பாடல் #1389

பாடல் #1389: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

காரணி சத்திக ளைம்பத் திரண்டெனக்
காரணி கன்னிக ளைம்பத் திருவராய்க்
காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்குங்
காரணி தன்னரு ளாகிநின் றாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காரணி சததிக ளைமபத திரணடெனக
காரணி கனனிக ளைமபத திருவராயக
காரணி சககரத துளளெ கரநதெஙகுங
காரணி தனனரு ளாகிநின றாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காரணி சத்திகள் ஐம் பத்து இரண்டு என
காரணி கன்னிகள் ஐம் பத்து இருவராய்
காரணி சக்கரத்து உள்ளே கரந்து எங்கும்
காரணி தன் அருள் ஆகி நின்றாளே.

பதப்பொருள்:

காரணி (சாதகர் தமது மலங்களும் கர்மங்களும் நீங்கி இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற) சத்திகள் (சக்திகளானது) ஐம் (ஐந்தும்) பத்து (பத்தும்) இரண்டு (இரண்டும் கூட்டி மொத்தம் ஐம்பத்து இரண்டு) என (பேர்களாக பிரிந்து இருக்கின்றனர்)
காரணி (சாதகர் தமது மலங்களும் கர்மங்களும் நீங்கி இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற) கன்னிகள் (என்றும் இளமையுடன் சிறிதும் அருளில் குறைவின்றி இருக்கின்ற சக்திகள்) ஐம் (ஐந்தும்) பத்து (பத்தும்) இருவராய் (இரண்டும் கூட்டி மொத்தம் ஐம்பத்து இரண்டு பேர்களாக இருக்கின்றனர்)
காரணி (சாதகர் தமது மலங்களும் கர்மங்களும் நீங்கி இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற) சக்கரத்து (நவாக்கிரி சக்கரத்திற்கு) உள்ளே (உள்ளேயே நின்று) கரந்து (சாதகரின் மும்மலங்களாகிய அழுக்குகளையும் இனி வரும் பிறவிகளுக்கு காரணமாக இருக்கின்ற கர்மங்களையும்) எங்கும் (முழுவதுமாக நீக்கி இறைவியிடமே சேர்த்து விடுகின்றனர்)
காரணி (சாதகர் தமது மலங்களும் கர்மங்களும் நீங்கி இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற) தன் (இறைவியே தனது) அருள் (பேரருளால்) ஆகி (ஐம்பத்து இருவரும் ஒன்றாக ஆகி) நின்றாளே (நிற்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1388 இல் உள்ளபடி சாதகர் தமது மலங்களும் கர்மங்களும் நீங்கி இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற சக்திகளானது மொத்தம் ஐம்பத்து இரண்டு பேர்களாக பிரிந்து இருக்கின்றனர். இந்த சக்திகள் என்றும் இளமையுடன் சிறிதும் அருளில் குறைவின்றி ஐம்பத்து இரண்டு பேர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் நவாக்கிரி சக்கரத்திற்கு உள்ளேயே நின்று சாதகரின் மும்மலங்களாகிய அழுக்குகளையும் இனி வரும் பிறவிகளுக்கு காரணமாக இருக்கின்ற கர்மங்களையும் முழுவதுமாக நீக்கி இறைவியிடமே சேர்த்து விடுகின்றனர். சாதகர் இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற இறைவியே தனது பேரருளால் இந்த ஐம்பத்து இரண்டு சக்திகளும் ஒன்றாக ஆகி நிற்கின்றாள்.

பாடல் #1390

பாடல் #1390: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நின்ற விச்சத்தி நிலைபெற நின்றிடிற்
கண்டவிவ் வன்னி கலந்திடு மோராண்டிற்
கொண்ட விரதநீர் குன்றாம னின்றிடின்
மன்றினி லாடு மணியது காணுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினற விசசததி நிலைபெற நினறிடிற
கணடவிவ வனனி கலநதிடு மொராணடிற
கொணட விரதநீர குனறாம னினறிடின
மனறினி லாடு மணியது காணுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நின்ற இச் சத்தி நிலை பெற நின்றிடில்
கண்ட இவ் வன்னி கலந்திடும் ஓர் ஆண்டில்
கொண்ட விரத நீர் குன்றாமல் நின்றிடில்
மன்றினில் ஆடும் மணி அது காணுமே.

பதப்பொருள்:

நின்ற (ஐம்பத்து இருவரும் ஒன்றாக ஆகி நிற்கின்ற) இச் (இந்த) சத்தி (இறைவியானவள்) நிலை (சாதகருக்குள் நிலையாக) பெற (உறுதியுடன்) நின்றிடில் (நின்று விட்டால்)
கண்ட (சாதகர் தமக்குள் தரிசித்த) இவ் (இந்த) வன்னி (அக்னி வடிவான இறைவியோடு) கலந்திடும் (சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரமும் கலந்து விடும்) ஓர் (ஒரு) ஆண்டில் (வருடம் உறுதியுடன் சாதகத்தை செய்தால்)
கொண்ட (அதன் பிறகும் தாம் எடுத்துக் கொண்ட நவாக்கிரி சக்கரத்தின்) விரத (சாதகத்தை) நீர் (நீங்கள்) குன்றாமல் (ஒரு குறையும் இல்லாமல்) நின்றிடில் (தொடர்ந்து செய்து வந்தால்)
மன்றினில் (சாதகருக்குள் இருக்கும் அம்பலத்தில்) ஆடும் (ஒன்றாக ஆடுகின்ற) மணி (வைரக் கல்லாகிய இறைவனையும் அதன் ஒளியாகிய சக்தியையும்) அது (தமக்குள்) காணுமே (தரிசிக்கலாம்).

விளக்கம்:

பாடல் #1389 இல் உள்ளபடி ஐம்பத்து இருவரும் ஒன்றாக ஆகி நிற்கின்ற இந்த இறைவியானவள் சாதகருக்குள் நிலையாக உறுதியுடன் ஒரு வருடம் நின்று விட்டால் சாதகர் தமக்குள் தரிசித்த இந்த அக்னி வடிவான இறைவியோடு சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரமும் கலந்து விடும். அதன் பிறகும் தாம் எடுத்துக் கொண்ட நவாக்கிரி சக்கர சாதகத்தை சாதகர் ஒரு குறையும் இல்லாமல் தொடர்ந்து செய்து வந்தால் அவருக்குள் இருக்கும் அம்பலத்தில் ஒன்றாக ஆடுகின்ற பாடல் #383 இல் உள்ளபடி வைரக் கல்லாகிய இறைவனையும் அதன் ஒளியாகிய சக்தியையும் தரிசிக்கலாம்.

பாடல் #1391

பாடல் #1391: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கண்டவிச் சத்தி யிருதய பங்கயங்
கொண்டவித் தத்துவ நாயகி யானவள்
பண்டையவ் வாயுப் பகையை யறுத்திட
வின்றென் மனத்து ளினிதிருந் தாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கணடவிச சததி யிருதய பஙகயங
கொணடவித தததுவ நாயகி யானவள
பணடையவ வாயுப பகையை யறுததிட
வினறென மனதது ளினிதிருந தாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கண்ட இச் சத்தி இருதய பங்கயம்
கொண்ட இத் தத்துவ நாயகி ஆனவள்
பண்டை அவ் வாயு பகையை அறுத்திட
இன்று என் மனத்துள் இனிது இருந்தாளே.

பதப்பொருள்:

கண்ட (சாதகர் தமக்குள் தரிசித்த) இச் (இந்த) சத்தி (இறைவியானவள்) இருதய (சாதகரின் இதயத்) பங்கயம் (தாமரையை தனது இருப்பிடமாக)
கொண்ட (கொண்டு வீற்றிருக்கும்) இத் (இந்த) தத்துவ (தத்துவங்களுக்கு எல்லாம்) நாயகி (தலைவியாக) ஆனவள் (இருக்கின்றாள்)
பண்டை (ஆதியிலிருந்தே) அவ் (உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற) வாயு (மனமாகிய) பகையை (எண்ணங்களை) அறுத்திட (முழுவதுமாக நீக்கி விட்டால்)
இன்று (முழுவதுமாக நீங்கிய அன்றே) என் (சாதகரின்) மனத்துள் (எண்ணங்கள் இல்லாத மனதிற்குள்) இனிது (இறைவியானவள் இன்பமுடன்) இருந்தாளே (வீற்றிருப்பாள்).

விளக்கம்:

பாடல் #1390 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் தரிசித்த இந்த இறைவியானவள் சாதகரின் இதயத் தாமரையை தனது இருப்பிடமாக கொண்டு வீற்றிருப்பாள். அப்படி அவள் வீற்றிருக்கும் முறைக்கு வேண்டிய அனைத்து தத்துவங்களுக்கும் அவளே தலைவியாக ஆகின்றாள். அவளை எண்ணிக் கொண்டே இருந்து ஆதியிலிருந்தே உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற மனமாகிய எண்ணங்களை சாதகர் தம்மிடமிருந்து முழுவதுமாக நீக்கி விட்டால் அது முழுவதுமாக நீங்கிய அன்றே சாதகரின் எண்ணங்கள் இல்லாத மனதிற்குள் இறைவியானவள் இன்பமுடன் வீற்றிருப்பாள்.

பாடல் #1392

பாடல் #1392: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

இருந்தவிச் சத்தி யிருநாலு கையிற்
பரந்தவிப் பூக்கிளி பாச மழுவாழ்
கரந்த கடகுடன் வில்லம்பு கொண்டங்
குரந்தங் கிருந்தவன் கூத்துகந் தாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருநதவிச சததி யிருநாலு கையிற
பரநதவிப பூககிளி பாச மழுவாழ
கரநத கடகுடன விலலமபு கொணடங
குரநதங கிருநதவன கூத்துகந தாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருந்த இச் சத்தி இரு நாலு கையில்
பரந்த இப் பூ கிளி பாசம் மழு வாள்
கரந்திடும் கடகு உடன் வில் அம்பு கொண்டு அங்கு
உரந்து அங்கு இருந்தவள் கூத்து உகந்தாளே.

பதப்பொருள்:

இருந்த (சாதகரின் எண்ணங்கள் இல்லாத மனதிற்குள் இன்பமுடன் இருந்த) இச் (இந்த) சத்தி (இறைவியானவள்) இரு (இரண்டும்) நாலு (நான்கும் பெருக்கி வரும் மெத்தம் எட்டு எண்ணிக்கையில் இருக்கும்) கையில் (தனது திருக்கரங்களில்)
பரந்த (பரந்து விரிந்து இருக்கும்) இப் (இந்த) பூ (பூமித் தாமரையையும்) கிளி (ஆன்மாவாகிய கிளியையும்) பாசம் (பாசமாகிய கயிறையும்) மழு (அந்த பாசத்தை அறுக்கின்ற மழுவையும்) வாள் (உலகத்தை சார்ந்து இருக்கின்ற [உணவு, நீர், காற்று] பகைகளை வாளால்)
கரந்திடும் (அழிக்கின்ற படியும்) கடகு (காக்கின்ற கேடயத்தையும்) உடன் (அதனுடன் சேர்ந்து) வில் (இனி வரும் பிறவிகளை அழிக்கின்ற வில்லையும்) அம்பு (அம்பையும்) கொண்டு (ஏந்திக் கொண்டு) அங்கு (சாதகருக்குள்)
உரந்து (முழுவதும் பரவி) அங்கு (அவருக்குள்ளேயே) இருந்தவள் (வீற்றிருந்த அவள்) கூத்து (சாதகரின் அனைத்து கர்மங்களையும் அழிக்கின்ற தாண்டவத்தை) உகந்தாளே (விருப்பமுடன் ஆடுகின்றாள்).

விளக்கம்:

பாடல் #1391 இல் உள்ளபடி சாதகரின் எண்ணங்கள் இல்லாத மனதிற்குள் இன்பமுடன் இருந்த இந்த இறைவியானவள் தனது எட்டு திருக்கரங்களிலும் 1. பரந்து விரிந்து இருக்கும் இந்த பூமித் தாமரையையும், 2. ஆன்மாவாகிய கிளியையும், 3. பாசமாகிய கயிறையும், 4. அந்த பாசத்தை அறுக்கின்ற மழுவையும், 5. உலகத்தை சார்ந்து இருக்கின்ற உணவு, நீர், காற்று ஆகிய பகைகளை அழிக்கின்ற வாளையும், 6. காக்கின்ற கேடயத்தையும், 7. அதனுடன் சேர்ந்து இனி வரும் பிறவிகளை அழிக்கின்ற வில்லையும், 8. அம்பையும் ஏந்திக் கொண்டு சாதகருக்குள் முழுவதும் பரவி அவருக்குள்ளேயே வீற்றிருந்து சாதகரின் அனைத்து கர்மங்களையும் அழிக்கின்ற தாண்டவத்தை விருப்பமுடன் ஆடுகின்றாள்.

பாடல் #1393

பாடல் #1393: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

உகந்தனள் பொன் முடிமுத் தாரமாகப்
பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து
தழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உகநதனள பொன முடிமுத தாரமாகப
பரநத பவளமும படடாடை சாததி
மலரநதெழு கொஙகை மணிககச சணிநது
தழைநதங கிருநதவள தானபசசை யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உகந்தனள் பொன் முடி முத்து ஆரம் ஆக
பரந்த பவளமும் பட்டு ஆடை சாத்தி
மலர்ந்து எழு கொங்கை மணி கச்சு அணிந்து
தழைந்து அங்கு இருந்தவள் தான் பச்சை ஆமே.

பதப்பொருள்:

உகந்தனள் (சாதகருக்குள் விருப்பமுடன் வீற்றிருக்கும் இறைவியானவள்) பொன் (தங்க நிறத்தில் சூரியக் கதிர்களைப் போல ஒளி வீசுகின்ற) முடி (தலை முடியிலிருந்து அடிவரை நிறைந்தும்) முத்து (முத்துக்களும்) ஆரம் (மாலை) ஆக (போல)
பரந்த (பரந்து விரிந்து இருக்கும் கழுத்தில்) பவளமும் (பவளங்களும் பதித்து இருக்கின்ற மாலையையும்) பட்டு (மிக உன்னதமான பட்டால்) ஆடை (ஆகிய ஆடையையும்) சாத்தி (சாத்திக் கொண்டு இருக்கின்றாள்)
மலர்ந்து (அவளுடைய மலர் போல மலர்ந்து) எழு (எழுந்து இருக்கும்) கொங்கை (திருமார்பகங்களின் மீது) மணி (நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட) கச்சு (மார்புக் கச்சையை) அணிந்து (அணிந்து கொண்டு இருக்கின்றாள்)
தழைந்து (இவ்வாறெல்லாம் அலங்கரித்துக் கொண்டு பேரழகோடு) அங்கு (சாதகருக்குள்) இருந்தவள் (வீற்றிருக்கின்ற) தான் (இறைவியே) பச்சை (பசுமையாக) ஆமே (இருக்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1392 இல் உள்ளபடி சாதகருக்குள் விருப்பமுடன் வீற்றிருக்கும் இறைவியானவள் தங்க நிறத்தில் சூரியக் கதிர்களைப் போல ஒளி வீசுகின்ற தலை முடியிலிருந்து அடிவரை நிறைந்தும் முத்துக்களும் பவளங்களும் பதித்து பரந்து விரிந்து இருக்கின்ற மாலையையும் மிக உன்னதமான பட்டால் ஆகிய ஆடையையும் சாத்திக் கொண்டு இருக்கின்றாள். அவளுடைய மலர் போல மலர்ந்து எழுந்து இருக்கும் திருமார்பகங்களின் மீது நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட மார்புக் கச்சையை அணிந்து கொண்டு இருக்கின்றாள். இவ்வாறெல்லாம் அலங்கரித்துக் கொண்டு பேரழகோடு சாதகருக்குள் வீற்றிருக்கின்ற இறைவியே பசுமையாக இருக்கின்றாள்.

பாடல் #1394

பாடல் #1394: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பச்சை யிவளுக்குப் பாங்கிமா ராறெட்டுக்
கொச்சைய ரெண்மர்கள் கூடி வருதலாற்
கச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்
எச்ச விடைச்சி யினிதிருந் தாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பசசை யிவளுககுப பாஙகிமா ராறெடடுக
கொசசைய ரெணமரகள கூடி வருதலாற
கசசணி கொஙகைகள கையிரு காபபதாய
எசச விடைசசி யினிதிருந தாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பச்சை இவளுக்குப் பாங்கிமார் ஆறு எட்டு
கொச்சையர் எண்மர்கள் கூடி வருதலால்
கச்சு அணி கொங்கைகள் கை இரு காப்பு அதாய்
எச்ச இடைச்சி இனிது இருந்தாளே.

பதப்பொருள்:

பச்சை (சாதகருக்குள் பசுமையாக வீற்றிருக்கின்ற) இவளுக்குப் (இறைவிக்கு) பாங்கிமார் (சரிசமமாக அவளைச் சூழ்ந்து நிற்கின்ற சக்திகள்) ஆறு (ஆறும்) எட்டு (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் நாற்பத்தெட்டு பேர் இருக்கின்றார்கள்)
கொச்சையர் (அவளுக்கு சரிசமமாகவும் நெருக்கமாகவும் இருக்கின்ற சக்திகள்) எண்மர்கள் (எட்டு பேரும்) கூடி (நாற்பத்து எட்டு பேரோடு கூட்டி மொத்தம் ஐம்பத்து ஆறு பேரும்) வருதலால் (அவளை எப்போதும் சூழ்ந்து வருவதால்)
கச்சு (அவர்கள் அனைவரும் மார்புக் கச்சைகளை) அணி (அணிந்து இருக்கும்) கொங்கைகள் (திருமார்புகளோடும்) கை (தங்களின் திருக்கரங்கள்) இரு (இரண்டிலும்) காப்பு (ஆயதங்களை ஏந்திக் கொண்டு காக்கின்ற) அதாய் (வளையமாக சூழ்ந்து இருக்க)
எச்ச (மெல்லிய) இடைச்சி (இடையைக் கொண்டு பசுமையாக இருக்கும் இறைவி அவர்களுக்கு நடுவில்) இனிது (இனிமையாக) இருந்தாளே (வீற்றிருந்தாள்).

விளக்கம்:

பாடல் #1393 இல் உள்ளபடி சாதகருக்குள் பசுமையாக வீற்றிருக்கின்ற இறைவிக்கு சரிசமமாக அவளைச் சூழ்ந்து நிற்கின்ற சக்திகள் நாற்பத்தெட்டு பேர் இருக்கின்றார்கள். அவளுக்கு சரிசமமாகவும் நெருக்கமாகவும் இருக்கின்ற சக்திகள் எட்டு பேரும் நாற்பத்து எட்டு பேரோடு கூட்டி மொத்தம் ஐம்பத்து ஆறு பேரும் அவளை எப்போதும் சூழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் அனைவரும் தங்களின் திருமார்புகளில் மார்புக் கச்சைகளை அணிந்து கொண்டும் தங்களின் திருக்கரங்கள் இரண்டிலும் ஆயதங்களை ஏந்திக் கொண்டும் காக்கின்ற வளையமாக சூழ்ந்து இருக்க மெல்லிய இடையைக் கொண்டு பசுமையாக இருக்கும் இறைவி அவர்களுக்கு நடுவில் இனிமையாக வீற்றிருந்தாள்.

பாடல் #1395

பாடல் #1395: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தாளதி னுள்ளே தயங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்துகௌம் னைம்என்று
மாலது வாக வழிபாடு செய்துநீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாளதி னுளளெ தயஙகிய சொதியைக
காலது வாகக கலநதுகௌம னைமஎனறு
மாலது வாக வழிபாடு செயதுநீ
பாலது பொலப பரநதெழு விணணிலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தாள் அதின் உள்ளே தயங்கிய சோதியை
கால் அது ஆகக் கலந்து கௌம் ஐம் என்று
மால் அது ஆக வழிபாடு செய்து நீ
பால் அது போலப் பரந்து எழு விண்ணிலே.

பதப்பொருள்:

தாள் (சாதகருக்குள் வீற்றிருக்கின்ற இறைவியின் திருவடிகள்) அதின் (அவற்றிற்கு) உள்ளே (உள்ளேயே) தயங்கிய (பிரகாசமாக இல்லாமல் மங்கி இருக்கும்) சோதியை (ஜோதியை)
கால் (மூச்சுக் காற்று) அது (மூலம்) ஆகக் (ஜோதியையே மூச்சுக் காற்றாக) கலந்து (கலந்து) கௌம் (‘கௌம்’ மற்றும்) ஐம் (‘ஐம்’ எனும் பீஜ மந்திரங்களை) என்று (அதோடு சேர்த்து ஜெபித்துக் கொண்டு)
மால் (காக்கின்ற தெய்வம்) அது (அதுவே) ஆக (என்று) வழிபாடு (எண்ணி தியானம்) செய்து (செய்தால்) நீ (சாதகர்கள்)
பால் (பசுவின் உடல் முழுவதும் உள்ள இரத்தமே பாலாக) அது (மாறுவது) போலப் (போல சாதகரின் உடல் முழுவதும் ஜோதியானது) பரந்து (பரந்து விரிந்து) எழு (சாதகரின் உடலுக்குள்ளிருந்து மேலெழுந்து வந்து) விண்ணிலே (ஆகாயத்திலும் பரந்து விரிந்து கொண்டே இருக்கும்).

விளக்கம்:

பாடல் #1394 இல் உள்ளபடி சாதகருக்குள் வீற்றிருக்கின்ற இறைவியின் திருவடிகளுக்கு உள்ளேயே பிரகாசமாக இல்லாமல் மங்கி இருக்கும் ஜோதியை மூச்சுக் காற்றோடு கலந்து ‘கௌம்’ மற்றும் ‘ஐம்’ எனும் பீஜ மந்திரங்களை அதோடு சேர்த்து ஜெபித்துக் கொண்டு காக்கின்ற தெய்வமாக அந்த ஜோதியை எண்ணி தியானம் செய்தால் பசுவின் உடல் முழுவதும் உள்ள இரத்தமே பாலாக மாறுவது போல சாதகர்களின் உடல் முழுவதும் பரந்து இருக்கும் ஜோதியானது சாதகரின் உடலுக்குள்ளிருந்து மேலெழுந்து வந்து ஆகாயத்திலும் பரந்து விரிந்து கொண்டே இருக்கும்.

பாடல் #1396

பாடல் #1396: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

விண்ணமர் நாபி யிரதயமாங் கிடைக்
கண்ணமர் கூபங் கலந்து வருதலாற்
பண்ணமர்ந் தாதித்த மண்டல மானது
தண்ணமர் கூபந் தழைத்தது காணுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விணணவர நாபி யிரதயமாங கிடைக
கணணமர கூபங கலநது வருதலாற
பணணமரந தாதிதத மணடல மானது
தணணமர கூபந தழைததது காணுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விண் அமர் நாபி இருதயம் ஆங்கு இடை
கண் அமர் கூபம் கலந்து வருதலால்
பண் அமர்ந்து ஆதித்த மண்டலம் ஆனது
தண் அமர் கூபம் தழைத்த அது காணுமே.

பதப்பொருள்:

விண் (ஆகாயத்தில்) அமர் (பரந்து விரிந்து இருக்கும் ஜோதியானது) நாபி (சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற தொப்புள் குழி) இருதயம் (இதயம்) ஆங்கு (ஆகிய இரண்டுக்கும்) இடை (இடைப்பட்ட இடத்தில் இருக்கின்ற)
கண் (சூட்சுமத் துளையில்) அமர் (அமர்ந்து இருக்கின்ற) கூபம் (கிணறோடு) கலந்து (கலந்து) வருதலால் (ஒன்றாகி வரும்போது)
பண் (சாதகர் ஜெபித்துக் கொண்டு இருக்கும் பீஜ மந்திரங்களில்) அமர்ந்து (வீற்றிருந்து) ஆதித்த (அந்த இடமே சூரிய) மண்டலம் (மண்டலமாக) ஆனது (ஆகிவிடும்)
தண் (அதன் பிறகு ஜோதியின் அருள்) அமர் (நிரம்புகின்ற) கூபம் (அந்த சூட்சுமத் துளையான கிணற்றில்) தழைத்த (அருள் முழுவதும் செழுமை பெற்று) அது (இருப்பதை) காணுமே (காணலாம்).

விளக்கம்:

பாடல் #1395 இல் உள்ளபடி ஆகாயத்தில் பரந்து விரிந்து இருக்கும் ஜோதியானது சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற தொப்புள் குழிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கின்ற சூட்சுமத் துளையில் அமர்ந்து இருக்கின்ற கிணறோடு கலந்து ஒன்றாகி வரும்போது பாடல் #1395 இல் உள்ளபடி சாதகர் ஜெபித்துக் கொண்டு இருக்கும் பீஜ மந்திரங்களில் வீற்றிருந்து அந்த இடமே சூரிய மண்டலமாக ஆகிவிடும். அதன் பிறகு ஜோதியின் அருள் நிரம்புகின்ற அந்த சூட்சுமத் துளையான கிணற்றில் அருள் முழுவதும் செழுமை பெற்று இருப்பதை காணலாம்.

பாடல் #1397

பாடல் #1397: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள
தாபத்துச் சத்தி தயங்கி வருதலா
லாபத்துக் கைகள டைந்தன நாலைந்து
பாசம றுக்கப் பரந்தன சூழவே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கூபததுச சததி குளிரமுகம பததுள
தாபததுச சததி தயஙகி வருதலா
லாபததுக கைகள டைநதன நாலைநது
பாசம றுககப பரநதன சூழவெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கூபத்து சத்தி குளிர் முகம் பத்து உள
தாபத்து சத்தி தயங்கி வருதல் ஆல்
ஆபத்து கைகள் அடைந்தன நால் ஐந்து
பாசம் அறுக்கப் பரந்தன சூழவே.

பதப்பொருள்:

கூபத்து (சாதகரின் தொப்புள் குழிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கின்ற சூட்சுமத் துளையான கிணற்றில்) சத்தி (வீற்றிருக்கும் இறைவிக்கு) குளிர் (குளிர்ச்சியான அருளை வழங்கும்) முகம் (முகங்கள்) பத்து (பத்து விதமாக) உள (இருக்கின்றது)
தாபத்து (சாதகருக்குள்ளிருந்து எழுந்து வருகின்ற மனதை சஞ்சலப் படுத்துகின்ற உணர்வுகளை) சத்தி (அந்த பத்து முகங்களின் அருளால் இறைவியானவள்) தயங்கி (வேகத்தை தடுத்துக் குறைத்து தயங்கி) வருதல் (வரும்படி) ஆல் (அருளுவதால்)
ஆபத்து (அந்த உணர்வுகளால் வருகின்ற ஆபத்துகளில் இருந்து சாதகரை காப்பாற்றி அருளுவதற்கு) கைகள் (பல விதமான ஆயுதங்களை ஏந்திக் கொண்டு இருக்கும் தனது திருக்கரங்களை) அடைந்தன (சாதகருக்குள் கொடுத்து) நால் (நான்கும்) ஐந்து (ஐந்தும் பெருக்கி வருகின்ற இருபது திருக்கரங்களால்)
பாசம் (சாதகருக்கும் அந்த உணர்வுகளுக்குமான பந்தத்தை) அறுக்க (அறுக்கும் படி) பரந்தன (பரந்து விரிந்து) சூழவே (சாதகரை சுற்றி அருளுகிறாள்).

விளக்கம்:

பாடல் #1396 இல் உள்ளபடி சாதகரின் தொப்புள் குழிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கின்ற சூட்சுமத் துளையான கிணற்றில் வீற்றிருக்கும் இறைவிக்கு குளிர்ச்சியான அருளை வழங்கும் திருமுகங்கள் பத்து விதமாக இருக்கின்றது. சாதகருக்குள்ளிருந்து எழுந்து வருகின்ற உணர்வுகளால் மனம் சஞ்சலம் அடையாதபடி அந்த பத்து திருமுகங்களின் அருளால் இறைவியானவள் வேகத்தை தடுத்துக் குறைத்து தயங்கி வரும்படி அருளுகின்றாள். அந்த உணர்வுகளால் வருகின்ற ஆபத்துகளில் இருந்து சாதகரை காப்பாற்றி அருளுவதற்கு பல விதமான ஆயுதங்களை ஏந்திக் கொண்டு இருக்கும் தனது இருபது திருக்கரங்களை சாதகருக்குள் கொடுத்து சாதகருக்கும் அந்த உணர்வுகளுக்குமான பந்தத்தை அறுக்கும் படி பரந்து விரிந்து சாதகரை சுற்றி அருளுகிறாள்.

இறைவி தனது பத்து திருமுகங்களாலும் தடுத்து அருளுகின்ற பத்து விதமான மன சஞ்சலங்கள்:

  1. காமம் – சிற்றின்பம்
  2. குரோதம் – கோபம்
  3. உலோபம் – பேராசை, கருமித்தனம்
  4. மோகம் – மாயையால் நிகழும் மயக்க உணர்ச்சி
  5. மதம் – கொள்கை, செருக்கு, வெறி, மதுபானக் களிப்பு, பெருமை
  6. மாச்சரியம் – பொறாமை, பகைமை
  7. டம்பம் – ஆடம்பரம்
  8. தர்ப்பம் – ஆசைகள்
  9. அசூயை – பொறாமை
  10. ஈரிசை – பிறர் துன்பம் கண்டு மகிழ்வது

பாடல் #1398

பாடல் #1398: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

சூலந்தண் டொள்வாள் சுடர்பரை ஞானமாய்
வேலம்பு தமாக மாகிளி விற்கொண்டு
கோலம்பு பாசம் மழுக்கத்தி கைக்கொண்டு
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை யெண்ணதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சூலநதண டொழவாழ சுடரபரை ஞானமாய
வெலமபு தமாக மாகிளி விறகொணடு
கொலமபு பாசம மழுககததி கைககொணடு
கொலஞசெர சஙகு குவிநதகை யெணணதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சூலம் தண்டு ஒள் வாள் சுடர் பரை ஞானம் ஆய்
வேல் அம்புதம் ஆக மா கிளி வில் கொண்டு
கோல் அம்பு பாசம் மழு கத்தி கை கொண்டு
கோலம் சேர் சங்கு குவிந்த கை எண் அதே.

பதப்பொருள்:

சூலம் (திரிசூலமும்) தண்டு (தண்டாயுதமும்) ஒள் (கூர்மையான) வாள் (வாளும்) சுடர் (சுடர்வீசும் நெருப்பும்) பரை (பேரறிவு) ஞானம் (ஞானத்தை வழங்கும்) ஆய் (திருக்கரங்களாகவும்)
வேல் (வேலாயுதமும்) அம்புதம் (கோரைப் புல்) ஆக (ஆகவும்) மா (மானும்) கிளி (கிளியும்) வில் (வில்லும்) கொண்டு (திருக்கரங்களில் ஏந்திக் கொண்டு)
கோல் (கோலும்) அம்பு (அம்பும்) பாசம் (பாசக் கயிறும்) மழு (மழுவும்) கத்தி (கத்தியும்) கை (திருக்கரங்களில்) கொண்டு (ஏந்திக் கொண்டு)
கோலம் (அழகிய வடிவத்தோடு) சேர் (சேர்ந்தே இருக்கின்ற) சங்கு (சங்கும்) குவிந்த (அபயம் கொடுக்கின்ற குவிந்த) கை (திருக்கரங்கள் இரண்டும் அதனுடன் மேல் நோக்கி முக்தியையும் கீழ் நோக்கி சரணாகதியையும் குறிக்கின்ற விரல்களை நீட்டி இருக்கின்ற இரண்டு திருக்கரங்களும் கொண்டு) எண் (இருக்கின்ற இறைவியை எண்ணிக்கொண்டே) அதே (இரு அதையே).

விளக்கம்:

பாடல் #1397 இல் உள்ளபடி தனது திருக்கரங்களை சாதகருக்குள் கொடுத்து சாதகருக்கும் உணர்வுகளுக்குமான பந்தத்தை அறுக்கும் படி பரந்து விரிந்து சாதகரை சுற்றி அருளுகின்ற இறைவியானவள் தனது இருபது திருக்கரங்களிலும் 1. திரிசூலமும் 2. தண்டாயுதமும் 3. கூர்மையான வாளும் 4. சுடர்வீசும் நெருப்பும் 5. பேரறிவு ஞானமும் 6. வேலாயுதமும் 7. கோரைப் புல்லும் 8. மானும் 9. கிளியும் 10. வில்லும் 11. கோலும் 12. அம்பும் 13. பாசக் கயிறும் 14. மழுவும் 15. கத்தியும் 16. தனது அழகிய வடிவத்தோடு சேர்ந்தே இருக்கின்ற சங்கும் 17 & 18. அபயம் கொடுக்கின்ற குவிந்த திருக்கரங்கள் இரண்டும் 19. மேல் நோக்கி முக்தியை குறிக்கின்ற விரலை நீட்டியும் 20. கீழ் நோக்கி சரணாகதியையும் குறிக்கின்ற விரலை நீட்டியும் இருக்கின்ற திருக்கரங்களை கொண்டு இருக்கின்றாள். இப்படி தம்மைச் சுற்றி பாதுகாப்பாக இருபது கரங்களில் இருபது விதமான ஆயுதங்களை ஏந்தி நிற்கும் இறைவியை சாதகர் எண்ணி தியானித்துக் கொண்டே இருக்க வேண்டும்.