பாடல் #1661

பாடல் #1661: ஆறாம் தந்திரம் – 9. தவ வேடம் (அகத் தவத்தின் தன்மையை புற வேடத்தில் காட்டுவது)

தவமிக் கவரே தலையான வேட
ரவமிக் கவரே யதிகொலை வேட
ரவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தவமிக கவரெ தலையான வெட
ரவமிக கவரெ யதிகொலை வெட
ரவமிக கவரவெடத தாகாரவ வெடந
தவமிக கவரககனறித தாஙகவொண ணாதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தவம் மிக்கு அவரே தலையான வேடர்
அவம் மிக்கு அவரே அதி கொலை வேடர்
அவம் மிக்கு அவர் வேடத்து ஆகார் அவ் வேடம்
தவம் மிக்கு அவர்க்கு அன்றி தாங்க ஒண்ணாதே.

பதப்பொருள்:

தவம் (உண்மையான தவ வலிமையை) மிக்கு (அதிகமாக கொண்ட) அவரே (தவசிகளே) தலையான (அனைத்திலும் சிறந்த) வேடர் (உண்மையான தவ வேடத்தை அணிந்தவர்கள் ஆவார்கள்)
அவம் (பொய்யான தவ வேடம் அணிந்ததால் பெற்ற பாவங்கள்) மிக்கு (அதிகமாக கொண்ட) அவரே (பொய்யான தவசிகளே) அதி (உயிர் கொலையை விடவும் கொடுமையான கொலையாகிய தர்மத்தையே) கொலை (கொலை செய்கின்ற) வேடர் (பொய்யான வேடதாரிகள் ஆவார்கள்)
அவம் (ஆதலால் பாவங்கள்) மிக்கு (அதிகமாக கொண்ட) அவர் (அவர்கள்) வேடத்து (உண்மையான தவ வேடத்திற்கு) ஆகார் (தகுதி உடையவர்கள் ஆக மாட்டார்கள்) அவ் (உண்மையான அந்த) வேடம் (தவ வேடத்தை)
தவம் (உண்மையான தவ வலிமையை) மிக்கு (அதிகமாக கொண்ட) அவர்க்கு (தவசிகளைத்) அன்றி (தவிர) தாங்க (வேறு யாராலும் தாங்க) ஒண்ணாதே (முடியாது).

விளக்கம்:

உண்மையான தவ வலிமையை அதிகமாக கொண்ட தவசிகளே அனைத்திலும் சிறந்த உண்மையான தவ வேடத்தை அணிந்தவர்கள் ஆவார்கள். பொய்யான தவ வேடம் அணிந்ததால் பெற்ற பாவங்கள் அதிகமாக கொண்ட பொய்யான தவசிகளே உயிர் கொலையை விடவும் கொடுமையான கொலையாகிய தர்மத்தையே கொலை செய்கின்ற பொய்யான வேடதாரிகள் ஆவார்கள். ஆதலால் பாவங்கள் அதிகமாக கொண்ட அவர்கள் உண்மையான தவ வேடத்திற்கு தகுதி உடையவர்கள் ஆக மாட்டார்கள். உண்மையான அந்த தவ வேடத்தை தவ வலிமை அதிகமாக கொண்ட தவசிகளைத் தவிர வேறு யாராலும் தாங்க முடியாது.

கருத்து:

உண்மையான தவசிகள் அணிந்து இருக்கின்ற வேடப் பொருள்களில் அவர்கள் மேற்கொண்ட தவத்தின் சக்தியானது அதிகமாக இருக்கும். அந்த சக்தியை தாங்குகின்ற தவ வலிமை அவர்களிடம் உண்டு. ஆனால், பொய்யான வேடதாரிகளிடம் தவ வலிமை இல்லாததால் அந்த பொருள்களில் உள்ள சக்தியை தாங்க முடியாது.

பாடல் #1662

பாடல் #1662: ஆறாம் தந்திரம் – 9. தவ வேடம் (அகத் தவத்தின் தன்மையை புற வேடத்தில் காட்டுவது)

பூதி யணிவது சாதன மாதியிற்
காதணி தாம்பிரங் குண்டலங் கண்டிகை
யோதி யவர்க்கு முருத்திர சாதனந்
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பூதி யணிவது சாதன மாதியிற
காதணி தாமபிரங குணடலங கணடிகை
யொதி யவரககு முருததிர சாதனந
தீதில சிவயொகி சாதனந தெரிலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பூதி அணிவது சாதனம் ஆதியில்
காது அணி தாம்பிரம் குண்டலம் கண்டிகை
ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம்
தீது இல் சிவ யோகி சாதனம் தேரிலே.

பதப்பொருள்:

பூதி (விபூதியை) அணிவது (அணிந்து கொள்வது) சாதனம் (மிகவும் உன்னதமான கருவியாக) ஆதியில் (அனைத்திற்கும் முதலானது ஆகும்)
காது (அது மட்டுமின்றி காதுகளில்) அணி (அணிகின்ற) தாம்பிரம் (செப்பினால் செய்த) குண்டலம் (குண்டலங்களும்) கண்டிகை (கழுத்தில் அணிந்திருக்கும் மணியும் கருவியாகும்)
ஓதி (மந்திரங்களை ஓதுகின்ற) அவர்க்கும் (தவசிகளுக்கு உறுவேற்றுகின்ற) உருத்திர (கையில் இருக்கின்ற உருத்திராட்ச மாலையும்) சாதனம் (கருவியாக உள்ளது)
தீது (இவை தீமை) இல் (இல்லாத) சிவ (உண்மையான சிவ யோகத்தை புரிகின்ற) யோகி (யோகிகளுக்கு) சாதனம் (கருவிகளாகப் பயன்படுவது) தேரிலே (அந்தக் கருவிகளின் தத்துவங்களை முழுவதும் உணர்ந்து தெளிந்தால் மட்டுமே ஆகும்).

விளக்கம்:

உண்மையான தவசிகள் விபூதியை அணிந்து கொள்வது மிகவும் உன்னதமான கருவியாக அனைத்திற்கும் முதலானது ஆகும். அது மட்டுமின்றி காதுகளில் அணிகின்ற செப்பினால் செய்த குண்டலங்களும் கழுத்தில் அணிந்திருக்கும் மணியும் அவர்களுக்கு கருவியாகும். மந்திரங்களை ஓதுகின்ற தவசிகளுக்கு உறுவேற்றுகின்ற கையில் இருக்கின்ற உருத்திராட்ச மாலையும் கருவியாக உள்ளது. இந்தக் கருவிகளை பயன்படுத்துகின்ற முறையை முழுவதும் அறிந்து தெளிந்த தீமை இல்லாத உண்மையான சிவ யோகத்தை புரிகின்ற யோகிகளுக்கு மட்டுமே அவை பயனுள்ளதாகும்.

கருத்து:

சிவ யோகிகள் அணிந்து இருக்கின்ற விபூதி, குண்டலம், உருத்திராட்சம் போன்ற பொருள்களை தீமைகளை நீக்கி நன்மையை கொடுப்பதற்கு கருவியாக பயன்படுத்திக் கொள்ளுகின்ற முறை உண்மையான சிவ யோகிகளுக்கே தெரியும்.

பாடல் #1663

பாடல் #1663: ஆறாம் தந்திரம் – 9. தவ வேடம் (அகத் தவத்தின் தன்மையை புற வேடத்தில் காட்டுவது)

யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையொன்று
வாகத்து நீறணி யாங்கக் கப்பாளஞ்
சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

யொகிக கிடுமது வுடகடடுக கஞசுளி
தொகைககுப பாசததுச சுறறுஞ சடையொனறு
வாகதது நீறணி யாஙகக கபபாளஞ
சீகதத மாததிரை திணபிரம பாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

யோகிக்கு இடும் அது உள் கட்டுக்கு கஞ்சுளி
தோகைக்கு பாசத்து சுற்றும் சடை ஒன்று
ஆகத்து நீறு அணி ஆம் அக்கு பாளம்
சீகத்த மாத்திரை திண் பிரம்பு ஆகுமே.

பதப்பொருள்:

யோகிக்கு (சிவ யோகிகள்) இடும் (அணிகின்ற) அது (பொருள்களான) உள் (தங்களின் இடுப்புக்கு கீழே) கட்டுக்கு (கட்டுகின்ற கோவணமும்) கஞ்சுளி (உடலைப் போர்த்தி இருக்கின்ற காவி ஆடையும்)
தோகைக்கு (மயிலின் தோகையால் திரித்த) பாசத்து (கயிறு போல) சுற்றும் (சுற்றி இருக்கின்ற) சடை (திரிந்த சடை முடி) ஒன்று (ஒன்றும்)
ஆகத்து (உடம்பு முழுவதும்) நீறு (திருநீறு) அணி (அணிந்தும்) ஆம் (மார்பில் அணிந்து இருக்கின்ற மாலையாகிய) அக்கு (உருத்திராட்ச) பாளம் (மணியும்)
சீகத்த (அழகிய கைப் பிடியைக் கொண்ட) மாத்திரை (கமண்டலமும்) திண் (உறுதியான) பிரம்பு (தண்டமும்) ஆகுமே (அவர்களின் தவ அடையாளங்கள் ஆகும்).

விளக்கம்:

சிவ யோகிகள் அணிகின்ற பொருள்களான தங்களின் இடுப்புக்கு கீழே கட்டுகின்ற கோவணமும், உடலைப் போர்த்தி இருக்கின்ற காவி ஆடையும், மயிலின் தோகையால் திரித்த கயிறு போல சுற்றி இருக்கின்ற திரிந்த சடை முடி ஒன்றும், உடம்பு முழுவதும் திருநீறு அணிந்தும், மார்பில் அணிந்து இருக்கின்ற மாலையாகிய உருத்திராட்ச மணியும், அழகிய கைப் பிடியைக் கொண்ட கமண்டலமும், உறுதியான தண்டமும் அவர்களின் தவ அடையாளங்கள் ஆகும்.

பாடல் #1664

பாடல் #1664: ஆறாம் தந்திரம் – 9. தவ வேடம் (அகத் தவத்தின் தன்மையை புற வேடத்தில் காட்டுவது)

காதணி குண்டலங் கண்டிகை நாகமு
மூதின சங்கு முயர்கட்டிக் கப்பரை
யேதமில் பாதுகம் யோகாந்த மாதன
மேதமில் யோகவட்டந் தண்டமீ ரைந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காதணி குணடலங கணடிகை நாகமு
மூதின சஙகு முயரகடடிக கபபரை
யெதமில பாதுகம யொகாநத மாதன
மெதமில யொகவடடந தணடமீ ரைநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காது அணி குண்டலம் கண்டிகை நாகமும்
ஊதின சங்கும் உயர் கட்டி கப்பரை
ஏதம் இல் பாதுகம் யோக அந்தம் ஆதனம்
ஏதம் இல் யோக வட்டம் தண்டம் ஈர் ஐந்தே.

பதப்பொருள்:

காது (காதுகளில்) அணி (அணிந்து இருக்கின்ற) குண்டலம் (குண்டலங்கள்) கண்டிகை (கழுத்தில் அணிந்து இருக்கின்ற) நாகமும் (நாக மணி மாலை)
ஊதின (இயற்கையாகவே முதுமை பெற்று இறந்து கிடைத்த) சங்கும் (சங்கு) உயர் (உயர்வான) கட்டி (திருநீறு வைத்திருக்கும் பாத்திரம்) கப்பரை (பிச்சை எடுக்கின்ற பாத்திரம் / திருவோடு)
ஏதம் (குற்றம்) இல் (இல்லாத) பாதுகம் (பாதணிகள்) யோக (யோக) அந்தம் (முத்திரை) ஆதனம் (அமர்ந்து இருக்கின்ற ஆசனம்)
ஏதம் (குற்றம்) இல் (இல்லாத) யோக (யோக) வட்டம் (காப்பு / இரட்சை) தண்டம் (தண்டம்) ஈர் (ஆகிய இரண்டும்) ஐந்தே (ஐந்தும் பெருக்கி வரும் மொத்தம் பத்து அடையாளங்களும் உண்மையான தவசிகளுக்கான வேடமாகும்).

விளக்கம்:

1.காதுகளில் அணிந்து இருக்கின்ற குண்டலங்கள், 2. கழுத்தில் அணிந்து இருக்கின்ற நாக மணி மாலை, 3. இயற்கையாகவே முதுமை பெற்று இறந்து கிடைத்த சங்கு, 4. உயர்வான திருநீறு வைத்திருக்கும் பாத்திரம், 5. பிச்சை எடுக்கின்ற பாத்திரம் (திருவோடு), 6. குற்றம் இல்லாத பாதணிகள், 7. யோக முத்திரை, 8. அமர்ந்து இருக்கின்ற ஆசனம், 9. குற்றம் இல்லாத யோக காப்பு (இரட்சை), 10. தண்டம் ஆகிய பத்து அடையாளங்களும் உண்மையான தவசிகளுக்கான வேடமாகும்.

பாடல் #1655

பாடல் #1655: ஆறாம் தந்திரம் – 8. அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங் கள்கொண்டு வெருட்டிடும் பேதைகா
ளாடியும் பாடியும் மழுது மரற்றியுந்
தேடியுங் காணீர் சிவனவன் றாள்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆடம பரஙகொண டடிசிலுண பானபயன
வெடங களகொணடு வெருடடிடும பெதைகா
ளாடியும பாடியு மழுது மரறறியுந
தெடியுங காணீர சிவனவன றாளகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவன் அவன் தாள்களே.

பதப்பொருள்:

ஆடம்பரம் (ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து) கொண்டு (கொண்டு) அடிசில் (மிகவும் இனிப்பான உணவுகளை) உண்பான் (உண்ணுகின்றவன்) பயன் (அதற்கு தேவையான செல்வம் திரட்டுவதற்கு)
வேடங்கள் (தவசிகள் போல வேடம் அணிந்து) கொண்டு (கொண்டு) வெருட்டிடும் (மற்றவர்களை பயமுறுத்தியும் பொய்யான வார்த்தைகளால் மயக்கியும்) பேதைகாள் (திரிகின்ற முட்டாள் மனிதர்களாக இருக்கின்றார்கள். இப்படி வாழ்க்கையை வீணாக்காமல்)
ஆடியும் (இறைவன் மேல் உண்மையான அன்பு கொண்டு ஆடியும்) பாடியும் (அவனது திருப் புகழ்களை பாடியும்) அழுதும் (அழுதும்) அரற்றியும் (அவன் காண கிடைக்க மாட்டானா என்று புலம்பியும்)
தேடியும் (அவன் எங்கு இருக்கின்றான் என்று தேடினால்) காணீர் (காண்பீர்கள்) சிவன் (இறைவன்) அவன் (அவனது) தாள்களே (திருவடிகளை).

விளக்கம்:

ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு மிகவும் இனிப்பான உணவுகளை உண்ணுகின்றவன் அதற்கு தேவையான செல்வம் திரட்டுவதற்கு தவசிகள் போல வேடம் அணிந்து கொண்டு மற்றவர்களை பயமுறுத்தியும் பொய்யான வார்த்தைகளால் மயக்கியும் திரிகின்ற முட்டாள் மனிதர்களாக இருக்கின்றார்கள். இப்படி வாழ்க்கையை வீணாக்காமல் இறைவன் மேல் உண்மையான அன்பு கொண்டு ஆடியும் அவனது திருப் புகழ்களை பாடியும், அழுதும் அவன் காண கிடைக்க மாட்டானா என்று புலம்பியும் அவன் எங்கு இருக்கின்றான் என்று தேடினால் இறைவனது திருவடிகளை காண்பீர்கள்.

பாடல் #1656

பாடல் #1656: ஆறாம் தந்திரம் – 8. அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)

ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை
யீனம தேசெய் திரந்துண் டிருப்பினு
மான நலங்கெடு மப்புவி யாதலா
லீனவர் வேடங் கழிப்பித்த லின்பமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானமில லாரவெடம பூணடிநத நாடடிடை
யீனம தெசெய திரநதுண டிருபபினு
மான நலஙகெடு மபபுவி யாதலா
லீனவர வெடங கழிபபிதத லினபமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டு இடை
ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும்
மானம் நலம் கெடும் அப் புவி ஆதலால்
ஈன அவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.

பதப்பொருள்:

ஞானம் (உண்மையான ஞானம்) இல்லார் (இல்லாதவர்கள்) வேடம் (தவசிகள் போல வேடம்) பூண்டு (அணிந்து கொண்டு) இந்த (அவர்கள் இருக்கின்ற) நாட்டு (நாட்டிற்கு) இடை (நடுவிலேயே திரிந்து கொண்டு)
ஈனம் (இழிவான) அதே (செயல்களே) செய்து (செய்து கொண்டு) இரந்து (மற்றவர்களிடம் பிச்சை எடுத்து) உண்டு (உணவு சாப்பிட்டு கொண்டு) இருப்பினும் (இருந்தாலும்)
மானம் (அவர்களின் செயலால் நாட்டிற்கு அவமானமும்) நலம் (நன்மை) கெடும் (கெடுதலும்) அப் (அவர்கள் இருக்கின்ற நாடு இந்த) புவி (பூமியில் இருப்பதால் உலகம் அனைத்திற்குமே கெடுதலும் நடக்கும்) ஆதலால் (ஆகவே)
ஈன (இழிவான) அவர் (அவர்களின்) வேடம் (வேடத்தை) கழிப்பித்தல் (நீக்கி அவர்களை உண்மையை உணர செய்து) இன்பமே (அதன் பயனால் உலகம் இன்பம் அடையும் படி செய்வது உண்மை ஞானிகளின் கடமையாகும்).

விளக்கம்:

உண்மையான ஞானம் இல்லாதவர்கள் தவசிகள் போல வேடம் அணிந்து கொண்டு, அவர்கள் இருக்கின்ற நாட்டிற்கு நடுவிலேயே திரிந்து கொண்டு, இழிவான செயல்களே செய்து கொண்டு, மற்றவர்களிடம் பிச்சை எடுத்து உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தாலும், அவர்களின் செயலால் நாட்டிற்கு அவமானமும், நன்மை கெடுதலும், அவர்கள் இருக்கின்ற நாடு இந்த பூமியில் இருப்பதால் உலகம் அனைத்திற்குமே கெடுதலும் நடக்கும். ஆகவே இழிவான அவர்களின் வேடத்தை நீக்கி அவர்களை உண்மையை உணர செய்து அதன் பயனால் உலகம் இன்பம் அடையும் படி செய்வது உண்மை ஞானிகளின் கடமையாகும்.

பாடல் #1657

பாடல் #1657: ஆறாம் தந்திரம் – 8. அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)

இன்பமுந் துன்பமு நாட்டா ரிடத்துள்ள
நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்கா
மென்ப விறைநாடி நாடோறு நாட்டினில்
மன்பதை செப்பஞ் செயில்வையம் வாழுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இனபமுந துனபமு நாடடா ரிடததுளள
நனசெயல புனசெய லாலநத நாடடிறகா
மெனப விறைநாடி நாடொறு நாடடினில
மனபதை செபபஞ செயிலவையம வாழுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்து உள்ள
நன் செயல் புன் செயல் ஆல் அந்த நாட்டிற்கு ஆம்
என்ப இறை நாடி நாள் தோறும் நாட்டினில்
மன் பதை செப்பம் செயில் வையம் வாழுமே.

பதப்பொருள்:

இன்பமும் (இன்பம் வருவதும்) துன்பமும் (துன்பம் வருவதும்) நாட்டார் (ஒரு நாட்டில் உள்ளவர்கள்) இடத்து (அவர்கள் இருக்கின்ற இடத்தில்) உள்ள (உள்ள)
நன் (நன்மையான) செயல் (செயல்களாலும்) புன் (தீமையான) செயல் (செயல்களாலும்) ஆல் (தான்) அந்த (அவர்கள் இருக்கின்ற) நாட்டிற்கு (நாட்டிற்கு) ஆம் (நிகழ்கின்றது)
என்ப (என்பதால்) இறை (அதை தவிர்த்து இறைவனை) நாடி (தேடி) நாள் (தினம்) தோறும் (தோறும்) நாட்டினில் (நாட்டில் உள்ள மக்கள் அனைவரும்)
மன் (தங்களின் மனதை) பதை (கெடுக்கின்ற விஷயங்களை நீக்கி) செப்பம் (செம்மையாக்குவதை) செயில் (செய்தால்) வையம் (உலகம்) வாழுமே (இன்பமோடு வாழும்).

விளக்கம்:

ஒரு நாட்டில் உள்ளவர்கள் அவர்கள் இருக்கின்ற இடத்தில் செய்கின்ற நன்மையான செயல்களாலும் தீமையான செயல்களாலும் தான் அவர்கள் இருக்கின்ற நாட்டிற்கு இன்பம் வருவதும் துன்பம் வருவதும் நிகழ்கின்றது. ஆதலால் அதை தவிர்த்து இறைவனை தேடி தினம் தோறும் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் தங்களின் மனதை கெடுக்கின்ற விஷயங்களை நீக்கி செம்மையாக்குவதை செய்தால் உலகம் இன்பமோடு வாழும்.

கருத்து:

செம்மையான மனதோடு எதை செய்தாலும் அது தர்மமாகும் இதுவே உலகத்திற்கு நன்மையை கொடுக்கும். அவ்வாறு இல்லாமல் தீமையான மனதோடு செய்கின்ற செயல்களே அவ வேடமாகும் இதுவே நாட்டிற்கு துன்பத்தை கொடுக்கும்.

பாடல் #1658

பாடல் #1658: ஆறாம் தந்திரம் – 8. அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)

இழிகுலத் தோர்வேடம் பூண்பர் மேலெய்த
வழிகுலத் தோர்வேடம் பூண்பர் தேவாகப்
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இழிகுலத தொரவெடம பூணபர மெலெயத
வழிகுலத தொரவெடம பூணபர தெவாகப
பழிகுலத தாகிய பாழசணட ரானார
கழிகுலத தொரகள களையபபட டொரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இழி குலத்தோர் வேடம் பூண்பர் மேல் எய்த
வழி குலத்தோர் வேடம் பூண்பர் தே ஆகப்
பழி குலத்து ஆகிய பாழ் சண்டர் ஆனார்
கழி குலத்தோர்கள் களைய பட்டோரே.

பதப்பொருள்:

இழி (இழிவான) குலத்தோர் (கூட்டத்தோடு சேர்ந்தவர்கள்) வேடம் (பொய்யாக வேடம்) பூண்பர் (அணிவது) மேல் (அனைவருக்கும் மேலானவன் என்ற பொய்யான பதவியை) எய்த (பெறுவதற்கு ஆகும்)
வழி (ஞான குருவின் வழியை பின்பற்றி வருகின்ற சீடர்கள்) குலத்தோர் (கூட்டத்தோடு சேர்ந்தவர்கள்) வேடம் (உண்மையான வேடம்) பூண்பர் (அணிவது) தே (தேவர்கள்) ஆகப் (ஆகுவதற்காக ஆகும்)
பழி (பொய்யான வேடத்தால் பழியை பெற்ற) குலத்து (கூட்டத்தவர்) ஆகிய (ஆகிய இவர்கள்) பாழ் (அடுத்தவர்களின் வாழ்க்கையை பாழாக்கிய) சண்டர் (கொடுமையான மனிதர்கள்) ஆனார் (ஆக இருக்கின்றார்கள்)
கழி (எனவே தங்களின் வாழ்க்கையை வீணாக கழித்த) குலத்தோர்கள் (கூட்டத்தவர்கள்) களைய (உண்மை வேடம் அணிந்த நல்லவர்கள் கூட்டத்திலிருந்து நீக்கி களையப்) பட்டோரே (பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்).

விளக்கம்:

ஞான குருவின் வழியை பின்பற்றி வருகின்ற சீடர்கள் கூட்டத்தோடு சேர்ந்தவர்கள் உண்மையான வேடம் அணிவது தேவர்கள் ஆகுவதற்காக ஆகும். ஆனால் இழிவான கூட்டத்தோடு சேர்ந்தவர்கள் பொய்யாக வேடம் அணிவது அனைவருக்கும் மேலானவன் என்ற பொய்யான பதவியை பெறுவதற்கு ஆகும். ஆகவே பொய்யான வேடத்தால் பழியை பெற்ற கூட்டத்தவர் ஆகிய இவர்கள் அடுத்தவர்களின் வாழ்க்கையை பாழாக்கிய கொடுமையான மனிதர்கள் ஆக இருக்கின்றார்கள். எனவே தங்களின் வாழ்க்கையை வீணாக கழித்த கூட்டத்தவர்கள் உண்மை வேடம் அணிந்த நல்லவர்கள் கூட்டத்திலிருந்து நீக்கி களையப் பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.

பாடல் #1659

பாடல் #1659: ஆறாம் தந்திரம் – 8. அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)

பொய்த்தவஞ் செய்வார் புகுவார் நரகத்துப்
பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்
பொய்த்தவ மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ்
சத்திய ஞானத்தாற் றாங்குந் தவங்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொயததவஞ செயவார புகுவார நரகததுப
பொயததவஞ செயதவர புணணிய ராகாரெற
பொயததவ மெயததவம பொகததுட பொககியஞ
சததிய ஞானததாற றாஙகுந தவஙகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பொய் தவம் செய்வார் புகுவார் நரகத்து
பொய் தவம் செய்தவர் புண்ணியர் ஆகார் ஏல்
பொய் தவம் மெய் தவம் போகத்து உள் போக்கி அம்
சத்திய ஞானத்தால் தாங்கும் தவங்களே.

பதப்பொருள்:

பொய் (உண்மையான தவசிகளைப் போல நடிக்கின்ற பொய்யான) தவம் (தவத்தை) செய்வார் (செய்பவர்கள்) புகுவார் (இறந்த பிறகு சென்று அடைவார்கள்) நரகத்து (நரகத்தில்)
பொய் (பொய்யான) தவம் (தவத்தை) செய்தவர் (செய்தவர்கள்) புண்ணியர் (பாவத்தை மட்டுமே சேர்த்துக் கொள்வதால் புண்ணியம் பெற்றவர்) ஆகார் (ஆக மாட்டார்கள்) ஏல் (ஆனால்)
பொய் (பொய்யான) தவம் (தவமாக இருந்தாலும்) மெய் (உண்மையான) தவம் (தவமாக இருந்தாலும்) போகத்து (உலகத்தில் வினைகளை கொடுக்கின்ற ஆசைகளை) உள் (தமக்குள்ளிருந்து) போக்கி (நீக்கி விட்டு) அம் (அதன் பயனால் கிடைக்கின்ற)
சத்திய (உண்மையான) ஞானத்தால் (ஞானத்தால்) தாங்கும் (உறுதியாக தாங்கப்பட்டு இருப்பதே) தவங்களே (உண்மையான தவங்கள் ஆகும்).

விளக்கம்:

உண்மையான தவசிகளைப் போல நடிக்கின்ற பொய்யான தவத்தை செய்பவர்கள் இறந்த பிறகு நரகத்திற்கே சென்று அடைவார்கள். பொய்யான தவத்தை செய்தவர்கள் பாவத்தை மட்டுமே சேர்த்துக் கொள்வதால் புண்ணியம் பெற்றவர் ஆக மாட்டார்கள். ஆனால், பொய்யான தவமாக இருந்தாலும் உண்மையான தவமாக இருந்தாலும் உலகத்தில் வினைகளை கொடுக்கின்ற ஆசைகளை தமக்குள்ளிருந்து நீக்கி விட்டு அதன் பயனால் கிடைக்கின்ற உண்மையான ஞானத்தால் உறுதியாக தாங்கப்பட்டு இருப்பதே உண்மையான தவங்கள் ஆகும்.

பாடல் #1660

பாடல் #1660: ஆறாம் தந்திரம் – 8. அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)

பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்
பொய்வேட மெய்வேடம் போதவே பூணினு
முய்வேட மாகுமு ணர்ந்தறிந் தோர்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொயவெடம பூணபர பொசிததல பயனாக
மெயவெடம பூணபொர மிகுபிசசை கைககொளவர
பொயவெட மெயவெடம பொதவெ பூணினு
முயவெட மாகுமு ணரநதறிந தொரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயன் ஆக
மெய் வேடம் பூண்போர் மிகு பிச்சை கை கொள்வர்
பொய் வேடம் மெய் வேடம் போதவே பூணினும்
உய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே.

பதப்பொருள்:

பொய் (உண்மையான தவசிகளைப் போல பொய்யாக) வேடம் (வேடம்) பூண்பர் (அணிந்து கொள்பவர்கள்) பொசித்தல் (சும்மா இருந்து மற்றவர்கள் தானமாக தருகின்ற உணவை வைத்து தமது பசியை தீர்த்துக் கொள்கின்ற) பயன் (பயனை) ஆக (எண்ணியே ஆகும்)
மெய் (உண்மையான) வேடம் (வேடத்தை) பூண்போர் (அணிந்த தவசிகள்) மிகு (மேன்மையான) பிச்சை (உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு யாசிக்கின்ற பிச்சை என்கின்ற) கை (கொள்கையை) கொள்வர் (மேற் கொண்டவர்கள்)
பொய் (பொய்யான) வேடம் (வேடமாக இருந்தாலும்) மெய் (உண்மையான) வேடம் (வேடமாக இருந்தாலும்) போதவே (அவர்களின் ஆசைகளோ கொள்கைகளுக்கோ ஏற்றபடி) பூணினும் (அணிந்து கொண்டாலும்)
உய் (இறைவனை அடைவதற்கு) வேடம் (அந்த வேடம்) ஆகும் (பயன்படுவது) உணர்ந்து (அந்த வேடத்தின் உள்ளே இருக்கின்ற உண்மையான தத்துவத்தை உணர்ந்து) அறிந்தோர்க்கே (அறிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே ஆகும்).

விளக்கம்:

உண்மையான தவசிகளைப் போல பொய்யாக வேடம் அணிந்து கொள்பவர்கள் சும்மா இருந்து மற்றவர்கள் தானமாக தருகின்ற உணவை வைத்து தமது பசியை தீர்த்துக் கொள்கின்ற பயனை எண்ணியே அப்படி வேடம் போடுகின்றார்கள். உண்மையான வேடத்தை அணிந்த தவசிகள் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு யாசிக்கின்ற பிச்சை என்கின்ற மேன்மையான கொள்கையை மேற் கொண்டவர்கள் ஆவார்கள். பொய்யான வேடமாக இருந்தாலும் உண்மையான வேடமாக இருந்தாலும் அவர்களின் ஆசைகளோ கொள்கைகளுக்கோ ஏற்றபடி அணிந்து கொண்டாலும், இறைவனை அடைவதற்கு அந்த வேடம் பயன்படுவது அந்த வேடத்தின் உள்ளே இருக்கின்ற உண்மையான தத்துவத்தை உணர்ந்து அறிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே ஆகும்.

கருத்து:

பொய்யான வேடம் அணிந்தாலும் உண்மையான வேடம் அணிந்தாலும் தவ வேடத்தின் உட்பொருளாகிய எதை செய்தாலும் ஆசைகள் இல்லாமல் யாசித்து செய்கின்ற தத்துவத்தை உணர்ந்து அறிந்து கொண்டவர்களுக்கே அது இறைவனை அடைவதற்கு வழிகாட்டும்.