பாடல் #997

பாடல் #997: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகந்
துன்று மெழுகையுள் பூசிச் சுடரிடைத்
தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே.

விளக்கம்:

பட்டுப் போகாத அரச மரத்தின் பலகையை நேராக வைத்து அதன் மேலே நன்றாகப் பதியுமாறு ‘மசிவாயந’ என்று எழுதி அது போலவே பனை ஓலையிலும் எழுதி அந்த ஓலையின் மேலே தேன் கூட்டைச் சுட்டால் கிடைக்கும் மெழுகினால் பூசி அந்த மெழுகு ஓலையோடு ஒட்டி பக்குவப்படும் அளவிற்கு நெருப்பில் காட்டி அவ்வாறு பக்குவப்பட்ட ஓலையை அரசம் பலகையின் மேல் வைத்து அதில் எழுதியுள்ள ‘மசிவாயந’ என்ற மந்திரத்தை ஓதி வருபவர்களுக்கு தம்பனம் எனும் சித்தி கிடைக்கும்.

குறிப்பு: தம்பனம் என்பது இறைவனை அடையத் தடையாக இருக்கும் எதையும் கட்டுதல் அல்லது அடக்குதல் என்று பொருள்படும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.