பாடல் #948

பாடல் #948: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியுங்
குன்றிடை நின்றிடுங் கொள்கைய னாமே.

விளக்கம்:

பாடல் #947 இல் உள்ளபடி பஞ்சபூதங்களுடன் அமைக்கப்பட்ட சக்கரத்தைப் போலவே சாதகரின் உடலில் இருக்கும் பஞ்ச பூதங்களும் இறைவன் ஆடுகின்ற மன்றங்களாகவும் சாதகரின் ஆன்மா இறைவனோடு இணைந்து இருக்கின்றது. ஆனால் மாயையால் இறைவனோடு கலந்திருக்கின்றோம் என்பதை அறியாமல் தனித்திருப்பதைப் போன்ற பிரம்மையிலும் இருக்கின்றது. இந்த சக்கரத்தை முறைப்படி செபிக்கும் சாதகர்களின் ஆன்மா கன்றாக இருந்து பசுவாக இருக்கும் இறைவனிடம் ஞானப்பாலை அருந்துகின்றது. அதன் பிறகு சாதகரின் தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தில் இறைவன் ஜோதி உருவமாக தரிசனம் கொடுத்து சாதகரின் ஆன்மாவும் தாமும் ஒன்றே எனும் கொள்கையை உணர வைப்பார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.