பாடல் #578

பாடல் #578: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே நிறுத்தப் பழகுதல்)

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.

விளக்கம்:

வெளியே சென்று ஓடுகின்ற மனதை உள்ளே ஒரு நிலைப்படுத்தி விட்டால் இறைவனுடைய எட்டுவித குணங்களை நமக்குள்ளே உணரலாம். அவ்வாறு உள்ளே மனதை ஒரு நிலைப்படுத்தி வைத்து இருந்தால் ஆதிகாலம் முதல் பழமையான வேதங்களைக் கற்றறிந்தவர்களால் தமக்குள் தேடப்பட்ட இறைவனை அப்பொழுதே நமக்குள் கண்டு உணரலாம்.

இறைவனின் எட்டுவித குணங்கள்: 1. தன்வயத்தன் ஆதல், 2. தூய உடம்புடைமை, 3. அளவிலா ஆற்றல் உடைமை, 4. பாசங்களில் இருந்து நீங்கியிருப்பது, 5. பேரருள் உடைமை, 6. இயற்கை உணர்வு கொண்டிருத்தல், 7. முக்காலத்தையும் உணர்ந்திருத்தல், 8. அளவிலா ஆனந்தம் உடைமை)

பாடல் #579

பாடல் #579: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

நாபிக்குக் கீழே பன்னிரண் டங்குலத்தில்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண்டு ஈசன் குடியிருந் தானே.

விளக்கம்:

தொப்புளுக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம் தூரத்தில் உள்ள மூலாதாரத்தில் இருக்கும் ஓம் எனும் மந்திரத்தை அறிந்தவர்கள் யாருமில்லை. அந்த ஓம் என்னும் மந்திரத்தை உணர்ந்துவிட்டால் அந்த மந்திர ஒலியாய் இருக்கும் சிவபெருமானை நமக்குள் உணரலாம்.

பாடல் #580

பாடல் #580: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே.

விளக்கம்:

மூலாதாரத்திலிருந்து இரண்டு அங்குலம் அளவிற்கு மேலும் பிறப்பு உறுப்பிலிருந்து இரண்டு அங்குலம் அளவிற்குக் கீழும் உள்ள இடத்தில் வட்ட வடிவமாக இருக்கும் குண்டலினி சக்தியின் மையப்புள்ளி உள்ளது. அந்த குண்டலினி சக்தியிலிருந்து வெளிப்படும் செம்மையான ஒளி தொப்புள் குழியிலிருந்து நான்கு அங்குலம் அளவிற்குக் கீழே இருக்கும் இடம் வரை பரவியுள்ளது.

பாடல் #581

பாடல் #581: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந்
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாகுமே.

விளக்கம்:

மூக்கிலிருந்து பன்னிரண்டு அங்குலம் அளவிற்குக் கீழே உள்ள இடத்தில் வைத்து (நான்காவது சக்கரமான அநாகதம் இருக்கும் இடமான நெஞ்சுக் குழி) நிர்மூலமாக இறைவனை தியானிக்கும் சக்தியுள்ளவர்களுக்கு எட்டு வகையான சித்திகளையும் கொடுக்கும் மாபெரும் யோகங்களும் வந்து சேரும். அப்படி சேர்ந்தபின் உடம்பிற்கு எப்போதும் அழிவு என்பது இல்லை.

பாடல் #582

பாடல் #582: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதிய தன்னுடல் உன்மத்த மாமே.

விளக்கம்:

மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தி தலை உச்சிக்குச் சென்றபின் பிராகாசமான ஒளி தோன்றி அந்த ஒளிக்கதிர் உடலெங்கும் பரவி பேரின்பம் கிடைக்கும் என்று மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்து, தலை உச்சிக்கு நேராகக் கீழே இருக்கும் கழுத்தில் அந்த ஒளிக் கதிர் தெரியும் நிலையை அடைந்தால் அவ்வாறு தியானித்த உடல் தன்னை மறந்த நிலையில் பேரானந்தமாக இருக்கும்.

பாடல் #583

பாடல் #583: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே.

விளக்கம்:

மூலாதாரத்திலிருக்கும் துளையை (மலத்துவாரம்) சதைகளால் இறுக்கி அடைத்துக் கொண்டு புருவங்களுக்கு நடுவில் இருக்கும் இடத்தில் (ஆக்ஞா சக்கரம் இருக்கும் இடம்) மனதை வைத்து உடல் உணர்வுகளை மறந்த நிலையில் தியானித்து இருப்பதே இறவாமல் இருக்கும் வழியாகும்.

பாடல் #584

பாடல் #584: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

எருவிடும் வாசற் கிருவிரன் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடும் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.

விளக்கம்:

மலதுவாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலும் பிறப்புறுப்புக்கு இரண்டு அங்குலம் கீழும் உள்ள இடத்தில் இருக்கும் ஜோதியை (குண்டலினி சக்தி) உணர்ந்து தியானிக்க முடிந்தவர்களோடு உடலுக்கு உயிர் கொடுக்கும் இறைவன் கலந்து நிற்பான்.

பாடல் #585

பாடல் #585: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.

விளக்கம்:

பிரத்தியாகாரத்தின் மூலம் மிகவும் கடினத்துடன் மனதை ஒருநிலைப்படுத்தி கர்மாவினால் உண்டான உடலின் தொடக்கத்தையும் ஆன்மாவின் அறிவையும் பிரித்துப் பார்க்கும் திறனை அடைவதும், தனித்தனியாகப் பார்க்கும் பல இறை உருவங்களை மெல்ல மறந்து அறிவு வடிவாகிய ஒரே இறைவனை உணர்வதும் அந்த உணர்வினால் இறைவனின் மேல் அன்பு அதிகமாவதும் அவ்வாறு அதிகமாகிய அன்பினால் இறைவனை எப்பொதும் மறக்காமல் இருப்பதும் ஆகிய இவையே பிரத்தியாகாரத்தால் அடையும் பெரும் பயன்களாம்.

பாடல் #586

பாடல் #586: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்
திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.

விளக்கம்:

உள்ளிழுத்து வெளியே விட்ட மூச்சுக்காற்றை மீண்டும் உள்ளிழுக்காமல் ஒரு குறிப்பிட்ட கால அளவு (தியான முறைப்படி) மன உறுதியுடன் இருந்தால் உள்ளம் இறைவனின் மேல் ஈர்க்கப்பட்டு இருக்கும். அவ்வாறு ஈர்க்கப்பட்டு இருக்கும் உள்ளத்துடன் பெருங் கருணையுடைய இறைவன் எப்போதும் கலந்தே இருப்பான்.

பாடல் #587

பாடல் #587: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரரு மாமே.

விளக்கம்:

பிரத்தியாகாரம் கூறும் மூன்று சக்கர இடங்களில் (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம்) மனதை ஒருமுகப்படுத்துவன் உலகம் தோன்றிய நாள் முதல் இறைவனை அடையத் தடையாக இருக்கும் மாயை எனும் அறியாமையாகிய இருளை அகற்றி இறைவனை தேடிச் செல்லலாம். அவ்வாறு இறைவனை விரும்பித் தேட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தால் காணக் கிடைக்காத அரிய இறைக் காட்சியைக் கண்டு அழிவில்லாத நிலையை அடையலாம்.