பாடல் #945: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத் தொருவெழுத் துள்நிற்கப்
பாகொன்றி நிற்கும் பராபரன் தானே.
விளக்கம்:
திருவம்பலச் சக்கரத்திற்குள் இருக்கும் ‘நமசிவாய’ எனும் ஐந்து மந்திர எழுத்துக்கள் இனிப்போடு கலந்திருக்கும் சுவை போல நமசிவாய, மசிவாயந, சிவாயநம, வாயநமசி, யநமசிவா எனும் ஒவ்வொரு மந்திரத்திற்கும் முதலாவது எழுத்தாகவும் அந்த மந்திரத்தின் மற்ற எழுத்துக்களோடும் கலந்து இருக்கின்றது. இந்த மந்திரங்கள் சேர்த்து ஐம்பத்தோரு எழுத்துக்கள் அமைத்து வரையப்படும் திருவம்பலச் சக்கரத்தில் இனிப்போடு கலந்திருக்கும் சுவை போல இறைவனும் கலந்து நிற்பான்.
