பாடல் #998

பாடல் #998: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

கரண விரளிப் பலகை யமன்றிசை
மரணமிட் டெட்டின் மகார வெழுத்திட்டு
வரணமி லைங்காயம் பூசி யடுப்பிடை
முரணிற் புதைத்திட மோகன மாகுமே.

விளக்கம்:

பட்டுப்போகாத கொன்றை மரத்தின் பலகையை எடுத்து அதை யமனுடய திசையாகிய தெற்குத் திசையை நோக்கி வைத்து அதில் பாடல் #997 இல் உள்ளபடி ‘மசிவாயந’ என்று எழுதி அதன்பின் அந்தப் பலகையின் மேல் மறைப்பில்லாமல் நன்றாகத் தெரியும்படி ஐந்துவித காயங்களாகிய சுக்கு மிளகு கடுகு பூண்டு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைப் பூசிவிட்டு அந்தப் பலைகையைத் தலைகீழாக மண்ணில் புதைத்துவிட்டு அதன் மேலே அமர்ந்து அதில் எழுதி மந்திரத்தை தியானித்து செபித்து வந்தால் மோகனம் எனும் வித்தை கைகூடும்.

குறிப்பு: மோகனம் வித்தை என்பது வேண்டியவற்றை வசியம் செய்வதாகும். உணவுப் பொருளை சுட்டு பக்குவப்படுத்தும் அடுப்பு போல பலகையைப் பக்குவப்படுத்த வேண்டும் என்பதே இங்கு அடுப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.