பாடல் #995

பாடல் #995: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

எட்டினில் எட்டறை யிட்டோ ரறையிலே
கட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச்
சுட்டி இவற்றைப் பிரணவஞ் சூழ்ந்திட்டு
மட்டும் உயிர்கட் குமாபதி யானுண்டே.

விளக்கம்:

குறுக்கும் நெடுக்குமாக நான்கு கோடுகள் வரைந்து வருகின்ற ஒன்பது அறைகளில் நடு அறையில் ‘சி’ எழுத்தை எழுதி அந்த எழுத்தையே எட்டு எழுத்துக்களாகவும் காணும்படி சுற்றியிருக்கும் எட்டு கட்டங்களிலும் ‘சி’ எழுத்தையே எழுதி நிரப்பி இந்த சக்கரத்தை முழுவதும் சுற்றியிருக்கும்படி ‘ஓம்’ எனும் எழுத்தை எழுதி தியானிக்கும் சாதகர்களுக்கு இறைவனும் இறைவியும் உடன் இருப்பார்கள்.

குறிப்பு: இந்தப் பாடலின் மூலம் உமாபதி சக்கரம் அமைத்து தியானிக்கும் முறையை அறியலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.