பாடல் #537

பாடல் #537: இரண்டாம் தந்திரம் – 23. மாகேசுர நிந்தை

ஆண்டான் அடியவ ரார்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே.

விளக்கம்:

உலகத்தவர்களிடம் எந்தப் பற்றும் இல்லாத சிவனடியார்கள் யாருக்கு விரோதிகள்? தங்கள் வயிற்றுப் பசிக்குப் பிச்சை எடுத்து உண்ணும் அந்த அடியவர்களை தான் கொண்ட வெறுப்பினால் இகழ்ந்து பேசுபவர்கள் தமக்குத் தாமே செய்துகொண்ட தீவினையால் நரகத்திலேயே மிகவும் கொடியதான கடைசி நிலை நரகத்தில் சென்று விழுவார்கள்.

பாடல் #538

பாடல் #538: இரண்டாம் தந்திரம் – 23. மாகேசுர நிந்தை

ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வா ரவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே.

விளக்கம்:

சிவஞானியை நிந்தித்தலே (திட்டுதலே) நல்லது என்றுத் தவறாக நினைத்து நிந்திப்பவர்களுக்கு இருக்கும் நல்ல வினைகளும் தீய வினைகளாக மாறி துன்புறுவார்கள். சிவஞானியை வந்தித்தலே (வணங்குதலே) நல்லது என்று நினைத்து வணங்கியவர்களுக்கு இருக்கும் தீய வினைகளும் நல்ல வினைகளாக மாறி சிவஞானிகளின் அடியவர்களாக ஆகியவுடன் அவர்களின் அருளால் பேரின்பமான சிவபோகத்தை அடைவார்கள்.