பாடல் #1410

பாடல் #1410: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்து ளிருந்திடக்
கொண்டது வோராண்டு கூடி வருகைக்கு
விண்ட வௌகாரம் விளங்கின வென்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினறது புநதி நிறைநதிடும வனனியுங
கணடது சொதி கருதது ளிருநதிடக
கொணடது வொராணடு கூடி வருகைககு
விணட வெளகாரம விளஙகின வெனறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நின்ற அது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்ட அது சோதி கருத்து உள் இருந்திட
கொண்ட அது ஓர் ஆண்டு கூடி வருகைக்கு
விண்ட வௌகாரம் விளங்கின என்றே.

பதப்பொருள்:

நின்ற (முப்பத்தாறு சக்திகளும் நெருங்கி நிற்கின்ற) அது (இறைவியே) புந்தி (சாதகரின் அறிவு) நிறைந்திடும் (முழுவதும் நிறைந்து இருக்கின்ற) வன்னியும் (அக்னியாகவும்)
கண்ட (அந்த அக்னிக்குள் தரிசிக்கின்ற) அது (வடிவமே) சோதி (ஜோதியாகவும்) கருத்து (தமது கருத்துக்கு) உள் (உள்ளே வைத்து) இருந்திட (தியானத்தில் இருப்பதையே)
கொண்ட (சாதகமாகக் கொண்ட) அது (சாதகர்களுக்கு) ஓர் (அந்த நிலையே ஒரு) ஆண்டு (ஆண்டு முழுவதும்) கூடி (விட்டுவிடாமல் சேர்ந்து) வருகைக்கு (கைவரப் பெற்றால்)
விண்ட (ஆகாயம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில் உள்ள) வௌகாரம் (‘ஔம்’ எனும் பீஜ மந்திரத்தின்) விளங்கின (உட் பொருளை விளங்கிக் கொள்ள) என்றே (முடியும்).

விளக்கம்:

பாடல் #1409 இல் உள்ளபடி முப்பத்தாறு சக்திகளும் நெருங்கி நிற்கின்ற இறைவியே சாதகரின் அறிவு முழுவதும் நிறைந்து இருக்கின்ற அக்னியாகவும் அந்த அக்னிக்குள் தரிசிக்கின்ற வடிவமே ஜோதியாகவும் தமது கருத்துக்கு உள்ளே வைத்து இடைவிடாமல் ஒரு வருடம் தியானத்தில் இருந்தால் பாடல் #1406 இல் உள்ளபடி ஆகாயம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஔம்’ எனும் பீஜ மந்திரத்தின் உட் பொருளை விளங்கிக் கொள்ள முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.