பாடல் #1405

பாடல் #1405: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தாரதி னுள்ளே தயங்கிய சோதியைப்
பாரதி னுள்ளே பரந்து ளெழுந்திட
வேரதுவ் வொன்றி நின்றெண்ணு மனோமயங்
காரது போலக் கலந்தெழு மண்ணிலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாரதி னுளளெ தயஙகிய சொதியைப
பாரதி னுளளெ பரநது ளெழுநதிட
வெரதுவ வொனறி நினறெணணு மனொமயங
காரது பொலக கலநதெழு மணணிலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தார் அதின் உள்ளே தயங்கிய சோதியை
பார் அதின் உள்ளே பரந்து உள் எழுந்திட
வேர் அது ஒன்றி நின்று எண்ணு மனோமயம்
கார் அது போல கலந்து எழு மண்ணிலே.

பதப்பொருள்:

தார் (சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை) அதின் (மலரின்) உள்ளே (உள்ளே இருந்து) தயங்கிய (சாதகம் செய்ய செய்ய மெதுவாக மேலெழுந்து வருகின்ற) சோதியை (ஜோதியை)
பார் (சாதகர் இருக்கின்ற உலகம்) அதின் (அதற்கு) உள்ளே (உள்ளே இருக்கின்ற உயிர்களுக்கு எல்லாம்) பரந்து (பரந்து சென்று) உள் (அவைகளுக்கு உள்ளே இருக்கின்ற) எழுந்திட (ஜோதியோடு எழுந்திட)
வேர் (அந்த ஜோதியின் ஆதாரமாக) அது (சாதகரின் உள்ளே இருக்கின்ற ஜோதியும்) ஒன்றி (ஒன்றாக சேர்ந்து) நின்று (நிற்கும் படி) எண்ணு (எண்ணிக் கொண்டே இருக்கின்ற சாதகரின்) மனோமயம் (மன வலிமைக்கும் தியானத்திற்கும் ஏற்றபடி)
கார் (மேகங்களில் இருக்கின்ற நீர் மண்ணில் மழையாகப் பொழிந்து வெப்பத்தால் ஆவியாகி மீண்டும் மேகத்தோடு சேர்ந்து மழையாக) அது (பொழிவது) போல (போலவே) கலந்து (சாதகருக்குள்ளிருக்கும் ஆதார ஜோதியானது உலகம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்ற உயிர்களோடும் கலந்து) எழு (எழுந்து) மண்ணிலே (அனைவருக்கும் பயன் கொடுக்கும் ஜோதியாக விளங்குகின்றது).

விளக்கம்:

சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் உள்ளே இருந்து சாதகம் செய்ய செய்ய மெதுவாக மேலெழுந்து வருகின்ற ஜோதியை சாதகர் இருக்கின்ற உலகத்தில் இருக்கின்ற உயிர்களுக்கு எல்லாம் பரந்து சென்று அவைகளுக்கு உள்ளே இருக்கின்ற ஜோதியோடு எழுந்திடும். இதற்கு ஆதாரமாக சாதகரின் உள்ளே சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஜோதியும் அதனோடு ஒன்றாக சேர்ந்து நிற்கும் படி எண்ணிக் கொண்டே இருக்கின்ற சாதகரின் மன வலிமைக்கும் தியானத்திற்கும் ஏற்றபடி மேகங்களில் இருக்கின்ற நீர் மண்ணில் மழையாகப் பொழிந்து வெப்பத்தால் ஆவியாகி மீண்டும் மேகத்தோடு சேர்ந்து மழையாக பொழிவது போலவே சாதகருக்குள்ளிருக்கும் ஆதார ஜோதியானது உலகம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்ற உயிர்களோடும் கலந்து எழுந்து அனைவருக்கும் பயன் கொடுக்கும் ஜோதியாக விளங்குகின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.