பாடல் #1369

பாடல் #1369: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

வைத்திடும் பொன்னுடன் மாதவ னோக்கிடில்
கச்சிரு கொங்கை கலந்தெழு கன்னியைத்
தச்சது வாக சமைந்தவிம் மந்திர
மச்சியல் பாக வாயிரஞ் சிந்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வைததிடும பொனனுடன மாதவ னொககிடில
கசசிரு கொஙகை கலநதெழு கனனியைத
தசசது வாக சமைநதவிம மநதிர
மசசியல பாக வாயிரஞ சிநதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வைத்திடும் பொன் உடன் மாதவம் நோக்கிடில்
கச்சு இரு கொங்கை கலந்து எழு கன்னியை
தச்சு அது ஆக சமைந்த இம் மந்திரம்
அச்சு இயல்பு ஆக ஆயிரம் சிந்தியே.

பதப்பொருள்:

வைத்திடும் (சாதகர் சாதகம் செய்து சக்தியேற்றி வைத்திருக்கும்) பொன் (தங்க) உடன் (தகடுடன்) மாதவம் (மாபெரும் தவமாக மனதை ஒரு நிலைப் படுத்தி வேறு எதையும் சிந்திக்காமல்) நோக்கிடில் (அதையே மானசீகமாக உள்ளுக்குள் பார்த்துக் கொண்டு இருந்தால்)
கச்சு (மார்புக் கச்சையால் கட்டிய) இரு (பேரழகு பொருந்திய இரண்டு) கொங்கை (மார்பகங்களைக் கொண்டு) கலந்து (தங்கத் தகடுடன் சக்தியாகக் கலந்து) எழு (அதிலிருந்து பேரொளியாக எழுகின்ற) கன்னியை (என்றுமே மாறாத இளமை பொருந்திய இறைவியை)
தச்சு (அவள் கலந்து இருக்கும் அளவுகளுக்கு) அது (ஏற்ற) ஆக (படியாகவே) சமைந்த (சாதகருக்குள் உருவாகியிருக்கும்) இம் (இந்த நவாக்கிரி சக்கரத்திற்கான) மந்திரம் (மந்திரத்தை)
அச்சு (அது இருக்கும் அதே) இயல்பு (தன்மையில் சிறிதும் மாறாமல்) ஆக (இருக்கும் படி மானசீகமாக ஜெபித்து) ஆயிரம் (ஆயிரம் முறை) சிந்தியே (அந்த மந்திரத்தையே சிந்தித்து இருக்க வேண்டும்).

விளக்கம்:

பாடல் #1368 இல் உள்ளபடி சாதகர் சாதகம் செய்து சக்தியேற்றி வைத்திருக்கும் தங்க தகடுடன் மாபெரும் தவமாக மனதை ஒரு நிலைப் படுத்தி வேறு எதையும் சிந்திக்காமல் அதையே மானசீகமாக உள்ளுக்குள் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்போது மார்புக் கச்சையால் கட்டிய பேரழகு பொருந்தி அமிர்தத்தை கொடுக்கும் இரண்டு மார்பகங்களைக் கொண்டு தங்கத் தகடுடன் சக்தியாகக் கலந்து அதிலிருந்து பேரொளியாக எழுகின்ற என்றுமே மாறாத இளமை பொருந்திய இறைவியை காணலாம். அதன் பிறகு சாதகர் செய்யும் சாதகத்தின் அளவிற்கு ஏற்றபடி தங்கத் தகடோடு கலந்து இருக்கும் இறைவியின் அருளால் நவாக்கிரி சக்கரத்திற்கான மந்திரம் சாதகருக்குள் உருவாகும். அதன் பிறகு அந்த மந்திரம் இருக்கும் தன்மையில் இருந்து சிறிதும் மாறாமல் மானசீகமாக ஜெபித்து ஆயிரம் முறை அந்த மந்திரத்தையே சிந்தித்து இருக்க வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.