பாடல் #1327

பாடல் #1327: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுட னெல்லா
மடைந்திடு மாதி யருளுந் திருவு
மடைந்திடு மண்டத் தமரர்கள் வாழ்வு
மடைந்திடு மவ்வண்ண மறிந்திடு நீயே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அடைநதிடு பொனவெளளி கலலுட னெலலா
மடைநதிடு மாதி யருளுந திருவு
மடைநதிடு மணடத தமரரகள வாழவு
மடைநதிடு மவவணண மறிநதிடு நீயெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அடைந்திடும் பொன் வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் அவ் வண்ணம் அறிந்திடு நீயே.

பதப்பொருள்:

அடைந்திடும் (சாதகர்கள் அடைவார்கள்) பொன் (பொன் போல பிரகாசிக்கின்ற உடல்) வெள்ளி (வெள்ளி போல தூய்மையாக மலங்கள் நீங்கிய ஆன்மா) கல்லுடன் (வைரக் கல்லைப் போல எதனாலும் அசையாத உறுதியான மனம்) எல்லாம் (ஆகிய அனைத்தும்)
அடைந்திடும் (சாதகர்கள் அடைவார்கள்) ஆதி (ஆதிப் பரம்பொருளான இறைவனின்) அருளும் (திருவருளும்) திருவும் (இறைவனது திருமேனியும்)
அடைந்திடும் (சாதகர்கள் அடைவார்கள்) அண்டத்து (அண்ட சராசரங்களில் வீற்றிருக்கும்) அமரர்கள் (இறவா நிலை பெற்ற அமரர்களின்) வாழ்வும் (தெய்வீக வாழ்க்கையும்)
அடைந்திடும் (சாதகத்தின் மூலம் அடையக்கூடிய) அவ் (அனைத்தையும் அதனதன்) வண்ணம் (முறைப்படியே அடையும்) அறிந்திடு (முறைகளை அறிந்து கொள்ளுங்கள்) நீயே (நீங்கள்).

விளக்கம்:

பாடல் #1326 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்கின்ற சாதகர்கள் பொன் போல பிரகாசிக்கின்ற உடல், வெள்ளி போல தூய்மையாக மலங்கள் நீங்கிய ஆன்மா, வைரக் கல்லைப் போல எதனாலும் அசையாத உறுதியான மனம் ஆகிய அனைத்தும் அடைவார்கள். அது மட்டுமின்றி ஆதிப் பரம்பொருளான இறைவனின் திருவருளும் இறைவனது திருமேனியையும் அடைவார்கள். மேலும் அண்ட சராசரங்களில் வீற்றிருக்கும் இறவா நிலை பெற்ற அமரர்களின் தெய்வீக வாழ்க்கையும் அடைவார்கள். இப்படி நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்வதன் மூலம் அனைத்தையும் அதனதன் முறைப்படியே அடையும் முறைகளை சாதகர்கள் அறிந்து கொள்வார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.