பாடல் #1326

பாடல் #1326: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நடந்திடும் பாரி னன்மைக ளெல்லாங்
கடந்திடுங் காலனு மெண்ணிய நாளும்
படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல
வடைந்திடு மவ்வண்ண மடைந்திடு நீயே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நடநதிடும பாரி னனமைக ளெலலாங
கடநதிடுங காலனு மெணணிய நாளும
படரநதிடு நாமமும பாயகதிர பொல
வடைநதிடு மவவணண மடைநதிடு நீயெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நடந்திடும் பாரின் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடும் நாமமும் பாய் கதிர் போல
அடைந்திடும் அவ் வண்ணம் அடைந்திடு நீயே.

பதப்பொருள்:

நடந்திடும் (உலக நன்மைக்கு வேண்டியது என்று சாதகர்கள் எண்ணியபடியே நடத்தப்படும்) பாரின் (உலகிலுள்ள) நன்மைகள் (நன்மையான காரியங்கள்) எல்லாம் (அனைத்தும்)
கடந்திடும் (கடந்து போய்விடும்) காலனும் (எமன் சாதகர்களுக்கு) எண்ணிய (குறித்த) நாளும் (ஆயுள் முடியும் நாளும்)
படர்ந்திடும் (உலகம் முழுவதும் பரந்து செல்லும்) நாமமும் (சாதகரின் பெயரும் புகழும்) பாய் (சூரியனிலிருந்து பாய்ந்து வருகின்ற) கதிர் (ஒளிக்கதிர்களைப்) போல (போலவே)
அடைந்திடும் (இதன் மூலம் இறையை நோக்கி) அவ் (செல்லுகின்ற சாதகத்தின்) வண்ணம் (முறைப்படியே) அடைந்திடு (இறையைச் சென்று அடையுங்கள்) நீயே (நீங்கள்).

விளக்கம்:

பாடல் #1325 இல் உள்ளபடி உலக நன்மைக்குத் தேவையானதை சாதகர்கள் எண்ணியபடியே நவாக்கிரி சக்கரம் சக்தியால் அனைத்து விதமான நன்மையான காரியங்களும் உலகினில் நடக்கும். எமன் சாதகர்களுக்கு குறித்த ஆயுள் முடியும் நாளும் அவர்களைக் கடந்து போய்விடும். சாதகரின் பெயரும் புகழும் சூரியனிலிருந்து பாய்ந்து வருகின்ற ஒளிக் கதிர்களைப் போலவே உலகம் முழுவதும் பரந்து செல்லும். இப்படி தாம் செய்கின்ற சாதகத்தின் மூலம் உலகத்திற்கு நன்மைகள் செய்து இறையை நோக்கிச் சென்று அடைவார்கள் சாதகர்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.