பாடல் #1331

பாடல் #1331: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பேறுடை யாடன் பெருமையை யெண்ணிடில்
நாடுடை யார்களும் நம்வச மாயிடு
மாறுடை யார்களும் வாழ்வது தன்னிலைக்
கூறுடை யாளையுங் கூறுமின் னீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெறுடை யாடன பெருமையை யெணணிடில
நாடுடை யாரகளும நமவச மாயிடு
மாறுடை யாரகளும வாழவது தனனிலைக
கூறுடை யாளையுங கூறுமின னீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பேறு உடையாள் தன் பெருமையை எண்ணிடில்
நாடு உடையார்களும் நம் வசம் ஆயிடும்
ஆறு உடையார்களும் வாழ்வது தன் நிலைக்
கூறு உடையாளையும் கூறுமின் நீரே.

பதப்பொருள்:

பேறு (வரங்கள் அனைத்தும்) உடையாள் (தன் வசத்தில் வைத்திருக்கும்) தன் (இறைவியின்) பெருமையை (அருமை பெருமைகளை) எண்ணிடில் (ஆராய்ந்து எண்ணிப் பார்த்தால்)
நாடு (இந்த உலகம் செயல்படுவதற்கான நன்மைகளை) உடையார்களும் (தன் வசத்தில் வைத்திருக்கும் ஞானிகளும்) நம் (சாதகர்களின் மேல்) வசம் (அன்பு கொண்டு) ஆயிடும் (அவரை நாடி வருவார்கள்)
ஆறு (இறையருளை அடைவதற்கான வழிகளைத்) உடையார்களும் (தன் வசத்தில் வைத்திருக்கும் ஞானிகள்) வாழ்வது (வாழுகின்ற நிலையை) தன் (சாதகர்கள் தாமும்) நிலைக் (கண்டு கொண்டு அதன் படியே வாழ்வார்கள்)
கூறு (இவ் வழியில் வாழுகின்ற அனைவரிலும் ஒரு பகுதியாகவும் இருந்து) உடையாளையும் (அவர்களைத் தன் வசத்தில் வைத்திருக்கும் இறைவியானவளின் பெருமைகளை) கூறுமின் (போற்றி எடுத்துக் கூறுங்கள்) நீரே (நீங்களே).

விளக்கம்:

பாடல் #1330 இல் உள்ளபடி அருளுகின்ற அனைத்து வரங்களையும் தன் வசத்தில் வைத்திருக்கும் இறைவியின் அருமை பெருமைகளை ஆராய்ந்து எண்ணிப் பார்த்தால் கிடைப்பது என்னவென்றால் இந்த உலகம் செயல்படுவதற்கான நன்மைகளை தன் வசத்தில் வைத்திருக்கும் ஞானிகளும் சாதகர்களின் மேல் அன்பு கொண்டு அவரை நாடி வருவார்கள். இறையருளை அடைவதற்கான வழிகளைத் தன் வசத்தில் வைத்திருக்கும் அந்த ஞானிகள் வாழுகின்ற நிலையை சாதகர்கள் தாமும் கண்டு கொண்டு அதன் படியே வாழ்வார்கள். இந்த வழியில் வாழுகின்ற அனைவரிலும் ஒரு பகுதியாகவும் இருந்து அவர்களைத் தன் வசத்தில் வைத்திருக்கும் இறைவியானவளின் பெருமைகளை சாதகர்களான நீங்களும் போற்றி எடுத்துக் கூறுங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.