பாடல் #1391

பாடல் #1391: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கண்டவிச் சத்தி யிருதய பங்கயங்
கொண்டவித் தத்துவ நாயகி யானவள்
பண்டையவ் வாயுப் பகையை யறுத்திட
வின்றென் மனத்து ளினிதிருந் தாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கணடவிச சததி யிருதய பஙகயங
கொணடவித தததுவ நாயகி யானவள
பணடையவ வாயுப பகையை யறுததிட
வினறென மனதது ளினிதிருந தாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கண்ட இச் சத்தி இருதய பங்கயம்
கொண்ட இத் தத்துவ நாயகி ஆனவள்
பண்டை அவ் வாயு பகையை அறுத்திட
இன்று என் மனத்துள் இனிது இருந்தாளே.

பதப்பொருள்:

கண்ட (சாதகர் தமக்குள் தரிசித்த) இச் (இந்த) சத்தி (இறைவியானவள்) இருதய (சாதகரின் இதயத்) பங்கயம் (தாமரையை தனது இருப்பிடமாக)
கொண்ட (கொண்டு வீற்றிருக்கும்) இத் (இந்த) தத்துவ (தத்துவங்களுக்கு எல்லாம்) நாயகி (தலைவியாக) ஆனவள் (இருக்கின்றாள்)
பண்டை (ஆதியிலிருந்தே) அவ் (உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற) வாயு (மனமாகிய) பகையை (எண்ணங்களை) அறுத்திட (முழுவதுமாக நீக்கி விட்டால்)
இன்று (முழுவதுமாக நீங்கிய அன்றே) என் (சாதகரின்) மனத்துள் (எண்ணங்கள் இல்லாத மனதிற்குள்) இனிது (இறைவியானவள் இன்பமுடன்) இருந்தாளே (வீற்றிருப்பாள்).

விளக்கம்:

பாடல் #1390 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் தரிசித்த இந்த இறைவியானவள் சாதகரின் இதயத் தாமரையை தனது இருப்பிடமாக கொண்டு வீற்றிருப்பாள். அப்படி அவள் வீற்றிருக்கும் முறைக்கு வேண்டிய அனைத்து தத்துவங்களுக்கும் அவளே தலைவியாக ஆகின்றாள். அவளை எண்ணிக் கொண்டே இருந்து ஆதியிலிருந்தே உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற மனமாகிய எண்ணங்களை சாதகர் தம்மிடமிருந்து முழுவதுமாக நீக்கி விட்டால் அது முழுவதுமாக நீங்கிய அன்றே சாதகரின் எண்ணங்கள் இல்லாத மனதிற்குள் இறைவியானவள் இன்பமுடன் வீற்றிருப்பாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.