத்துவங்களாகவும் இருக்கின்றார்கள்.

பாடல் #1736

பாடல் #1736: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

அஞ்சு முகமுள வைம்மூன்று கண்ணுள
வஞ்சி னோடைந்து கரதலந் தானுள
வஞ்சி னோடைஞ் சாயுதமுள நம்பியென்
னெஞ்சுள் புகுந்து நிறைந்துநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அஞசு முகமுள வைமமூனறு கணணுள
வஞசி னொடைநது கரதலந தானுள
வஞசி னொடைஞ சாயுதமுள நமபியென
னெஞசுள புகுநது நிறைநதுநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அஞ்சு முகம் உள ஐம் மூன்று கண் உள
அஞ்சினோடு ஐந்து கரதலம் தான் உள
அஞ்சினோடு ஐஞ்சு ஆயுதம் உள நம்பி என்
நெஞ்சு உள் புகுந்து நிறைந்து நின்றானே.

பதப்பொருள்:

அஞ்சு (சதா சிவப் பரம்பொருளுக்கு ஐந்து) முகம் (திருமுகங்கள்) உள (உள்ளது) ஐம் (அந்த ஐந்து திருமுகங்களிலும்) மூன்று (முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து) கண் (திருக்கண்கள்) உள (உள்ளது)
அஞ்சினோடு (ஐந்து திருமுகங்களோடு சேர்ந்து ஐந்தும்) ஐந்து (ஐந்தும் கூட்டி மொத்தம்) கரதலம் (பத்து திருக்கரங்கள்) தான் (அவருக்கு) உள (உள்ளது)
அஞ்சினோடு (ஐந்து திருமுகங்களோடு சேர்ந்து ஐந்தும்) ஐஞ்சு (ஐந்தும் கூட்டி மொத்தம்) ஆயுதம் (பத்து திருக்கரங்களிலும் பத்து விதமான ஆயுதங்கள் தம் அடியவரைக் காக்கின்ற கருவிகளாக) உள (உள்ளது) நம்பி (இவ்வாறு சதாசிவ இலிங்கமாக இருக்கின்ற இறைவன் தம்மை நம்புகின்ற) என் (அடியவர்களின்)
நெஞ்சு (நெஞ்சத்திற்கு) உள் (உள்ளே) புகுந்து (புகுந்து) நிறைந்து (முழுவதுமாக நிறைந்து) நின்றானே (நிற்கின்றான்).

விளக்கம்:

சதா சிவப் பரம்பொருளுக்கு ஐந்து திருமுகங்கள் உள்ளது. அந்த ஐந்து திருமுகங்களிலும் முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து திருக்கண்கள் உள்ளது. அவருக்கு பத்து திருக்கரங்கள் உள்ளது. அந்த பத்து திருக்கரங்களிலும் பத்து விதமான ஆயுதங்கள் தம் அடியவரைக் காக்கின்ற கருவிகளாக உள்ளது. இவ்வாறு சதாசிவ இலிங்கமாக இருக்கின்ற இறைவன் தம்மை நம்புகின்ற அடியவர்களின் நெஞ்சத்திற்கு உள்ளே புகுந்து முழுவதுமாக நிறைந்து நிற்கின்றான்.

திருமந்திரத்தில் சைவம் – பகுதி 1

திருமந்திரத்தில் சைவம் – பகுதி 1 எனும் தலைப்பைப் பற்றி திருமந்திரத் திண்ணை எனும் குழுவில் Zoom நேரலையில் 19-08-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமந்திரத்தில் சைவம் – பகுதி 2

திருமந்திரத்தில் சைவம் – பகுதி 2 எனும் தலைப்பைப் பற்றி திருமந்திரத் திண்ணை எனும் குழுவில் Zoom நேரலையில் 16-09-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமந்திரத்தில் வேடம்

“திருமந்திரத்தில் வேடம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 18-06-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

பாடல் #1735

பாடல் #1735: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

நடுவு கிழக்குத் தெற்குத்தர மேற்கு
நடுவு படிகநற் குங்கும வன்ன
மடைவுள வஞ்சனஞ் செவ்வரத் தம்பா
லடியற் கருளிய முகமிவை யைந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நடுவு கிழககுத தெறகுததர மெறகு
நடுவு படிகநற குஙகும வனன
மடைவுள வஞசனஞ செவவரத தமபா
லடியற கருளிய முகமிவை யைநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நடுவு கிழக்கு தெற்கு உத்தர மேற்கு
நடுவு படிக நல் குங்கும வன்னம்
அடைவு உள அஞ்சனம் செவ் அரத்தம் பால்
அடியற்கு அருளிய முகம் இவை ஐந்தே.

பதப்பொருள்:

நடுவு (நடுவில் மேல் நோக்கி இருக்கின்ற ஈசானம் முகம்) கிழக்கு (கிழக்கு நோக்கி இருக்கின்ற தற்புருடம் முகம்) தெற்கு (தெற்கு நோக்கி இருக்கின்ற அகோரம் முகம்) உத்தர (வடக்கு நோக்கி இருக்கின்ற வாமதேவம் முகம்) மேற்கு (மேற்கு நோக்கி இருக்கின்ற சத்தியோசாதம் முகம் ஆகிய ஐந்து முகங்களில்)
நடுவு (ஈசானம் முகம்) படிக (படிக நிறத்திலும்) நல் (தற்புருடம் முகம் நல்ல) குங்கும (குங்கும) வன்னம் (நிறத்திலும்)
அடைவு (தெற்கு நோக்கி) உள (இருக்கின்ற அகோரம் முகம்) அஞ்சனம் (கருப்பு நிறத்திலும்) செவ் (வாமதேவம் முகம் செம்மையான) அரத்தம் (அரத்தம் பூவைப் பொன்ற சிகப்பு நிறத்திலும்) பால் (சத்தியோசாதம் முகம் பாலைப் போன்ற வெண்மையான நிறத்திலும் இருக்கின்றதே)
அடியற்கு (தம்மை வணங்கும் அடியவர்களுக்காக) அருளிய (இறைவன் அருளிய) முகம் (திருமுகங்கள்) இவை (இவை) ஐந்தே (ஐந்தும் ஆகும்).

விளக்கம்:

தம்மை வணங்கும் அடியவர்களுக்காக இறைவன் அருளிய திருமுகங்கள் ஐந்தாகும். இவை முறையே நடுவில் மேல் நோக்கி இருக்கின்ற ஈசானம் முகம், கிழக்கு நோக்கி இருக்கின்ற தற்புருடம் முகம், தெற்கு நோக்கி இருக்கின்ற அகோரம் முகம், வடக்கு நோக்கி இருக்கின்ற வாமதேவம் முகம், மேற்கு நோக்கி இருக்கின்ற சத்தியோசாதம் முகம் ஆகும். ஈசானம் முகம் படிக நிறத்திலும், தற்புருடம் முகம் நல்ல குங்கும நிறத்திலும், அகோரம் முகம் கருப்பு நிறத்திலும், வாமதேவம் முகம் செம்மையான அரத்தம் பூவைப் பொன்ற சிகப்பு நிறத்திலும், சத்தியோசாதம் முகம் பாலைப் போன்ற வெண்மையான நிறத்திலும் இருக்கின்றது.

பாடல் #1730

பாடல் #1730: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

கூடிய பாத மிரண்டும் படிமிசை
பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழுந்
தேடு முகமைந்துஞ் செங்கணின் மூவைந்து
நாடுஞ் சதாசிவம் நல்லொளி முத்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கூடிய பாத மிரணடும படிமிசை
பாடிய கையிரண டெடடும பரநதெழுந
தெடு முகமைநதுஞ செஙகணின மூவைநது
நாடுஞ சதாசிவம நலலொளி முததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கூடிய பாதம் இரண்டும் படி மிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்து எழும்
தேடும் முகம் ஐந்தும் செம் கணின் மூ ஐந்து
நாடும் சதா சிவம் நல் ஒளி முத்தே.

பதப்பொருள்:

கூடிய (ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற) பாதம் (இறைவனது திருவடிகள்) இரண்டும் (இரண்டும்) படி (தம்மை சரணடைந்த உயிர்களை அடுத்த படியான) மிசை (மேல் நிலைக்கு கொண்டு செல்லுவது ஆகும்)
பாடிய (அடியவர்களால் புகழ்ந்து பாடப் படுகின்ற) கை (இறைவனது திருக்கரங்கள்) இரண்டு (இரண்டும்) எட்டும் (எட்டும் சேர்ந்து மொத்தம் பத்தும்) பரந்து (பத்து திசைகளுக்கும் பரந்து) எழும் (எழுந்து செல்லுவது ஆகும்)
தேடும் (அடியவர்கள் தேடுகின்ற) முகம் (இறைவனது திருமுகம்) ஐந்தும் (ஐந்தும்) செம் (செம்மையான) கணின் (கண்கள்) மூ (முகத்திற்கு மூன்றாக) ஐந்து (ஐந்து முகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினைந்து ஆகும்)
நாடும் (அடியவர்கள் தேடி அடைய விரும்பும்) சதா (அனைத்திற்கும் மேலானதாகிய) சிவம் (சிவப் பரம்பொருள்) நல் (நன்மையே கொடுக்கும்) ஒளி (பிரகாசமான ஒளி வீசும்) முத்தே (முத்தைப் போன்ற ஜோதி வடிவம் ஆகும்).

விளக்கம்:

அனைத்திற்கும் மேலான சிவப் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியின் திருவுருவமானது அடியவர்களை மேல் நிலைக்கு கொண்டு செல்லும் இணைந்தே இருக்கின்ற இரண்டு திருவடிகளைக் கொண்டும், பத்து திசைகளுக்கும் பரந்து எட்டுகின்ற பத்து திருக்கரங்களைக் கொண்டும், ஐந்து திருமுகங்களைக் கொண்டும், அந்த ஐந்து திருமுகங்களிலும் முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து திருக்கண்களைக் கொண்டும், ஒப்பில்லாத முத்துப் போல பிரகாசமான ஒளி வீசும் ஜோதி அம்சமாகவும் இருக்கின்றது. உருவமே இல்லாத இறைவனுக்கு இப்படி அடியவர்கள் காணக்கூடிய அருவுருவமான வடிவமாக இருப்பதே சதாசிவ இலிங்கம் ஆகும்.

கருத்து:

சதாசிவ மூர்த்தியின் அருவுருவத் திருவடிகளானது தம்மை சரணடைகின்ற அடியவர்களின் பந்த பாசங்களை அறுக்கின்றது ஆகும். சதாசிவ மூர்த்தியின் அருவுருவத் திருக்கரங்களானது அவர் இருக்கின்ற இடத்திலிருந்தே தம்மை வேண்டுகின்ற அடியவர்கள் இருக்கின்ற இடம் வரை பத்து திசைகளிலும் பரந்து வந்து அபயமும் ஐஸ்வர்யமும் அருளுவது ஆகும்.சதாசிவ மூர்த்தியின் அருவுருவத் திருக்கண்களானது தகுதியான அடியவர்களின் பாவங்களை பார்வையாலே நீக்குகின்றது ஆகும். சதாசிவ மூர்த்தியின் அருவுருவப் பிரகாசமான ஜோதி வடிவமானது காண்கின்றவர்களை கவர்கின்ற நல்ல முத்தைப் போல் அடியவர்களை தம்மை நோக்கி ஈர்க்கின்றது ஆகும்.

பாடல் #1731

பாடல் #1731: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

வேதா நெடுமா லுருத்திரன் மேலீசன்
மீதான வைமுகன் விந்துவு நாதமு
மாதார சத்தியு மாதிச் சிவனோடுஞ்
சாதாரண மாகுஞ் சதாசிவன் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெதா நெடுமா லுருததிரன மெலீசன
மீதான வைமுகன விநதுவு நாதமு
மாதார சததியு மாதிச சிவனொடுஞ
சாதாரண மாகுஞ சதாசிவன றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வேதா நெடு மால் உருத்திரன் மேல் ஈசன்
மீது ஆன ஐம் முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் ஆதி சிவனோடும்
சாதாரணம் ஆகும் சதா சிவம் தானே.

பதப்பொருள்:

வேதா (பிரம்மா) நெடு (பூமிக்கும் ஆகாயத்திற்கும் விஸ்வரூபமாக நிற்கின்ற) மால் (திருமால்) உருத்திரன் (உருத்திரன்) மேல் (ஆகிய மூவர்க்கும் மேலான) ஈசன் (மகேஸ்வரன்)
மீது (அவருக்கும் மேல்) ஆன (ஆனவராகிய) ஐம் (ஐந்து) முகன் (முகங்களைக் கொண்ட சதாசிவன் ஆகிய ஐந்து தெய்வங்களும்) விந்துவும் (வெளிச்சமாகவும்) நாதமும் (சத்தமாகவும் இருக்கின்ற)
ஆதார (அனைத்திற்கும் ஆதாரமான) சத்தியும் (பராசக்தியும்) ஆதி (அனைத்திற்கு ஆதியாகிய) சிவனோடும் (பரமசிவனும்)
சாதாரணம் (ஆகிய அனைத்து தெய்வ நிலைகளுக்கும் பொதுவானது) ஆகும் (ஆக இருப்பதே) சதா (அனைத்திற்கும் மேலானதாகிய) சிவம் (அன்பின் வடிவமாகிய சிவப் பரம்பொருள்) தானே (ஆகும்).

விளக்கம்:

வேதங்களை ஓதி படைக்கின்ற பிரம்மன், அனைத்தையும் காக்கின்ற திருமால், மாயையை அழிக்கின்ற உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளும், அவர்களுக்கு மேல் இருக்கின்ற மாயையால் மறைக்கின்ற மகேஸ்வரன், அடியவருக்கு அருளுகின்ற சதாசிவன் ஆகியவரோடு சேர்த்து ஐந்து விதமான தொழில்களை செய்கின்ற தெய்வங்களும், அவர்களுக்கு மேல் வெளிச்சமாகவும் சத்தமாகவும் அவர்கள் அனைவருக்கும் ஆதார சக்தியாகிய பராசக்தியும், ஆதியாகிய பரமசிவனும் ஆகிய இந்த அனைத்து தெய்வ நிலைகளுக்கும் பொதுவானதாகவும் அனைத்திற்கும் மேலானதாகவும் அன்பே வடிவமாகவும் இலிங்க அடையாளம் கொண்டும் இருப்பதே சதாசிவப் பரம்பொருள் ஆகும்.

பாடல் #1732

பாடல் #1732: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

ஆகின்ற சத்தியி னுள்ளே கலைநிலை
யாகின்ற சத்தியி னுள்ளே கதிரெழ
வாகின்ற சத்தியி னுள்ளே யமர்ந்தபி
னாகின்ற சத்தியு ளத்திசை பத்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆகினற சததியி னுளளெ கலைநிலை
யாகினற சததியி னுளளெ கதிரெழ
வாகினற சததியி னுளளெ யமரநதபி
னாகினற சததியு ளததிசை பததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிர் எழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்த பின்
ஆகின்ற சத்தி உள் அத் திசை பத்தே.

பதப்பொருள்:

ஆகின்ற (அசையாத சக்தியாகிய சதாசிவப் பரம்பொருளில் எண்ண அலைகள் உருவாகின்ற போது அந்த அசைவினால் வெளிப்படுகின்ற) சத்தியின் (அசையும் சக்திக்கு) உள்ளே (உள்ளே) கலை (உலக இயக்கத்திற்கு தேவையான ஐந்து விதமான கலைகளாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தும்) நிலை (நிலை பெறும்)
ஆகின்ற (சதாசிவப் பரம்பொருளிலிருந்து வெளிப்பட்ட) சத்தியின் (சக்தியின்) உள்ளே (உள்ளே) கதிர் (வெளிச்சமாகிய சக்தி) எழ (எழுந்து வரும் போது)
ஆகின்ற (சதாசிவப் பரம்பொருளிலிருந்து வெளிப்பட்ட) சத்தியின் (சக்தியின்) உள்ளே (உள்ளே) அமர்ந்த (சத்தமாகிய சிவமும் அமர்ந்த) பின் (பிறகு)
ஆகின்ற (சதாசிவப் பரம்பொருளிலிருந்து வெளிப்பட்ட) சத்தி (சக்திக்கு) உள் (உள்) அத் (அண்ட சராசரங்களும்) திசை (திசைகள்) பத்தே (பத்தும் அடங்கி இருக்கும்).

விளக்கம்:

அசையாத சக்தியாகிய சதாசிவப் பரம்பொருளில் எண்ண அலைகள் உருவாகின்ற போது அந்த அசைவினால் வெளிப்படுகின்ற அசையும் சக்திக்கு உள்ளே உலக இயக்கத்திற்கு தேவையான ஐந்து விதமான கலைகளாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தும் நிலை பெறும். அதற்குள்ளிருந்து வெளிச்சமாகிய சக்தி எழுந்து வரும் போது அதனுள் சத்தமாகிய சிவமும் அமரும். அதற்குள்ளேயே அண்ட சராசரங்களும் அதிலிருக்கும் பத்து திசைகளும் அடங்கி இருக்கும்.