பாடல் #1253 இல் உள்ளபடி எமது உடலாகவே மாறி எமக்குள் அமர்ந்திருக்கும் இறைவியும் பாடல் #1252 இல் உள்ளபடி எம்மோடு ஏகாந்தத்தில் தனித்து இருக்கும் இறைவனும் எம்மீது பேரன்பு கொண்டதைத் தவிர வேறு எவருமே எம்மை முழுவதுமாக அறிந்து கொண்டது இல்லை. எமக்குள் இருக்கும் இறைவியோடு இறைவனும் சேர்ந்து இருக்க அவர்களோடு யானும் சேர்ந்து இருந்து இறைவியோடு இறைவனையும் முழுவதுமாக யான் புரிந்து கொண்டேன்.
பாடல் #1253: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
அம்மனை யம்மை யரிவை மனோன்மணி செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்கும் இம்மனை செய்த விருநில மங்கையும் அம்மனை யாகி யமர்ந்துநின் றாளே.
விளக்கம்:
பாடல் #1252 இல் உள்ளபடி எமது வேண்டுதலை ஏற்றுக் கொண்டு இறைவனோடு சேர்ந்து இருக்கும் ஏகாந்தத்தை அருளியவளும் இறைவனுக்கு துணைவியாக இருக்கின்றவளும் எமக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருக்கின்றவளும் என்றும் இளமையுடன் இருக்கின்றவளும் இறைவனுடன் சரிசமமாக சேர்ந்து இருக்கின்ற மனோன்மணியானவளும் ஆகிய இறைவியை எமது உடலுக்குள் வந்து வீற்றிருப்பதற்கு ஏற்றபடி செழுமையான இடமாக எமது நிலைக்கு ஏற்ப எமது உடலை மாற்றி அருளியவளும் அது போலவே மேலுலகம் கீழுலகம் ஆகிய இரண்டு விதமான உலகங்களையெல்லாம் அவளுக்கு ஏற்ற படி மாற்றி அவற்றுக்குத் தலைவியாகவும் இருக்கின்றவளும் ஆகிய இறைவியே தான் வீற்றிருக்கும் எமது உடலாகவே மாறி அதற்குள் அமர்ந்து நிற்கின்றாள்.
பாடல் #1251 இல் உள்ளபடி இறைவனோடு ஏகாந்தத்தில் தனித்து வீற்றிருக்கும் கிடைப்பதற்கு அரிய பேறைப் பெற்று எமது தலைவனாகிய அவனோடு எப்போதும் ஏகாந்தத்தில் இருப்பதையே எமது நெஞ்சம் விரும்புகின்றது. இந்தப் பேறைப் பெற்று பேரின்பத்தை அனுபவித்தவர்களும் இறைவனோடு தாங்கள் ஏகாந்தத்தில் சேர்ந்து இருக்கின்ற இடம் ஏழு உலகங்களும் என்று கூறுவார்கள். இந்தப் பேற்றை யாம் பெறுவதற்கு காரணம் பனிபடர்ந்து புத்தம் புதிதாகப் பூத்து மலர்ந்திருக்கும் வாசனை மிக்க மலர்களை கையில் ஏந்திச் சென்று எமது அம்மையாகிய இறைவியின் மீதுள்ள பேரன்பினால் கசிந்து உருகிய உள்ளத்தோடு அவளை நினைத்து எப்போதும் வணங்கியதை அவள் ஏற்றுக் கொண்டு அருளியதால் ஆகும்.
பாடல் #1251: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணி நற்றா ளிறைவனே நற்பய னேயென்பர் கற்றா னறியுங் கருத்தறி வார்கட்குப் பொற்றா ளுலகம் புகல்தனி யாமே.
விளக்கம்:
பாடல் #1250 இல் உள்ளபடி சாதகர் பெற்ற திருவடிகளின் பெருமையை உடையவள் அனைத்திற்கும் மேலான இறைவனோடு எப்போதும் சரிசமமாக சேர்ந்தே இருக்கும் மனோன்மணி எனும் இறைவியாவாள். நன்மையைத் தருகின்ற திருவடிகளைக் கொண்ட பரம்பொருளான இறைவனை சென்று அடைவதே இந்த உலகத்தில் கிடப்பதற்கு மிகவும் அரிய பயனாகும் என்பதை அவனது திருவடிகளை அடைந்தவர்கள் கூறுவார்கள். அப்படி அடைந்த திருவடிகளால் பெற்ற ஞானத்தின் மூலம் இறைவனை அறிந்து கொண்டு தமது எண்ணத்திலும் அவனை வைத்து முழுவதும் அறிந்து கொள்ள முடிந்தவர்களுக்கு பொன் போன்ற இறைவனின் திருவடிகளை இந்த உலகத்திலேயே அடைய முடியும் என்பதால் அதற்காக இந்த உலகத்தில் பிறவி எடுத்து வந்து அவனோடு ஏகாந்தத்தில் தனித்திருப்பதும் கிடைப்பதற்கு அரிய மிகப்பெரும் பேறாகும்.
பாடல் #1249 இல் உள்ளபடி எமக்குள் ஆதாரமாக இருக்கின்ற இறைவனின் திருவடிகளை உணர்ந்து மாயையை ஒழித்து பலவிதமான பெயர்களால் அழைக்கப்படுகின்ற பரம்பொருள் ஒருவனே என்பதை உணர்ந்து கொண்டேன். அவனோடு ஒன்றாகக் கலந்து நின்று நான் எனும் அகங்காரத்தை ஒழித்தேன். அனைத்து உலகங்களுக்கும் அதிபதியாக இருக்கின்ற அவனோடு ஒன்றாகச் சேர்ந்து நின்று அவனது திருவடிகளைத் தவிர வேறு பற்றுக்கள் அனைத்தையும் ஒழித்தேன். அவனோடு பின்னிப் பிணைந்து என்னையே நான் ஒழித்துவிட்டேன். ஆதலால் யானும் இறைவனும் ஒன்றே எனும் திருவருளை யாம் பெற்ற வழி இதுவே.
அசையா சக்தியாகிய இறைவனுக்குள் அண்ட சராசரங்களையும் அதிலிருக்கும் அனைத்து உலகங்களையும் அதற்குள் அனைத்து உயிர்களையும் படைக்க வேண்டும் என்கிற எண்ணம் வரும் போது அவரிடமிருந்து அசையும் சக்தியாகப் பிரிந்து வருகின்ற இறைவியின் மாயா அம்சத்தோடு உலகங்களும் உயிர்களும் உருவாக வேண்டும் என்ற காரணத்திற்காக சேருகின்ற நீண்ட சடையை உடைய மாசற்ற இறைவன் தம்மை அறிந்து அடைய வேண்டும் என்று ஆசைப்படுகின்ற உயிர்களுக்கு அருள வேண்டும் என்கிற பெருங்கருணையில் உயிர்களின் உடலை பஞ்ச பூதங்களிலுள்ள நீரையும் நெருப்பையும் கலந்து உருவாக்கும் போது தமது திருவடியையும் சேர்த்தே வைத்து உருவாக்கி அருளுகின்றான். உயிர்கள் பிறவி எடுப்பதற்கு தேவையான உடலை உருவாக்க வேண்டி இறைவனுடன் சேர்ந்து கலக்கின்ற பராசக்தியாகிய இறைவியும் தங்களின் கலப்புக்குள்ளிருந்து பலவித உருவங்களோடு உயிர்கள் அனைத்தையும் ஒரு மாபெரும் கூட்டமாக உலகங்கள் அனைத்திலும் சேர்ந்து பிறப்பதற்கு மாபெரும் காரணமாக இருக்கின்றாள்.
உட்கருத்து:
கர்மங்களைத் தீர்த்துக் கொள்ள மாயையுடன் உயிர்களைப் படைத்தாலும் அந்த மாயை நீங்கி உண்மையை உணர்ந்து தம்மிடம் வந்து அடைவதற்கான ஆதாரமாக தமது திருவடியை உயிர்களுக்குள் வைத்தே படைத்து அருளுகின்றான் இறைவன். தமக்குள் ஆதாரமாக இருக்கின்ற இறைவனின் திருவடிகளை உணர்ந்து பற்றிக் கொண்ட உயிர்களுக்கு கிடைக்கும் மாபெரும் ஆதேயமாக இறைவனின் திருவருள் இருக்கின்றது.
பல்வேறு விதமான உயிர்களில் அந்தந்த உருவமாகவே இருக்கும் வல்லமையை உடையவனும் பாடல் #1247 இல் உள்ளபடி இறைவியைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்ற சாதகருக்குள் பாம்பும் கங்கையையும் அணிந்து இருக்கின்றவனும் ஆகிய இறைவனை தமக்குள் ஆராய்ந்து தேடிப் பார்த்து உணர்ந்து கொண்டால் அவனே குருநாதகராக வீற்றிருந்து பலவிதமான செயல்களைப் புரிந்து அருளும் அழகிய வளையல்களை அணிந்த திருக்கைகளையும் தங்க அணிகலன்களை முழுவதும் அணிந்திருக்கும் திருமேனியையும் உடைய இறைவியாகவே தான் மாறி இருக்கும் திருக்கோலத்தைக் காட்டி அருளுவதை பேரின்பத்தோடு பார்த்தால் ஒரு மாபெரும் அதிசயமாகவே இருக்கின்றது.
பாடல் #1247: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
தொடங்கி யுலகினிற் சோதி மணாளன் அடங்கி இருப்பதெ னன்பின் பெருமை விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை ஒடுங்கி உமையொடு மோருரு வாமே.
விளக்கம்:
ஆரம்பத்திலிருந்தே உலகத்தில் எப்போதும் ஒளி வடிவான இறைவியுடன் துணையாகவே சேர்ந்து இருக்கும் இறைவனே எமது உள்ளத்திற்குள்ளும் பேரன்பின் உச்ச நிலையாக எப்போதும் வீற்றிருக்கின்றான். இந்த இறைவனே பாடல் #1245 இல் உள்ளபடி சாதகர்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்ற இறைவிக்குள்ளும் எப்போதும் அடங்கி ஒரே உருவமாக தனது கழுத்தில் விஷம் கொண்ட பாம்பையும் பின்னிய நீண்ட சடையின் உச்சியில் எப்போதும் பொங்கி வழிகின்ற கங்கையையும் கொண்டு வீற்றிருக்கின்றான்.
பாடல் #1245 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள் விளங்கிக் கொண்ட பேரொளியாக இருக்கின்ற இறைவியானவள் தனது கழுத்தில் எப்போதும் பிரகாசமாக ஒளி வீசுகின்ற மணி மாலையை அணிந்திருக்கின்றாள். உயிர்களுக்குள் மிகுதியாக இருக்கின்ற ஆணவ மலம் நீங்கி அவர்கள் தாம் யார் என்பதை உண்மையாக உணர வேண்டும் என்பதற்காக நீல நிறக் கழுத்துடன் இருக்கின்ற இறைவனோடு மிகுந்த அன்பு கொண்டு அவருடன் சேர்ந்து இருந்து ஆணவ மலங்களை நீக்கி அருளுகின்றாள். கிடைப்பதற்கு அரிய அந்த பெரும் பேறை நீங்களும் அடைய வேண்டும் என்றால் இறைவியோடு தியானத்தில் எப்போதும் ஒன்றி இருந்து அவளைத் தொடர்ந்து கொண்டே இருங்கள்.
பாடல் #1238 இல் உள்ளபடி இறைவியாகவே ஆகிவிட்ட சாதகரின் பேரழகுடைய திருவடிகளை தூய்மையின் உருவமாக தங்க நிறத்தில் கொடி போல மென்மையாக இருக்கும் உப சக்திகள் அனைவரும் நாடி வந்து போற்றி வணங்குவார்கள். அந்த உப சக்திகளின் நிலையை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருக்கின்ற அனைத்து உயிர்களும் இறைவியாகவே ஆகிவிட்ட சாதகர் மாயையின் உருவத்தில் கருமை நிறத்தில் கொடி போன்ற மென்மையுடன் இருக்கும் போது அவரை நாடி வருகின்ற உயிர்களுக்கு தலைவியாகவும் இருக்கின்றார். அவரே உயிர்களுக்கு நன்மை தரும் உருவமாக கொடி போன்ற மென்மையுடன் மூன்று கண்களைக் கொண்டு மாயையை நீக்கி உண்மையை உணர்த்தும் போது இறைவியின் பேரொளியின் உருவத்தில் இருக்கும் அவரை விரும்பி போற்றி வணங்கி நீங்களும் உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள்.