பாடல் #1404

பாடல் #1404: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பூசனை சத்திக ளெண்ணைவர் சூழவே
நேசவள் கன்னிகள் நாற்பது நேரதாக்
காசினி சக்கரத் துள்ளே கலந்தவள்
மாசடை யாமல் மகிழ்ந்திருந் தார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பூசனை சததிக ளெணணைவர சூழவெ
நெசவள கனனிகள நாறபது நெரதாக
காசினி சககரத துளளெ கலநதவள
மாசடை யாமல மகிழநதிருந தாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பூசனை சத்திகள் எண் ஐவர் சூழவே
நேச அவள் கன்னிகள் நால் பத்து நேர் அதாய்
காசினி சக்கரத்து உள்ளே கலந்து அவள்
மாசு அடையாமல் மகிழ்ந்து இருந்தார்களே.

பதப்பொருள்:

பூசனை (இறைவிக்கு சரிசமமாக பூஜிக்க தகுந்த பத்து பொருள்களையும் சூழ்ந்து இருக்கின்ற) சத்திகள் (சக்திகள்) எண் (எட்டும்) ஐவர் (ஐந்தும் பெருக்கினால் வரும் மொத்தம் நாற்பது பேரும்) சூழவே (சூழ்ந்து இருக்க)
நேச (அவர்கள் நேசிக்கின்ற) அவள் (இறைவி நடுவில் வீற்றிருக்கின்றாள்) கன்னிகள் (என்றும் இளமையுடன் இருக்கின்ற சக்திகள்) நால் (நான்கும்) பத்து (பத்தும் கூட்டி வரும் மொத்தம் நாற்பது பேரும்) நேர் (இறைவிக்கு சரிசமமாக) அதாய் (அருளுபவர்களாக இருக்கின்றார்கள்)
காசினி (இறைவியோடு ஒன்றாக சேர்ந்தே இருப்பதால் உலகமாகவே ஆகிவிட்ட சாதகரின் உடலுக்குள்) சக்கரத்து (இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்திற்கு) உள்ளே (உள்ளே வீற்றிருக்கும் இறைவியோடு) கலந்து (ஒன்றாகக் கலந்து) அவள் (அவளது அருளால்)
மாசு (தாங்கள் கழிக்கும் எந்த கர்ம வினைகளினாலும் மாசு வந்து) அடையாமல் (சேர்ந்து விடாமலும்) மகிழ்ந்து (கர்ம வினைகளை கழித்து உயிர்கள் இன்பம் பெறுவதைக் கண்டு மகிழ்ச்சியாகவும்) இருந்தார்களே (இருக்கின்றார்கள்).

விளக்கம்:

பாடல் #1403 இல் உள்ளபடி இறைவிக்கு சரிசமமாக பூஜிக்க தகுந்த பத்து பொருள்களையும் சூழ்ந்து இருக்கின்ற சக்திகள் நாற்பது பேரும் நேசிக்கின்ற இறைவி அவர்களுக்கு நடுவில் வீற்றிருக்கின்றாள். என்றும் இளமையுடன் இருக்கின்ற இந்த நாற்பது சக்திகளும் இறைவிக்கு சரிசமமாக அருளுபவர்களாக இருக்கின்றார்கள். பாடல் #1401 இல் உள்ளபடி இறைவியோடு ஒன்றாக சேர்ந்தே இருப்பதால் உலகமாகவே ஆகிவிட்ட சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்திற்கு உள்ளே வீற்றிருக்கும் இறைவியோடு இந்த நாற்பது பேரும் ஒன்றாகக் கலந்து அவளது அருளால் இறைவியையோ அல்லது அவளுக்கு சரிசமமாக இருக்கின்ற பத்து பொருள்களையோ வணங்குகின்ற உயிர்களின் கர்மங்களை தீர்க்கும் போது அதனால் எந்தவிதமான மாசும் வந்து சேர்ந்து விடாமலும் கர்ம வினைகளை தீர்த்து அதனால் உயிர்கள் இன்பம் பெறுவதைக் கண்டு மகிழ்ச்சியாகவும் இருக்கின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.