பாடல் #1344

பாடல் #1344: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தானது சும்மீறீக் கௌவது வீரா
நானது சக்கர நன்றறி வார்க்கெல்லாங்
கானது கன்னி கலந்த பராசத்தி
கேளது வையங் கிளரொளி வானதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானது சுமமீறீக கௌவது வீரா
நானது சககர நனறறி வாரககெலலாங
கானது கனனி கலநத பராசததி
கெளது வையங கிளரொளி வானதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தான் அது சும் ஈறீம் கௌ அது ஈரா
நான் அது சக்கரம் நன்று அறிவார்க்கு எல்லாம்
கான் அது கன்னி கலந்த பராசத்தி
கேள் அது வையம் கிளர் ஒளி வான் அதே.

பதப்பொருள்:

தான் (சக்கரம்) அது (அதுவாகவே இருக்கின்ற) சும் (ஸெளம்) ஈறீம் (ஹ்ரீம்) கௌ (கெளம்) அது (ஆகிய பீஜங்களை) ஈரா (ஒவ்வொன்றும் இரண்டு முறையாக அமைத்தால்)
நான் (சாதகரும்) அது (அதுவாகவே) சக்கரம் (சக்கரத்தில் இருப்பதை) நன்று (தமக்குள்ளேயே நன்றாக) அறிவார்க்கு (அறிந்து கொள்ளுகின்ற) எல்லாம் (சாதகர்களெல்லாம்)
கான் (பார்க்கின்ற) அது (அனைத்திலும்) கன்னி (என்றும் இளமையாகவே) கலந்த (ஒன்றோடு ஒன்றாகக் கலந்து இருக்கின்ற) பராசத்தி (அசையும் சக்தியாகிய இறைவியை பார்ப்பார்கள்)
கேள் (யான் சொல்வதைக் கேளுங்கள்) அது (அப்போது) வையம் (அனைத்து உலகங்களாகவும்) கிளர் (பிரகாசத்தோடு பரந்து விரிந்து இருக்கின்ற) ஒளி (பேரொளியாகவும்) வான் (ஆகாயமாகவும்) அதே (அந்த இறைவியே இருப்பதை தெரிந்து கொள்வீர்கள்).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரமாகவே இருக்கின்ற பீஜங்களில் ‘ஸெளம்’ ‘ஹ்ரீம்’ மற்றும் ‘கௌம்’ ஓவ்வொன்றும் இரண்டு முறையாக அமைத்தால் வருகின்ற சக்கர அமைப்பில் சாதகரும் சக்கரமாகவே இருப்பதை தமக்குள் அதை நன்றாக அறிந்து கொள்ளுகின்ற சாதகர்கள் அனைவரும் தாம் காணுகின்ற அனைத்திலும் என்றும் இளமையுடன் அசையும் சக்தியாக இருக்கின்ற இறைவியானவள் ஒன்றாகக் கலந்து இருப்பதை பார்ப்பார்கள். அது மட்டுமின்றி யான் சொல்வதையும் கேட்டுக் கொள்பவர்கள் அந்த இறைவியானவளே அனைத்து உலகங்களாகவும் பிரகாசத்தோடு அனைத்து உலகங்களுக்கும் பரந்து விரிந்து இருக்கின்ற பேரொளியாகவும் அவை இருக்கின்ற ஆகாயமாகவும் இருப்பதை தெரிந்து கொள்வார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.