பாடல் #209

பாடல் #209: முதல் தந்திரம் – 10. நல்குரவு (வறுமை)

புடவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்க்கே.

விளக்கம்:

உயிர்களிடம் இருந்த ஆடைகளை திரும்பத் திரும்ப போட்டுக்கொண்டதால் கிழிந்து போனது. அவர்களின் வாழ்க்கையும் துன்பப் பட்டுக் கசந்து போனது. அவருக்கென்று இருந்த துணையும் பிறந்த குழந்தைகளும் பெற்ற தாய் தந்தையரும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளும் என அனைவருமே அவர்களின் மேல் அன்பில்லாமல் விலகிப் போய்விட்டனர். அவர்களுக்குத் தானமாகவோ இல்லை கடனாகவோ பொருள் கொடுப்பவர்களும் யாரும் இல்லை. அவர்களுக்குச் சிறப்புடைய நாட்கள் என்று ஒன்றும் இல்லாமல் போனது. அப்படிச் சிறப்பான நாட்கள் இல்லாததால் எதையும் கொண்டாடுவதும் இல்லாமல் போனது. அவர்கள் முன்பு தலை நிமிர்ந்து நடந்த நடை இப்போது இல்லாமல் போனது. வெறும் இயந்திரம் போன்றே இவர்கள் நாட்களைக் கழித்து வாழ்கின்றார்கள்.

பாடல் #210

பாடல் #210: முதல் தந்திரம் – 10. நல்குரவு (வறுமை)

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்
றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்குஅற்ற போதே.

விளக்கம்:

உயிர்களின் வயிறு என்பது ஒரு பொய்யான குழி போன்றது. பசி வரும்போது உணவு சாப்பிட்டு பசி தீர்ந்தது போலத் தெரிந்தாலும் மீண்டும் நான்கு மணி நேரத்தில் பசிக்க ஆரம்பித்து விடுகின்றது. இப்படி பொய்யாக இருக்கும் வயிறு எனும் குழியை நிரப்புவதற்கு உணவு கிடக்குமா என்று உயிர்கள் தினமும் தேடி அலைகின்றன. பொய்யான வயிற்றுப் பசியைப் போக்க உணவு தேடும் உயிர்கள் தமது பசியை எப்படி தீர்த்துக் கொண்டாலும் எந்த வேலை செய்தாலும் எப்படி பொருள் சம்பாதித்தாலும் அதிலேயே மூழ்கி இருந்துவிடாமல் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வழிபடவும் நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வழிபட்டு வந்தால் பிறவியோடு வந்த மும்மலங்களாகிய (ஆணவம், கன்மம், மாயை) அழுக்குகளும் நீங்கி உள்ளம் தெளிவுபெறும். உள்ளம் தெளிவு பெற்ற உயிர்களின் பிறவிப்பசி அப்போதே தீர்ந்து இனி பிறவி இல்லாத மோட்ச நிலை கிட்டிவிடும்.

பாடல் #211

பாடல் #211: முதல் தந்திரம் – 10. நல்குரவு (வறுமை)

கற்குழி தூரக் கனகமும் தேடுவார்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்குஅற்ற வாறே.

விளக்கம்:

கல்லால் ஆன குழியை மூட தங்கக் கட்டிகளைத் தேடுவது போல தினமும் ஏற்படும் பசிக்காக பலவித செல்வங்களைத் தேடுகின்றன உயிர்கள். கல்லால் ஆன குழியை எப்படி தங்கத்தால் நிரப்ப முடியாதோ அதுபோலவே வயிற்றுப் பசியை எத்தனை வகையான செல்வம் சேர்த்தாலும் நிரந்தரமாகத் தீர்த்துவிட முடியாது. நிரந்தரமாக பசியைத் தீர்ப்பது எப்படி என்கிற அறிவை அறிந்து கொள்ளுங்கள் அப்படி நிரந்தரமாகப் பசியைத் தீர்ப்பது எப்படி என்கிற அறிவைத் தெரிந்து கொண்டு விட்டால் அதன் மூலம் இனி எப்போதுமே பசி வராமல் இருக்கும்படி ஆன்மாவின் அனைத்து அழுக்குகளும் நீங்கி பிறவி இல்லா பெருவாழ்வு கிடைத்துவிடும்.

பாடல் #212

பாடல் #212: முதல் தந்திரம் – 10. நல்குரவு (வறுமை )

தொடர்ந்தெழும் சுற்றம் வினையினும் தீய
கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத் துணர்விளக் கேற்றித்
தொடர்ந்துநின் றவ்வழி தூர்க்கலு மாமே.

விளக்கம்:

உயிர்கள் இந்த உலகில் பிறக்கும் பொழுதே அவற்றின் முன் பிறவிகளிலிருந்து தொடர்ந்து வரும் வினைகளும் கூடவே பிறந்து அந்த உயிரைச் சுற்றியிருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய அழுக்குகளாக எப்போதும் இருக்கின்றன. உயிரின் வாழ்க்கை கடந்து முடிவதற்கு முன்பே உலகப்பற்றுகளில் இருந்து விடுபட்டு தமக்குள் இருக்கும் இறைவனை போற்றிப் புகழ்ந்து வழிபட்டு தமது உள்ளுக்குள்ளேயே இறைவனை ஜோதியாக உணர்ந்து ஆன்மாவின் இருளை அகற்றும் விளக்காக ஏற்றிவைத்து அது காட்டும் வழியிலேயே எப்போதும் மாறாமல் நின்று வந்தால் பொய்யான வயிற்றுப் பசியோடு பிறக்கும் பிறவிகளும் இனி இல்லாமல் போய்விடும்.

பாடல் #213

பாடல் #213: முதல் தந்திரம் – 10. நல்குரவு (வறுமை)

அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே.

விளக்கம்:

உயிர்கள் கண் – பார்த்தல், காது – கேட்டல், மூக்கு – நுகர்தல், வாய் – சுவைத்தல், மெய் – தொடுதல்/உணர்தல்) ஆகிய ஐந்து இந்திரியங்களின் உதவியால் உயிர்களின் பசி உணவு சாப்பிட்டவுடன் தீர்ந்துவிட்டாலும் அதே இந்திரியங்கள்தான் ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பையும் அறுத்து விடுகிறது. ஆகையால் உயிர் தான் எடுத்த பிறவியில் எண்ணிலடங்காத துன்பங்களைப் பெற்று வருந்துகின்றது. மேலும் ஜென்ம வினை, கர்ம வினை, எண்ண வினை, பந்தம், பாசம், பற்று, செல்வம் என பல காரணங்களாலும் துன்பம் அடைகின்றது. துன்பத்தின் இறுதியில் இனி இப்படிப் பட்ட பிறவியே வேண்டாம் என்று வெறுக்கும் உயிர்கள் பிறவி இல்லாத நிலை வேண்டி ஈசனிடம் நிற்கின்றான்.

கருத்து : செல்வ செழிப்புடன் இருப்பவர்களை விட வறுமை நிலையில் இருக்கின்றவர்கள் விரைவில் இந்த பிறவி வாழ்க்கையை வெறுத்து இறைவனை அடைந்து பிறவி இல்லாத பேரின்பநிலை அடைய எண்ணுகின்றார்கள்.