பாடல் #1502

பாடல் #1502: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)

எளியன தீபமிட லலர் கொய்த
லளியின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ் சனமாதி
தளிதொழில் செய்வது தான்றாச மார்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எளியன தீபமிட லலர கொயத
லளியின மெழுக லதுதூரததல வாழததல
பளிபணி பறறல பனமஞ சனமாதி
தளிதொழில செயவது தானறாச மாரகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எளியன தீபம் இடல் அலர் கொய்தல்
அளி இன் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல்
பளி பணி பற்றல் பன் மஞ்சனம் ஆதி
தளி தொழில் செய்வது தான் தாச மார்கமே.

பதப்பொருள்:

எளியன (தங்களால் இயன்ற வரை) தீபம் (தீபங்களை) இடல் (ஏற்றி வைத்தல்) அலர் (நறுமணமிக்க மலர்ந்த மலர்களை) கொய்தல் (கொய்து அணிவித்தல்)
அளி (இறைவன் இருக்கின்ற) இன் (இடங்களை) மெழுகல் (சாணி பூசி மெழுகி) அது (அந்த இடத்தை) தூர்த்தல் (சுத்தமாக வைத்தல்) வாழ்த்தல் (இறைவனின் புகழ்களை பாடி வாழ்த்துதல்)
பளி (இறைவன் அமர்ந்து வருகின்ற பல்லக்கு) பணி (சேவை செய்வதற்கு) பற்றல் (பல்லக்கின் கழிகளை பற்றிக் கொண்டு வலம் வருதல்) பன் (பல விதமான) மஞ்சனம் (அபிஷேகப் பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்தல்) ஆதி (முதல் கொண்டு)
தளி (கோயில்களுக்கு) தொழில் (தேவையான தொண்டுகளில் தங்களால் இயன்ற அளவு) செய்வது (செய்து பணி புரிவது) தான் (தான்) தாச (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற) மார்கமே (வழி முறையாகும்).

விளக்கம்:

தங்களால் இயன்ற வரை தீபங்களை ஏற்றி வைத்தல் நறுமணமிக்க மலர்ந்த மலர்களை கொய்து சாற்றுதல் இறைவன் இருக்கின்ற இடங்களை சாணி பூசி மெழுகி அந்த இடத்தை சுத்தமாக வைத்தல் இறைவனின் புகழ்களை பாடி வாழ்த்துதல் இறைவன் அமர்ந்து வருகின்ற பல்லக்கு சேவை செய்வதற்கு பல்லக்கின் கழிகளை பற்றிக் கொண்டு வலம் வருதல் பல விதமான அபிஷேகப் பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்தல் முதல் கொண்டு கோயில்களுக்கு தேவையான தொண்டுகளில் தங்களால் இயன்ற அளவு செய்து பணி புரிவது தான் இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறையாகும்.

பாடல் #1503

பாடல் #1503: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)

அதுவிது வாதிப் பரமென் றகல
மிதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடு
மதுவிதி நெஞ்சிற் றழிகின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அதுவிது வாதிப பரமென றகல
மிதுவழி யெனறங கிறைஞசின ரிலலை
விதிவழி யெசெனறு வெநதனை நாடு
மதுவிதி நெஞசிற றழிகினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அது இது ஆதி பரம் என்று அகலம்
இது வழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை
விதி வழியே சென்று வேந்தனை நாடும்
அது விதி நெஞ்சில் அழிகின்ற ஆறே.

பதப்பொருள்:

அது (அதுவும்) இது (இதுவும்) ஆதி (ஆதியாக இருக்கின்ற) பரம் (பரம் பொருள்) என்று (என்று நினைத்துக் கொண்டு) அகலம் (பரந்து விரிந்து இருக்கின்ற உலகில்)
இது (இதுவே) வழி (இறைவனை அடையும் வழி) என்று (என்று எடுத்துக் கொண்டு) அங்கு (அதன் மூலம்) இறைஞ்சினர் (இறைவனை அடைய முயற்சி செய்கின்றவர்கள்) இல்லை (யாரும் இல்லை)
விதி (தங்களுக்கு விதிக்கப் பட்ட) வழியே (வழியில்) சென்று (சென்று) வேந்தனை (தமக்குள் மறைந்து இருந்து தம்மை ஆளுகின்ற இறைவனை அடியவராக) நாடும் (தேடி அடைகின்ற)
அது (வழி முறையே) விதி (விதி என்று கடைபிடிக்கின்றவர்களின்) நெஞ்சில் (மனதில் இருந்து) அழிகின்ற (ஆசைகளை அழித்து) ஆறே (இறைவனிடம் சேர்க்கின்ற வழி முறை இதுவே ஆகும்).

விளக்கம்:

அதுவும் இதுவும் ஆதியாக இருக்கின்ற பரம் பொருள் என்று நினைத்துக் கொண்டு பரந்து விரிந்து இருக்கின்ற உலகில் இதுவே இறைவனை அடையும் வழி என்று எடுத்துக் கொண்டு அதன் மூலம் இறைவனை அடைய முயற்சி செய்கின்றவர்கள் யாரும் இல்லை. அப்படி இல்லாமல் தங்களுக்கு விதிக்கப் பட்ட வழியில் சென்று தமக்குள் மறைந்து இருந்து தம்மை ஆளுகின்ற இறைவனை அடியவராக தேடி அடைகின்ற வழி முறையே விதி என்று கடைபிடிக்கின்றவர்களின் மனதில் இருந்து ஆசைகளை அழித்து இறைவனிடம் சேர்க்கின்ற வழி முறை இதுவே ஆகும்.

பாடல் #1504

பாடல் #1504: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)

அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு
சிந்திப்ப னென்று மொருவன் செழிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அநதிபபன திஙக ளதனபினபு ஞாயிறு
சிநதிபப னெனறு மொருவன செழிகழல
வநதிபபன வானவர தெவனை நாடொறும
வநதிபப தெலலாம வகையின முடிநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செழி கழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாள் தோறும்
வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்தே.

பதப்பொருள்:

அந்திப்பன் (காலையிலும் மாலையிலும்) திங்கள் (மனதாலும்) அதன் (அதன்) பின்பு (பிறகு அதற்கு ஏற்றபடி) ஞாயிறு (உடலாலும் வழிபாடு செய்து)
சிந்திப்பன் (சிந்தித்துக் கொண்டே இருப்பேன்) என்றும் (எப்போதும் எமக்கு எஜமானராக இருக்கின்ற) ஒருவன் (ஒருவனையும்) செழி (நினைப்பதை அருளுபவனுமாகிய அவனின்) கழல் (திருவடிகளை)
வந்திப்பன் (போற்றி வணங்குவேன்) வானவர் (வானவர்களுக்கு எல்லாம்) தேவனை (அதிபதியாக இருக்கின்ற இறைவனை) நாள் (தினம்) தோறும் (தோறும்)
வந்திப்பது (இவ்வாறு நான் போற்றி வணங்குவது) எல்லாம் (எல்லாமே) வகையின் (இறைவனை எஜமானராகவும் எம்மை அடியவராகவும் பாவிக்கின்ற) முடிந்தே (வழி முறைப் படியே ஆகும்).

விளக்கம்:

காலையிலும் மாலையிலும் மனதாலும் அதன் பிறகு அதற்கு ஏற்றபடி உடலாலும் வழிபாடு செய்து சிந்தித்துக் கொண்டே இருப்பேன். எப்போதும் எமக்கு எஜமானராக இருக்கின்ற ஒருவனையும் நினைப்பதை அருளுபவனுமாகிய அவனின் திருவடிகளை போற்றி வணங்குவேன். வானவர்களுக்கு எல்லாம் அதிபதியாக இருக்கின்ற இறைவனை தினம் தோறும் இவ்வாறு நான் போற்றி வணங்குவது எல்லாமே இறைவனை எஜமானராகவும் எம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறைப் படியே ஆகும்.

பாடல் #1505

பாடல் #1505: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)

அண்ணலை வானவ ராயிரம் பேர்சொல்லி
யுன்னுவ ருள்மகிழ்ந் துண்ணின் றடிதொழக்
கண்ணவ னென்று கருது மவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அணணலை வானவ ராயிரம பெரசொலலி
யுனனுவ ருளமகிழந துணணின றடிதொழக
கணணவ னெனறு கருது மவரகடகுப
பணணவன பெரனபு பறறிநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி
உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடி தொழ
கண் அவன் என்று கருதும் அவர்கட்கு
பண் அவன் பேர் அன்பு பற்றி நின்றானே.

பதப்பொருள்:

அண்ணலை (அனைத்திற்கும் எஜமானனாகிய இறைவனை) வானவர் (அடியவர்களாகிய வானவர்கள்) ஆயிரம் (ஆயிரம் விதமான) பேர் (பெயர்களை) சொல்லி (சொல்லி போற்றி)
உன்னுவர் (தமது எண்ணத்திற்குள் வைத்து நினைந்து) உள் (உள்ளம்) மகிழ்ந்து (மகிழ்ந்து) உள் (தமக்குள்) நின்று (நிற்கின்ற) அடி (அவனது திருவடியை) தொழ (தொழுவார்கள்)
கண் (தமது கண்ணுக்கு கண்ணாக இருப்பவன்) அவன் (அவனே) என்று (என்று) கருதும் (எண்ணுகின்ற) அவர்கட்கு (அவர்களுக்கு உள்ளே இருந்து)
பண் (இலயிக்கின்ற இசையைப் போல) அவன் (அந்த இறைவன்) பேர் (மாபெரும்) அன்பு (அன்பு காட்டி) பற்றி (அவர்களை அரவணைத்து) நின்றானே (நிற்கின்றான்).

விளக்கம்:

அனைத்திற்கும் எஜமானனாகிய இறைவனை அடியவர்களாகிய வானவர்கள் ஆயிரம் விதமான பெயர்களை சொல்லி போற்றி தமது எண்ணத்திற்குள் வைத்து நினைந்து உள்ளம் மகிழ்ந்து தமக்குள் நிற்கின்ற அவனது திருவடியை தொழுவார்கள். தமது கண்ணுக்கு கண்ணாக இருப்பவன் அவனே என்று எண்ணுகின்ற அவர்களுக்கு உள்ளே இருந்து இலயிக்கின்ற இசையைப் போல அந்த இறைவன் மாபெரும் அன்பு காட்டி அவர்களை அரவணைத்து நிற்கின்றான்.

பாடல் #1506

பாடல் #1506: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)

வாசித்தும் பூசித்து மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்கில்
மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை
நேசத் திருத்த நினைவறி யாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வாசிததும பூசிதது மாமலர கொயதிடடும
பாசிக குளததிலவீழ கலலா மனமபாரகில
மாசறற சொதி மணிமிடற றணணலை
நெசித திருதத நினைவறி யாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வாசித்தும் பூசித்தும் மா மலர் கொய்து இட்டும்
பாசி குளத்தில் வீழ் கல் ஆய் மனம் பார்கில்
மாசு அற்ற சோதி மணி மிடற்று அண்ணலை
நேசத்து இருத்த நினைவு அறியாரே.

பதப்பொருள்:

வாசித்தும் (இறைவனை போற்றி பாடியும் மந்திரங்களை செபித்தாலும்) பூசித்தும் (பூஜை செய்தாலும்) மா (அதிக அளவில்) மலர் (மலர்களை) கொய்து (கொய்து வந்து) இட்டும் (சாற்றினாலும்)
பாசி (பாசி படிந்த) குளத்தில் (குளத்தில்) வீழ் (விழுந்த) கல் (கல்லை) ஆய் (போலவே) மனம் (மனம் மாயையில் மூழ்கி இருக்கின்ற நிலையை) பார்கில் (பார்த்தால்)
மாசு (மாசு மரு எதுவும்) அற்ற (இல்லாத தூய்மையான) சோதி (சோதியாக) மணி (நீல நிற) மிடற்று (கழுத்தைக் கொண்டு) அண்ணலை (அனைத்திற்கும் எஜமானராக இருக்கின்ற இறைவனை)
நேசத்து (தங்களின் தூய்மையான அன்பில்) இருத்த (வைத்து இருக்கும்) நினைவு (எண்ணத்தை அவர்கள்) அறியாரே (அறியாமல் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை போற்றி பாடியும் மந்திரங்களை செபித்தாலும், பூஜை செய்தாலும், அதிக அளவில் மலர்களை கொய்து வந்து சாற்றினாலும், பாசி படிந்த குளத்தில் விழுந்த கல்லை போலவே மனம் மாயையில் மூழ்கி இருக்கின்ற நிலையை பார்த்தால் மாசு மரு எதுவும் இல்லாத தூய்மையான சோதியாக நீல நிற கழுத்தைக் கொண்டு அனைத்திற்கும் எஜமானராக இருக்கின்ற இறைவனை தங்களின் தூய்மையான அன்பில் வைத்து இருக்கும் எண்ணத்தை அவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.

கருத்து:

பாசி நிறைந்த குளத்தில் கல் விழுகின்ற போது சிறிது நேரம் பாசியானது அகன்று பின்னர் மூடிக்கொள்ளும். அதுபோல மாயையில் மூழ்கி இருக்கின்ற மனமானது பூசை முதலியன செய்யும் போது சிறிது அளவு மனம் தெளியும், பின்னர் அதனை அன்போடு தொடர்ந்து செய்யாமல் போனால் மறுபடியும் மாயையில் மூழ்கிவிடும். எனவே மாயையில் மூழ்கி இருக்கின்ற மனதில் இறைவனைப் பற்றிய எண்ணம் வருவதில்லை.