பாடல் #1550

பாடல் #1550: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)

இமையங்க ளாய்நின்ற தேவர்க ளாறு
சமையங்கள் பெற்றனர் சாத்திர மோத
வமையறிந் தோமென்ப ராதிப் பிரானைக்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இமையஙக ளாயநினற தேவரக ளாறு
சமையஙகள பெறறனர சாததிர மொத
வமையறிந தொமெனப ராதிப பிரானைக
கமையறிந தாருட கலநதுநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இமையங்கள் ஆய் நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓத
அமை அறிந்தோம் என்பர் ஆதி பிரானை
கமை அறிந்தார் உள் கலந்து நின்றானே.

பதப்பொருள்:

இமையங்கள் (இமயத்தை) ஆய் (போல உயர்ந்த நிலையில்) நின்ற (நிற்கின்ற) தேவர்கள் (தேவர்கள்) ஆறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான)
சமையங்கள் (வழி முறைகளை) பெற்றனர் (இறைவனிடமிருந்து பெற்றனர்) சாத்திரம் (அவர்கள் பெற்ற வழி முறைகளின் படி சாஸ்திரங்களை) ஓத (ஓதுவதின் மூலமே)
அமை (இறைவனை அடைவதற்கான வழியை) அறிந்தோம் (அறிந்து கொண்டோம்) என்பர் (என்று அவர்கள் கூறுகின்றார்கள்) ஆதி (அனைத்திற்கும் ஆதியாகவும்) பிரானை (தலைவனாகவும் இருக்கின்ற இறைவனை)
கமை (எந்தவிதமான எண்ணங்களும் இல்லாத பேரமைதியில் இருந்து) அறிந்தார் (அறிந்து கொண்டவர்களின்) உள் (உள்ளுக்குள் ஒன்றாக) கலந்து (கலந்து) நின்றானே (நிற்கின்றான் இறைவன்).

விளக்கம்:

இமயத்தை போல உயர்ந்த நிலையில் நிற்கின்ற தேவர்கள் இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளை இறைவனிடமிருந்து பெற்றனர். அவர்கள் பெற்ற வழி முறைகளின் படி சாஸ்திரங்களை ஓதுவதின் மூலமே இறைவனை அடைவதற்கான வழியை அறிந்து கொண்டோம் என்று அவர்கள் கூறுகின்றார்கள். அனைத்திற்கும் ஆதியாகவும் தலைவனாகவும் இருக்கின்ற இறைவனை எந்தவிதமான எண்ணங்களும் இல்லாத பேரமைதியில் இருந்து அறிந்து கொண்டவர்களின் உள்ளுக்குள் ஒன்றாக கலந்து நிற்கின்றான் இறைவன்.

கருத்து:

ஆறு சமயங்கள் சொல்லுகின்ற வழி முறையில் சாஸ்திரங்களை ஓதுவதன் மூலம் மட்டுமே இறைவனை அடைவதற்கான வழியை அறிந்து கொண்டோம் என்று மேன்மையான நிலையில் இருக்கின்ற தேவர்கள் சொல்லுவார்கள். ஆனால், எந்த சாஸ்திரத்தையும் ஓதாமல் இருந்தாலும் மனதில் அமைதியுடன் எண்ணங்கள் அற்ற நிலையில் ஒருவர் இருந்தாலே அவர்களால் தமக்குள்ளேயே கலந்து நிற்கின்ற இறைவனை அறிந்து கொள்ள முடியும்.

இறைவனை அடையும் முறையான ஆறு வித வழிகள்:

  1. தியானம் – மந்திரத்தை மனதிற்குள் தியானித்தல்
  2. செபம் – அக வழிபாடு மூலம் செபித்தல்
  3. பூஜை – புற வழிபாடு மூலம் செபித்தல்
  4. சக்கரம் – சக்கரங்கள் அமைத்து செபித்தல்
  5. ஞானம் – மந்திரத்தின் பொருளை தேடி ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்
  6. புத்தி – மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்

குறிப்பு: இந்த பாடலின் தலைப்பு நிராசாரம் என்றும் நிராகாரம் என்றும் பல புத்தகங்களில் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் ஓலை சுவடியில் நிராதாரம் என்று கொடுக்கப் பட்டு இருக்கிறது மேலும் இந்த தலைப்பில் உள்ள பாடல் #1556 இல் மூன்றாவது அடியில் வரும் “சார் உறார்” எனும் பதத்தை ஒத்து இருப்பதாலும் இதனை ஆதாரமாகக் கொண்டு நிராதாரம் என்ற தலைப்பு எடுத்துக் கொள்ளப் பட்டது.

பாடல் #1551

பாடல் #1551: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)

பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியி னேரொப்பர்
நீங்கிய வண்ண நினைவு செய்யாதவ
ரேங்கி யுலகி லிருந்தழு வாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பாஙகமர கொனறைப படரசடை யானடி
தாஙகு மனிதர தரணியி னெரொபபர
நீஙகிய வணண நினைவு செயயாதவ
ரெஙகி யுலகி லிருநதழு வாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பாங்கு அமர் கொன்றை படர் சடையான் அடி
தாங்கும் மனிதர் தரணியில் நேர் ஒப்பர்
நீங்கிய வண்ணம் நினைவு செய்யாதவர்
ஏங்கி உலகில் இருந்து அழுவாரே.

பதப்பொருள்:

பாங்கு (அழகாக) அமர் (அமைக்கப் பட்ட) கொன்றை (கொன்றை மலர்கள்) படர் (படர்ந்து இருக்கின்ற) சடையான் (திருச் சடையைத் தரித்து இருக்கின்ற இறைவனின்) அடி (திருவடிகளை எப்போதும் நினைக்கின்ற எண்ணங்களை)
தாங்கும் (நெஞ்சத்தில் தாங்கி இருக்கின்ற) மனிதர் (மனிதர்கள்) தரணியில் (இந்த உலகத்திலேயே) நேர் (இறைவனின் திருவடிகளுக்கு) ஒப்பர் (இணையானவர்களாக இருப்பார்கள்)
நீங்கிய (அவ்வாறு இல்லாமல் இறைவன் வேறு தாம் வேறு) வண்ணம் (என்று நினைத்துக் கொண்டு) நினைவு (இறைவனை எப்பொழுதும் நினைத்து இருப்பதை) செய்யாதவர் (செய்யாதவர்கள்)
ஏங்கி (தாம் விரும்பிய எதுவும் கிடைக்காமல் ஏக்கத்திலேயே) உலகில் (இந்த உலகத்தில்) இருந்து (இருந்து) அழுவாரே (துன்பப் படுவார்கள்).

விளக்கம்:

அழகாக அமைக்கப் பட்ட கொன்றை மலர்கள் படர்ந்து இருக்கின்ற திருச் சடையைத் தரித்து இருக்கின்ற இறைவனின் திருவடிகளை எப்போதும் நினைக்கின்ற எண்ணங்களை தமது நெஞ்சத்தில் தாங்கி இருக்கின்ற மனிதர்கள் இந்த உலகத்திலேயே இறைவனின் திருவடிகளுக்கு இணையானவர்களாக இருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் இறைவன் வேறு தாம் வேறு என்று நினைத்துக் கொண்டு இறைவனை எப்பொழுதும் நினைக்காமல் இருப்பவர்கள் தாம் விரும்பிய எதுவும் கிடைக்காமல் ஏக்கத்திலேயே இந்த உலகத்தில் இருந்து எப்போது இந்த பிறவி முடியும் என்று துன்பப் படுவார்கள்.

பாடல் #1552

பாடல் #1552: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)

இருந்தழு வாரு மியல்பு கெட்டாரு
மருந்தவ மேல்கொண்டங் கண்ணலை யெண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பிலி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருநதழு வாரு மியலபு கெடடாரு
மருநதவ மெலகொணடங கணணலை யெணணில
வருநதா வகைசெயது வானவர கொனும
பெருநதனமை நலகும பிறபபிலி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும்
அரும் தவம் மேல் கொண்டு அங்கு அண்ணலை எண்ணில்
வருந்தா வகை செய்து வானவர் கோனும்
பெரும் தன்மை நல்கும் பிறப்பு இலி தானே.

பதப்பொருள்:

இருந்து (பிறவி எனும் துன்பத்தில் இருந்து) அழுவாரும் (அழுகின்றவர்களும்) இயல்பு (மனித இனத்திற்கான ஒழுக்கங்கள்) கெட்டாரும் (கெட்டவர்களும்)
அரும் (செய்வதற்கு அரியதான) தவம் (தவங்களை) மேல் (செய்வதையே குறிக்கோளாக) கொண்டு (மேற் கொண்டு) அங்கு (அந்த தவங்களை செய்யும் போதும்) அண்ணலை (தலைவனாகவும் அடியவனாகவும் இருக்கின்ற இறைவனை) எண்ணில் (எண்ணிக் கொண்டே இருந்தால்)
வருந்தா (அவர்களின் துன்பம் நீங்கி இனி எப்போதும் வருந்தாமல் இருப்பதற்கான) வகை (வழி முறையை) செய்து (செய்து கொடுத்து) வானவர் (வானவர்களின்) கோனும் (அரசனாகியவன்)
பெரும் (மாபெரும்) தன்மை (கருணையோடு) நல்கும் (அருளுவான்) பிறப்பு (பிறப்பு) இலி (இல்லாதவனாகிய) தானே (இறைவன்).

விளக்கம்:

பாடல் #1551 இல் உள்ளபடி பிறவி எனும் துன்பத்தில் இருந்து அழுகின்றவர்களும், மனித இனத்திற்கான ஒழுக்கங்கள் கெட்டவர்களும், செய்வதற்கு அரியதான தவங்களை செய்வதையே குறிக்கோளாக மேற் கொண்டு அந்த தவங்களை செய்யும் போதும் தலைவனாகவும் அடியவனாகவும் இருக்கின்ற இறைவனை எண்ணிக் கொண்டே இருந்தால், அவர்களின் துன்பம் நீங்கி இனி எப்போதும் வருந்தாமல் இருப்பதற்கான வழி முறையை செய்து கொடுத்து வானவர்களின் அரசனாகியவன் மாபெரும் கருணையோடு அருளுவான் பிறப்பு இல்லாதவனாகிய இறைவன்.

கருத்து:

பிறவி எனும் துன்பத்தில் சிக்கிக் கொண்டு தவிப்பவர்கள் இறைவனை நினைத்து தவமிருந்தால் இறைவன் மாபெரும் கருணையோடு அவர்களுக்கு வழி காட்டி பிறவி இல்லாத நிலையை கொடுத்து அருளுவான்.

பாடல் #1553

பாடல் #1553: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)

தூரறி வாளர் துணைவர் நினைப்பிலாப்
பாரறி வாளர் படுபயன் றானுண்பர்
காரறி வாளர் கலந்து பிறப்பர்கள்
நீரறி வார்நெடு மாமுகி லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தூரறி வாளர துணைவர நினைபபிலாப
பாரறி வாளர படுபயன றானுணபர
காரறி வாளர கலநது பிறபபரகள
நீரறி வாரநெடு மாமுகி லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலா
பார் அறிவாளர் படு பயன் தான் உண்பர்
கார் அறிவாளர் கலந்து பிறப்பர்கள்
நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே.

பதப்பொருள்:

தூர் (மும் மலங்களை மட்டுமே) அறிவாளர் (அறிந்து கொண்டவர்கள்) துணைவர் (தன்னுடன் துணையாகவே நிற்கின்ற இறைவனை பற்றிய) நினைப்பு (நினைவே) இலா (இல்லாதவர்களாக இருக்கின்றார்கள்)
பார் (உலக அறிவை மட்டுமே) அறிவாளர் (அறிந்து கொண்டவர்கள்) படு (அதற்குள்ளேயே விழுந்து கிடந்து) பயன் (அதன் பயன்களை) தான் (தானே) உண்பர் (அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள்)
கார் (மாயை எனும் இருளால் அறிந்து கொள்ளக் கூடியதை மட்டுமே) அறிவாளர் (அறிந்து கொண்டவர்கள்) கலந்து (வினைகளோடு கலந்து) பிறப்பர்கள் (மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார்கள்)
நீர் (இறைவன் எனும் மேகத்தில் இருந்து ஆன்மா எனும் நீராக தாம் வந்து இருக்கின்றோம் என்பதை) அறிவார் (உணர்ந்து கொண்டவர்களுக்கு) நெடு (நீண்ட) மா (மாபெரும்) முகில் (மேகத்தை போல அருளை மழையாகப் பொழிபவனாக) ஆமே (இறைவன் இருக்கின்றான்).

விளக்கம்:

மும் மலங்களை மட்டுமே அறிந்து கொண்டவர்கள் தன்னுடன் துணையாகவே நிற்கின்ற இறைவனை பற்றிய நினைவே இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். உலக அறிவை மட்டுமே அறிந்து கொண்டவர்கள் அதற்குள்ளேயே விழுந்து கிடந்து அதன் பயன்களை தானே அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள். மாயை எனும் இருளால் அறிந்து கொள்ளக் கூடியதை மட்டுமே அறிந்து கொண்டவர்கள் வினைகளோடு கலந்து மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார்கள். இறைவன் எனும் மேகத்தில் இருந்து ஆன்மா எனும் நீராக தாம் வந்து இருக்கின்றோம் என்பதை உணர்ந்து கொண்டவர்களுக்கு நீண்ட மாபெரும் மேகத்தை போல அருளை மழையாகப் பொழிபவனாக இறைவன் இருக்கின்றான்.

பாடல் #1554

பாடல் #1554: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)

அறிவுடன் கூடிய ழைத்ததோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்
குறியது கண்டுங் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிவுடன கூடிய ழைதததொர தொணி
பறியுடன பாரம பழமபதி சிநதுங
குறியது கணடுங கொடுவினை யாளர
செறிய நினைககிலர செவடி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிவுடன் கூடி அழைத்தது ஓர் தோணி
பறியுடன் பாரம் பழம் பதி சிந்தும்
குறி அது கண்டும் கொடு வினையாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.

பதப்பொருள்:

அறிவுடன் (இறைவனிடமிருந்தே தாம் வந்திருக்கின்றோம் என்பதை அறிந்தவர்களின் அறிவோடு) கூடி (கூடி) அழைத்தது (அழைத்தது) ஓர் (ஒரு ஓடக்காரணும்) தோணி (படகுமாக வந்து)
பறியுடன் (உடலுடன் சேர்ந்து) பாரம் (பாரமாக இருக்கின்ற பற்றுக்களையும் கர்மங்களையும்) பழம் (பழமையான) பதி (தலைவனாகிய இறைவன்) சிந்தும் (அழித்து பிறவி எனும் பெரும் கடலை கடக்க உதவுகின்றான்)
குறி (இந்த வழி முறை) அது (அதனை) கண்டும் (தெரிந்து கொண்டும்) கொடு (கொடுமையான) வினையாளர் (வினைகளைக் கொண்டு இருப்பதால் அதை உணராமல் இருப்பவர்கள்)
செறிய (பிறவியை கடப்பதற்காக) நினைக்கிலர் (நினைக்காமல் இருக்கின்றார்கள்) சேவடி (இறைவனின் செம்மையான திருவடிகளை) தானே (தாங்களே).

விளக்கம்:

இறைவனிடமிருந்தே தாம் வந்திருக்கின்றோம் என்பதை அறிந்தவர்களின் அறிவோடு கூடி அழைக்கின்ற பழமையான தலைவனாகிய இறைவன் ஒரு ஓடக்காரணும் படகுமாக வந்து உடலுடன் சேர்ந்து பாரமாக இருக்கின்ற பற்றுக்களையும் கர்மங்களையும் அழித்து பிறவி எனும் பெரும் கடலை கடக்க உதவுகின்றான். இந்த வழி முறையை தெரிந்து கொண்டும் கொடுமையான வினைகளைக் கொண்டு இருப்பதால் அதை உணராமல் இருப்பவர்கள் பிறவியை கடப்பதற்காக இறைவனின் செம்மையான திருவடிகளை நினைக்காமல் இருக்கின்றார்கள்.

பாடல் #1555

பாடல் #1555: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)

மன்னு மொருவன் மருவு மனோமய
னென்னில் மனித ரிகழ்வரி வேழைகள்
துன்னி மனமே தொழுமின் றுணையிலி
தன்னையு மங்கே தலைப்பட லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மனனு மொருவன மருவு மனொமய
னெனனில மனித ரிகழவரி வெழைகள
துனனி மனமெ தொழுமின றுணையிலி
தனனையு மஙகெ தலைபபட லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மன்னும் ஒருவன் மருவும் மனோ மயன்
என்னில் மனிதர் இகழ்வர் இவ் ஏழைகள்
துன்னி மனமே தொழுமின் துணை இலி
தன்னையும் அங்கே தலை படல் ஆமே.

பதப்பொருள்:

மன்னும் (எப்போதும் நிலையாக இருக்கின்ற) ஒருவன் (ஒருவனாகிய இறைவன்) மருவும் (நினைக்கும் வடிவமாகவே கலந்து) மனோ (மனதின்) மயன் (தன்மைக்கு ஏற்றவாறு இருக்கின்றான்)
என்னில் (இதை எடுத்துக் கூறினால்) மனிதர் (அறியாமையில் இருக்கின்ற மனிதர்கள்) இகழ்வர் (இகழ்ந்து சிரிப்பார்கள்) இவ் (இந்த) ஏழைகள் (அறிவுக் குறைபாடுள்ள ஏழைகள்)
துன்னி (எண்ணத்திற்கு ஏற்றபடி பொருந்தி இறைவன் இருக்கின்ற) மனமே (தனது மனதினால்) தொழுமின் (தொழுது வந்தால்) துணை (தனக்கு சரிசமமாக எதுவும்) இலி (இல்லாதவனாகிய)
தன்னையும் (இறைவன்) அங்கே (மனதிற்குள்) தலை (வெளிப்பட்டு அவனை உணர்வதற்கான வழியில்) படல் (செல்ல) ஆமே (வைப்பான்).

விளக்கம்:

எப்போதும் நிலையாக இருக்கின்ற ஒருவனாகிய இறைவன் நினைக்கும் வடிவமாகவே கலந்து மனதின் தன்மைக்கு ஏற்றவாறு இருக்கின்றான். இப்படி இறைவன் இருப்பதை எடுத்துக் கூறினால் அறியாமையில் மூழ்கி அறிவுக் குறைபாடினால் ஏழைகளாக இருக்கின்ற மனிதர்கள் இகழ்ந்து சிரிப்பார்கள். இவ்வாறு எண்ணத்திற்கு ஏற்றபடி தம்மோடு பொருந்தி இருக்கின்ற இறைவனை தமது மனதினால் தொழுது வந்தால் தனக்கு சரிசமமாக எதுவும் இல்லாதவனாகிய இறைவன் தங்களின் மனதிற்குள் வெளிப்பட்டு அவனை உணர்வதற்கான வழியில் செல்ல வைப்பான்.

பாடல் #1556

பாடல் #1556: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)

ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே யுதையமுற்
றாங்கார மற்று மமைவது கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமையத்து நின்றொழிந் தார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஓஙகாரத துளளொளிக குளளெ யுதையமுற
றாஙகார மறறு மமைவது கைகூடார
சாஙகால முனனார பிறவாமை சாரவுறார
நீஙகாச சமையதது நினறொழிந தாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஓங்காரத்து உள் ஒளிக்கு உள்ளே உதையம் உற்று
ஆங்காரம் அற்றும் அமைவது கை கூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வு உறார்
நீங்கா சமையத்து நின்று ஒழிந்தார்களே.

பதப்பொருள்:

ஓங்காரத்து (பிரணவ மந்திரமான ஓங்காரத்தின்) உள் (சத்தத்திற்கு உள்ளே இருக்கின்ற) ஒளிக்கு (ஒளி வடிவான இறைவனே) உள்ளே (சாதகருக்குள்ளும்) உதையம் (ஜோதியாக வெளிப்படுவதை) உற்று (மனதை ஒரு முகப்படுத்தி உணர்வதன் மூலம்)
ஆங்காரம் (அகங்காரத்தை) அற்றும் (அழித்து) அமைவது (இறைவனும் தானும் வேறு வேறு இல்லை எனும் நிலையை) கை (பெற்று அடைய) கூடார் (முடியாதவர்கள்)
சாங்காலம் (தாம் இறக்கும் காலம் ஒன்று வரும் என்பதை) உன்னார் (நினைக்காதவர்கள் ஆதலால்) பிறவாமை (இனி எப்போதும் பிறக்காமல் இருக்கின்ற பெரும் நிலையை) சார்வு (சார்ந்து இருக்கின்ற வழி முறைகளில்) உறார் (செல்லாமல்)
நீங்கா (எப்போதும் தாம் கடைபிடிக்கின்ற வழியே சிறந்தது ஓயாமல் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்ற) சமையத்து (சமயங்களின் கொள்கைகளின்) நின்று (வழியில் நின்று) ஒழிந்தார்களே (இறந்து அழிந்து போகின்றார்கள்).

விளக்கம்:

பிரணவ மந்திரமான ஓங்காரத்தின் சத்தத்திற்கு உள்ளே இருக்கின்ற ஒளி வடிவான இறைவனே சாதகருக்குள்ளும் ஜோதியாக வெளிப்படுவதை மனதை ஒரு முகப்படுத்தி உணர்வதன் மூலம் அகங்காரத்தை அழித்து இறைவனும் தானும் வேறு வேறு இல்லை எனும் நிலையை பெற்று அடைய முடியாதவர்கள் தாம் இறக்கும் காலம் ஒன்று வரும் என்பதை நினைக்காமல் இருக்கின்றார்கள். ஆதலால், இனி எப்போதும் பிறக்காமல் இருக்கின்ற பெரும் நிலையை சார்ந்து இருக்கின்ற வழி முறைகளில் செல்லாமல் எப்போதும் தாம் கடைபிடிக்கின்ற வழியே சிறந்தது என்று ஓயாமல் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்ற சமயங்களின் கொள்கைகளின் வழியில் நின்று இறந்து அழிந்து போகின்றார்கள்.