பாடல் #1324

பாடல் #1324: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நினைத்திடு மச்சிறீயிக் கிறீ யீரா
நினைத்திடு சக்கர மாதியு மீறு
நினைத்திடு நெல்லொடு புல்வினை யுள்ளே
நினைத்திடு மற்சனை நேர்தரு வாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினைததிடு மசசிறீயிக கிறீ யீரா
நினைததிடு சககர மாதியு மீறு
நினைததிடு நெலலொடு புலவினை யுளளெ
நினைததிடு மறசனை நெரதரு வாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நினைத்திடும் அச் சிறீ இக் கிறீ ஈரா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறு
நினைத்திடும் நெல்லொடு புல் வினை உள்ளே
நினைத்திடும் அருச்சனை நேர் தருவாளே.

பதப்பொருள்:

நினைத்திடும் (சாதகர் நினைத்து தியானிக்கின்ற) அச் (அந்த சக்கரத்தில் உள்ள) சிறீ (ஸ்ரீம் எனும் அட்சரம்) இக்கிறீ (ஹ்ரீம் எனும் அட்சரம்) ஈரா (ஆகிய இரண்டு அட்சரங்களும்)
நினைத்திடும் (சாதகர் நினைத்து தியானிக்கின்ற) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தில்) ஆதியும் (முதலாகவும்) ஈறு (முடிவாகவும் வைத்து)
நினைத்திடும் (சாதகர் நினைத்து தியானிக்கின்ற போது) நெல்லொடு (நெல்லை விதைத்து) புல் (அதிலிருந்து புல்லை விளைவிக்கும்) வினை (செயலைப் போலவே) உள்ளே (மனதிற்குள்)
நினைத்திடும் (சாதகர் நினைத்து தியானிக்கின்ற) அருச்சனை (மந்திரத்தை சாற்றுகின்ற போது) நேர் (அதற்கு இணையான பலன்களை) தருவாளே (சக்கரத்திலிருக்கும் சக்தியானவள் தந்து அருளுவாள்).

விளக்கம்:

பாடல் #1323 இல் உள்ளபடி சாதகர் நினைத்து தியானிக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ஸ்ரீம் எனும் அட்சரம் ஹ்ரீம் எனும் அட்சரம் ஆகிய இரண்டு அட்சரங்களையும் முதலாகவும் முடிவாகவும் வைத்து தியானிக்க வேண்டும். அப்படி தியானிக்கும் போது நெல்லை விதைத்தால் அதிலிருந்து புல்லாக முளைத்து விளைவிக்கும் செயலைப் போலவே மனதிற்குள் சாதகர் நினைத்து தியானிக்கின்ற மந்திரத்தை சாற்றுகின்ற போது அதற்கு இணையான பலன்களை சக்கரத்திலிருக்கும் சக்தியானவள் தந்து அருளுவாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.