பாடல் #1166: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்
மண்ணுடை யாரை மனிதரிற் கூட்டொணாப்
பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறைக் கண்டே.
விளக்கம்:
பாடல் #1165 இல் உள்ளபடி அனைத்தையும் தனது அருட் பார்வையினால் செயல்படுத்துகின்ற இறைவியோடு சேர்ந்து அவளிருக்கும் இடத்திலேயே வீற்றிருக்கும் பேறு பெற்ற சாதகர்கள் மண்ணுலகத்தை தமது இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களோடு ஒன்றாக சேர்ந்து இருக்காமல் தனித்திருந்து உண்மை ஞானத்தை உணர்ந்த பண்பைக் கொண்டவர்களாக இருப்பதால் மண்ணுலகத்தில் நிகழும் எதனாலும் பாதிக்கப்படாமல் விண்ணுலகத்தை தமது இருப்பிடமாகக் கொண்ட தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோர்களை தமது ஞானத்தால் கண்டு கொண்டே இருப்பார்கள்.
