பாடல் #1328

பாடல் #1328: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

அறிந்திடு வார்க ளமரர்க ளாகத்
தெரிந்திடும் வானோருந் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வானை முயன்றிடு நீயே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிநதிடு வாரக ளமரரக ளாகத
தெரிநதிடும வானொருந தெவரகள தெவன
பரிநதிடும வானவன பாயபுனல சூடி
முரிநதிடு வானை முயனறிடு நீயெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிந்திடுவார்கள் அமரர்கள் ஆகத்
தெரிந்திடும் வானோரும் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வான் அவன் பாய் புனல் சூடி
முரிந்திடுவானை முயன்றிடு நீயே.

பதப்பொருள்:

அறிந்திடுவார்கள் (மேலே உள்ளபடி அறிந்து கொண்ட சாதகர்கள்) அமரர்கள் (அமரர்களாகவே) ஆகத் (ஆகிவிடுகின்ற முறைகளை)
தெரிந்திடும் (அவர்களுக்குத் தெரிந்திடும்) வானோரும் (விண்ணவர்களுக்கும்) தேவர்கள் (தேவர்களுக்கும்) தேவன் (தலைவனானவனும்)
பரிந்திடும் (பெருங்கருணையில் உலகங்களுக்கு) வான் (மழை போல் பொழியும் வானத்தைப்) அவன் (போன்றவனும்) பாய் (பாய்ந்து வருகின்ற) புனல் (கங்கையை) சூடி (உலக நன்மைக்காகத் தன் தலையின் மேல் தாங்கி)
முரிந்திடுவானை (அதன் வேகத்தைத் தடுத்து அருளுகின்றவனும் ஆகிய இறைவனை) முயன்றிடு (முழுவதும் உணர்ந்து அடைவதற்கு முயற்சி செய்யுங்கள்) நீயே (நீங்கள்).

விளக்கம்:

பாடல் #1327 இல் உள்ளபடி அனைத்தையும் அதனதன் முறைப்படியே அறிந்து கொண்ட சாதகர்கள் அமரர்களாகவே ஆகிவிடுகின்ற முறைகளை அறிந்து கொள்வார்கள். அதனால் அவர்களுக்குத் தெரிந்திடும் விண்ணவர்களுக்கும் தேவர்களுக்கும் தலைவனானவனும் பெருங்கருணையில் உலகங்களுக்கு மழை போல் பொழியும் வானத்தைப் போன்றவனும் பாய்ந்து வருகின்ற கங்கையை உலக நன்மைக்காகத் தன் தலையின் மேல் தாங்கி அதன் வேகத்தைத் தடுத்து அருளுகின்றவனும் ஆகிய இறைவனை முழுவதும் உணர்ந்து அடைவதற்கு முயற்சி செய்யுங்கள் சாதகர்களே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.