பாடல் #1366

பாடல் #1366: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஏய்ந்த மரவுரி தன்னி லெழுதிநீ
வாய்ந்த விப்பொன்னெண்பத் தொன்றி னிரைத்தபின்
காய்ந்தவி நெய்யொட் கலந்துட னோமமு
மாய்ந்த வியாயிர மாகுதி பண்ணே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எயநத மரவுரி தனனி லெழுதிநீ
வாயநத விபபொனனெணபத தொனறி னிரைததபின
காயநதவி நெயயொட கலநதுட னொமமு
மாயநத வியாயிர மாகுதி பண்ணெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏய்ந்த மர உரி தன்னில் எழுதி நீ
வாய்ந்த இப் பொன் எண்பத்து ஒன்றில் நிரைத்த பின்
காய்ந்த அவி நெய்யோடு கலந்து உடன் ஓமமும்
ஆய்ந்த அவி ஆயிரம் ஆகுதி பண்ணே.

பதப்பொருள்:

ஏய்ந்த (நவாக்கிரி சக்கரத்தை வரைவதற்கு ஏதுவான) மர (மரத்தின்) உரி (பட்டையை) தன்னில் (எடுத்து அதில்) எழுதி (நவாக்கிரி சக்கரத்தை எழுதி) நீ (நீங்கள்)
வாய்ந்த (அதற்கு ஏற்றபடி வார்க்கப்பட்டு) இப் (புடம் செய்த) பொன் (தங்கத் தகடில் வைத்து) எண்பத்து (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் எண்பத்து) ஒன்றில் (ஓரு அறைகளையும் வரைந்து அதற்குள் எண்பத்தோரு பீஜங்களையும்) நிரைத்த (எழுதி அடைத்த) பின் (பிறகு)
காய்ந்த (நன்றாக காய்ச்சிய) அவி (அவிர் பாகத்திற்கு ஏற்ற) நெய்யோடு (நெய்யுடன்) கலந்து (கலந்து) உடன் (அதனோடு மரக்கட்டைகளை வைத்து) ஓமமும் (ஹோமம் செய்து)
ஆய்ந்த (தங்கத் தகடில் எழுதிய பீஜங்களை நன்றாக ஆராய்ந்து அவற்றையே) அவி (அவிர் பாகமாக) ஆயிரம் (ஆயிரம் முறை ஜெபித்து) ஆகுதி (ஹோமத்தில் ஆகுதி / சமர்ப்பணம்) பண்ணே (செய்யுங்கள்).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரத்தை வரைந்து பூஜை செய்வதற்கு ஏதுவான மரத்தின் பட்டையை எடுத்து அதில் சக்கரத்தை எழுத வேண்டும். அதன் பிறகு அதற்கு ஏற்றபடி வார்க்கப்பட்டு புடம் செய்த தங்கத் தகடில் மரப் பட்டையை வைத்து நவாக்கிரி சக்கரத்தில் இருக்கும் எண்பத்தோரு அறைகளையும் வரைந்து அதற்குள் எண்பத்தோரு பீஜங்களையும் எழுதி அடைக்க வேண்டும். அதன் பிறகு நன்றாக காய்ச்சிய அவிர் பாகத்திற்கு ஏற்ற நெய்யுடன் கலந்து அதனோடு மரக்கட்டைகளை வைத்து ஹோமம் செய்து தங்கத் தகடில் எழுதிய பீஜங்களை நன்றாக ஆராய்ந்து அவற்றையே அவிர் பாகமாக ஆயிரம் முறை ஜெபித்து ஹோமத்தில் சமர்ப்பணம் செய்யுங்கள்.

குறிப்பு:

இதுவரை நவாக்கிரி சக்கரத்தை மானசீகமாக சாதகம் செய்யும் முறைகளை அருளிய திருமூலர் இந்தப் பாடலில் இருந்து வெளிப்புற பூஜையில் நவாக்கிரி சக்கரத்தை அமைத்து சாதகம் செய்யும் முறைகளை அருளுகிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.