மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #41

27-12-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆசைகளையும் பாசத்தையும் முழுமையாக ஒழிக்க முடியவில்லையே அது ஏன்?

ஆசைகளை முழுமையாக ஒழிப்பது மிகவும் கடினம். ஆசைகளை அடக்கினாலும் மீண்டும் சில நேரங்களில் அந்த ஆசைகள் திரும்ப வரும். இதற்கு உதாரணமாக ஊசி என்பது மனம் போலவும் நூலானது ஆசைகள் போலவும் எடுத்துக்கொண்டால் ஊசியில் நூலைக் கோர்த்துவிட்டு நூலின் இரண்டு முனைகளையும் பிடித்துக் கொண்டால் ஊசியானது இரண்டு பக்கமும் அலைந்து கொண்டிருக்கும். ஆனால் ஊசியிலிருந்து நூலை எடுத்து விட்டால் ஊசியானது அலையாமல் தனியாக நிற்கும். ஆகவே ஆசைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்பது மிகக் கடினம் என்பதை அறிய வேண்டும். இதற்கு என்ன வழி என்று சிந்தித்தால் ஊசியிலிருந்து நூலைத் தூக்கி எறிவதே சரியான வழி. அதாவது ஆசைகளை நீக்கும் முன்பு அந்த ஆசைகளை உண்டாக்கும் காரணங்களை நீக்க வேண்டும். உதாரணமாக லகரி வஸ்துக்களை (சிகரெட் பாக்கு சாராயம் முதலிய போதைப் பொருட்கள்) உபயோகிப்பவர்கள் அதை எப்போதும் தன்னோடு வைத்திருக்கக் கூடாது. எப்பொழுதும் அவற்றைத் தன்னுடனே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் மனதில் இருந்து நீக்க வேண்டும். அத்தகைய லகரி வஸ்துக்களை உபயோகிக்கும் நபர்களுடன் சேரக்கூடாது என்பதை ஒரு விதியாக எடுத்துக் கொண்டால் முழுமையாக அந்த ஆசைகளில் இருந்து விடுபடலாம். சிறுது கடினம் என்கின்ற போதிலும் ஒவ்வொரு ஆசையாக இவ்வாறு நீக்கிவிட முடியும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #40

16-7-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

எவ்வாறு நாம் இறைவனைத் தொடர்பு கொள்வது?

இறைவனைத் தொடர்பு கொள்வதற்குப் பாவனைகள் மிகவும் முக்கியமானவை. ஆனால் பல வகையான பாவனைகள் இருக்கின்றது. நமக்கு எளிதான பாவனைகள் எவையோ அவைகளை உணர்ந்து ஏற்றுக் கொண்டு அதன் வழியாக செல்லுதல் வேண்டும். மற்றவர்கள் செல்லும் பாவனைகளை நாமும் ஏற்றுக்கொண்டு செல்வது தவறாகும். நமக்கு எந்த பாவனை எளிமையானது என்று சிந்தித்து அந்த பாவனையின் வழி தடுமாறாமல் செல்ல வேண்டும். இதற்கும் மேலாக தெய்வத்தின் பெயரை எப்பொழுதும் கூறிக்கொண்டு இருந்தால் ஓர் தொடர்பு உண்டாகி இறைவனின் சிந்தனை எப்பொழுதும் மனதில் இருக்கும். இவ்வாறு இறைவனின் பெயரைக் கூறிக்கொண்டு இருந்தால் என்னைப் பலர் கேலி செய்கின்றனர் என்று சிலர் கூறுகின்றனர். மற்றவர்கள் கேலி செய்கின்றதை பொருட்படுத்தாமல் எப்பொழுதும் இறைவன் பெயரை மனதில் கூறிட தெய்வ சிந்தனை எப்பொழுதும் மனதை விட்டு நீங்காமல் செய்கின்ற எந்தக் காரியமும் தெய்வீகக் காரியமாகவே தோன்றும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #39

19-6-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மனித வாழ்க்கையின் பொருள் என்ன? நோக்கம் என்ன?

இதற்கான விடை மிகவும் எளியது. ஆனால் அடையும் முயற்சிகள் மிகப் பெரியவை ஆகும். ஒவ்வொருவரின் பிறவியும் வாழ்கையில் தமக்குள் உள்ளிருக்கும் தெய்வ சக்தியை உணர்வது. நம் அனைவருக்குள்ளும் இறைவன் குடிகொண்டு இருக்கின்றான் என்பதை யாரும் உணர்வதில்லை. தெய்வீக சக்திக்கு மனிதன் ஒரு வீடாக இருக்கின்றான். அந்த வீட்டில் இறைவன் தங்கி உள்ளான். ஆனால் நாம் அதனை உணராமல் வெளியே தேடி அலைகின்றோம். இதற்குக் காரணம் என்ன என்று கேட்டால் நமது இந்திரியங்களும் ஐம்புலன்களும் ஆகும். இவை இரண்டும் நம்மைத் திசை திருப்பி மாயையின் பிடியில் தள்ளுவதால் மீண்டும் நம்மால் வெளியே வர முடியவில்லை. அனைவரும் தியானத்தின் மூலம் நமக்கு உள்ளே சென்று பார்த்தல் வேண்டும். தினந்தோறும் குறைந்த அளவில் ஒரு அரைமணி நேரமாவது தியானம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்பவர்களும் மந்திரஜபம் தொடர்சியாக செய்து வருபவர்களும் உறுதியாக தமக்குள் உள்ள இறைவனை உணர்வது மட்டும் இல்லாமல் உயர்ந்த நிலையும் அடையவார்கள்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #38

23-5-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நான் என்றால் என்ன?

நான் என்பது என்ன இதனைத் தேடி நாடிப் பல காலங்களில் தவம் இருந்தவர்களுள் யாமும் ஒருவனே. நான் என்பதைத் தேடுவதில் தீவிர முயற்சிகள் வேண்டும். நான் என்கின்றது அகங்காரம் ஆகும். நான் என்பது சரியானது இல்லை. நாம் என்பதே சரியானது ஆகும். ஏன் என்றால் ஒவ்வொரு செயலிலும் முயற்சியிலும் இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்பதை மறக்கக்கூடாது.

இறைவன் உடன் இருக்கும் இந்த நிலையை அடைவதற்காகவே ஞானிகளும் துறவிகளும் யாம் செய்கின்றோம் யாம் பார்க்கின்றோம் என இறைவனையும் சேர்த்துக் கூறுகின்றனர். இவ்விதம் யாம் என்பதை வார்த்தைகளில் மட்டும் சேர்த்துக் கூறினால் போதாது. உண்மையாகவே இறைவன் நம்முடன் இருந்து ஒவ்வொரு செயல்களிலும் ஈடுபடுகின்றான் என்பதைப் பரிபூரணமாக நம்புதல் வேண்டும். என் செயலால் இனி ஆவது ஒன்றும் இல்லை என்பதைப் பரிபூரணமாக ஏற்றுக் கொண்டால் அனைத்தும் நல்வழியில் நடப்பது மட்டுமல்லாமல் அமைதியையும் காண இயலும். இக்காலத்தின் கலியுகத் தன்மையில் எவ்வளவு செலவு செய்தாலும் கிடைக்காதது அமைதியே. அந்த அமைதி வேண்டும் எனில் அனைத்தையும் இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு இனி அனைத்தும் உமது செயலே என ஒப்புக்கொண்டு எதிர்பார்ப்பின்றி செயல்படுவீர்களாக.

பாடல் #677

பாடல் #677: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வெளியுற நின்றபின்
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.

விளக்கம்:

பிராணாயாம முறைப்படி மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று அது சகஸ்ரதளத்தோடு கலந்து ஜோதியானதை அகக் கண்ணால் கண்டபின் மகிமா எனும் சித்தி கிடைக்கும். அதன்பின் வரும் காலங்கள் நமது ஆயுள் காலத்தை அழிப்பது இல்லை. உலகத்திலுள்ள அனைத்தையும் விட பெரியதாகிய காலத்தை மகிமா எனும் சித்தியால் வென்று காலத்தால் நாம் பாதிக்கப்படாமல் இருக்கலாம். அவ்வாறு இருக்கும் காலங்களை நமது எண்ணப்படி அமைக்கலாம்.

கருத்து: சகஸ்ரதளத்தில் ஜோதி தரிசனம் கண்டபின் மகிமா எனும் சித்தி கைவரப்பெற்று காலத்தை வெல்லலாம்.

பாடல் #678

பாடல் #678: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

தன்வழி யாகத் தழைத்திடு ஞானமுந்
தன்வழி யாகத் தழைத்திடு வையகந்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந்
தன்வழி தன்னரு ளாகிநின் றானே.

விளக்கம்:

தான் என்னும் அகங்காரத்தை விட்டு தானே சிவம் என்பதை உணர்ந்தவன் மூலம் உலகத்தார் ஞானம் செழித்து ஓங்கும். உலகமும் செழிப்புற்று விளங்கும். அவன் வழியால் செழித்த பொருட்களெல்லாம் அவன் வசப்பட்டு நிற்கும். உலகத்தைவிட பெரியவனாக அவன் இருப்பதால் மகிமா எனும் சித்தியைக் குறிக்கின்றது.

கருத்து: மகிமா சித்தி கைவரப் பெற்றவரின் அருளால் உலகத்தில் ஞானமும் வளங்களும் செழித்து இருக்கும்.

பாடல் #679

பாடல் #679: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை யெல்லாங்
கொண்டவை யோராண்டு கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்திய தாகுமே.

விளக்கம்:

நம்மைக் கட்டுப்படுத்தும் பஞ்ச பூதங்கள் முதலான பல்வேறு தத்துவங்களை உணர்ந்து அனைத்திற்கும் தலைவியான அருள் சக்தியுடன் மனதை ஒருமுகப்படுத்தி வைத்து அதிலேயே லயித்து யோகப் பயிற்சியில் ஒரு வருடம் இருந்தால் அந்தத் தத்துவங்களை வெல்லலாம். அவ்வாறு அனைத்து தத்துவங்களையும் வென்றவருக்கு பிராத்தி எனும் சித்தி கிடைக்கும்.

கருத்து: உலகத் தத்துவங்களிலிருந்து விலகி ஒரு வருடம் யோகப் பயிற்சி செய்தால் பிராத்தி எனும் சித்தி கிடைக்கும். பிராப்தி என்பது தூரத்திலிருப்பதை இருக்கும் இடத்திலேயே பார்க்கவும் மனதினால் நினைத்தவை யாவையும் அடையவும் பெறும் ஆற்றல்.

பாடல் #680

பாடல் #680: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின்ற பூவிற் பரப்பவை காணலாம்
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவது மில்லையே.

விளக்கம்:

பிராணாயாம முறைப்படி மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று அது சகஸ்ரதளத்தோடு கலந்து ஜோதியானதை அகக் கண்ணால் கண்டபின் கரிமா எனும் சித்தி கிடைக்கும். அதன்பின் வரும் காலங்கள் நமது ஆயுள் காலத்தை அழிப்பது இல்லை. அவ்வாறு கரிமா எனும் சித்தியால் காலத்தை வெல்பவர்கள் மலைபோல அசைக்கமுடியாமல் இருப்பார்கள்.

கருத்து: சகஸ்ரதளத்தில் ஜோதி தரிசனம் கண்டபின் கரிமா எனும் சித்தி கைவரப்பெற்று காலத்தால் அசைக்கமுடியாமல் இருக்கலாம்.

பாடல் #681

பாடல் #681: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

போவதொன் றில்லை வருவது தானில்லை
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை
தாமத மில்லை தமரகத் தின்னொளி
யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே.

விளக்கம்:

கரிமா சித்தி பெற்றவர்களுக்கு காலங்கள் அழிவது இல்லை. காலங்கள் புதிதாக வருவதும் இல்லை. இறப்பு இல்லை. ஆகவே பிறப்பும் இல்லை. அவர்கள் நிகழ்காலத்திலேயே எப்போதும் தனக்குள் இருக்கும் ஒளியுடனே லயித்து எவற்றாலும் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.

கருத்து: கரிமா சித்தி பெற்றவர்களுக்கு காலத்தினால் பாதிப்புகள் வருவது இல்லை.

பாடல் #682

பாடல் #682: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூதப் படையவை யெல்லாங்
குவிந்தவை யோராண்டு கூட இருக்கில்
விரிந்த பரகாய மேவலு மாமே.

விளக்கம்:

இறை சக்தியை நமக்குள்ளே உணர்ந்து அதனோடு ஒரு ஆண்டு மனதை ஒருமுகப்படுத்தி ஒன்றியிருந்தால் நம்மைக் கட்டுப்படுத்தும் பஞ்ச பூதங்கள் முதலான பல்வேறு தத்துவங்கள் அனைத்தும் விலகிவிடும். அவ்வாறு விலகியபின் எதையும் நினைத்தவுடன் அதாகவே தன்னை மாற்றிக் கொள்ளும் பிராகாமியம் என்னும் சித்தி கிடைக்கும்.

கருத்து: இறை சக்தியோடு ஒரு ஆண்டு ஒன்றியிருந்தால் உலகத் தத்துவங்களிலிருந்து விலகி பிராகாமியம் எனும் சித்தியை அடையலாம்.