பாடல் #991

பாடல் #991: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

வித்தாஞ் செகமய மாக வரைகீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்
உத்தாரம் பன்னிரண் டாதி கலைதொகும்
பத்தாம் பிரம சடங்குபார்த் தோதிடே.

விளக்கம்:

36 தத்துவங்களைக் குறிக்கும் 36 கட்டங்கள் வரைந்து அதனுள் இடது பக்கம் மூன்றாவது அடுக்கு முதல் ஆறாம் அடுக்கு வரை ஒவ்வொரு அடுக்கிலும் 4 கட்டங்கள் வீதம் மொத்தம் 16 கட்டங்களில் சந்திரகலையின் ‘க்ஷ’ எழுத்து முதலாக ‘ட’ எழுத்து வரை உள்ள 16 எழுத்துக்களை எழுதி, முதல் இரண்டு அடுக்குகளில் 6 கட்டங்கள் வீதம் மொத்தம் 12 கட்டங்களில் ‘ஊ’ எழுத்து முதலாக ‘ஒ’ எழுத்து வரை உள்ள 12 எழுத்துக்களையும் எழுதி சக்கரம் அமைத்து ‘சிவாயநம’ எனும் மந்திரத்தை செபித்து வந்தால் சக்கரத்திலுள்ள இரண்டு கலைகளும் ஒன்றாகி சக்கரத்தின் வலது பக்கம் இருக்கும் எட்டு கட்டங்களோடு மேலே தலைப் பகுதியுள்ள இரண்டு கட்டங்களும் சேர்த்து மொத்தம் பத்து அக்னி கலைகள் உருவாகும். அப்படி உருவான பிறகு சக்கரத்திலிருக்கும் சந்திர, சூரிய, அக்னி கலைகள் மூன்றையும் சேர்த்து சாதகம் செய்ய வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.