பாடல் #1610

பாடல் #1610: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங்
கோணாத போதமுங் கூடாத கூட்டமு
நாணாத நாணமு நாதாந்த போதமுங்
காணா யெனவந்து காட்டின னந்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காணாத கணணுடன கெளாத கெளவியுங
கொணாத பொதமுங கூடாத கூடடமு
நாணாத நாணமு நாதாநத பொதமுங
காணா யெனவநது காடடின னநதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காணாத கண் உடன் கேளாத கேள்வியும்
கோணாத போதமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாத அந்த போதமும்
காண் ஆய் என வந்து காட்டினன் நந்தியே.

பதப்பொருள்:

காணாத (இதுவரை இறைவனை கண்டு அறியாத) கண் (ஊனக் கண்ணை மாற்றி காண வைக்கின்ற ஞானக் கண்ணையும்) உடன் (அதனுடன்) கேளாத (இறைவன் என்று ஒருவர் இருப்பதையே அறியாமல் இருக்கின்ற) கேள்வியும் (நிலையை மாற்றுகின்ற அறிவையும்)
கோணாத (தன்னுடைய நிலையிலிருந்து எப்போதும் மாறாத) போதமும் (ஞானத்தையும்) கூடாத (இறைவனோடு தாம் சேர்ந்து இருக்கின்றோம் என்பதையே அறியாமல் இருந்த எண்ணத்தை மாற்றி) கூட்டமும் (அவனோடு சேர்ந்து இருப்பதையும்)
நாணாத (இறைவனைப் பற்றிக் கொள்ளாமல் உலகப் பற்றுக்களிலேயே இருந்த மனதை மாற்றி) நாணமும் (இறைவனை பற்றிக் கொள்வதையும்) நாத (நாதத்தின் / ஒலியின்) அந்த (எல்லையாக இருக்கின்ற) போதமும் (ஞானத்தையும்)
காண் (இதுவரை அறியாமல்) ஆய் (இருக்கின்றாய்) என (என்று கருணையோடு) வந்து (வந்து என்னை தடுத்து ஆட்கொண்டு) காட்டினன் (காட்டி அறிய வைத்தான்) நந்தியே (குருநாதனாக வந்த இறைவன்).

விளக்கம்:

இதுவரை இறைவனை கண்டு அறியாத ஊனக் கண்ணை மாற்றி காண வைக்கின்ற ஞானக் கண்ணையும் அதனுடன் இறைவன் என்று ஒருவர் இருப்பதையே அறியாமல் இருக்கின்ற நிலையை மாற்றுகின்ற அறிவையும் தன்னுடைய நிலையிலிருந்து எப்போதும் மாறாத ஞானத்தையும் இறைவனோடு தாம் சேர்ந்து இருக்கின்றோம் என்பதையே அறியாமல் இருந்த எண்ணத்தை மாற்றி அவனோடு சேர்ந்து இருப்பதையும் இறைவனைப் பற்றிக் கொள்ளாமல் உலகப் பற்றுக்களிலேயே இருந்த மனதை மாற்றி இறைவனை பற்றிக் கொள்வதையும் நாதத்தின் எல்லையாக இருக்கின்ற ஞானத்தையும் இதுவரை அறியாமல் இருக்கின்றாய் என்று கருணையோடு வந்து என்னை தடுத்து ஆட்கொண்டு காட்டி அறிய வைத்தான் குருநாதனாக வந்த இறைவன்.

பாடல் #1609

பாடல் #1609: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

முன்னை யறிவறி யாதவம் மூடர்போற்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
றன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தன னந்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

முனனை யறிவறி யாதவம மூடரபொற
பினனை யறிவறி யாமையைப பெதிததான
றனனை யறியப பரனாககித தறசிவத
தெனனை யறிவித திருநதன னநதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

முன்னை அறிவு அறியாத அம் மூடர் போல்
பின்னை அறிவு அறியாமையை பேதித்தான்
தன்னை அறிய பரன் ஆக்கி தன் சிவத்து
என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே.

பதப்பொருள்:

முன்னை (இறைவனே குருவாக வருவதற்கு முன்பு) அறிவு (அவனை அறிகின்ற அறிவை) அறியாத (அறியாமல் பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டு மாயையிலேயே உழன்று கொண்டு இருக்கின்ற) அம் (இந்த உலகத்து) மூடர் (முட்டாள்களைப்) போல் (போலவே யானும் இருந்தேன்)
பின்னை (என்னை தடுத்து ஆட்கொள்வதற்காக இறைவனே குருவாக வந்த பிறகு) அறிவு (அவனை அறிந்து இருக்கின்ற ஞானத்தையும்) அறியாமையை (அவனை அறியாமல் இருக்கின்ற அறியாமையையும்) பேதித்தான் (பிரித்து காட்டி அருளினான்)
தன்னை (அதன் பிறகு எனக்குள் இருக்கும் இறைவனை) அறிய (அறிந்து கொள்ளும் படி செய்து) பரன் (அவரைப் போலவே என்னையும் பரம்பொருளாக) ஆக்கி (ஆக்கி) தன் (தமது) சிவத்து (சிவத் தன்மையை)
என்னை (யானும்) அறிவித்து (அறிந்து கொள்ளும் படி செய்து) இருந்தனன் (என்னுடன் வீற்றிருந்தார்) நந்தியே (குருநாதராக வந்த இறைவன்).

விளக்கம்:

இறைவனே குருவாக வருவதற்கு முன்பு அவனை அறிகின்ற அறிவை அறியாமல் பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டு மாயையிலேயே உழன்று கொண்டு இருக்கின்ற இந்த உலகத்து முட்டாள்களைப் போலவே யானும் இருந்தேன். என்னை தடுத்து ஆட்கொள்வதற்காக இறைவனே குருவாக வந்த பிறகு அவனை அறிந்து இருக்கின்ற ஞானத்தையும் அவனை அறியாமல் இருக்கின்ற அறியாமையையும் பிரித்து காட்டி அருளினான். அதன் பிறகு எனக்குள் இருக்கும் இறைவனை அறிந்து கொள்ளும் படி செய்து அவரைப் போலவே என்னையும் பரம்பொருளாக ஆக்கி தமது சிவத் தன்மையை யானும் அறிந்து கொள்ளும் படி செய்து என்னுடன் வீற்றிருந்தார் குருநாதராக வந்த இறைவன்.

பாடல் #1608

பாடல் #1608: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

வைச்சன வாறாறு மகற்றியே வைத்து
மெச்ச பரமன்றன் வியாத்தும் மேலிட்டு
நிச்சய மாகச் சிவமாக்கி நேயத்தா
லச்சங் கெடுத்தென்னை யாண்டன னந்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வைசசன வாறாறு மகறறியெ வைதது
மெசச பரமனறன வியாததும மெலிடடு
நிசசய மாகச சிவமாககி நெயததா
லசசங கெடுததெனனை யாணடன னநதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வைச்சன ஆறு ஆறும் அகற்றியே வைத்து
மெச்ச பரமன் தன் வியாத்தும் மேல் இட்டு
நிச்சயம் ஆக சிவம் ஆக்கி நேயத்தால்
அச்சம் கெடுத்து என்னை ஆண்டனன் நந்தியே.

பதப்பொருள்:

வைச்சன (பிறவி எடுக்கும் போது உடலில் இறைவன் வைத்து அருளிய) ஆறு (ஆறும்) ஆறும் (ஆறும் பெருக்கி வரும் மொத்தம் முப்பத்து ஆறு தத்துவங்களையும்) அகற்றியே (உடலிலிருந்து நீக்கி) வைத்து (வைத்து)
மெச்ச (அனைத்திற்கும் மேலான பொருள் என்று வியக்கத் தகுந்த) பரமன் (பரம்பொருளாகிய இறைவன்) தன் (தன்னை போலவே) வியாத்தும் (அனைத்திலும் வியாபித்து இருக்கின்ற) மேல் (மேலான நிலைக்கு) இட்டு (என்னை கொண்டு வந்து)
நிச்சயம் (உறுதி) ஆக (ஆக) சிவம் (என்னை சிவப் பரம்பொருளாகவே) ஆக்கி (ஆக்கி) நேயத்தால் (அளவில்லாத தம்முடைய அன்பினால்)
அச்சம் (இனி பிறவி எடுத்து விடுவோமோ என்கின்ற எனது பயத்தை) கெடுத்து (நீக்கி) என்னை (என்னை தமது) ஆண்டனன் (அடிமையாக ஆக்கி ஆட்கொண்டு அருளினார்) நந்தியே (குருநாதராக வந்த இறைவன்).

விளக்கம்:

பிறவி எடுக்கும் போது உடலில் இறைவன் வைத்து அருளிய முப்பத்து ஆறு தத்துவங்களையும் உடலிலிருந்து நீக்கி வைத்து அனைத்திற்கும் மேலான பொருள் என்று வியக்கத் தகுந்த பரம்பொருளாகிய இறைவன் தன்னை போலவே அனைத்திலும் வியாபித்து இருக்கின்ற மேலான நிலைக்கு என்னை கொண்டு வந்து உறுதியாக என்னை சிவப் பரம்பொருளாகவே ஆக்கி அளவில்லாத தம்முடைய அன்பினால் இனி பிறவி எடுத்து விடுவோமோ என்கின்ற எனது பயத்தை நீக்கி என்னை தமது அடிமையாக ஆக்கி ஆட்கொண்டு அருளினார் குருநாதராக வந்த இறைவன்.

பாடல் #1607

பாடல் #1607: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

தானென் றவனென் றிரண்டாகுந் தத்துவந்
தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு
தானென் றபூவை யவனடி சாத்தினால்
நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானென றவனென றிரணடாகுந தததுவந
தானென றவனென றிரணடுந தனிறகணடு
தானென றபூவை யவனடி சாததினால
நானென றவனெனகை நலலதொன றனறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தான் என்று அவன் என்று இரண்டு ஆகும் தத்துவம்
தான் என்ற அவன் என்ற இரண்டும் தனில் கண்டு
தான் என்ற பூவை அவன் அடி சாத்தினால்
நான் என்று அவன் என்கை நல்லது ஒன்று அன்றே.

பதப்பொருள்:

தான் (தான்) என்று (என்று தனியாகவும்) அவன் (இறைவன்) என்று (என்று தனியாகவும்) இரண்டு (இரண்டு விதம்) ஆகும் (ஆக பிரித்து வைத்து பார்க்கின்ற) தத்துவம் (தத்துவமானது)
தான் (தான்) என்ற (என்று எண்ணப்படுகின்ற பொருள்) அவன் (இறைவன்) என்ற (என்று எண்ணப்படுகின்ற பொருள்) இரண்டும் (ஆகிய இரண்டையும்) தனில் (தமக்குள்ளேயே) கண்டு (கண்டு உணர்ந்து)
தான் (தான்) என்ற (என்று எண்ணப்படுகின்ற பொருளாகிய ஆன்மாவை) பூவை (ஒரு பூவாக பாவித்து) அவன் (தமக்குள் இருக்கின்ற இறைவனின்) அடி (திருவடிகளில்) சாத்தினால் (அதை சாத்தி வணங்கித் தொழுதால்)
நான் (அடியவர் நான்) என்று (என்று எதை எண்ணுகின்றாரோ அதை) அவன் (இறைவன்) என்கை (என்று உணர்வதே) நல்லது (நல்லதான) ஒன்று (ஒன்றாக) அன்றே (அன்றிலிருந்தே உணர்ந்து கொள்ளுவார்).

விளக்கம்:

தான் என்று தனியாகவும் இறைவன் என்று தனியாகவும் இரண்டு விதமாக பிரித்து வைத்து பார்க்கின்ற தத்துவமானது, தான் என்று எண்ணப்படுகின்ற பொருள் இறைவன் என்று எண்ணப்படுகின்ற பொருள் ஆகிய இரண்டையும் தமக்குள்ளேயே கண்டு உணர்ந்து, தான் என்று எண்ணப்படுகின்ற பொருளாகிய ஆன்மாவை ஒரு பூவாக பாவித்து தமக்குள் இருக்கின்ற இறைவனின் திருவடிகளில் அதை சாத்தி வணங்கித் தொழுதால், அடியவர் நான் என்று எதை எண்ணுகின்றாரோ அதை இறைவன் என்று உணர்வதே நல்லதான ஒன்றாக அன்றிலிருந்தே உணர்ந்து கொள்ளுவார்.

பாடல் #1606

பாடல் #1606: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நீங்கிடும்
ஞேயத்தில் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவ
ராயத்தி னின்ற வறிவறி வோரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞெயததெ நினறொரககு ஞானாதி நீஙகிடும
ஞெயததில ஞாதுரு ஞெயததில வீடாகும
ஞெயததின ஞெயததை ஞெயததை யுறறவ
ராயததி னினற வறிவறி வொரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞேயத்தே நின்றோர்க்கு ஞான ஆதி நீங்கிடும்
ஞேயத்தில் ஞாது உரு ஞேயத்தில் வீடு ஆகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர்
ஆயத்தின் நின்ற அறிவு அறிவோரே.

பதப்பொருள்:

ஞேயத்தே (ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவை சிவப் பரம்பொருளாக உணர்ந்து) நின்றோர்க்கு (நின்றவர்களுக்கு) ஞான (தாமே சிவம் என்பதை உணர்கின்ற ஞானத்தை) ஆதி (ஆராய்கின்ற அறிவு) நீங்கிடும் (நீங்கி விடும்)
ஞேயத்தில் (ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவில் சிவப் பரம்பொருளை) ஞாது (பார்க்கின்ற) உரு (உருவமே) ஞேயத்தில் (பார்க்கப்படுகின்ற பரம்பொருளில்) வீடு (முக்தி நிலை) ஆகும் (ஆகும்)
ஞேயத்தின் (ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவாக உள்ள சிவப் பரம்பொருளில்) ஞேயத்தை (பரம்பொருளாக இருக்கின்ற) ஞேயத்தை (பரமாத்மாவோடு) உற்றவர் (சேர்ந்து இருக்கின்ற)
ஆயத்தின் (அடியவர் கூட்டத்துடன்) நின்ற (தாமும் சேர்ந்து நிற்கின்ற) அறிவு (அறிவை) அறிவோரே (அவர்கள் அறிந்து கொள்ளுவார்கள்).

விளக்கம்:

ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவை சிவப் பரம்பொருளாக உணர்ந்து நின்றவர்களுக்கு தாமே சிவம் என்பதை உணர்கின்ற ஞானத்தை ஆராய்கின்ற அறிவு நீங்கி விடும். ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவில் சிவப் பரம்பொருளை பார்க்கின்ற உருவமே பார்க்கப்படுகின்ற பரம்பொருளில் முக்தி நிலை ஆகும். ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவாக உள்ள சிவப் பரம்பொருளில் பரம்பொருளாக இருக்கின்ற பரமாத்மாவோடு சேர்ந்து இருக்கின்ற அடியவர் கூட்டத்துடன் தாமும் சேர்ந்து நிற்கின்ற அறிவை அவர்கள் அறிந்து கொள்ளுவார்கள்.

பாடல் #1605

ஞாதுரு ஞான ஞேயம் முன்னுரை:

பார்க்கின்றவன் என்பது சாதகரை குறிக்கும். சாதகர் தமது ஆன்மாவை மாயை நீங்கிய ஞானத்தோடு பார்க்கும் போது அது சிவமாகத் தெரிகின்றது. அதுவே ஞானத்தின் மூலம் பார்க்கப் படுகின்ற பொருளாகும். தமது ஆன்மா சிவமாக இருப்பதை ஞானத்தினால் பார்த்து உணர்ந்த சாதகருக்கு ‘நான்’ என்ற அகங்காரம் நீங்கி விடுகின்றது.

பாடல் #1605: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

நீங்கார் சிவானந்த நேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படராப் படரினு
மாங்கார நீங்கி யதனிலை நிற்கவே
நீங்கா வமுத நிலைபெற லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நீஙகார சிவானநத நெயததெ நினறிடப
பாஙகான பாசம படராப படரினு
மாஙகார நீஙகி யதனிலை நிறகவெ
நீஙகா வமுத நிலைபெற லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நீங்கார் சிவ ஆனந்த நேயத்தே நின்றிட
பாங்கு ஆன பாசம் படரா படரினும்
ஆங்காரம் நீங்கி அதன் நிலை நிற்கவே
நீங்கா அமுத நிலை பெறல் ஆமே.

பதப்பொருள்:

நீங்கார் (நீங்காமல்) சிவ (சிவப் பரம்பொருளின்) ஆனந்த (பேரானந்தத்தில்) நேயத்தே (தூய்மையான அன்பிலே) நின்றிட (நின்று இருப்பார்கள்)
பாங்கு (அப்படி நிற்கின்ற பாவனை) ஆன (விட்டுவிடாமல் இருக்கும் போது) பாசம் (பாசத் தளைகள்) படரா (மூடி விடாமல் இருக்கும்) படரினும் (பிறகு உலக நன்மைக்காக செயல்கள் செய்யும் போது பாசம் வந்தால் கூட)
ஆங்காரம் (நான் என்கின்ற அகங்காரம்) நீங்கி (நீங்கி விட்டதால்) அதன் (பாசத் தளைகளால் மறுபடியும் மாயையில் மூழ்கிவிடாத) நிலை (நிலையிலேயே) நிற்கவே (நிலைத்து நிற்பார்கள்)
நீங்கா (அப்போது எப்போதும் நீங்காத) அமுத (சமாதி நிலையில் அமிழ்தத்தை பருகிக் கொண்டே பேரின்பத்தில் திளைத்து நிற்கின்ற) நிலை (நிலையை) பெறல் (அவர்களால் பெற) ஆமே (முடியும்).

விளக்கம்:

திருவடி பேற்றை பெற்ற அடியவர்கள் நீங்காமல் சிவப் பரம்பொருளின் பேரானந்தத்தில் தூய்மையான அன்பிலே நின்று இருப்பார்கள். அப்படி நிற்கின்ற பாவனை விட்டுவிடாமல் இருக்கும் போது பாசத் தளைகள் மூடி விடாமல் இருக்கும். பிறகு உலக நன்மைக்காக செயல்கள் செய்யும் போது பாசம் வந்தால் கூட நான் என்கின்ற அகங்காரம் நீங்கி விட்டதால் பாசத் தளைகளால் மறுபடியும் மாயையில் மூழ்கிவிடாத நிலையிலேயே நிலைத்து நிற்பார்கள். அப்போது எப்போதும் நீங்காத சமாதி நிலையில் அமிழ்தத்தை பருகிக் கொண்டே பேரின்பத்தில் திளைத்து நிற்கின்ற நிலையை அவர்களால் பெற முடியும்.

பாடல் #1604

பாடல் #1604: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

மந்திர மாவது மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவது
மெந்தை பிரான்ற னிணையடி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மநதிர மாவது மாமருந தாவதுந
தநதிர மாவதுந தானஙக ளாவதுஞ
சுநதர மாவதுந தூயநெறி யாவது
மெநதை பிரானற னிணையடி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மந்திரம் ஆவதும் மா மருந்து ஆவதும்
தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்
சுந்தரம் ஆவதும் தூய் நெறி ஆவதும்
எந்தை பிரான் தன் இணை அடி தானே.

பதப்பொருள்:

மந்திரம் (அனைத்து விதமான மந்திரங்கள் / மாயையால் மூடியிருக்கின்ற மனதை திறக்கின்ற திறவு கோல்) ஆவதும் (ஆக இருப்பதும்) மா (அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கின்ற / பிறவி பிணி எனும் நோயை தீர்க்கின்ற மாபெரும்) மருந்து (மருந்து) ஆவதும் (ஆக இருப்பதும்)
தந்திரம் (தாந்திரீகம் எனும் இறைவனை அடைவதற்கான வித்தைகள் / இறைவனை விரைவில் அடைவதற்கான வழிகள்) ஆவதும் (ஆக இருப்பதும்) தானங்கள் (அடியவர்கள் செய்கின்ற / அனைத்து விதமான தான தர்மங்கள்) ஆவதும் (ஆக இருப்பதும்)
சுந்தரம் (அழுக்கை நீக்கிய பேரழகு / பிறவி எனும் அழுக்கை நீக்கிய சுந்தரமான அமரர்கள்) ஆவதும் (ஆக இருப்பதும்) தூய் (இறைவனை அடைவதற்கு / மும் மலங்களை நீக்கி தூய்மை அடைவதற்கான) நெறி (வழி முறைகள்) ஆவதும் (ஆக இருப்பதும்)
எந்தை (எமது தந்தையும்) பிரான் (அனைத்திற்கும் தலைவனும்) தன் (ஆகிய இறைவனின்) இணை (ஒன்றாக சேர்ந்தே இருக்கின்ற) அடி (திருவடிகளே) தானே (ஆகும்).

விளக்கம்:

அனைத்து விதமான மந்திரங்களாக இருப்பதும் அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கின்ற மாபெரும் மருந்தாக இருப்பதும் தாந்திரீகம் எனும் இறைவனை அடைவதற்கான வித்தைகளாக இருப்பதும் உலகத்தில் உள்ள அனைத்து விதமான தான தர்மங்களாக இருப்பதும் அழுக்கை நீக்கிய பேரழகாக இருப்பதும் இறைவனை அடைவதற்கு தூய்மையான வழி முறைகளாக இருப்பதும் எமது தந்தையும் அனைத்திற்கும் தலைவனும் ஆகிய இறைவனின் ஒன்றாக சேர்ந்தே இருக்கின்ற திருவடிகளே ஆகும்.

உள் விளக்கம்:

மாயையால் மூடியிருக்கின்ற மனதை திறக்கின்ற திறவு கோலாக இருப்பதும் பிறவி பிணி எனும் நோயை தீர்க்கின்ற மாபெரும் மருந்தாக இருப்பதும் இறைவனை விரைவில் அடைவதற்கான வழிகளாக இருப்பதும் அடியவர்கள் செய்கின்ற அனைத்து விதமான தான தர்மங்களாக இருப்பதும் பிறவி எனும் அழுக்கை நீக்கிய சுந்தரமான அமரர்களாக இருப்பதும் மும் மலங்களை நீக்கி தூய்மை அடைவதற்கான வழி முறையாக இருப்பதும் இறைவனின் திருவடிகளே ஆகும்.

திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம் ஐந்தாம் தந்திரம் அனைத்து பாடல்களும் விளக்கங்களுடன் PDF மின் புத்தகமாக கீழே இருக்கும் இணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளும்படி கொடுத்துள்ளோம். அதற்கு கீழே நேரடியாகவே புத்தகத்தை பார்த்துப் படிக்கும்படி கொடுத்துள்ளோம்.

https://kvnthirumoolar.com/wp-content/uploads/2022/12/Thirumandhiram-Thandhiram-5.pdf

    பாடல் #1603

    பாடல் #1603: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

    அடிசார லாமண்ணல் பாத மிரண்டு
    முடிசார வைத்தனர் முன்னே முனிவர்
    படிசார்ந்த வின்பப் பழவடி வெள்ளங்
    குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

    திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

    அடிசார லாமணணல பாத மிரணடு
    முடிசார வைததனர முனனெ முனிவர
    படிசாரநத வினபப பழவடி வெளளங
    குடிசார நெறிகூடி நிறபவர கொளகையெ.

    சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

    அடி சாரல் ஆம் அண்ணல் பாதம் இரண்டும்
    முடி சார வைத்தனர் முன்னே முனிவர்
    படி சார்ந்த இன்ப பழ அடி வெள்ளம்
    குடி சார் நெறி கூடி நிற்பவர் கொள்கையே.

    பதப்பொருள்:

    அடி (இறைவனின் திருவடிகளையே) சாரல் (சார்ந்து) ஆம் (இருக்கின்றவர்கள்) அண்ணல் (இறைவனின்) பாதம் (பாதங்கள்) இரண்டும் (இரண்டையும்)
    முடி (தமது தலையின் மேல்) சார (சேர்ந்து இருக்கும்படி) வைத்தனர் (வைத்து இருக்கின்றார்கள்) முன்னே (ஆதிகாலத்தில்) முனிவர் (முற்றும் துறந்த முனிவர்கள்)
    படி (அந்த திருவடிகளால் பெற்ற அருளை உலக உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்றபடி படிப் படியாக) சார்ந்த (சேர்ந்து இருக்கும் படி கொடுக்கின்றார்கள்) இன்ப (பேரின்பத்தை அருளும்) பழ (பழம் பெரும் இறைவனின்) அடி (திருவடிகளில் இருந்து) வெள்ளம் (வெள்ளம் போல் பெற்ற அருளை)
    குடி (இறைவனின் திருவடிகளை தங்களின் தலையில் குடி வைத்து) சார் (அதையே சார்ந்து இருக்கின்ற) நெறி (வழிமுறையில்) கூடி (ஒன்றாக கூடி) நிற்பவர் (நிற்கின்ற அனைத்து முனிவர்களின்) கொள்கையே (கொள்கையும் இதுவே ஆகும்).

    விளக்கம்:

    இறைவனின் பாதங்கள் இரண்டையும் தமது தலையின் மேல் சேர்ந்து இருக்கும்படி வைத்து இறைவனின் திருவடிகளையே சார்ந்து இருக்கின்றார்கள் ஆதிகாலத்தில் முற்றும் துறந்த முனிவர்கள். பழம் பெரும் இறைவனின் அந்த திருவடிகளில் இருந்து அவர்கள் வெள்ளம் போல் பெற்ற அருளை உலக உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்றபடி படிப் படியாக அவர்களின் அனுபவிக்கும் படி படி கொடுக்கின்றார்கள் அவர்கள். இறைவனின் திருவடிகளை தங்களின் தலையில் குடி வைத்து அதையே சார்ந்து இருக்கின்ற வழிமுறையில் ஒன்றாக கூடி நிற்கின்ற அனைத்து முனிவர்களின் கொள்கையும் இதுவே ஆகும்.

    கருத்து:

    வெள்ளம் போன்ற இறைவனின் அருளை அப்படியே வழங்கினால் தாங்கிக் கொள்ள முடியாத உயிர்களுக்கு அவர்கள் அனுபவிக்க வேண்டிய ஆசைகளுக்கு ஏற்றபடி படிப்படியாக அனுபவிக்கும் படி மாற்றிக் கொடுத்து இறைவனின் திருவடிகளையே சார்ந்து இருக்கின்றார்கள் முற்றும் துறந்த முனிவர்கள். திருவடி பேற்றை அடைந்த இவர்களின் தன்மையை இந்தப் பாடலில் திருமூலர் அருளுகின்றார்.

    பாடல் #1602

    பாடல் #1602: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

    வைத்தே னடிகண் மனத்தினுள் ளேநான்
    பொய்த்தே யெரியும் புலன்வழி போகாம
    லெய்த்தே னுழலு மிருவினை மாற்றிடு
    மெய்த்தே னறிந்தே னவ்வேதத்தி னந்தமே.

    திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

    வைததெ னடிகண மனததினுள ளெநான
    பொயததெ யெரியும புலனவழி பொகாம
    லெயததெ னுழலு மிருவினை மாறறிடு
    மெயததெ னறிநதெ னவவெதததி னநதமெ.

    சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

    வைத்தேன் அடி கண் மனத்தின் உள்ளே நான்
    பொய்த்தே எரியும் புலன் வழி போகாமல்
    எய்த்தேன் உழலும் இரு வினை மாற்றிடும்
    மெய் தேன் அறிந்தேன் அவ் வேதத்தின் அந்தமே.

    பதப்பொருள்:

    வைத்தேன் (வைத்தேன்) அடி (இறைவனை திருவடிகளை) கண் (எனது கண்களிலும்) மனத்தின் (மனதிற்கும்) உள்ளே (உள்ளே) நான் (யான்)
    பொய்த்தே (உண்மையை மறைத்து பொய்யான ஆசைகளையே) எரியும் (அதிகமாக்குகின்ற) புலன் (ஐந்து புலன்களின்) வழி (வழியே) போகாமல் (மனம் போய் விடாமல்)
    எய்த்தேன் (ஆசைகளற்ற மேல் நிலைக்கு எடுத்து சென்று) உழலும் (பிறவிச் சுழலில் சுழன்று கொண்டே இருப்பதற்கு காரணமாகிய) இரு (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) வினை (வினைகளையும்) மாற்றிடும் (மாற்றிடும்)
    மெய் (உண்மையான) தேன் (பேரின்பத்தைக் கொடுக்கின்ற தேனாக) அறிந்தேன் (அறிந்து கொண்டேன்) அவ் (அந்த) வேதத்தின் (வேதங்களின்) அந்தமே (எல்லையாக இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை).

    விளக்கம்:

    இறைவனை திருவடிகளை எனது கண்களிலும் மனதிற்கு உள்ளேயும் யான் வைத்துக் கொண்டேன். அதனால் உண்மையை மறைத்து பொய்யான ஆசைகளையே அதிகமாக்குகின்ற ஐந்து புலன்களின் வழியே மனம் போய் விடாமல் ஆசைகளற்ற மேல் நிலைக்கு எடுத்து செல்லும். அதனால் பிறவிச் சுழலில் சுழன்று கொண்டே இருப்பதற்கு காரணமாகிய நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் மாற்றிடும் உண்மையான பேரின்பத்தைக் கொடுக்கின்ற தேனாக வேதங்களின் எல்லையாக இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை யான் அறிந்து கொண்டேன்.