பாடல் #1351

பாடல் #1351: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்
டென்னுளு மாகி யிடம்பெற நின்றவள்
மன்னுளு நீரனல் காலுளும் வானுளுங்
கண்ணுளு மெய்யுளுங் காணலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தனனுளு மாகித தரணி முளுதுஙகொண
டெனனுளு மாகி யிடமபெற நினறவள
மனனுளு நீரனல காலுளும வானுளுங
கணணுளு மெயயுளுங காணலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தன் உளும் ஆகித் தரணி முழுதும் கொண்டு
என் உளும் ஆகி இடம் பெற நின்றவள்
மண் உளும் நீர் அனல் கால் உளும் வான் உளும்
கண் உளும் மெய் உளும் காணலும் ஆமே.

பதப்பொருள்:

தன் (இறைவியானவள் தனக்கு) உளும் (உள்ளேயும்) ஆகித் (அனைத்தும் ஆகி) தரணி (அண்ட சராசரங்களில் இருக்கின்ற உலகங்கள்) முழுதும் (அனைத்தையும்) கொண்டு (தனக்குள் கொண்டு)
என் (எமக்கு) உளும் (உள்ளேயும்) ஆகி (அனைத்தும் ஆகி) இடம் (எமக்குள் முழுவதும்) பெற (நிறைந்து) நின்றவள் (நிற்கின்றாள்)
மண் (அவளே பஞ்ச பூதங்களில் நிலத்தின்) உளும் (உள்ளேயும்) நீர் (நீரின் உள்ளேயும்) அனல் (நெருப்பின் உள்ளேயும்) கால் (காற்றின்) உளும் (உள்ளேயும்) வான் (ஆகாயத்தின்) உளும் (உள்ளேயும்)
கண் (எமது கண்ணின்) உளும் (உள்ளேயும்) மெய் (எமது உடலுக்கு) உளும் (உள்ளேயும் வீற்றிருக்கிறாள் என்பதை) காணலும் (தரிசிக்க) ஆமே (முடியுமே).

விளக்கம்:

பாடல் #1350 இல் உள்ளபடி அனைத்து உயிர்களையும் தனக்குள் தாங்கி அனைத்துமாகவே இருக்கின்ற இறைவியானவள் அண்ட சராசரங்களில் இருக்கின்ற உலகங்கள் அனைத்தையும் தனக்குள் கொண்டும் இருக்கின்றாள். அவளே எமக்கு உள்ளேயும் அனைத்தும் ஆகி எமக்குள் முழுவதும் நிறைந்து நிற்கின்றாள். அவளே பஞ்ச பூதங்களில் நிலத்தின் உள்ளேயும் நீரின் உள்ளேயும் நெருப்பின் உள்ளேயும் காற்றின் உள்ளேயும் ஆகாயத்தின் உள்ளேயும் இருக்கின்றாள். அவளே எமது கண்ணின் உள்ளேயும் எமது உடலுக்கு உள்ளேயும் வீற்றிருக்கிறாள் என்பதை நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்யும் சாதகர்களால் தரிசிக்கவும் முடியும்.

பாடல் #1352

பாடல் #1352: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

காணலு மாகுங் கலந்துயிர் செய்வன
காணலு மாகுங் கருத்து ளிருந்திடிற்
காணலு மாகுங் கலந்து வழிசெய்யக்
காணலு மாகுங் கருத்துற நில்லே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காணலு மாகுங கலநதுயிர செயவன
காணலு மாகுங கருதது ளிருநதிடிற
காணலு மாகுங கலநது வழிசெயயக
காணலு மாகுங கருததுற நிலலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காணலும் ஆகும் கலந்து உயிர் செய்வன
காணலும் ஆகும் கருத்து உள் இருந்திடில்
காணலும் ஆகும் கலந்து வழி செய்யக்
காணலும் ஆகும் கருத்து உற நில்லே.

பதப்பொருள்:

காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கலந்து (இறைவி ஒன்றாகக் கலந்து) உயிர் (உயிர்களோடு நின்று) செய்வன (செய்கின்ற அனைத்து செயல்களையும்)
காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கருத்து (உயிர்களின் எண்ணங்களுக்கு) உள் (உள்ளே) இருந்திடில் (இறைவி இருக்கின்ற தன்மையையும்)
காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கலந்து (உயிர்களோடு ஒன்றாகக் கலந்து நின்று) வழி (அவற்றுக்கு ஏற்ற நல் வழியில்) செய்யக் (செல்ல வைப்பதையும்)
காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கருத்து (ஆகவே உங்களது எண்ணங்களில்) உற (எப்போதும் இறைவியை வைத்து) நில்லே (தியானித்து இருங்கள்).

விளக்கம்:

பாடல் #1351 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்யும் சாதகர்களால் இறைவியானவள் உயிர்களோடு ஒன்றாகக் கலந்து நின்று செய்கின்ற அனைத்து செயல்களையும் தரிசிக்க முடியும். அது மட்டுமின்றி உயிர்களின் எண்ணங்களுக்கு உள்ளே இறைவி இருக்கின்ற தன்மையையும் தரிசிக்க முடியும். அது போலவே உயிர்களோடு ஒன்றாகக் கலந்து நின்று அவற்றுக்கு ஏற்ற நல் வழியில் இறைவி செல்ல வைப்பதையும் தரிசிக்க முடியும். ஆகவே உங்களது எண்ணங்களில் எப்போதும் இறைவியை வைத்து தியானித்து இருங்கள்.

பாடல் #1353

பாடல் #1353: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நின்றிட மேழு புவனமு மொன்றாகக்
கண்டிடு முள்ளங் கலந்தெங்குந் தானாகக்
கொண்டிடும் வையங் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினறிட மெழு புவனமு மொனறாகக
கணடிடு முளளங கலநதெஙகுந தானாகக
கொணடிடும வையங குணமபல தனனையும
விணடிடும வலவினை மெயபபொரு ளாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நின்று இடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டு இடும் உள்ளம் கலந்து எங்கும் தான் ஆக
கொண்டு இடும் வையம் குணம் பல தன்னையும்
விண்டு இடும் வல் வினை மெய்ப் பொருள் ஆகுமே.

பதப்பொருள்:

நின்று (சாதகர் சாதகம்) இடும் (செய்கின்ற இடத்திலிருந்தே) ஏழு (ஏழு விதமான) புவனமும் (உலகங்களையும்) ஒன்றாகக் (ஒரு உலகம் போலவே ஒன்றாகக்)
கண்டு (தமக்குள் பார்ப்பதை) இடும் (செய்கின்ற சாதகரின்) உள்ளம் (உள்ளம்) கலந்து (அனைத்தோடும் கலந்து) எங்கும் (அனைத்தும்) தான் (தாமாகவே) ஆக (ஆகி இருப்பதை)
கொண்டு (ஒன்றாகப் பார்க்கின்றதை) இடும் (செய்கின்ற சாதகர்) வையம் (உலகத்தில் இருக்கின்ற) குணம் (தன்மைகள்) பல (பலவாறாக இருக்கின்ற) தன்னையும் (குணங்களையும் ஒன்றாகவே எடுத்துக் கொள்வார்கள்)
விண்டு (உயிர்களிடமிருந்து பிரிப்பதை) இடும் (செய்கின்ற) வல் (கொடிய) வினை (வினைகளை எல்லாம் பிரித்து விடுகின்ற) மெய்ப் (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற உண்மைப்) பொருள் (பொருளாகவே) ஆகுமே (சாதகரும் ஆகிவிடுவார்கள்).

விளக்கம்:

பாடல் #1352 இல் உள்ளபடி தமது எண்ணங்களில் எப்போதும் இறைவியை வைத்து தியானித்து இருக்கின்ற சாதகர்கள் தாம் சாதகம் செய்கின்ற இடத்திலிருந்தே ஏழு விதமான உலகங்களையும் ஒரு உலகம் போலவே ஒன்றாகப் பார்க்கின்ற உள்ளத்தைப் பெறுகிறார்கள். அப்படி அனைத்து உலகங்களையும் ஒன்றாகவே பார்க்கின்ற சாதகர்கள் அனைத்தோடும் கலந்து அனைத்தும் தாமாகவே ஆகி விடுவது மட்டுமின்றி உலகத்தில் பலவாறாக இருக்கின்ற தன்மைகள் அனைத்தையும் ஒன்றாகவே எடுத்துக் கொள்வார்கள். அதனால் உயிர்களிடமிருந்து கொடுமையான வினைகளைப் பிரித்து நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற உண்மையை உணர்த்துகின்ற உண்மைப் பொருளாகவே சாதகரும் ஆகிவிடுவார்கள்.

பாடல் #1354

பாடல் #1354: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

மெய்ப்பொருள் வௌமுதல் ஹௌவது வீறாகக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரந்
தற்பொரு ளாகச் சமைந்தமு தேவரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெயபபொருள வெளமுதல ஹெளவது வீறாகக
கைபபொரு ளாகக கலநதெழு சககரந
தறபொரு ளாகச சமைநதமு தெவரி
நறபொரு ளாக நடுவிருந தாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மெய்ப் பொருள் ஒளம் முதல் ஹௌம் அது ஈறு ஆக
கைப் பொருள் ஆகக் கலந்து எழு சக்கரம்
தற் பொருள் ஆகச் சமைந்த அமுதேஸ்வரி
நற் பொருள் ஆக நடுவு இருந்தாளே.

பதப்பொருள்:

மெய்ப் (நவாக்கிரி சக்கரத்தின் உண்மைப்) பொருள் (பொருளாகவே அமைந்தது) ஒளம் (‘ஔம்’ எனும் பீஜம்) முதல் (முதலில் ஆரம்பித்து) ஹௌம் (‘ஹௌம்’ எனும்) அது (பீஜம்) ஈறு (கடைசியாக) ஆக (வைத்து முறைப்படி அமைந்து இருக்கும்)
கைப் (அதுவே சாதகரோடு எப்போதும்) பொருள் (சேர்ந்தே இருக்கின்ற பொருள்) ஆகக் (ஆகவும்) கலந்து (அவருடன் கலந்து இருக்கும்) எழு (அவருக்குள்ளிருந்து எழுந்து வருகின்ற) சக்கரம் (இந்த அமைப்பிலிருக்கும் நவாக்கிரி சக்கரமானது)
தற் (உலகத்தில் தானாகவே நிற்கின்ற) பொருள் (பொருளாக) ஆகச் (ஆகி) சமைந்த (அதுவே நன்மைகள் கொடுப்பதற்காக மாறுகின்ற) அமுதேஸ்வரி (அமிழ்தத்தின் தன்மைக்குத் தலைவியாக இருக்கின்ற இறைவியே)
நற் (நன்மைகள் அனைத்தும் தருகின்ற) பொருள் (பொருளாகவே) ஆக (இருக்கின்ற அந்த சக்கரத்தின்) நடுவு (நடுவிலும்) இருந்தாளே (வீற்றிருக்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1353 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற உண்மையை உணர்த்துகின்ற உண்மைப் பொருளாகவே ஆகிவிட்ட சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரமானது ‘ஔம்’ எனும் பீஜம் முதலில் ஆரம்பித்து ‘ஹௌம்’ எனும் பீஜம் கடைசியாக வைத்து முறைப்படி அமைந்து இருக்கும். சாதகருடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற இந்த சக்கரத்தின் பொருளானது அவருடன் கலந்து இருந்து அவருக்குள்ளிருந்து எழுந்து வரும். அப்படி சாதகருக்குள்ளிருந்து எழுந்து வருகின்ற இந்த சக்கரமானது உலகத்தில் தானாகவே நிற்கின்ற பொருளாக ஆகி அதுவே நன்மைகள் கொடுப்பதற்காக மாறுகின்ற அமிழ்தத்தின் தன்மைக்குத் தலைவியாக இருக்கின்ற இறைவியே நன்மைகள் அனைத்தும் தருகின்ற இந்த சக்கரத்தின் நடுவிலும் வீற்றிருக்கின்றாள்.

பாடல் #1355

பாடல் #1355: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தாளதி னுள்ளே சமைந்தமு தேச்சுரி
காலது கொண்டு கருத்துற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமுங் கேடில்லைக் காணுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாளதி னுளளெ சமைநதமு தெசசுரி
காலது கொணடு கருததுற வீசிடில
நாளது நாளும புதுமைகள கணடபின
கெளது காயமுங கெடிலலைக காணுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தாள் அதின் உள்ளே சமைந்த அமுதேஸ்வரி
கால் அது கொண்டு கருத்து உற வீசிடில்
நாள் அது நாளும் புதுமைகள் கண்ட பின்
கேள் அது காயமும் கேடு இல்லை காணுமே.

பதப்பொருள்:

தாள் (இறைவியின் திருவடிகளாக இருக்கின்ற) அதின் (நவாக்கிரி சக்கரத்தின்) உள்ளே (உள்ளே) சமைந்த (சக்தியூட்டமாக மாறி) அமுதேஸ்வரி (இருக்கின்ற அமிழ்தத்திற்கு தலைவியான இறைவியின் அருளால் சக்தியூட்டம் பெற்ற பீஜங்களை)
கால் (மூச்சுக்) அது (காற்றின்) கொண்டு (மூலம்) கருத்து (அனைத்தும் நன்மை பெற வேண்டும் என்கிற எண்ணத்தையும்) உற (சேர்ந்து) வீசிடில் (அனைவருக்கும் பயன்படும் படி அதிர்வலைகளாக சாதகரைச் சுற்றி அனுப்பும் போது)
நாள் (தினம்) அது (அந்த அதிர்வலைகளால்) நாளும் (தினந்தோறும்) புதுமைகள் (பல விதமான புதுமையான நன்மைகள்) கண்ட (தம்மைச் சுற்றி நடப்பதைக் கண்டு) பின் (அதன் பிறகு)
கேள் (அதனால் பயனடைந்தவர்கள் சொல்லுகின்ற புகழ்ச்சிகளையும் கேட்டு) அது (அந்த அதிர்வலைகளைப் பெற்றவர்களின்) காயமும் (உடலுக்கும் எந்தவிதமான) கேடு (கெடுதல்களும்) இல்லை (இல்லாமல் நன்றாக இருப்பதை) காணுமே (சாதகர்களால் காண முடியும்).

விளக்கம்:

பாடல் #1354 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தின் நடுவிலும் வீற்றிருக்கின்ற இறைவியின் திருவடிகளே சக்கரத்திற்குள் சக்தியூட்டமாக மாறி இருக்கின்ற பீஜ மந்திர எழுத்துக்களான அமிழ்தத்திற்கும் தலைவியாக அந்த இறைவியே இருக்கிறாள். அவளது அருளால் சக்தியூட்டம் பெற்ற பீஜ மந்திர எழுத்துக்களை மூச்சுக் காற்றின் மூலம் அனைத்தும் நன்மை பெற வேண்டும் என்கிற எண்ணத்தையும் சேர்ந்து அனைவருக்கும் பயன்படும் படி அதிர்வலைகளாக சாதகரைச் சுற்றி அனுப்பும் போது அந்த அதிர்வலைகளால் தினந்தோறும் பல விதமான புதுமையான நன்மைகள் தம்மைச் சுற்றி நடப்பதை சாதகர்கள் காணுவார்கள். அதனால் பயனடைந்தவர்கள் சொல்லுகின்ற புகழ்ச்சிகளையும் கேட்டு அந்த அதிர்வலைகளைப் பெற்றவர்களின் உடலுக்கும் எந்தவிதமான கெடுதல்களும் இல்லாமல் நன்றாக இருப்பதை சாதகர்களால் காண முடியும்.

பாடல் #1356

பாடல் #1356: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கேடில்லைக் காணுங் கிளரொளி கண்டபி
னாடில்லைக் காணும் நாமுத லற்றபின்
மாடில்லைக் காணும் வரும்வழி கண்டபின்
காடில்லைக் காணுங் கருத்துற் றிடத்துக்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கெடிலலைக காணுங கிளரொளி கணடபி
னாடிலலைக காணும நாமுத லறறபின
மாடில்லைக காணும வருமவழி கணடபின
காடிலலைக காணுங கருததுற றிடததுககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கேடு இல்லை காணும் கிளர் ஒளி கண்ட பின்
நாடு இல்லை காணும் நாள் முதல் அற்ற பின்
மாடு இல்லை காணும் வரும் வழி கண்ட பின்
காடு இல்லை காணும் கருத்து உற்ற இடத்துக்கே.

பதப்பொருள்:

கேடு (சாதகர் தம்மைச் சுற்றி மந்திர அதிர்வலைகளை அனுப்பிய இடங்களில் எந்தவிதமான கெடுதல்களும்) இல்லை (இல்லாமல் இருப்பதைக்) காணும் (காண்பார்கள்) கிளர் (தமக்குள்ளிருக்கும் நவாக்கிரி சக்கரத்திலிருந்து உத்வேகமாக எழுந்து வருகின்ற) ஒளி (பேரொளியை) கண்ட (தரிசித்த) பின் (பிறகு)
நாடு (சாதகர்கள் தமது உடலுக்குத் தேவையான இடம் என்ற ஒன்றும் இந்த உலகத்தில்) இல்லை (இல்லாமல் இருப்பதைக்) காணும் (காண்பார்கள்) நாள் (நாள் திதி) முதல் (முதலாகிய) அற்ற (காலக் குறிப்புகள் அனைத்தும் இல்லாமல் போகும்) பின் (அதன் பிறகு)
மாடு (உடலைச் சார்ந்து இருக்க வேண்டிய எந்த தேவையும் சாதகருக்கு) இல்லை (இல்லாமல் இருப்பதைக்) காணும் (காண்பார்கள்) வரும் (இறைவனை அடைய வேண்டும் என்று அவரை நாடி வருகின்ற உயிர்களுக்கு) வழி (இறைவனை அடையும் வழிகளை) கண்ட (தமக்குள் கண்டு கொண்ட) பின் (பிறகு தகுதியானவர்களுக்கு கொடுப்பார்கள்)
காடு (இறைவனை அடைய தடையாக இருக்கின்ற கொடிய வினைகள் சூழ்ந்து இருக்கின்ற காடுகளும்) இல்லை (தம்மை நாடி வருகின்ற உயிர்களுக்கு இல்லாமல் போவதை) காணும் (காண்பார்கள்) கருத்து (சாதகரின் எண்ணங்களின் மூலம் தம்மைச் சுற்றி மந்திர அதிர்வலைகளை) உற்ற (அனுப்பிய) இடத்துக்கே (இடத்தில் எல்லாம்).

விளக்கம்:

பாடல் #1355 இல் உள்ளபடி சாதகர்கள் அனுப்பிய மந்திர அதிர்வலைகளைப் பெற்றவர்களின் உடலுக்கு எந்தவிதமான கெடுதல்களும் இல்லாமல் நன்றாக இருப்பதை சாதகர்களால் காண முடியும். சாதகர்கள் தமக்குள்ளிருக்கும் நவாக்கிரி சக்கரத்திலிருந்து உத்வேகமாக எழுந்து வருகின்ற பேரொளியை தரிசித்த பிறகு தமது உடலுக்குத் தேவையான இடம் என்ற ஒன்றும் இந்த உலகத்தில் இல்லாமல் போவதைக் காண்பார்கள். அதன் பிறகு வருடம் மாதம் நாள் மணி நிமிஷம் வினாடி நொடி ஆகிய காலத்தைக் குறிக்கின்ற அனைத்தும் இல்லாமல் போகும். சாதகர்களும் தமது உடலைச் சார்ந்து இருக்க வேண்டிய எந்த தேவையும் இல்லாமல் இருப்பதைக் காண்பார்கள். அதன் பிறகு இறைவனை அடைய வேண்டும் என்று சாதகரை நாடி வருகின்ற உயிர்களுக்கு இறைவனை அடையும் வழிகள் எது எது என்று தமக்குள் கண்டு அறிந்து கொண்டு அவற்றை தகுதியானவர்களுக்கு கொடுப்பார்கள். சாதகரின் எண்ணங்களின் மூலம் தம்மைச் சுற்றி மந்திர அதிர்வலைகளை அனுப்பிய எல்லா இடத்திலும் இறைவனை அடைய வேண்டும் என்று அவரை நாடி வருகின்ற உயிர்களைச் சுற்றி காடு போல சூழ்ந்து இருக்கின்ற கொடிய வினைகள் இல்லாமல் போவதையும் காண்பார்கள்.

பாடல் #1357

பாடல் #1357: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

உற்றிட மெல்லா முலப்பிலி பாழாகக்
கற்றிட மெல்லாங் கடுவெளி யானது
மற்றிட மில்லை வழியில்லைத் தானில்லைச்
சற்றிட மில்லைச் சலிப்பற நின்றிடே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உறறிட மெலலா முலபபிலி பாழாகக
கறறிட மெலலாங கடுவெளி யானது
மறறிட மிலலை வழியிலலைத தானிலலைச
சறறிட மிலலைச சலிபபற நினறிடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உற்ற இடம் எல்லாம் உலப்பு இலி பாழ் ஆகக்
கற்ற இடம் எல்லாம் கடு வெளி ஆனது
மற்ற இடம் இல்லை வழி இல்லை தான் இல்லை
சற்ற இடம் இல்லை சலிப்பு அற நின்றிடே.

பதப்பொருள்:

உற்ற (சாதகரிடமிருந்து வெளிவந்த மந்திர அதிர்வலைகள் சென்ற) இடம் (இடங்களில்) எல்லாம் (எல்லாவற்றிலும் நவாக்கிரி சக்கரத்திலிருந்து வருகின்ற) உலப்பு (அழிவு என்பதே) இலி (இல்லாத இறை சக்தியினால்) பாழ் (கொடுமையான வினைகள் அனைத்தும் கெட்டு அழிந்து) ஆகக் (போய் விடும்)
கற்ற (சாதகர் இதுவரை தாம் கற்றுக் கொண்ட அனைத்து விஷயங்களையும்) இடம் (ஞாபகமாக வைத்திருந்த எண்ணங்களின் சேமிப்பு) எல்லாம் (அனைத்தும் அழிந்து போய்) கடு (அந்த இடம் வெற்று) வெளி (இடமாக) ஆனது (ஆகி விடும்)
மற்ற (அனைத்து இடத்திலும் இருக்கின்ற சாதகர்களுக்கு ஒன்றோடு ஒன்று வேறு படுத்திப் பார்க்கின்ற) இடம் (இடம் என்று) இல்லை (எதுவும் இல்லாமல் போய் விடும்) வழி (அதனால் சாதகர் இடத்தின் மூலம் செல்ல வேண்டிய வழிகள் என்று) இல்லை (எதுவும் இல்லாமலும்) தான் (தான் என்கிற உடலோ மனமோ எண்ணமோ ஆகிய எதுவும்) இல்லை (இல்லாமல் இருப்பார்)
சற்ற (அதன் பிறகு அவரைச் சுற்றி இருக்கின்ற உலகம் என்ற) இடம் (இடங்கள் எதுவும்) இல்லை (இல்லாமல் போய் விடும்) சலிப்பு (ஆகவே சாதகர்கள் இதனால் எந்தவிதமான மனச் சோர்வோ அல்லது சலிப்போ) அற (அடைந்து விடாமல்) நின்றிடே (தாம் செய்கின்ற சாதகத்தை தொடர்ந்து சமாதி நிலையில் செய்து கொண்டே இருக்க வேண்டும்).

விளக்கம்:

பாடல் #1356 இல் உள்ளபடி சாதகரின் எண்ணங்களின் மூலம் தம்மைச் சுற்றி மந்திர அதிர்வலைகளை அனுப்பிய எல்லா இடத்திலும் நவாக்கிரி சக்கரத்திலிருந்து வருகின்ற அழிவில்லாத இறை சக்தியினால் கொடுமையான வினைகள் அனைத்தும் கெட்டு அழிந்து போய் விடும். சாதகர் இதுவரை தாம் கற்றுக் கொண்ட அனைத்து விஷயங்களையும் ஞாபகமாக வைத்திருந்த எண்ணங்களின் சேமிப்பு அனைத்தும் அழிந்து போய் அந்த இடம் வெற்று இடமாக ஆகி விடும். அனைத்து இடத்திலும் இருக்கின்ற சாதகர்களுக்கு ஒன்றோடு ஒன்று வேறு படுத்திப் பார்க்கின்ற இடம் என்று எதுவும் இல்லாமல் போய் விடும். அதனால் சாதகர் இடத்தின் மூலம் செல்ல வேண்டிய வழிகள் என்று எதுவும் இல்லாமலும் தான் என்கிற உடலோ மனமோ எண்ணமோ ஆகிய எதுவும் இல்லாமல் இருப்பார். அதன் பிறகு அவரைச் சுற்றி இருக்கின்ற உலகம் என்ற இடங்கள் எதுவும் இல்லாமல் போய் விடும். ஆகவே சாதகர்கள் இதனால் எந்தவிதமான மனச் சோர்வோ அல்லது சலிப்போ அடைந்து விடாமல் தாம் செய்கின்ற சாதகத்தை தொடர்ந்து சமாதி நிலையில் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

குறிப்பு:

சமாதி நிலையில் இருக்கின்ற சாதகர்கள் நிலையை இந்தப் பாடலில் தெரிந்து கொள்ளலாம்.

பாடல் #1358

பாடல் #1358: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நின்றிடு மேழ்கட லேழ்புவி யெல்லா
நின்றிடு முள்ளம் நினைத்தவை தானொக்க
நின்றிடுஞ் சித்தி நிலைபெற கண்டிடில்
நின்றிடு மேலை விளக்கொளி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினறிடு மெழகட லெழபுவி யெலலா
நினறிடு முளளம நினைததவை தானொகக
நினறிடுஞ் சிததி நிலைபெற கணடிடில
நினறிடு மெலை விளககொளி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நின்று இடும் ஏழ் கடல் ஏழ் புவி எல்லாம்
நின்று இடும் உள்ளம் நினைத்து அவை தான் ஒக்க
நின்று இடும் சித்தி நிலை பெறக் கண்டு இடில்
நின்று இடும் மேலை விளக்கு ஒளி தானே.

பதப்பொருள்:

நின்று (சாதகர் சமாதியில் இருந்து) இடும் (செய்கின்ற சாதகத்தினால்) ஏழ் (ஏழு விதமான) கடல் (பெருங் கடல்களிலும்) ஏழ் (ஏழு விதமான) புவி (உலகங்களிலும்) எல்லாம் (அவரால் இருக்க முடியும்)
நின்று (சாதகர் சமாதியில் இருந்து) இடும் (செய்கின்ற சாதகத்தினால்) உள்ளம் (அவரது உள்ளத்தில்) நினைத்து (நினைத்த) அவை (அனைத்து விஷயங்களும் அந்தக் கணத்திலேயே) தான் (அவரது) ஒக்க (எண்ணத்திற்கு ஏற்றவாறே நடக்கும்)
நின்று (சாதகர் சமாதியில் இருந்து) இடும் (செய்கின்ற சாதகத்தினால்) சித்தி (சாதகர் பெற்ற அருள் நிலையானது) நிலை (எப்போதும் மாறாமல் நிலையாக) பெறக் (இருப்பதை) கண்டு (அவர் கண்டு) இடில் (உணர்வார்)
நின்று (சாதகர் சமாதியில் இருந்து) இடும் (செய்கின்ற சாதகத்தினால்) மேலை (உச்சத்தில் இருந்து) விளக்கு (அனைத்தையும் விளங்க வைக்கின்ற) ஒளி (பேரொளியாகவும்) தானே (சாதகரே இருக்கின்றார்).

விளக்கம்:

பாடல் #1357 இல் உள்ளபடி சாதகர் சமாதியில் இருந்து இடைவிடாது செய்கின்ற சாதகத்தினால் ஏழு விதமான பெருங் கடல்களிலும் ஏழு விதமான உலகங்களிலும் அவரால் இருக்க முடியும். அது மட்டுமின்றி அவரது உள்ளத்தில் நினைத்த அனைத்து விஷயங்களும் அந்தக் கணத்திலேயே அவரது எண்ணத்திற்கு ஏற்றவாறே நடக்கும். அப்போது சாதகர் பெற்ற அருள் நிலையானது எப்போதும் மாறாமல் நிலையாக இருப்பதை அவர் கண்டு உணர்வார். அதன் பிறகு உச்சத்தில் இருந்து அனைத்தையும் விளங்க வைக்கின்ற பேரொளியாகவும் சாதகரே இருக்கின்றார்.

பாடல் #1359

பாடல் #1359: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

விளக்கொளி சௌமுதல் வௌவது வீறாம்
விளக்கொளி சக்கர மெய்ப்பொரு ளாகும்
விளக்கொளி யாகிய மின்கொடி யாளை
விளக்கொளி யாக விளங்கிடு நீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விளககொளி சௌமுதல வௌவது வீறாம
விளககொளி சககர மெயபபொரு ளாகும
விளககொளி யாகிய மினகொடி யாளை
விளககொளி யாக விளஙகிடு நீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விளக்கு ஒளி சௌம் முதல் ஔம் அது ஈறாம்
விளக்கு ஒளி சக்கரம் மெய்ப் பொருள் ஆகும்
விளக்கு ஒளி ஆகிய மின் கொடி ஆளை
விளக்கு ஒளி ஆக விளங்கிடும் நீரே.

பதப்பொருள்:

விளக்கு (அனைத்தையும் விளங்க வைக்கின்ற) ஒளி (பேரொளியானது) சௌம் (‘சௌம்’ எனும் பீஜத்தை) முதல் (முதலில் வைத்தும்) ஔம் (‘ஔம்’ எனும் பீஜத்தை) அது (முறைப்படி அமைத்து) ஈறாம் (கடைசியிலும் இருக்கின்றது)
விளக்கு (அனைத்தையும் விளங்க வைக்கின்ற) ஒளி (பேரொளியானது) சக்கரம் (நவாக்கிரி சக்கரமாகவும்) மெய்ப் (அதற்குள் இருக்கின்ற உண்மை) பொருள் (பொருளாகவும்) ஆகும் (இருக்கின்றது)
விளக்கு (அனைத்தையும் விளங்க வைக்கின்ற) ஒளி (பேரொளியாக) ஆகிய (இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில்) மின் (மின்னல் போன்ற) கொடி (மாபெரும் சக்தியாக இருக்கின்ற) ஆளை (இறைவியை)
விளக்கு (அனைத்தையும் விளங்க வைக்கின்ற) ஒளி (பேரொளி) ஆக (ஆகவே இருக்கின்றாள் என்பதை) விளங்கிடும் (தெரிந்து கொள்ளுங்கள்) நீரே (நீங்கள்).

விளக்கம்:

பாடல் #1358 இல் உள்ளபடி இடைவிடாது சாதகம் செய்து அனைத்தையும் விளங்க வைக்கின்ற பேரொளியானது ‘சௌம்’ எனும் பீஜத்தை முதலில் வைத்தும் ‘ஔம்’ எனும் பீஜத்தை முறைப்படி அமைத்து கடைசியிலும் இருக்கின்றது. அந்தப் பேரொளியே நவாக்கிரி சக்கரமாகவும் அதற்குள் இருக்கின்ற உண்மை பொருளாகவும் இருக்கின்றது. இப்படி பேரொளியாக இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில் மின்னல் போன்ற மாபெரும் சக்தியாக இருக்கின்ற இறைவியே அந்தப் பேரொளியாகவும் இருக்கின்றாள் என்பதை சாதகர்கள் தெரிந்து கொள்வார்கள்.

பாடல் #1360

பாடல் #1360: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லில்
விளங்கிடு மெல்லிய லாளது வாகும்
விளங்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விளஙகிடு மெலவரு மெயபபொருள சொலலில
விளஙகிடு மெலலிய லாளது வாகும
விளஙகிடு மெயநினற ஞானப பொருளை
விளஙகிடு வாரகள விளஙகினர தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விளங்கிடும் மேல் வரும் மெய் பொருள் சொல்லில்
விளங்கிடும் மெல் இயல் ஆள் அது ஆகும்
விளங்கிடும் மெய் நின்ற ஞான பொருளை
விளங்க இடுவார்கள் விளங்கினர் தானே.

பதப்பொருள்:

விளங்கிடும் (தெரிந்து கொள்கின்ற) மேல் (உச்ச நிலையில்) வரும் (வருகின்ற) மெய் (பேருண்மையான) பொருள் (பரம்பொருளை) சொல்லில் (சொல்ல முயன்றால்)
விளங்கிடும் (தெரிந்து கொள்கின்ற) மெல் (மென்மையான) இயல் (இயல்பினைக் கொண்ட) ஆள் (இறைவியே) அது (நவாக்கிரி சக்கரம்) ஆகும் (ஆகவும் இருக்கின்றாள்)
விளங்கிடும் (தெரிந்து கொள்கின்ற) மெய் (சாதகரின் உடலுக்குள்) நின்ற (நிற்கின்ற) ஞான (உண்மையான ஞானத்தின்) பொருளை (பரம்பொருளை)
விளங்கிடும் (தெரிந்து) இடுவார்கள் (இருக்கின்றவர்களே) விளங்கினர் (தெளிவானவர்கள்) தானே (ஆவார்கள்).

விளக்கம்:

பாடல் #1359 இல் உள்ளபடி இறைவியே நவாக்கிரி சக்கரத்தில் உள்ள பேரொளியாகவும் இருக்கின்றாள் என்பதை சாதகர்கள் தெரிந்து கொள்கின்ற உச்ச நிலையில் வருகின்ற பேருண்மையான பரம்பொருளை சொல்ல முயன்றால் அதுவே மென்மையான இயல்பினைக் கொண்ட இறைவியாகவும் இருக்கின்றது. சாதகரின் உடலுக்குள் நிற்கின்ற உண்மையான ஞானத்தின் பரம்பொருளை தமக்குள் உணர்ந்து தெரிந்து இருக்கின்றவர்களே தெளிவானவர்கள் ஆவார்கள்.