பாடல் #208

பாடல் #208: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)

கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்துஅவர் போகின்ற வாறே.

விளக்கம்:

மன உறுதி இல்லாதவன் வைத்திருக்கும் ஒழுக்கமானது குளத்தை முடியிருக்குத் பாசி போன்றது. ஆசை ஒன்று வந்தவுடன் குளத்திற்குள் இருக்கும் பாசிக்கு நடுவே ஒர் கல்லை போட்டதும் அது உடனே உள்ளே சென்று விடும். அது போல் மன உறுதி இல்லாதவனிடம் வரும் ஆசையானது தவறான ஆசையாக இருந்தாலும் உடனடியாக செய்து விடுவான். ஆசையில் மனம் ஆழ்ந்து இருக்கும் எல்லை வரை சென்று இன்பத்தை அனுபவிப்பவர்கள். மனதின் அடியாழம் வரை சென்று சுத்தமாக ஆசையை தடுக்கவில்லை என்றால் பிறவிப் சுழற்சியில் சிக்கி பிறந்து கிடக்கும் வழி இதுவாகவே இருக்கும்.

பாடல் #207

பாடல் #207: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)

வையகத் தேமட வாரொடும் கூடியென்
மெய்யகத் தோருளம் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெறு வேம்புஅது வாமே.

விளக்கம்:

கையில் வைத்து கரும்பை நன்றாக அரைத்து பிழிந்து அதன் சாறை எடுத்து உட்கொண்டால் அது நாக்கில் படும்போது இனிப்பு போல தெரிந்தாலும் உடலுக்குள் சென்ற பிறகு அதன் விளைவானது வேப்பங் காயை உட்கொண்டது போல கசப்புத் தன்மையாகவே இருக்கும். அது போலவே உலகத்தில் உள்ள மடமையான மகளிரோடு இணைந்து உறவு கொள்ளும் போது அது இன்பம் போல தெரிந்தாலும் தமது மனதிற்குள் இறைவன் ஆதியிலேயே வைத்து இருக்கின்ற மனசாட்சியானது இது உண்மையான இன்பம் இல்லை இதனால் பின்பு துன்பமே விளையும் என்று காட்டிக் கொடுத்து விடும். அதனால் உண்மையான இன்பமாகிய பேரின்பத்தை அடைய வேண்டும் என்றால் இறைவன் மேல் உண்மையான அன்பு கொண்டு இருங்கள்.

பாடல் #206

பாடல் #206: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும்
மயலுறும் வானவர் சாரவிரும் என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.

விளக்கம்:

பெண் யானையின் இயல்பை கொண்டு கர்ம வினைகளால் இயல்பாகவே அமைந்த வாழ்க்கையில் சிக்கி இருக்கின்ற இளமையான பொது மகளிர் தாங்கள் விரும்பும் செல்வத்திற்காக புயல் காற்றில் சிக்கிய புல்லானது காற்று இழுக்கும் திசையில் வளைந்து சாய்ந்து கொடுப்பது போலவே ஆசை படுகின்ற ஆடவருக்கு ஏற்றபடி அவரோடு இணைந்து கொள்பவர்களாக இருந்தாலும் தம் மீது காதல் வயப்பட்டு தேடி வந்து சேருகின்ற ஆடவர்களின் செல்வத்தில் மயங்கி தேவர்களைப் போல இருக்கின்ற நீங்கள் எம்மோடு எப்போதும் சேர்ந்தே இருங்கள் என்று வேண்டுவார்கள். ஆயினும் வேறு ஒரு செல்வமுள்ள ஆடவர் ஆசைப் பட்டு வந்தால் அவரோடு இணைந்து கொண்டு அன்பாக பேசி இதுவரை சேர்ந்து இருந்த ஆடவரிடமிருந்து விலகி போய் விடுவார்கள்.

பாடல் #205

பாடல் #205: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)

மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் அன்பை
நனவது போலவும் நாடவொண் ணாதே.

விளக்கம்:

நதியில் உருவாகும் சுழலானது தனக்குள் நுழைந்த எதையும் வெளிவிடாமல் இழுத்துச் சென்று அழித்து விடுவது போலவே திருமணம் புரிந்து கணவருடன் வீட்டில் வசிக்கின்ற குடும்ப பெண்களிடம் இச்சையை தேடிச் சென்றால் அந்த உரிமை இல்லாத காமமானது தம்மையும் சேர்த்து இழுத்து உயிரை வாங்கிவிடும். ஆகவே, உறக்கத்தில் கண்ட கனவானது தூங்கும் போது உண்மையானது போலவே தோன்றினாலும் காலையில் எழுந்தவுடன் பொய்யாகி கலைந்து போவதைப் போலவே காமத்தின் உள்ளிருந்து கசிந்து வெளிவருகின்ற ஆசையானது உண்மையான அன்பைப் போலவே தெரிந்தாலும் அது பொய்யான அன்பு என்று பிறகு தெரிந்து விடும். அதனால் அந்த பொய்யான அன்பைத் தேடி ஓடுகின்ற மனதை விட்டு விலகி இருங்கள்.

கருத்து:

தூங்கும்போது சாப்பிடுவது போல கனவு கண்டால் அப்போதைக்குச் சந்தோஷமாக இருக்குமே தவிர உண்மையில் பசி தீர்ந்துவிடாது. அதுபோலவே தமக்கு உரிமையில்லாத பெண்கள் மீது காட்டும் அன்பானது அப்போதைக்கு இன்பமாக இருக்குமே தவிர உண்மையில் இழிவு நிலைக்கு இழுத்துச் சென்றுவிடும்.

பாடல் #204

பாடல் #204: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.

விளக்கம்:

எட்டி மரத்தின் இலைகளும் பழுத்த பழங்களும் மிகவும் அழகாகவும் உண்பதற்கு மிகவும் நன்மையாகவும் கண்களுக்குத் தெரியும். ஆயினும் அதன் பழத்தை பறித்து உண்டு விட்டால் அது விஷமாக மாறி உயிரைக் குடித்து விடும். அது போலவே இளம் கன்னியர்களின் கவர்ச்சிகரமான முலைகள் மிகவும் அழகாகவும் இச்சையை தூண்டுவது போலவும் தெரியும். ஆயினும் அதைக் கண்டு கவனம் சிதறி செய்கின்ற செயலில் இருந்து விலகும் படி இருக்கின்ற ஆசை மனதை அது துயரப் பட்டாலும் பரவாயில்லை என்று அடங்கும் வரை போராடி வெற்றி கொள்ளுங்கள்.