பாடல் #1297

பாடல் #1297: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

சாம்பவி மண்டலச் சக்கரஞ் சொல்லிடில்
ஆம்பத மெட்டாக விட்டிடின் மேலதாங்
காண்பதந் தத்துவ நாலுள் நயனமும்
நாம்பதங் கண்டபின் நாடறிந் தோமே.

விளக்கம்:

சாம்பவி என்கிற சிவமும் சக்தியும் ஒன்றாக வீற்றிருக்கின்ற சிவலிங்க அமைப்பில் அமைகின்ற சக்கரத்தைப் பற்றி சொல்லப் போனால் சக்கர அமைப்பாக இருக்கின்ற அறைகள் ஒரு வரிசைக்கு எட்டாக எட்டு வரிசையில் மொத்தம் அறுபத்து நான்கு அறைகள் கொண்ட சக்கரம் அமைக்க வேண்டும். அதன் பிறகு அதற்கு நடுவில் இருக்கின்ற மேன்மையான நான்கு அறைகளுக்குள் சிவம், சக்தி, விந்து, நாதம் ஆகிய நான்கு தத்துவங்களையும் அமைக்க வேண்டும். இப்படி அறுபத்து நான்கு அறைகள் கொண்ட இந்த சக்கர அமைப்பை மானசீகமாக தமக்குள்ளேயே வரைந்து அதை உணர்ந்து தரிசித்த சாதகர்கள் சிவலிங்க அமைப்பில் இருக்கின்ற சாம்பவி மண்டலச் சக்கரத்தை அறிந்து கொள்ளலாம்.

கருத்து:

சாதகர்கள் மானசீகமாக பாடலில் குறிப்பிட்டு உள்ளபடி அறுபத்து நான்கு அறைகள் கொண்ட சக்கரத்தை அமைத்து அதன் நான்கு மூலைகளிலும் நான்கு சிவலிங்கங்களாக அமைத்து அதற்கு நடுவில் சிவம் சக்தி தத்துவங்களை ஒரே ஒரு சிவலிங்கமாகவும் விந்து தத்துவமாக ஓம் மந்திரத்தை அமைத்து நாத தத்துவமாக அந்த ஓம் மந்திரத்தை அசபையாக சொல்லி தியானித்தால் சாம்பவி மண்டலச் சக்கரத்தை அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1298

பாடல் #1298: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக்
கோடற வீதியுங் கொணர்ந்துள் ளிரண்டழி
பாடறி பத்துட னாறு நடுவீதி
ஏடற நாலைந்து இடவகை யாமே.

விளக்கம்:

பாடல் #1297 இல் உள்ளபடி சிவலிங்க அமைப்பில் இருக்கின்ற சக்கரமாக அறிந்து கொண்ட சாம்பவி மண்டலத்தை நன்மையான இந்த நவகுண்டமாகிய உடம்பிற்குள் சக்கரத்தில் வரைந்த கோடுகளை நீக்கி விட்டு அவற்றை சக்தி பாயும் வீதிகளாக கொண்டு வந்து உள் வாங்கிக் கொண்டு சக்கரத்தை இரண்டு பாகமாக பிரித்து வைக்க வேண்டும். இப்படி இரண்டு பாகமாக உண்டாகும் பக்கங்களை அறிந்து கொண்டு பத்து அறைகளுடன் ஆறு அறைகளும் சேர்த்து மொத்தம் பதினாறு அறைகளில் இரண்டு சிவலிங்கங்களையும் நடுவில் இருக்கின்ற நான்கு அறைகளில் உள்ள சிவலிங்கமும் ஓம் மந்திரமும் சேர்த்து வைக்க வேண்டும். அதன் பிறகு மனதில் இறைவனைத் தவிர வேறு எந்த சிந்தனைகளும் இல்லாமல் இருபது அறைகளாக இருக்கின்ற இடது பக்கமும் வலது பக்கமும் ஆகிய பகுதிகளை அமைத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு: கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் அனைவருக்கும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இருபது எண்களும் இருபது அறைகள் இருக்கின்ற இடம் வலது ஆகிய பக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நீலம் மற்றும் பச்சை கலர்களில் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பாடல் #1299

பாடல் #1299: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

நாலஞ் சிடவகை யுள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நல்ல விலிங்கமாய்
நாலுநற் கோணமும் நன்னா லிலிங்கமாய்
நாலுநற் பூநடு வண்ணலவ் வாறே.

விளக்கம்:

பாடல் #1298 இல் உள்ளபடி இருபது அறைகளாக இருக்கின்ற இடது பக்கமும் வலது பக்கமும் ஆகிய பகுதிகளை சேர்த்து இருக்கும் சாம்பவி மண்டலச் சக்கரத்தில் நன்மையைத் தருகின்ற சக்தி பாயும் வீதிகளாக அறைகளை அமைக்க வேண்டும். அதில் நான்கு திசைகளாக இருக்கின்ற மூலைகளிலும் நான்கு நான்கு இலிங்கங்களாக மொத்தம் பதினாறு இலிங்கங்களை அமைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு மூலையிலும் அமைந்திருக்கும் நான்கு இலிங்கங்களுக்கு நடுவிலும் சாதகர்கள் தங்களின் மனதை வைத்து இறைவனைத் தவிர வேறு எந்த சிந்தனைகளும் இல்லாமல் தியானித்தால் இறைவனும் அவர்களின் எண்ணங்களுக்கேற்ப வந்து சக்கரத்தின் நடுவில் வீற்றிருப்பான்.

பாடல் #1300

பாடல் #1300: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

ஆறிரு பத்துநா லஞ்செழுத் தஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறிநீ ரும்மிற் சிவாய நமவென்று
கூறுமின் கூறிற் குறைகளு மில்லையே.

விளக்கம்:

ஆதிகாலத் தமிழில் இருக்கும் 51 எழுத்துக்களும் உண்மை ஞானத்தைக் கொடுப்பவை ஆகும். இவை வெவ்வேறு உருவங்களில் (எழுத்து வடிவங்களில்) சூட்சுமமாக சாம்பவி மண்டலச் சக்கரத்தில் வளர்ச்சி பெற்று பரவிக் கிடக்கின்றது. இவற்றின் உண்மைப் பொருளை ஆராய்ந்து உணர்ந்து சாதகர்கள் தமக்குள் ‘சிவாய நம’ எனும் மந்திரத்தை அசபையாகச் செபித்துக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு எந்தவிதமான குறைகளும் இருக்காது.

பாடல் #1301

பாடல் #1301: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

குறைவது மில்லை குரைகழற் கூடு
மறைவது மாரண மவ்வெழுத் தாகித்
திறமது வாகத் தெளியவல் லார்கட்
கிறவில்லை யென்றென் றியம்பினர் காணே.

விளக்கம்:

பாடல் #1300 இல் உள்ளபடி எந்த விதமான குறைகளும் இல்லாத நிலையை அடைந்த சாதகர்கள் மேன்மையான சாம்பவி மண்டலச் சக்கரத்திற்கு ஏற்ப ஞானமும் அருளும் எப்போதும் குறைவில்லாமல் இருப்பார்கள். ஒலிக்கின்ற சிலம்புகளை அணிந்திருக்கும் இறைவனின் திருவடிகளும் சாதகர்களை விட்டு எப்போதும் பிரியாமல் அவர்களுடனே சேர்ந்து இருக்கும். வேதங்கள் சிறப்பித்து சொல்லுகின்ற உண்மை ஞானமாகவே இருக்கின்ற 51 எழுத்துக்களையும் அதனதன் இயல்புக்கு ஏற்ப முழுவதுமாக அறிந்து உணர்ந்து கொள்ள முடிந்தவர்களுக்கு இறப்பு என்பதே இல்லை என்று இந்த நிலையை அடைந்தவர்கள் உறுதியாக சொல்வார்கள். இதை சாதகர்களும் முழுவதுமாக உணர்ந்து கண்டு கொள்ள வேண்டும்.

பாடல் #1302

பாடல் #1302: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

காணும் பொருளுங் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமு
மூணு முணர்வு முறக்கமுந் தானாயக்
காணுங் கனகமுங் காரிகை யாமே.

விளக்கம்:

பாடல் #1301 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள் கண்டு உணர்ந்து கொண்ட பேருண்மையான பரம்பொருளே அவர்களின் எண்ணத்திற்கு ஏற்றபடியான வடிவங்களைக் கொண்ட தெய்வமாக அவர்களுக்குள் வீற்றிருக்கின்றார். தமது உடலுக்குள் பரம்பொருளே தெய்வமாக வீற்றிருப்பதால் சாதகர்கள் முறையாகப் பேணிப் பாதுகாக்கின்ற உடலும் அதனால் சாதகர்களுக்குள் ஊற்றெடுத்துப் பெருகுகின்ற அமிழ்தமும் சாதகர்களின் ஆன்மா நுகர்கின்ற இன்பமும் அதனால் கிடைக்கின்ற பேரின்ப உணர்வும் அந்த உணர்விலேயேஎ இலயித்து இருகின்ற நிலையும் இந்த நிலையை அடைந்ததும் அவர்கள் காணும் படி தானாகவே பொன் போல மாறுகின்ற உடலும் ஆகிய இவை அனைத்துமே சாம்பவி மண்டலச் சக்கரத்தின் செயலாக இருக்கின்ற இறை சக்தியின் அருளால் கிடைக்கின்ற பேறுகள் ஆகும்.

கருத்து: சாம்பவி மண்டலச் சக்கர சாதகத்தை செய்கின்ற சாதகர் பேருண்மையான பரம்பொருளைத் தமக்குள் கண்டு உணர்ந்து இறைவன் வீற்றிருக்கும் தமது உடலையே கோயிலாக எண்ணிப் பேணிப் பாதுகாத்து உள்ளிருக்கும் இறைவனைப் போற்றி வணங்கி வழிபடும் போது அவரது ஆன்மா இன்பத்தை நுகருகின்றது. அதன் பிறகு அவருக்குள் அமிழ்தம் ஊற்றெடுக்கின்றது. அந்த அமிழ்தத்தைப் பருகியப் பேரின்ப உணர்விலேயே சாதகர் இலயித்து இருக்கும் போது அவரின் உடல் பொன் போல மாறி என்றும் அழியாத நிலை பெறுகின்றது. இவை அனைத்தும் சாம்பவி மண்டலச் சக்கரத்தின் செயலாக இருக்கின்ற இறை சக்தியினால் அவருக்கு கிடைக்கின்றது.

பாடல் #1303

பாடல் #1303: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

ஆமே எழுத்தஞ்சு மாம்வழி யேயாகப்
போமே யதுதானும் போம்வழி யேபோகா
னால்நாமே நினைத்தன செய்யலு மாகும்
பார்மே லொருவர் பகையில்லை தானே.

விளக்கம்:

பாடல் #1302 இல் உள்ளபடி சாம்பவி மண்டலச் சக்கரத்தின் செயலாக இருக்கின்ற சக்தியின் அருள் பெற்ற சாதகர்கள் பாடல் #1300 இல் உள்ளபடி அசபையாக உச்சரிக்கின்ற ‘சிவாய நம’ எனும் மந்திரத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களே இறைவனை நோக்கி சாதகரின் எண்ணங்களை எடுத்துச் செல்லும் வழியாக இருக்கின்றன. சாதகர்கள் தன்னுடைய எண்ணங்களை சிந்தனை போகும் போக்கில் போக விடாமல் சிவாயநம என்னும் எழுத்துக்களின் வழியாக இறைவனை நோக்கிச் செலுத்திக் கொண்டே இருந்தால் சாதகர்கள் நினைக்கின்ற அனைத்தையும் செயலாக்க முடியும். அதன் பிறகு உலகத்தில் உள்ள எந்தவொரு பற்றுக்களும் சாதகர்களுக்கு இல்லாமல் போய்விடும்.

கருத்து: சாதகர் தனக்குள் தோன்றும் எண்ணத்தின் வழி செல்லாமல் தான் அசபையாக உச்சரித்துக் கொண்டிருக்கும் சிவாயநம மந்திரத்துடன் தனது எண்ணங்களை செலுத்தினால் இந்த உலகத்தில் சாதகர் நினைக்கின்ற அனைத்தையும் அவர் செயலாக்க முடியும்.

பாடல் #1304

பாடல் #1304: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

பகையில்லை யென்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாளும் நன்மைக ளாகும்
வினையில்லை யென்றும் விருத்தமு மில்லைத்
தகையில்லைத் தானுஞ் சலமது வாமே.

விளக்கம்:

பாடல் #1303 இல் உள்ளபடி உலகத்தில் உள்ள எந்தவொரு பற்றுக்களும் சாதகர்களுக்கு இல்லாமல் போய்விடும். இறைவனை வணங்கித் தொழுகின்ற சாதகருக்கு அவரைச் சுற்றி இருக்கின்ற உலகத்தால் நன்மை தீமைகள் எதுவும் இல்லை. அனைத்து நாட்களும் அவருக்கு நன்மையான நாட்களாகவே இருக்கும். நல்வினை தீவினை ஆகிய எதுவுமே அவருக்கு இல்லாமல் போய்விடும். இனி எப்போதும் புதியதாக வினைகள் எதுவும் வந்து சேராது. தமது சாதகத்திற்கு தடைகள் எதுவும் இல்லாமல் தாமும் தடை இல்லாமல் உலக நன்மைக்காகச் சுழற்சியாகத் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக்கின்ற நிலையை அடைந்து விடுவார்.

பாடல் #1305

பாடல் #1305: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

ஆரு முரைசெய்ய லாமஞ் செழுத்தாலே
யாரு மறியாத வானந்த ரூபமாம்
பாரும் விசும்பும் பகலு மதியதி
யூனு முயிரு முணர்வது வாமே.

விளக்கம்:

சாம்பவி மண்டலச் சக்கரத்தில் உள்ள மந்திரமாகிய ‘சிவாய நம’ எனும் ஐந்து எழுத்துக்களை யாரும் அசபையாக உச்சரிக்கலாம். அதை முறைப்படி உச்சரித்து சாதகம் செய்பவர்களுக்கு யாராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாத பேரின்ப உருவமாக இருக்கின்ற சாம்பவி மண்டலச் சக்கரத்தை அறிந்து கொள்ளலாம். அதை அறிந்து கொண்ட சாதகர்களுக்கு உலகமாகவும் ஆகாயமாகவும் சூரியனாகவும் சந்திரனாகவும் பாடல் #1302 இல் உள்ளபடி பொன் போன்ற உடலாகவும் உயிராகவும் உணர்வாகவும் அந்த சாம்பவி மண்டலச் சக்கரத்தின் பேரின்ப உருவமே இருக்கின்றது.

பாடல் #1306

பாடல் #1306: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

உணர்ந்தெழு மந்திர மோமெனு முள்ளே
யணைந்தெழு மாங்கதி யாதிய தாகுங்
குணர்ந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக்
கணந்தெழுங் காணு மக்காமுகை யாமே.

விளக்கம்:

பாடல் #1305 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் சாம்பவி மண்டலச் சக்கரத்தை பேரின்ப உருவமாக உணரும் பொழுது அவருக்குள்ளிருந்து எழுகின்ற மந்திரமானது ஓம் என்று நீட்டி உச்சரிக்கும் ஓங்காரத்தின் ஓரெழுத்திலேயே அடங்கி விடும். அப்போது சாதகரோடு சேர்ந்து எழுகின்ற ஓங்காரமே சாதகர் சென்று அடையும் கதி மோட்சமாகவும் அவர் ஆரம்பித்த ஆதி மூலமாகவும் இருக்கின்றது. இதை சாதகர் முழுவதுமாக உணரும் போது இதுவரை அவருக்குள் மாயையால் மறைந்து விளையாடிக் கொண்டு இருந்த இறைவனும் இறைவியும் மாயை நீங்கி வெளிப்பட்டு சாதகரோடு ஒன்றாகக் கலந்து சாம்பவி மண்டலச் சக்கரத்தின் பேரின்ப வடிவமாகவே இருப்பார்கள். அதன் பிறகு சாதகரும் அந்த பேரின்பத்திலேயே இறைவனோடும் இறைவியோடும் என்றும் இலயித்து இருப்பார்.

கருத்து:

சாம்பவி மண்டலச் சக்கரத்தில் உள்ள மந்திரத்தின் ஐந்து எழுத்துக்களும் அவருக்குள் ஓங்காரத்தின் ஓரெழுத்தாகவே சேர்ந்து எழும் போது சாதகர் சாம்பவி மண்டலச் சக்கரமாகவே ஆகி அதில் இருக்கும் இறைவனோடும் இறைவியோடும் கலந்து அதிலேயே இலயித்து இருப்பார்.