பாடல் #1375

பாடல் #1375: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பேரொளி யாய பெரிய மலர்நடுச்
சீரொளி யாகத் திகழ்தரு னாயகித்
தாரொளி யாயவள் தன்னிறம் பொன்மையாய்ப்
பாரொளி யாகப் பரந்துநின் றாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெரொளி யாய பெரிய மலரநடுச
சீரொளி யாகத திகழதரு னாயகித
தாரொளி யாயவள தனனிறம பொனமையாயப
பாரொளி யாகப பரநதுநின றாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பேர் ஒளி ஆய பெரிய மலர் நடு
சீர் ஒளி ஆக திகழ் தரு நாயகி
தார் ஒளி ஆய் அவள் தன் நிறம் பொன்மை ஆய்
பார் ஒளி ஆக பரந்து நின்றாளே.

பதப்பொருள்:

பேர் (மிகப் பெரும்) ஒளி (ஒளியாக) ஆய (இருக்கின்ற) பெரிய (பெரியதான) மலர் (சகஸ்ரதள தாமரை மலரின்) நடு (நடுவில் வீற்றிருக்கும்)
சீர் (சிறப்பான) ஒளி (ஒளியாக) ஆக (இருந்து) திகழ் (பிரகாசமாகத் திகழும்) தரு (நிலையைத் தருகின்ற) நாயகி (தலைவியாகிய இறைவி)
தார் (சகஸ்ரதளத்தில் இருக்கும் தாமரை மலருக்கு) ஒளி (ஒளியாகவே) ஆய் (இருக்கின்ற) அவள் (இறைவி அவள்) தன் (தனது) நிறம் (திருமேனியின் நிறத்தில்) பொன்மை (தங்க நிறம்) ஆய் (போலவே பிரகாசமாக ஜொலிக்கின்றாள்)
பார் (உலகத்திற்கு) ஒளி (ஒளியாக) ஆக (இருந்து) பரந்து (எங்கும் பரவி விரிந்து) நின்றாளே (இறைவி நிற்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1374 இல் உள்ளபடி முக்தி அடைவதற்கான பெரிய வழியாக இருக்கின்ற இறைவனின் பேரொளி உருவமானது சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதள தாமரை மலரின் நடுவில் சீரும் சிறப்பும் பொருந்திய பேரொளியாக திகழ்கின்ற நிலையைத் தருகின்ற தலைவியாகிய இறைவியே சகஸ்ரதளத்தில் இருக்கும் தாமரை மலரின் ஒளியாக இருக்கின்றாள். அவளுடைய திருமேனியானது தங்கம் போல பிரகாசமாக ஜொலிக்கின்றது. அவளே உலகத்திற்கு ஒளி தருபவளாக எங்கும் பரவி விரிந்து நிற்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.