பாடல் #1348

பாடல் #1348: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

சேர்ந்தவ ரென்றுந் திசையொளி யானவர்
காய்ந்தெழு மேல்வினை காணகி லாதவர்
பாய்ந்தெழு முள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

செரநதவ ரெனறுந திசையொளி யானவர
காயநதெழு மெலவினை காணகி லாதவர
பாயநதெழு முளளொளி பாரிற பரநதது
மாயநதது காரிருள மாறொளி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சேர்ந்தவர் என்றும் திசை ஒளி ஆனவர்
காய்ந்து எழும் மேல் வினை காண இலாதவர்
பாய்ந்து எழும் உள் ஒளி பாரில் பரந்தது
மாய்ந்தது கார் இருள் மாறு ஒளி தானே.

பதப்பொருள்:

சேர்ந்தவர் (நவாக்கிரி சக்கரத்தை சேர்ந்தே இருக்கின்ற சாதகர்கள்) என்றும் (எப்பொழுதும்) திசை (அனைத்து திசைகளுக்கும்) ஒளி (பரவும் ஒளியாகவே) ஆனவர் (இருப்பார்கள்)
காய்ந்து (இது வரை பல பிறவிகளாக அவர்களைத் தொடர்ந்து) எழும் (வருகின்ற) மேல் (உச்ச) வினை (வினைகள்) காண (இனிமேல் அவரைத் தொடர்ந்து வராமல்) இலாதவர் (அழிந்து எந்த வினையும் இல்லாமல் இருப்பார்கள்)
பாய்ந்து (அவர்களுக்கு உள்ளிருந்து வேகமாக) எழும் (மேலெழுந்து வருகின்ற) உள் (ஞானமாகிய) ஒளி (ஒளியானது) பாரில் (உலகம் முழுவதும்) பரந்தது (பரந்து விரியும்)
மாய்ந்தது (அதன் பிறகு அழிந்து போகின்ற) கார் (மாயையாகிய) இருள் (இருளை) மாறு (மாற்றி) ஒளி (ஞானமாகிய ஒளியை) தானே (தம்மை நாடி வரும் தகுதியானவர்களுக்கு கொடுக்கின்றவராக சாதகர்கள் இருப்பார்கள்).

விளக்கம்:

பாடல் #1347 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தை சேர்ந்தே இருக்கின்ற சாதகர்கள் எப்பொழுதும் அனைத்து திசைகளுக்கும் பரவிச் செல்லுகின்ற ஒளியாகவே இருப்பார்கள். இது வரை பல பிறவிகளாக அவர்களைத் தொடர்ந்து வருகின்ற உச்ச வினைகள் இனிமேல் அவரைத் தொடர்ந்து வராமல் அழிந்து எந்த வினையும் இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு உள்ளிருந்து வேகமாக மேலெழுந்து வருகின்ற ஞானமாகிய ஒளியானது உலகம் முழுவதும் பரந்து விரியும். அதன் பிறகு தம்மை நாடி வரும் தகுதியானவர்களுக்கு அவர்களுடைய மாயையாகிய இருளை அழித்து ஞானமாகிய ஒளியை கொடுக்கின்றவராக சாதகர்கள் இருப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.