பாடல் #960

பாடல் #960: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அருவினில் அம்பரம் அங்கெழு நாதம்
பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி யகார சிகார நடுவாய்
உருவிட லாறு முறுமந் திரமே.

விளக்கம்:

உருவம் இல்லாததும் கண்ணுக்கு தெரியாததுமான பரகாயத்தில் (பரவெளி) எழுகின்ற ஓம் எனும் ஒலியிலிருந்து பெருகி வரும் சக்தியானது மின்னல் ஒளியைப் போல வெளிச்சமாக வெளிவரும். இந்த ஒலியும் ஒளியும் சேர்ந்த சக்தியானது மருவி ‘நமசிவய’ மந்திரத்தில் இருக்கும் ‘ய’ எழுத்துக்கும் ‘சி’ எழுத்துக்கும் நடுவில் இருக்கும் ‘வ’ எழுத்தாக மாறுகிறது. இப்படி இருக்கும் மூன்று எழுத்து ‘சிவய’ மந்திரத்தை செபித்து அதனோடு லயித்து இருந்தால் அது ஆறு எழுத்துக்கள் கொண்ட ‘ஓம் நமசிவாய’ எனும் மந்திரமாக மாறி உயிருக்குள் ஆதாரமாக நிற்கும்.

குறிப்பு: தூய தமிழ் சொற்கள் நடைமுறைத் தமிழில் மருவி மாறுவதைப் போல ஒலியும் ஒளியும் சேர்ந்து மருவி மந்திரமாகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.