பாடல் #1338

பாடல் #1338: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நடந்திடு நாவினினு ண்மைக ளெல்லாந்
தொடர்ந்திடுஞ் சொல்லொடுஞ் சொற்பொரு டானுங்
கடந்திடுங் கல்விக் கரசிவ னாகப்
படர்ந்திடும் பாரிற் பகையில்லைத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நடநதிடு நாவினினு ணமைக ளெலலாந
தொடரநதிடுஞ சொலலொடுஞ சொறபொரு டானுங
கடநதிடுங கலவிக கரசிவ னாகப
படரநதிடும பாரிற பகையிலலைத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நடந்திடும் நாவினில் உண்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லோடும் சொற் பொருள் தானும்
கடந்திடும் கல்விக்கு அரசு இவன் ஆகப்
படர்ந்திடும் பாரில் பகை இல்லை தானே.

பதப்பொருள்:

நடந்திடும் (அனைத்தும் நன்மையாகவே நடந்து கொண்டு இருக்கின்ற) நாவினில் (சாதகரின் நாக்கில்) உண்மைகள் (உண்மை என்று அறியப்படும் சத்தியங்கள்) எல்லாம் (அனைத்தும் கிடைக்கப் பெறும்)
தொடர்ந்திடும் (அதன் பிறகு சாதகரைத் தொடர்ந்து வருகின்ற) சொல்லோடும் (அவர் சொல்லுகின்ற அனைத்து) சொற் (வார்த்தைகளும்) பொருள் (உடனே உண்மைப் பொருளாக) தானும் (மாறி உண்மையாகவே ஆகிவிடும்)
கடந்திடும் (அவரது நாக்கை கடந்து செல்கின்ற அனைத்து விதமான) கல்விக்கு (கல்விக்கும் / ஞானத்திற்கும்) அரசு (அரசனாகவே) இவன் (சாதகரும்) ஆகப் (ஆகி விடுவார்)
படர்ந்திடும் (அதன் பிறகு படர்ந்து விரிந்து இருக்கும் இந்த) பாரில் (உலகத்தில்) பகை (பகை என்று அறியப்படுகின்ற மும்மலங்கள், பசி, தாகம், தூக்கம் ஆகிய எதுவும்) இல்லை (சாதகருக்கு இல்லாமல்) தானே (போய் விடும்).

விளக்கம்:

பாடல் #1337 இல் உள்ளபடி அனைத்தும் நன்மையாகவே நடந்து கொண்டு இருக்கின்ற சாதகரின் நாக்கில் உண்மை என்று அறியப்படும் சத்தியங்கள் அனைத்தும் கிடைக்கப் பெறும். அதன் பிறகு சாதகர் சொல்கின்ற அனைத்து வார்த்தைகளும் அவரது சொல்லைத் தொடர்ந்து உடனே உண்மையாகவே ஆகி செயல்படும். அதனால் அவரது நாக்கிலிருந்து வருகின்ற அனைத்து விதமான சொற்களாகிய ஞானத்திற்கும் அரசனாகவே சாதகரும் ஆகிவிடுவார். அதன் பிறகு படர்ந்து விரிந்து இருக்கும் இந்த உலகத்தில் பகை என்று அறியப்படுகின்ற மும்மலங்கள், பசி, தாகம், தூக்கம் ஆகிய எதுவும் சாதகருக்கு இல்லாமல் போய் விடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.