பாடல் #921

பாடல் #921: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

மகாரம் நடுவே வளைத்திடுஞ் சத்தி
ஒகாரம் வளைத்திட்டு மப்பிளந் தேற்றி
யகாரந் தலையா யிருகண் சிகாரமாய்
நகார வகார நற்காலு நாடுமே.

விளக்கம்:

பாடல் #920 இல் உள்ளபடி நடுவே எழுதப்பட்டுள்ள ம என்ற எழுத்தை சுற்றி வ என்ற எழுத்தை எழுதி பின்பு அந்த இரண்டையும் ஒ என்ற எழுத்தால் வளைத்து அந்த ஒ எழுத்துக்கள் உ என்ற எழுத்தை தொடங்கி அடுத்த அறைகள் இரண்டு இரண்டாகும் படி பிரித்து மேலே ஏறும்படி வரைந்து வெளிப்புற வட்டத்தில் இருபக்கமும் இருக்கும் அறைகளைத் தலைகளாகவும் கீழ்ப்புற வட்டத்தில் இருபக்கமும் இருக்கும் அறைகளைக் கால்களாகவும் கருதிக் கொண்டு தலைகளாகின்ற அறைகளில் ய என்ற எழுத்தையும் கால்களாகின்ற அறைகளில் இடதுபுறம் ந என்ற எழுத்தையும் வலதுபுறம் அ என்ற எழுத்தையும் எழுதி செபித்தால் அதனோடு இறைவன் ஒன்றி இருப்பான்.

குறிப்பு: எழுத்து முறை அமைத்து தலை, கண், கால் முதலிய உறுப்புக்களோடு அமைந்த ஓர் உருவமாக பாவித்தால் திருவம்பல சக்கர நடுவில் இறைவனை மனித உருவமாகக் காணலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.