பாடல் #1681

பாடல் #1681: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

மனத்தி லெழுந்ததோர் மாயக் கண்ணாடி
நினைக்கி லதனி னிழலையுங் காணார்
வினைப் பயன்போக விளக்கியுங் கொள்ளார்
புழைக்கடைக் கிச்சித்துப் போகின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மனததி லெழுநததொர மாயக கணணாடி
நினைககி லதனி னிழலையுங காணார
வினைப பயனபொக விளககியுங கொளளார
புழைககடைக கிசசிததுப பொகினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மனத்தில் எழுந்தது ஓர் மாய கண்ணாடி
நினைக்கில் அதனின் நிழலையும் காணார்
வினை பயன் போக விளக்கியும் கொள்ளார்
புழை கடைக்கு இச்சித்து போகின்ற ஆறே.

பதப்பொருள்:

மனத்தில் (உயிர்கள் தங்களின் மனதினில்) எழுந்தது (எழுகின்ற எண்ணங்களை மாயை மறைத்து இருப்பதால்) ஓர் (அது ஒரு) மாய (மாய / பொய்யான) கண்ணாடி (கண்ணாடியாக இருக்கின்றது)
நினைக்கில் (அந்த மனதில் நினைத்துப் பார்க்கின்ற கற்பனையான எண்ணங்கள்) அதனின் (அதனுடைய) நிழலையும் (நிழலைக் கூட) காணார் (காண முடியாதவர்களாக இருக்கின்றார்கள்)
வினை (தாங்கள் செய்கின்ற வினையின்) பயன் (பயன்) போக (தீர்ந்து போவதற்கான) விளக்கியும் (வழிமுறைகளை உபதேசித்தாலும்) கொள்ளார் (அதை கடை பிடித்து தங்களின் வினைகளை தீர்த்துக் கொண்டு மேல் நிலைக்குப் போகும் வழியில் செல்லாமல்)
புழை (கீழ் நிலைக்கு) கடைக்கு (செல்லும்) இச்சித்து (தங்களின் ஆசைகளினால்) போகின்ற (மேலும் மேலும் பிறவிகள் எடுக்கின்ற) ஆறே (வழியிலேயே செல்கிறார்கள்).

விளக்கம்:

உயிர்கள் தங்களின் மனதினில் எழுகின்ற எண்ணங்களை மாயை மறைத்து இருப்பதால் அது ஒரு பொய்யான கண்ணாடியாக இருக்கின்றது. அந்த மனதில் நினைத்துப் பார்க்கின்ற கற்பனையான எண்ணங்களின் நிழலைக் கூட காண முடியாதவர்களாக இருக்கின்றார்கள். தாங்கள் செய்கின்ற வினையின் பயன் தீர்ந்து போவதற்கான வழிமுறைகளை உபதேசித்தாலும் அதை கடை பிடித்து தங்களின் வினைகளை தீர்த்துக் கொண்டு மேல் நிலைக்குப் போகும் வழியில் செல்லாமல், கீழ் நிலைக்கு செல்லும் தங்களின் ஆசைகளினால் மேலும் மேலும் பிறவிகள் எடுக்கின்ற வழியிலேயே செல்கிறார்கள்.

திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை – பகுதி 3

“திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை – பகுதி 3” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 25-12-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

பாடல் #1680

பாடல் #1680: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

குருட்டினை நீங்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீங்காக் குருவினைக் கொள்வர்
குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குருடடினை நீஙகுங குருவினைக கொளளார
குருடடினை நீஙகாக குருவினைக கொளவர
குருடுங குருடுங குருடடாடட மாடிக
குருடுங குருடுங குழிவிழு மாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குருட்டினை நீங்கும் குருவினை கொள்ளார்
குருட்டினை நீங்கா குருவினை கொள்வர்
குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடி
குருடும் குருடும் குழி விழும் ஆறே.

பதப்பொருள்:

குருட்டினை (மாயையாகிய இருள்) நீங்கும் (விலகுகின்ற உயர்ந்த தன்மை கொண்ட) குருவினை (உண்மை குருவினை) கொள்ளார் (தேடி அடையாதவர்கள்)
குருட்டினை (மாயையாகிய இருள்) நீங்கா (தம்மை விட்டு இன்னமும் நீங்காத) குருவினை (பொய்யான குருவிடமே) கொள்வர் (சென்று சிக்கிக் கொள்கிறார்கள்)
குருடும் (இது ஒரு குருடனும்) குருடும் (இன்னொரு குருடனும்) குருட்டு (சேர்ந்து பார்வை இல்லாமல் இருளில் இடம் தெரியாமல்) ஆட்டம் (தடுமாறி) ஆடி (ஆடுவது போல இறைவனை அடையும் வழி தெரியாமல் ஆடி)
குருடும் (இந்த குருடனும்) குருடும் (அவன் உண்மை என்று நம்பிய பொய்யான குருவாகிய குருடனும்) குழி (சேர்ந்து பிறவிக் குழியில்) விழும் (மீண்டும் மீண்டும் விழுவதற்கே) ஆறே (வழியாகவே இருக்கும்).

விளக்கம்:

மாயையாகிய இருள் விலகுகின்ற உயர்ந்த தன்மை கொண்ட உண்மை குருவினை தேடி அடையாதவர்கள் மாயையாகிய இருள் தம்மை விட்டு இன்னமும் நீங்காத பொய்யான குருவிடமே சென்று சிக்கிக் கொள்கிறார்கள். இது ஒரு குருடனும் இன்னொரு குருடனும் சேர்ந்து பார்வை இல்லாமல் இருளில் இடம் தெரியாமல் தடுமாறி ஆடுவது போல இறைவனை அடையும் வழி தெரியாமல் ஆடி இந்த குருடனும் அவன் உண்மை என்று நம்பிய பொய்யான குருவாகிய குருடனும் சேர்ந்து பிறவிக் குழியில் மீண்டும் மீண்டும் விழுவதற்கான வழியாகவே இருக்கும்.

பாடல் #1679

பாடல் #1679: ஆறாம் தந்திரம் – 12. சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்)

ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர் வேண்டா மனிதரே
நாடுமி னந்தியை நம்பெருமான் றன்னைத்
தேடுமி னின்பபொருள் சென்றெய்த லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஓடுங குதிரைக குசைதிணணம பறறுமின
வெடஙகொண டெனசெயவீர வெணடா மனிதரெ
நாடுமி னநதியை நமபெருமான றனனைத
தெடுமி னினபபொருள செனறெயத லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஓடும் குதிரை குசை திண்ணம் பற்றுமின்
வேடம் கொண்டு என் செய்வீர் வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம் பெருமான் தன்னை
தேடுமின் இன்ப பொருள் சென்று எய்தல் ஆமே.

பதப்பொருள்:

ஓடும் (கடிவாளம் கட்டாமல் அங்கும் இங்கும் அலைந்து ஓடுகின்ற) குதிரை (குதிரையைப் போல அலைகின்ற மனதை) குசை (கடிவாளத்தை கட்டி குதிரையை அடக்குவது போல மனதை தியானத்தின் மூலம்) திண்ணம் (உறுதியாக) பற்றுமின் (பற்றிக் கொண்டு மனதை அடக்குங்கள்)
வேடம் (ஞானியைப் போல வெறும் வேடம்) கொண்டு (மட்டும் போட்டுக் கொண்டு) என் (என்ன) செய்வீர் (செய்வீர்கள்?) வேண்டா (இந்த வீணான வேலை வேண்டாம்) மனிதரே (மனிதர்களே)
நாடுமின் (உங்களுக்குள் வீற்றிருக்கும்) நந்தியை (குருநாதனாகிய இறைவன்) நம் (நமக்கெல்லாம்) பெருமான் (தலைவனாக) தன்னை (இருக்கின்ற அவனை)
தேடுமின் (தேடி அடைந்தால்) இன்ப (பேரின்ப) பொருள் (பொருளாகிய இறைவனை) சென்று (சென்று) எய்தல் (பேரின்பத்தை அடைய) ஆமே (முடியும்).

விளக்கம்:

கடிவாளம் கட்டாமல் அங்கும் இங்கும் அலைந்து ஓடுகின்ற குதிரையைப் போல அலைகின்ற மனதை கடிவாளத்தை கட்டி குதிரையை அடக்குவது போல மனதை தியானத்தின் மூலம் உறுதியாக பற்றிக் கொண்டு மனதை அடக்குங்கள். ஞானியைப் போல வெறும் வேடம் மட்டும் போட்டுக் கொண்டு என்ன செய்வீர்கள்? இந்த வீணான வேலை வேண்டாம் மனிதர்களே. உங்களுக்குள் வீற்றிருக்கும் குருநாதனாகிய இறைவன் நமக்கெல்லாம் தலைவனாக இருக்கின்ற அவனை தேடி அடைந்தால் பேரின்ப பொருளாகிய இறைவனை சென்று பேரின்பத்தை அடைய முடியும்.

பாடல் #1678

பாடல் #1678: ஆறாம் தந்திரம் – 12. சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்)

மயலற் றிருளற்று மாமன மற்றுக்
கயலுற்ற கண்ணிதன் கைப்பிணக் கற்றுத்
தயவற் றவரோடுந் தாமே தாமாகிச்
செயலற் றிருந்தார் சிவவேடத் தாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மயலற றிருளறறு மாமன மறறுக
கயலுறற கணணிதன கைபபிணக கறறுத
தயவற றவரொடுந தாமெ தாமாகிச
செயலற றிருநதார சிவவெடத தாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மயல் அற்று இருள் அற்று மா மனம் அற்று
கயல் உற்ற கண்ணி தன் கை பிணக்கு அற்று
தயவு அற்ற அவரோடும் தாமே தாம் ஆகி
செயல் அற்று இருந்தார் சிவ வேடத்தாரே.

பதப்பொருள்:

மயல் (மாயையாகிய மயக்கம்) அற்று (இல்லாமல்) இருள் (ஆணவம் கன்மம் ஆகிய மலங்கள்) அற்று (இல்லாமல்) மா (வலிமையான எண்ணங்களுடைய) மனம் (மனம்) அற்று (இல்லாமல்)
கயல் (எப்போதும் விழிப்போடு) உற்ற (இருக்கின்ற) கண்ணி (கண்களை பெற்று இருந்தாலும்) தன் (அந்த கண்களில் காணும் காட்சியின் தொடர்போ) கை (அந்த காட்சியினால் செயல்படும் ஆற்றலின்) பிணக்கு (தொடர்போ) அற்று (இல்லாமல்)
தயவு (எவ்வித குணங்களும்) அற்ற (இல்லாத) அவரோடும் (இறைவனோடு சேர்ந்து) தாமே (தாமும்) தாம் (இறைவனைப் போலவே) ஆகி (ஆகி)
செயல் (எந்தவிதமான செயல்களும்) அற்று (இல்லாமல்) இருந்தார் (இருப்பவர்களே) சிவ (உண்மையான சிவ) வேடத்தாரே (வேடத்தைக் கொண்ட ஞானிகள் ஆவார்கள்).

விளக்கம்:

மாயையாகிய மயக்கம் இல்லாமல், ஆணவம் கன்மம் ஆகிய மலங்கள் இல்லாமல், வலிமையான எண்ணங்களுடைய மனம் இல்லாமல், எப்போதும் விழிப்போடு இருக்கின்ற கண்களை பெற்று இருந்தாலும் அந்த கண்களில் காணும் காட்சியின் தொடர்போ அந்த காட்சியினால் செயல்படும் ஆற்றலின் தொடர்போ இல்லாமல், எவ்வித குணங்களும் இல்லாத இறைவனோடு சேர்ந்து தாமும் இறைவனைப் போலவே ஆகி எந்தவிதமான செயல்களும் இல்லாமல் இருப்பவர்களே உண்மையான சிவ வேடத்தைக் கொண்ட ஞானிகள் ஆவார்கள்.

பாடல் #1677

பாடல் #1677: ஆறாம் தந்திரம் – 12. சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்)

உடலிற் றுலக்கிய வேடமுயிர்க் காகா
வுடல்கழன் றால்வேட முடனே கழலு
முடலுயி ருள்ளமை யொன்றோர்ந்து கொள்ளாதார்
கடலி லகப்பட்ட கட்டையொத் தாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உடலிற றுலககிய வெடமுயிரக காகா
வுடலகழன றாலவெட முடனெ கழலு
முடலுயி ருளளமை யொனறொரநது கொளளாதார
கடலி லகபபடட கடடையொத தாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உடலில் துலக்கிய வேடம் உயிர்க்கு ஆகா
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும்
உடல் உயிர் உள் அமை ஒன்று ஓர்ந்து கொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே.

பதப்பொருள்:

உடலில் (ஞானிகளின் உடலில் இருந்து) துலக்கிய (வெளிப்படுகின்ற) வேடம் (வேடமானது) உயிர்க்கு (அவர்களின் உயிர் நிலையை) ஆகா (குறிப்பது ஆகாது)
உடல் (அவர்கள் தங்களின் உடலை) கழன்றால் (நீக்கி விட்டால்) வேடம் (அவர்களிடமிருந்து வெளிப்பட்ட வேடமும்) உடனே (அதனுடனே சேர்ந்து) கழலும் (நீங்கி விடும்)
உடல் (உடலோடு இருக்கும்) உயிர் (உயிருக்கு) உள் (உள்ளே) அமை (அமைந்து இருக்கின்ற) ஒன்று (ஒரு பரம்பொருளை) ஓர்ந்து (ஆராய்ந்து) கொள்ளாதார் (உணர்ந்து கொள்ளாதவர்கள்)
கடலில் (கடல் அலைகளில்) அகப்பட்ட (அகப்பட்டுக் கொண்ட) கட்டை (கட்டையைப்) ஒத்தாரே (போலவே பிறவி எனும் சுழற்சியில் சிக்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து துன்பத்தில் உழல்வார்கள்).

விளக்கம்:

ஞானிகளின் உடலில் இருந்து வெளிப்படுகின்ற வேடமானது அவர்களின் உயிர் நிலையை குறிப்பது ஆகாது. அவர்கள் தங்களின் உடலை நீக்கி விட்டால் அவர்களிடமிருந்து வெளிப்பட்ட வேடமும் அதனுடனே சேர்ந்து நீங்கி விடும். உடலோடு இருக்கும் உயிருக்கு உள்ளே அமைந்து இருக்கின்ற ஒரு பரம்பொருளை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளாதவர்கள் கடல் அலைகளில் அகப்பட்டுக் கொண்ட கட்டையைப் போலவே பிறவி எனும் சுழற்சியில் சிக்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து துன்பத்தில் உழல்வார்கள்.

பாடல் #1676

முன்னுரை:

இறைவன் உருவமோ குணமோ தன்மையோ இல்லாதவன். ஆகவே அவனுக்கு என்று எந்த வேடமும் கிடையாது. உண்மையான அடியவர்கள் இறைவனை உணரும் பொழுது எந்த வேடத்தில் இருந்தார்களோ அதுவே இறைவனின் வேடமாக ஆகின்றது. அந்த அடியவர்களின் வேடத்தையே இறைவனாக பாவித்து பல காலமாக வணங்கிக் கொண்டு வருகின்றோம். உதாரணம் கண்ணப்பர் போன்ற பல நாயன்மார்கள்.

பாடல் #1676: ஆறாம் தந்திரம் – 12. சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்)

அருளா லரனுக் கடிமை யதாகிப்
பொருளாந் தனதுடல் பொற்பதி நாடி
யிருளான தின்றி யிருஞ்செய லற்றோ
தெருளா மடிமை சிவவேடத் தாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அருளா லரனுக கடிமை யதாகிப
பொருளாந தனதுடல பொறபதி நாடி
யிருளான தினறி யிருஞசெய லறறொ
தெருளா மடிமை சிவவெடத தாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அருளால் அரனுக்கு அடிமை அது ஆகி
பொருள் ஆம் தனது உடல் பொன் பதி நாடி
இருள் ஆனது இன்றி இரும் செயல் அற்றோர்
தெருள் ஆம் அடிமை சிவ வேடத்தாரே.

பதப்பொருள்:

அருளால் (இறைவனது திருவருளால்) அரனுக்கு (இறைவனுக்கு) அடிமை (தானாகவே அடிமையாக) அது (தாம்) ஆகி (ஆகி)
பொருள் (பொருளாக) ஆம் (இருக்கின்ற) தனது (தமது) உடல் (உடலே) பொன் (பொன்) பதி (அம்பலமாக மாறி) நாடி (அதில் நடனமாடும் இறைவனை தமக்குள் தேடி அடைந்து)
இருள் (ஆணவம், கன்மம், மாயை என்று) ஆனது (இருக்கின்ற மும்மலங்கள்) இன்றி (இல்லாமலும்) இரும் (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) செயல் (செயல்களும்) அற்றோர் (இல்லாமலும் ஆகி)
தெருள் (தாம் பெற்ற ஞானத்தில் தெளிவு) ஆம் (அடைந்த) அடிமை (உண்மையான அடியவர்களே) சிவ (இறைவனது) வேடத்தாரே (வேடத்தை கொண்டவர்கள் ஆகும்).

விளக்கம்:

இறைவனது திருவருளால் இறைவனுக்கு தானாகவே அடிமையாக தாம் ஆகி பொருளாக இருக்கின்ற தமது உடலே பொன் அம்பலமாக மாறி அதில் நடனமாடும் இறைவனை தமக்குள் தேடி அடைந்து ஆணவம் கன்மம் மாயை என்று இருக்கின்ற மும்மலங்கள் இல்லாமலும் நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான செயல்களும் இல்லாமலும் ஆகி தாம் பெற்ற ஞானத்தில் தெளிவு அடைந்த உண்மையான அடியவர்களே இறைவனது வேடத்தை கொண்டவர்கள் ஆகும்.

பாடல் #1675

பாடல் #1675: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

தானறி தன்மையுந் தானவ னாதலு
மேனைய வச்சிவ மான வியற்கையுந்
தானுறு சாதகர முத்திரை சாத்தலு
மோனமு நந்தி பதமுத்தி பெற்றதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானறி தனமையுந தானவ னாதலு
மெனைய வசசிவ மான வியறகையுந
தானுறு சாதகர முததிரை சாததலு
மொனமு நநதி பதமுததி பெறறதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தான் அறி தன்மையும் தான் அவன் ஆதலும்
ஏனைய அச் சிவம் ஆன இயற்கையும்
தான் உறு சாதகர் முத்திரை சாத்தலும்
மோனமும் நந்தி பத முத்தி பெற்ற அதே.

பதப்பொருள்:

தான் (தான் யார் என்பதை) அறி (அறிந்து கொண்ட) தன்மையும் (தன்மையும்) தான் (தாமே) அவன் (சிவ பரம்பொருளாக) ஆதலும் (ஆகி இருக்கின்ற தன்மையும்)
ஏனைய (தங்களைத் தவிர உலகத்தில் இருக்கின்ற அனைத்தும் மற்றும் நிகழ்கின்ற அனைத்தும்) அச் (அந்த மூலப் பரம்பொருளாகிய) சிவம் (சிவம்) ஆன (ஆகவே இருக்கின்ற) இயற்கையும் (தன்மையும்)
தான் (தாம்) உறு (வீற்றிருக்கின்ற) சாதகர் (சாதகத்தின் நிலையையே) முத்திரை (முத்திரையாக) சாத்தலும் (இறைவனுக்கு அர்ப்பணிக்கின்ற தன்மையும்)
மோனமும் (மனம் பேச்சு செயல் ஆகிய மூன்றும் அடங்கி இருக்கின்ற மோன நிலையில் வீற்றிருக்கின்ற தன்மையும் ஆகிய இவை அனைத்தும்) நந்தி (குரு நாதராக இருக்கின்ற இறைவனின்) பத (திருவடிகளை அடைந்து) முத்தி (முக்தியை) பெற்ற (பெற்ற உண்மையான சிவ ஞானிகளுக்கு) அதே (அடையாளங்கள் ஆகும்).

விளக்கம்:

தான் யார் என்பதை அறிந்து கொண்ட தன்மையும், தாமே சிவ பரம்பொருளாக ஆகி இருக்கின்ற தன்மையும், தங்களைத் தவிர உலகத்தில் இருக்கின்ற அனைத்தும் மற்றும் நிகழ்கின்ற அனைத்தும் அந்த மூலப் பரம்பொருளாகிய சிவம் ஆகவே இருக்கின்ற தன்மையும், தாம் வீற்றிருக்கின்ற சாதகத்தின் நிலையையே முத்திரையாக இறைவனுக்கு அர்ப்பணிக்கின்ற தன்மையும், மனம் பேச்சு செயல் ஆகிய மூன்றும் அடங்கி இருக்கின்ற மோன நிலையில் வீற்றிருக்கின்ற தன்மையும், ஆகிய இவை அனைத்தும் குரு நாதராக இருக்கின்ற இறைவனின் திருவடிகளை அடைந்து முக்தியை பெற்ற உண்மையான சிவ ஞானிகளுக்கு அடையாளங்கள் ஆகும்.

பாடல் #1674

பாடல் #1674: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானி
தானத்தில் வைத்தல் தனியாலை யத்தனா
மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனா
மேனைத் தவசி யிவனென லாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானததி னாறபத நணணுஞ சிவஞானி
தானததில வைததல தனியாலை யததனா
மொனதத னாதலின முததனாஞ சிததனா
மெனைத தவசி யிவனென லாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானத்தின் ஆல் பதம் நண்ணும் சிவ ஞானி
தானத்தில் வைத்தல் தனி ஆலையத்தன் ஆம்
மோனத்தன் ஆதலின் முத்தன் ஆம் சித்தன் ஆம்
ஏனை தவசி இவன் எனல் ஆகுமே.

பதப்பொருள்:

ஞானத்தின் (உண்மையான ஞானத்தின்) ஆல் (மூலம்) பதம் (இறைவனது திருவடிகளை) நண்ணும் (அடைந்து) சிவ (சிவ ஞானத்தை பெற்ற) ஞானி (ஞானிகள்)
தானத்தில் (தங்களிடமுள்ள அருளை தம்மை நாடி வருகின்ற தகுதியானவர்களுக்கு) வைத்தல் (கொடுக்கின்றதால்) தனி (அவர்கள் ஒரு தனித்துவம் பெற்ற) ஆலையத்தன் (ஆலயமாகவே) ஆம் (இருக்கின்றார்கள்)
மோனத்தன் (அவர்கள் சொல்லும் செயலும் மனமும் அடங்கிய மோன நிலையிலேயே) ஆதலின் (இருப்பவர்கள் ஆதலால்) முத்தன் (முக்தி நிலையில் வீற்றிருக்கின்ற முக்தர்கள்) ஆம் (ஆகவும்) சித்தன் (சித்தத்தில் எப்போதும் சிவத்தையே நினைக்கின்ற சித்தர்கள்) ஆம் (ஆகவும் இருக்கின்றார்கள்)
ஏனை (மற்ற) தவசி (தவசிகளும்) இவன் (இவர்களைப் போலவே இறைவனது திருவடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டு மோன நிலையில் இருந்தால் இவர்களுடைய நிலையை அடைய முடியும்) எனல் (என்பது) ஆகுமே (உண்மையே ஆகும்).

விளக்கம்:

உண்மையான ஞானத்தின் மூலம் இறைவனது திருவடிகளை அடைந்து சிவ ஞானத்தை பெற்ற ஞானிகள் தங்களிடமுள்ள அருளை தம்மை நாடி வருகின்ற தகுதியானவர்களுக்கு கொடுக்கின்றதால் அவர்கள் ஒரு தனித்துவம் பெற்ற ஆலயமாகவே இருக்கின்றார்கள். அவர்கள் சொல்லும் செயலும் மனமும் அடங்கிய மோன நிலையிலேயே இருப்பவர்கள் ஆதலால் முக்தி நிலையில் வீற்றிருக்கின்ற முக்தர்களாகவும் சித்தத்தில் எப்போதும் சிவத்தையே நினைத்துக் கொண்டிருப்பதால் சித்தர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்களைப் போலவே மற்ற தவசிகளும் இறைவனது திருவடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டு மோன நிலையில் இருந்தால் இவர்களுடைய நிலையை அடைய முடியும் என்பது உண்மையே ஆகும்.

பாடல் #1673

பாடல் #1673: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

ஞானிக்குச் சுந்தர வேடமு நல்லவாந்
தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே
ஞானமவ் வேடமருண் ஞான சாதன
மானது மாமொன்று மாகாதவ னுக்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானிககுச சுநதர வெடமு நலலவாந
தானுறற வெடமுந தறசிவ யொகமெ
ஞானமவ வெடமருண ஞான சாதன
மானது மாமொனறு மாகாதவ னுககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானிக்கு சுந்தர வேடமும் நல்ல ஆம்
தான் உற்ற வேடமும் தன் சிவ யோகமே
ஞானம் அவ் வேடம் அருள் ஞான சாதனம்
ஆனதும் ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே.

பதப்பொருள்:

ஞானிக்கு (உண்மையான ஞானிக்கு) சுந்தர (எந்த ஒரு அழகிய) வேடமும் (வேடமும்) நல்ல (நல்லதே) ஆம் (ஆகும்)
தான் (அவர்களுக்கு) உற்ற (தானாகவே அமைந்த) வேடமும் (வேடமும்) தன் (அவர்களின்) சிவ (சிவ) யோகமே (யோகமாகவே இருக்கின்றது)
ஞானம் (உண்மையான ஞானமாகவும்) அவ் (அந்த) வேடம் (வேடமே இருக்கின்றது) அருள் (இறைவனின் திருவருள்) ஞான (ஞானத்தை) சாதனம் (பெறுகின்ற சாதனம்)
ஆனதும் (ஆகவும் அதுவே) ஆம் (இருக்கின்றது) ஒன்றும் (ஆதலால் அந்த வேடத்தினால் எந்த விதமான) ஆகாது (பாதிப்புகளும் ஏற்படுவது இல்லை) அவனுக்கே (உண்மையான ஞானிகளுக்கு).

விளக்கம்:

உண்மையான ஞானிக்கு எந்த ஒரு அழகிய வேடமும் நல்லதே ஆகும். அவர்களுக்கு தானாகவே அமைந்த வேடமும் அவர்களின் சிவ யோகமாகவே இருக்கின்றது. உண்மையான ஞானமாகவும் அந்த வேடமே இருக்கின்றது. இறைவனின் திருவருள் ஞானத்தை பெறுகின்ற சாதனமாகவும் அதுவே இருக்கின்றது. ஆதலால் உண்மையான ஞானிகளுக்கு அந்த வேடத்தினால் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படுவது இல்லை.