பாடல் #1340

பாடல் #1340: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

வணங்கிடுந் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடு நல்லுயி ரானவை யெல்லாங்
கலந்திடுங் காம வெகுளி மயக்கந்
துலங்கிடுஞ் சொல்லிய சூழ்வினை தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வணஙகிடுந தததுவ நாயகி தனனை
நலஙகிடு நல்லுயி ரானவை யெலலாங
கலநதிடுங காம வெகுளி மயககந
துலங்கிடுஞ சொலலிய சூழவினை தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடும் நல் உயிர் ஆனவை எல்லாம்
கலந்திடும் காம வெகுளி மயக்கம்
துலங்கிடும் சொல்லிய சூழ் வினை தானே.

பதப்பொருள்:

வணங்கிடும் (உயிர்கள் வணங்கிடும்) தத்துவ (நவாக்கிரி சக்கரத்தி்ல் இருக்கும் சக்தியின் இயக்கத் தத்துவங்களுக்கு) நாயகி (தலைவியாகவே) தன்னை (தாமும் ஆகிவிட்ட சாதகர்களுக்கு)
நலங்கிடும் (வாசனை முதலிய திரவியங்களை பூசி பூஜிக்கும்) நல் (நல்ல) உயிர் (உயிர்களாக) ஆனவை (பக்குவப்பட்ட) எல்லாம் (அனைத்து உயிர்களும்)
கலந்திடும் (தங்களோடு கலந்து இருக்கும்) காம (ஆசை) வெகுளி (கோபம்) மயக்கம் (மாயையினால் இருக்கும் மயக்கம்)
துலங்கிடும் (ஆகிய குற்றங்களும் நீங்கி விடும்) சொல்லிய (உயிர்களின் பிறவிக்கு காரணம் என்று வேதங்கள் சொல்லுகின்ற) சூழ் (உயிர்களைச் சூழ்ந்து இருக்கின்ற) வினை (வினைகளும்) தானே (நீங்கி விடும்).

விளக்கம்:

பாடல் #1339 இல் உள்ளபடி உயிர்களால் வணங்கப்படும் நிலைக்கு வந்து நவாக்கிரி சக்கரத்தி்ல் இருக்கும் சக்தியின் இயக்கத் தத்துவங்களுக்கு தலைவியாகவே தாமும் ஆகிவிட்ட சாதகர்களின் மேல் கொண்ட பக்தியினாலும் அன்பினாலும் வாசனை முதலிய திரவியங்களை பூசி பூஜிக்கும் நல்ல உயிர்களாக பக்குவப்பட்ட அனைத்து உயிர்களோடும் கலந்து இருக்கும் ஆசை, கோபம், மாயையினால் இருக்கும் மயக்கம் ஆகிய குற்றங்கள் அனைத்தும் நீங்கி விடும். அதன் பிறகு உயிர்களின் பிறவிக்கு காரணம் என்று வேதங்கள் சொல்லுகின்ற உயிர்களைச் சூழ்ந்து இருக்கின்ற வினைகளும் உயிர்களை விட்டு நீங்கி விடும்.

பாடல் #1341

பாடல் #1341: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தானே கழறித் தறியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையுந்
தானே வணங்கித் தலைவனு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானெ கழறித தறியவும வலலனாயத
தானெ நினைததவை சொலலவும வலலனாயத
தானெ தனிநடங கணடவள தனனையுந
தானெ வணஙகித தலைவனு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தானே கழறித்து அறியவும் வல்லன் ஆய்
தானே நினைத்த அவை சொல்லவும் வல்லன் ஆய்
தானே தனி நடம் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனும் ஆமே.

பதப்பொருள்:

தானே (சாதகர் தமக்குள்) கழறித்து (இருக்கின்ற அனைத்து தீமைகளையும் நீக்கி விட்டு) அறியவும் (தாம் உண்மையில் யார் என்பதை அறிந்து கொள்ள) வல்லன் (முடிந்தவர்) ஆய் (ஆகவும்)
தானே (சாதகர் தமக்குள்) நினைத்த (எண்ணிப் பார்த்து அறிந்து கொண்ட) அவை (இறை தன்மைகள் அனைத்தையும்) சொல்லவும் (குருவாக இருந்து பிறருக்கு எடுத்துக் கூற) வல்லன் (முடிந்தவர்) ஆய் (ஆகவும்)
தானே (சாதகர் தமக்குள்) தனி (இறைவன் தமக்காக தனியாக) நடம் (ஆடிய திருநடனத்தை) கண்டவள் (கண்டு ரசித்த) தன்னையும் (இறைவியையும்)
தானே (சாதகர் தமக்குள்) வணங்கித் (தரிசித்து வணங்கி) தலைவனும் (மற்றவர்களால் வணங்கப்படும் தலைவனாகவும்) ஆமே (இருக்கின்றார்).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்கின்ற சாதகர் அதன் மூலம் தமக்குள் இருக்கின்ற அனைத்து தீமைகளையும் நீக்கி விட்டு தாம் உண்மையில் யார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தவராக இருக்கின்றார். அதன் பயனால் சாதகர் தமக்குள் எண்ணிப் பார்த்து அறிந்து கொண்ட இறை தன்மைகள் அனைத்தையும் குருவாக வீற்றிருந்து பிறருக்கு எடுத்துக் கூற முடிந்தவராகவும் இருக்கின்றார். அதன் பயனால் இறைவன் தமக்காக தனியாக ஆடிய திருநடனத்தை கண்டு ரசித்த இறைவியையும் சாதகர் தமக்குள் தரிசித்து வணங்கவும் மற்றவர்களால் வணங்கப்படும் தலைவனாகவும் இருக்கின்றார்.

பாடல் #1342

பாடல் #1342: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஆமே யனைத்துயி ராகிய வம்மையுந்
தானே சகலமு மீன்றவத் தையலு
மாமே யவனடி போற்றி வணங்கிடிற்
போமே வினைகளாம் புண்ணிய னாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆமெ யனைததுயி ராகிய வமமையுந
தானெ சகலமு மீனறவத தையலு
மாமெ யவனடி பொறறி வணஙகிடிற
பொமெ வினைகளாம புணணிய னாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆமே அனைத்து உயிர் ஆகிய அம்மையும்
தானே சகலமும் ஈன்ற அத் தையலும்
ஆமே அவனடி போற்றி வணங்கிடிற்
போமே வினைகள் ஆம் புண்ணியன் ஆகுமே.

பதப்பொருள்:

ஆமே (தலைவனாகவே ஆகிவிட்ட சாதகர்) அனைத்து (அனைத்து உலகங்களிலும்) உயிர் (இருக்கின்ற அனைத்து உயிர்கள்) ஆகிய (ஆகவே இருக்கின்ற) அம்மையும் (இறைவியாகவும்)
தானே (அவரே) சகலமும் (அனைத்து பொருள்களையும்) ஈன்ற (உருவாக்கிய) அத் (அந்த) தையலும் (இறைவனோடு எப்போதும் ஒன்றாக இணைந்தே இருக்கின்ற சக்தியாகவும்)
ஆமே (இப்படி சக்தியாகவே ஆகிவிட்ட சாதகர்) அவனடி (அவரது திருவடியை) போற்றி (இறைவனாகவே போற்றி) வணங்கிடிற் (வணங்கி வழிபடும் அடியவர்களை விட்டு)
போமே (விலகிப் போகுமே) வினைகள் (அனைத்து வினைகளும்) ஆம் (வணங்கிய அடியவர்களும்) புண்ணியன் (புண்ணியனாகவே) ஆகுமே (ஆகி விடுவார்கள்).

விளக்கம்:

பாடல் #1341 இல் உள்ளபடி மற்றவர்களால் வணங்கப்படும் தலைவனாகவே ஆகிவிட்ட சாதகர் அனைத்து உயிர்களாகவே இருக்கின்ற இறைவியாகவும் ஆகி விடுவார். இறைவனோடு எப்போதும் ஒன்றாக இணைந்தே இருந்து அனைத்து உயிர்களுக்கும் வேண்டிய அனைத்து பொருள்களையும் உருவாக்கிய சக்தியாகவும் அவரே ஆகி விடுவார். இப்படி அனைத்தையும் உருவாக்குகின்ற சக்தியாகவே ஆகிவிட்ட சாதகரின் திருவடியை இறைவனாகவே போற்றி வணங்கி வழிபடும் அடியவர்களை விட்டு அனைத்து வினைகளும் விலகிப் போய் அவர்களும் புண்ணியனாகவே ஆகி விடுவார்கள்.

பாடல் #1343

பாடல் #1343: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

புண்ணிய னாகிப் பொருந்தி யுலகெங்குங்
கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடுந்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கு
மண்ணிய னாக வமர்ந்திருந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

புணணிய னாகிப பொருநதி யுலகெஙகுங
கணணிய னாகிக கலநதங கிருநதிடுந
தணணிய னாகித தரணி முழுதுககு
மணணிய னாக வமரநதிருந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

புண் இயன் ஆகி பொருந்தி உலகு எங்கும்
கண் இயன் ஆகி கலந்து அங்கு இருந்திடும்
தண் இயன் ஆகி தரணி முழுதுக்கும்
அண் இயன் ஆக அமர்ந்து இருந்தானே.

பதப்பொருள்:

புண் (புண்ணியத்தின் பயனாக இருந்து) இயன் (செயல் படுகின்றவனாக) ஆகி (சாதகர் ஆகி) பொருந்தி (சேர்ந்து இருப்பவராகவும்) உலகு (உலகங்கள்) எங்கும் (அனைத்திலும்)
கண் (கண்ணின் பார்வையாக இருந்து) இயன் (செயல் படுகின்றவனாக) ஆகி (சாதகர் ஆகி) கலந்து (அனைத்திலும் ஒன்றாகக் கலந்து) அங்கு (அவற்றோடு சேர்ந்தே) இருந்திடும் (இருக்கின்றவராகவும்)
தண் (மழை போல் அருளைக் கொடுத்து) இயன் (செயல் படுகின்றவனாக) ஆகி (சாதகர் ஆகி) தரணி (உலகம்) முழுதுக்கும் (முழுவதிலும் இருக்கின்ற அனைத்து உயிர்களோடும்)
அண் (நெருங்கி இருந்து) இயன் (செயல் படுகின்றவனாக) ஆகி (சாதகர் ஆகி) அமர்ந்து (தாம் செய்யும் சாதகத்தை இடைவிடாது) இருந்தானே (செய்து கொண்டே இருக்கின்றார்).

விளக்கம்:

பாடல் #1342 இல் உள்ளபடி தமது திருவடிகளை இறைவனின் திருவடிகளாகவே பாவித்து வணங்குகின்ற அடியவர்களையும் புண்ணியர்களாக ஆக்குகின்ற பேறு பெற்ற குருநாதராக இருக்கின்ற சாதகர் அனைத்து உலகங்களோடும் சேர்ந்தே இருந்து அதில் இருக்கின்ற அனைத்து உயிர்களும் செய்கின்ற புண்ணியத்தின் பயனாக அனைத்தையும் அதற்கு ஏற்றவாறு செயல் படுத்துகின்றவராக இருக்கின்றார். அது மட்டுமின்றி அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்திலும் கலந்தே இருந்து அவற்றைக் காணுகின்ற கண்களின் பார்வையாக அனைத்தையும் பார்க்க வைக்கின்றவராகவும் இருக்கின்றார். உலகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து உயிர்களோடும் நெருங்கி இருந்து அவற்றின் பக்குவத்திற்கு ஏற்றபடி மழை போல் அருளுகின்றவராகவும் அவரே இருக்கின்றார். இப்படி தமது சாதகத்தை இடைவிடாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதன் மூலம் அனைத்தையும் செயல் படுத்துகின்றவராக சாதகர் இருக்கின்றார்.

பாடல் #1344

பாடல் #1344: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தானது சும்மீறீக் கௌவது வீரா
நானது சக்கர நன்றறி வார்க்கெல்லாங்
கானது கன்னி கலந்த பராசத்தி
கேளது வையங் கிளரொளி வானதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானது சுமமீறீக கௌவது வீரா
நானது சககர நனறறி வாரககெலலாங
கானது கனனி கலநத பராசததி
கெளது வையங கிளரொளி வானதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தான் அது சும் ஈறீம் கௌ அது ஈரா
நான் அது சக்கரம் நன்று அறிவார்க்கு எல்லாம்
கான் அது கன்னி கலந்த பராசத்தி
கேள் அது வையம் கிளர் ஒளி வான் அதே.

பதப்பொருள்:

தான் (சக்கரம்) அது (அதுவாகவே இருக்கின்ற) சும் (ஸெளம்) ஈறீம் (ஹ்ரீம்) கௌ (கெளம்) அது (ஆகிய பீஜங்களை) ஈரா (ஒவ்வொன்றும் இரண்டு முறையாக அமைத்தால்)
நான் (சாதகரும்) அது (அதுவாகவே) சக்கரம் (சக்கரத்தில் இருப்பதை) நன்று (தமக்குள்ளேயே நன்றாக) அறிவார்க்கு (அறிந்து கொள்ளுகின்ற) எல்லாம் (சாதகர்களெல்லாம்)
கான் (பார்க்கின்ற) அது (அனைத்திலும்) கன்னி (என்றும் இளமையாகவே) கலந்த (ஒன்றோடு ஒன்றாகக் கலந்து இருக்கின்ற) பராசத்தி (அசையும் சக்தியாகிய இறைவியை பார்ப்பார்கள்)
கேள் (யான் சொல்வதைக் கேளுங்கள்) அது (அப்போது) வையம் (அனைத்து உலகங்களாகவும்) கிளர் (பிரகாசத்தோடு பரந்து விரிந்து இருக்கின்ற) ஒளி (பேரொளியாகவும்) வான் (ஆகாயமாகவும்) அதே (அந்த இறைவியே இருப்பதை தெரிந்து கொள்வீர்கள்).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரமாகவே இருக்கின்ற பீஜங்களில் ‘ஸெளம்’ ‘ஹ்ரீம்’ மற்றும் ‘கௌம்’ ஓவ்வொன்றும் இரண்டு முறையாக அமைத்தால் வருகின்ற சக்கர அமைப்பில் சாதகரும் சக்கரமாகவே இருப்பதை தமக்குள் அதை நன்றாக அறிந்து கொள்ளுகின்ற சாதகர்கள் அனைவரும் தாம் காணுகின்ற அனைத்திலும் என்றும் இளமையுடன் அசையும் சக்தியாக இருக்கின்ற இறைவியானவள் ஒன்றாகக் கலந்து இருப்பதை பார்ப்பார்கள். அது மட்டுமின்றி யான் சொல்வதையும் கேட்டுக் கொள்பவர்கள் அந்த இறைவியானவளே அனைத்து உலகங்களாகவும் பிரகாசத்தோடு அனைத்து உலகங்களுக்கும் பரந்து விரிந்து இருக்கின்ற பேரொளியாகவும் அவை இருக்கின்ற ஆகாயமாகவும் இருப்பதை தெரிந்து கொள்வார்கள்.

பாடல் #1345

பாடல் #1345: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஒளிக்கும் பராசத்தி யுள்ளே யமரிற்
களிக்கு மிச்சிந்தை யுங்காரணங் காட்டித்
தெளிக்கு மழையுடன் செல்வ முண்டாக்கு
மளிக்கு மிவளை யறிந்து கொள்வார்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒளிககும பராசததி யுளளெ யமரிற
களிககு மிசசிநதை யுஙகாரணங காடடித
தெளிககு மழையுடன செலவ முணடாககு
மளிககு மிவளை யறிநது கொளவாரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்
களிக்கும் இச் சிந்தையும் காரணம் காட்டித்
தெளிக்கும் அழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே.

பதப்பொருள்:

ஒளிக்கும் (பேரொளியாக விளங்குகின்ற) பராசத்தி (அசையும் சக்தியான இறைவி) உள்ளே (சாதகருக்குள் வந்து) அமரில் (வீற்றிருந்தால்)
களிக்கும் (பேரின்பத்தில் திளைக்கும்) இச் (சாதகரின்) சிந்தையும் (மனம் முழுவதும்) காரணம் (அதற்கான காரணமாகவே) காட்டித் (தம்மைக் காட்டி)
தெளிக்கும் (தெளிவு படுத்துகின்றாள்) அழையுடன் (அதன் பிறகு சாதகரை தம்மோடு சேர்த்துக் கொண்டு) செல்வம் (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் உண்மைப் பொருளை உணர்த்தும் அருளையும்) உண்டாக்கும் (உண்டாக்கி)
அளிக்கும் (சாதகருக்கு அளிக்கின்றாள்) இவளை (இப்படிப்பட்ட இறைவியை) அறிந்து (முழுவதுமாகத் தமக்குள் அறிந்து) கொள்வார்க்கே (கொண்ட சாதகர்களுக்கே இவை அனைத்தையும் இறைவி அருளுகின்றாள்).

விளக்கம்:

பாடல் #1343 இல் உள்ளபடி அனைத்து உலகங்களுக்கும் பரந்து விரிந்து இருக்கின்ற பேரொளியாக விளங்குகின்ற அசையும் சக்தியான இறைவி சாதகருக்குள் வந்து வீற்றிருந்தால் சாதகரின் மனம் பேரின்பத்தில் திளைத்திருக்கும். அப்போது அந்த பேரின்பத்திற்கு காரணம் தாமே என்பதை இறைவி சாதகருக்கு காண்பித்து தெளிவு படுத்துகின்றாள். அது மட்டுமின்றி நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் உண்மைப் பொருளை உணர்த்துகின்ற அருளையும் உருவாக்கி சாதகருக்கு அளிக்கின்றாள். இவை அனைத்தும் பேரொளியாக இருக்கின்ற இறைவியை தமக்குள் முழுவதுமாக அறிந்து கொண்ட சாதகர்களுக்கே இறைவி அருளுகின்றாள்.

பாடல் #1346

பாடல் #1346: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

அறிந்திடுஞ் சக்கர மற்சனை யோடே
யறிந்திடும் வையத்திடர் வகை காணில்
மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யிற்
பொறிந்திடுஞ் சிந்தை புகையில்லை தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிநதிடுஞ சககர மறசனை யொடெ
யறிநதிடும வையததிடர வகை காணில
மறிநதிடு மனனனும வநதனை செயயிற
பொறிநதிடுஞ சிநதை புகையிலலை தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிந்திடும் சக்கரம் அருச்சனை யோடே
அறிந்திடும் வையத்து இடர் வகை காணில்
மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்யில்
பொறிந்திடும் சிந்தை புகை இல்லை தானே.

பதப்பொருள்:

அறிந்திடும் (சாதகர் அறிந்து கொண்ட) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தை) அருச்சனை (தமக்குள்ளேயே வைத்து பூஜைகள்) யோடே (செய்து கொண்டே இருந்தால்)
அறிந்திடும் (சாதகர் அறிந்து கொண்ட) வையத்து (உலகத்தில் உள்ள) இடர் (துன்பங்களின்) வகை (வகைகள் அனைத்தையும்) காணில் (கண்டு கொண்டால் அதிலிருந்து விலகி இருக்க முடியும்)
மறிந்திடும் (பகைவர்களைத் தடுத்து நாட்டு மக்களை காக்கின்ற) மன்னனும் (அரசர்களும்) வந்தனை (வந்து வணக்கம்) செய்யில் (செலுத்தும் நிலையில் இருந்து)
பொறிந்திடும் (இறை நினைப்பிலேயே திளைத்து இருக்கின்ற) சிந்தை (சாதகரின் சிந்தனைக்குள்) புகை (எந்தவிதமான துன்பகரமான எண்ணங்களும்) இல்லை (இல்லாமல் எப்போதும்) தானே (பேரின்பத்திலேயே இருப்பார்).

விளக்கம்:

பாடல் #1345 இல் உள்ளபடி இறைவியை தமக்குள் முழுவதுமாக அறிந்து கொண்ட சாதகர்கள் அவள் வீற்றிருக்கும் நவாக்கிரி சக்கரத்தை தமக்குள்ளேயே பூஜித்து வந்தால் அவர்களால் உலகத்திலுள்ள அனைத்து விதமான துன்பங்களையும் கண்டு அறிந்து கொண்டு அவற்றில் இருந்து விலகி இருக்க முடியும். இந்த நிலையை அடைந்த சாதகர்களை பகைவர்களைத் தடுத்து நாட்டு மக்களை காக்கின்ற பெரும் அரசர்களும் அவர் இருக்கும் இடம் தேடி வந்து அவரை வணங்குவார்கள். அரசர்களும் வந்து வணங்கினாலும் உலகப் பற்று இல்லாமல் இறை நினைப்பிலேயே திளைத்து இருக்கின்ற சாதகர்களின் சிந்தனைக்குள் எந்தவிதமான துன்பகரமான எண்ணங்களும் வராமல் அவர்கள் எப்போதும் பேரின்பத்திலேயே இருப்பார்கள்.

பாடல் #1347

பாடல் #1347: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

புகையில்லைச் சொல்லிய பொன்னொளி யுண்டங்
குகையில்லைக் கொல்வ திலாமை யினாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாஞ்
சிகையில்லைச் சக்கரஞ் சேர்ந்தவர் தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

புகையிலலைச சொலலிய பொனனொளி யுணடங
குகையிலலைக கொலவ திலாமை யினாலெ
வகையிலலை வாழகினற மனனுயிரக கெலலாஞ
சிகையிலலைச சககரஞ செரநதவர தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

புகை இல்லை சொல்லிய பொன் ஒளி உண்டு அங்கு
உகை இல்லை கொல்வது இல்லாமையின் ஆலே
வகை இல்லை வாழ்கின்ற மன் உயிர்க்கு எல்லாம்
சிகை இல்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே.

பதப்பொருள்:

புகை (சாதகருக்கு எந்தவிதமான துன்பமும்) இல்லை (இல்லை) சொல்லிய (ஏற்கனவே சொல்லியது போல) பொன் (தங்க நிறத்தில் பிரகாசிக்கும்) ஒளி (ஒளி பொருந்திய) உண்டு (உடல் உண்டு) அங்கு (சாதகருக்கு)
உகை (ஒளி பொருந்திய சாதகர் இருக்கும் இடத்தில் மாபெரும் பாதகங்கள்) இல்லை (இல்லை ஏனென்றால்) கொல்வது (அவரைச் சுற்றி எந்த உயிரும் இன்னொரு உயிரை கொல்லுகின்ற) இல்லாமையின் (எண்ணமே இல்லாமல் இருக்கின்ற) ஆலே (காரணத்தினால்)
வகை (அவர் பிரித்துப் பார்ப்பது) இல்லை (இல்லை) வாழ்கின்ற (உலகத்தில் வாழ்கின்ற) மன் (அசையும்) உயிர்க்கு (உயிர்கள்) எல்லாம் (அனைத்தையும்)
சிகை (அவருக்கு முடிவு) இல்லை (என்பதும் இல்லை) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தை) சேர்ந்தவர் (சேர்ந்தே இருக்கின்ற) தாமே (சாதகர்களுக்கு).

விளக்கம்:

பாடல் #1346 இல் உள்ளபடி இறை நினைப்பிலேயே திளைத்து இருக்கின்ற சாதகர்களின் சிந்தனைக்குள் எந்தவிதமான துன்பகரமான எண்ணங்களும் இல்லை. பாடல் #1344 இல் சொல்லி உள்ளபடி தங்க நிறத்தில் பிரகாசிக்கும் ஒளி பொருந்திய உடலும் அவருக்கு உண்டு. ஒளி பொருந்திய சாதகர் இருக்கும் இடத்தில் மாபெரும் பாதகங்கள் எதுவும் இல்லை ஏனென்றால் அவரைச் சுற்றி எந்த உயிரும் இன்னொரு உயிரை கொல்லுகின்ற எண்ணமே இல்லாமல் இருக்கும் காரணத்தினால். இந்த உலகத்தில் வாழ்கின்ற அசையும் உயிர்கள் அனைத்தையும் பல வகைகளாக பிரித்துப் பார்க்காமல் இறை அம்சமாகவே பார்க்கின்றார். இப்படி நவாக்கிரி சக்கரத்தை சேர்ந்தே இருக்கின்ற சாதகர்களுக்கு முடிவு என்பதும் இல்லை.

பாடல் #1348

பாடல் #1348: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

சேர்ந்தவ ரென்றுந் திசையொளி யானவர்
காய்ந்தெழு மேல்வினை காணகி லாதவர்
பாய்ந்தெழு முள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

செரநதவ ரெனறுந திசையொளி யானவர
காயநதெழு மெலவினை காணகி லாதவர
பாயநதெழு முளளொளி பாரிற பரநதது
மாயநதது காரிருள மாறொளி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சேர்ந்தவர் என்றும் திசை ஒளி ஆனவர்
காய்ந்து எழும் மேல் வினை காண இலாதவர்
பாய்ந்து எழும் உள் ஒளி பாரில் பரந்தது
மாய்ந்தது கார் இருள் மாறு ஒளி தானே.

பதப்பொருள்:

சேர்ந்தவர் (நவாக்கிரி சக்கரத்தை சேர்ந்தே இருக்கின்ற சாதகர்கள்) என்றும் (எப்பொழுதும்) திசை (அனைத்து திசைகளுக்கும்) ஒளி (பரவும் ஒளியாகவே) ஆனவர் (இருப்பார்கள்)
காய்ந்து (இது வரை பல பிறவிகளாக அவர்களைத் தொடர்ந்து) எழும் (வருகின்ற) மேல் (உச்ச) வினை (வினைகள்) காண (இனிமேல் அவரைத் தொடர்ந்து வராமல்) இலாதவர் (அழிந்து எந்த வினையும் இல்லாமல் இருப்பார்கள்)
பாய்ந்து (அவர்களுக்கு உள்ளிருந்து வேகமாக) எழும் (மேலெழுந்து வருகின்ற) உள் (ஞானமாகிய) ஒளி (ஒளியானது) பாரில் (உலகம் முழுவதும்) பரந்தது (பரந்து விரியும்)
மாய்ந்தது (அதன் பிறகு அழிந்து போகின்ற) கார் (மாயையாகிய) இருள் (இருளை) மாறு (மாற்றி) ஒளி (ஞானமாகிய ஒளியை) தானே (தம்மை நாடி வரும் தகுதியானவர்களுக்கு கொடுக்கின்றவராக சாதகர்கள் இருப்பார்கள்).

விளக்கம்:

பாடல் #1347 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தை சேர்ந்தே இருக்கின்ற சாதகர்கள் எப்பொழுதும் அனைத்து திசைகளுக்கும் பரவிச் செல்லுகின்ற ஒளியாகவே இருப்பார்கள். இது வரை பல பிறவிகளாக அவர்களைத் தொடர்ந்து வருகின்ற உச்ச வினைகள் இனிமேல் அவரைத் தொடர்ந்து வராமல் அழிந்து எந்த வினையும் இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு உள்ளிருந்து வேகமாக மேலெழுந்து வருகின்ற ஞானமாகிய ஒளியானது உலகம் முழுவதும் பரந்து விரியும். அதன் பிறகு தம்மை நாடி வரும் தகுதியானவர்களுக்கு அவர்களுடைய மாயையாகிய இருளை அழித்து ஞானமாகிய ஒளியை கொடுக்கின்றவராக சாதகர்கள் இருப்பார்கள்.

பாடல் #1349

பாடல் #1349: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஒளியது ஹௌ முதல்ஹ்ரீ மதுவீறாங்
களியது சக்கரங் கண்டறி வார்க்குத்
தெளிவது ஞானமுஞ் சிந்தையுந் தேறப்
பளியது பஞ்சாக் கரமது வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒளியது ஹெள முதலஹரீ மதுவீறாங
களியது சககரங கணடறி வாரககுத
தெளிவது ஞானமுஞ சிநதையுந தெறப
பளியது பஞசாக கரமது வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒளி அது ஹௌ முதல் ஹ்ரீம் அது ஈறு ஆம்
களி அது சக்கரம் கண்டு அறிவார்க்குத்
தெளிவு அது ஞானமும் சிந்தையும் தேறப்
பளி அது பஞ்ச அக்கரம் அது ஆமே.

பதப்பொருள்:

ஒளி (பேரொளி அம்சமாகவே) அது (இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தை) ஹௌ (ஹௌம் எனும் பீஜம்) முதல் (முதலில் இருந்து) ஹ்ரீம் (ஹ்ரீம் எனும்) அது (பீஜத்தை) ஈறு (கடைசியாக வைத்து) ஆம் (முறைப்படி அமைத்து தியானித்தால்)
களி (உள்ளுக்குள் பேரின்பத்தைக் கொடுக்கின்ற) அது (அதுவே) சக்கரம் (நவாக்கிரி சக்கரமாகவும் இருப்பதை) கண்டு (தமக்குள் கண்டு) அறிவார்க்குத் (அறிந்து கொள்ளுகின்ற சாதகர்களுக்கு)
தெளிவு (உண்மை பொருளை தெளிவு படுத்துவதாகவும்) அது (அதுவே இருந்து) ஞானமும் (உண்மை ஞானத்தைக் கொடுப்பதாகவும்) சிந்தையும் (எண்ணங்கள்) தேறப் (தேர்ச்சி பெறும் ஞானத்தை)
பளி (கற்றுக் கொடுக்கின்ற இடமாகவும்) அது (அதுவே இருந்து) பஞ்ச (இறைவனின் எழுத்து வடிவான ஐந்து) அக்கரம் (அட்சரங்களைக் கொண்ட ‘நமசிவாய’ மந்திரமாகவும்) அது (அதுவே) ஆமே (இருக்கின்றது).

விளக்கம்:

பாடல் #1348 இல் உள்ளபடி தகுதியானவர்களுக்கு மாயை அழித்து ஞானத்தைக் கொடுக்கின்ற சாதகர்களுக்கு உள்ளே இருக்கின்ற ஒளியான நவாக்கிரி சக்கரத்தில் ‘ஹௌம்’ எனும் பீஜம் முதலில் வைத்து ‘ஹ்ரீம்’ எனும் பீஜத்தை கடைசியாக வைத்து முறைப்படி அமைத்து தியானித்தால் உள்ளுக்குள் பேரின்பத்தைக் கொடுக்கின்றதாக அதுவே இருக்கும். இந்த நவாக்கிரி சக்கரத்தை தமக்குள் கண்டு அறிந்து கொள்ளுகின்ற சாதகர்களுக்கு உண்மை பொருளை தெளிவு படுத்துவதாகவும் அதுவே இருந்து உண்மை ஞானத்தைக் கொடுப்பதாகவும், எண்ணங்கள் தெளிவு பெறும் அறிவைக் கற்றுக் கொடுக்கின்ற இடமாகவும் அதுவே இருக்கும். அது மட்டுமின்றி இறைவனின் எழுத்து வடிவான ஐந்து அட்சரங்களைக் கொண்ட ‘நமசிவாய’ மந்திரமாகவும் அதுவே இருக்கின்றது.