பாடல் #1342

பாடல் #1342: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஆமே யனைத்துயி ராகிய வம்மையுந்
தானே சகலமு மீன்றவத் தையலு
மாமே யவனடி போற்றி வணங்கிடிற்
போமே வினைகளாம் புண்ணிய னாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆமெ யனைததுயி ராகிய வமமையுந
தானெ சகலமு மீனறவத தையலு
மாமெ யவனடி பொறறி வணஙகிடிற
பொமெ வினைகளாம புணணிய னாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆமே அனைத்து உயிர் ஆகிய அம்மையும்
தானே சகலமும் ஈன்ற அத் தையலும்
ஆமே அவனடி போற்றி வணங்கிடிற்
போமே வினைகள் ஆம் புண்ணியன் ஆகுமே.

பதப்பொருள்:

ஆமே (தலைவனாகவே ஆகிவிட்ட சாதகர்) அனைத்து (அனைத்து உலகங்களிலும்) உயிர் (இருக்கின்ற அனைத்து உயிர்கள்) ஆகிய (ஆகவே இருக்கின்ற) அம்மையும் (இறைவியாகவும்)
தானே (அவரே) சகலமும் (அனைத்து பொருள்களையும்) ஈன்ற (உருவாக்கிய) அத் (அந்த) தையலும் (இறைவனோடு எப்போதும் ஒன்றாக இணைந்தே இருக்கின்ற சக்தியாகவும்)
ஆமே (இப்படி சக்தியாகவே ஆகிவிட்ட சாதகர்) அவனடி (அவரது திருவடியை) போற்றி (இறைவனாகவே போற்றி) வணங்கிடிற் (வணங்கி வழிபடும் அடியவர்களை விட்டு)
போமே (விலகிப் போகுமே) வினைகள் (அனைத்து வினைகளும்) ஆம் (வணங்கிய அடியவர்களும்) புண்ணியன் (புண்ணியனாகவே) ஆகுமே (ஆகி விடுவார்கள்).

விளக்கம்:

பாடல் #1341 இல் உள்ளபடி மற்றவர்களால் வணங்கப்படும் தலைவனாகவே ஆகிவிட்ட சாதகர் அனைத்து உயிர்களாகவே இருக்கின்ற இறைவியாகவும் ஆகி விடுவார். இறைவனோடு எப்போதும் ஒன்றாக இணைந்தே இருந்து அனைத்து உயிர்களுக்கும் வேண்டிய அனைத்து பொருள்களையும் உருவாக்கிய சக்தியாகவும் அவரே ஆகி விடுவார். இப்படி அனைத்தையும் உருவாக்குகின்ற சக்தியாகவே ஆகிவிட்ட சாதகரின் திருவடியை இறைவனாகவே போற்றி வணங்கி வழிபடும் அடியவர்களை விட்டு அனைத்து வினைகளும் விலகிப் போய் அவர்களும் புண்ணியனாகவே ஆகி விடுவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.