பாடல் #1368

பாடல் #1368: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஆகின்ற சந்தன குங்கும கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
யாகின்ற கற்பூர மாகோசன நீருஞ்
சேர்கின்ற வொன்பதுஞ் சேரநீ வைத்திடே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆகினற சநதன குஙகும கததூரி
பொகினற சாநது சவாது புழுகுநெய
யாகினற கறபூர மாகொசன நீருஞ
செரகினற வொனபதுஞ செரநீ வைததிடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி
போகின்ற சாந்து சவ்வாது புனுகு நெய்
ஆகின்ற கற்பூரம் ஆ கோசன நீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேர நீ வைத்திடே.

பதப்பொருள்:

ஆகின்ற (அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற தூய்மையான) சந்தனம் (சந்தனமும்) குங்குமம் (குங்குமமும்) கத்தூரி (கஸ்தூரியும்)
போகின்ற (வாசனை மிகவும் பரவும்) சாந்து (கருமையான அகில் கட்டையை அரைத்த சாந்தும்) சவ்வாது (ஜவ்வாதும்) புனுகு (புனுகும்) நெய் (நெய்யும்)
ஆகின்ற (அதனுடன் அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற தூய்மையான) கற்பூரம் (பச்சைக் கற்பூரமும்) ஆ (பசுவின்) கோசன (மேன்மை பொருந்திய) நீரும் (கோமியமும்)
சேர்கின்ற (இப்படி சேர்க்க ஏதுவான) ஒன்பதும் (ஒன்பது பொருட்களையும்) சேர (ஒன்றாகச் சேர்த்து) நீ (சாதகர் சாதகம் செய்து சக்தியேற்றிய தங்கத் தகடில்) வைத்திடே (வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்).

விளக்கம்:

அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற தூய்மையான சந்தனமும் குங்குமமும் கஸ்தூரியும் வாசனை மிகவும் பரவும் கருமையான அகில் கட்டையை அரைத்த சாந்தும் ஜவ்வாதும் புனுகும் நெய்யும் சேர்க்க வேண்டும். அதனுடன் அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற தூய்மையான பச்சைக் கற்பூரமும் பசுவின் மேன்மை பொருந்திய கோமியமும் சேர்க்க வேண்டும். இப்படி சேர்ப்பதற்கு ஏதுவான ஒன்பது பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து பாடல் #1367 இல் உள்ளபடி சாதகர் சாதகம் செய்து சக்தியேற்றிய தங்கத் தகடில் வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.