பாடல் #944: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
ஓமென் றெழுப்பித்தன் உத்தம நந்தியை
நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென் றெழுப்பியவ் வாறுஅறி வார்கள்
மாமன்று கண்டு மகிழ்ந்துஇருந் தாரே.
விளக்கம்:
பாடல் #943 இல் உள்ளபடி ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து தமக்குள் இருக்கும் இறைவனை குருவாக உணர்ந்து ‘ஓம்’ எனும் மந்திரத்தோடு ‘நம’ என்கிற மந்திரத்தையும் சேர்த்து உச்சரித்து மூலாதாரத்தில் பிரணவ மந்திரத்தின் வடிவமாய் இருக்கும் இறைவனை எழுப்பி விட்டு அதனோடு பாடல் #910 இல் உள்ளபடி ‘அம்’ என்கிற மந்திரத்தையும் சேர்த்து செபித்து மந்திரத்தைக் கைவரப் பெற்றவர்கள் தமக்குள் இறைவன் ஓயாது நடனமாடும் திருச்சிற்றம்பலக் கூத்து கண்டு பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள்.
கருத்து: ‘ஓம் நம அம்’ எனும் மந்திரத்தை குருவருளால் உச்சரித்துக் கொண்டே இருக்கும் சாதகர்கள் திருவம்பலக் கூத்தை தமக்குள் தரிசித்து பேரின்பத்தில் இருப்பார்கள்.
![](https://i0.wp.com/www.kvnthirumoolar.com/wp-content/uploads/2020/10/1-2-1006x1024.jpg?resize=650%2C662&ssl=1)