பாடல் #1690

பாடல் #1690: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

தொழு தறிவாளர் சுருதி கண்ணாகப்
பழு தறியாத பரம குருவை
வழி யறிவார் நல்வழி யறிவாள
ரழி வறிவார் மற்றையல்லா தவரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தொழு தறிவாளர சுருதி கணணாகப
பழு தறியாத பரம குருவை
வழி யறிவார நலவழி யறிவாள
ரழி வறிவார மறறையலலா தவரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தொழுது அறிவாளர் சுருதி கண் ஆக
பழுது அறியாத பரம குருவை
வழி அறிவார் நல் வழி அறிவாளர்
அழிவு அறிவார் மற்றை அல்லாத அவரே.

பதப்பொருள்:

தொழுது (இறைவனை பக்தியோடு வணங்கும் முறையை) அறிவாளர் (அறிந்தவர்கள்) சுருதி (இறைவனை அடைவதை மட்டுமே) கண் (குறிக்கோள்) ஆக (ஆகக் கொண்டு இருக்கும் போது இறையருள்)
பழுது (ஒரு குற்றமும்) அறியாத (அறியாத புனிதமான) பரம (இறை நிலையை அடைந்த) குருவை (குருவை அவருக்கு காட்டி அருளும் போது)
வழி (அந்த குருவின் மூலம் இறைவனை அடையும் வழியை) அறிவார் (அறிந்து கொண்டவர்களே) நல் (நல்ல) வழி (வழியை) அறிவாளர் (அறிந்து கொண்ட பக்குவர்கள் ஆவார்கள்)
அழிவு (மீண்டும் மீண்டும் இறந்து பிறப்பதற்கான வழியையே) அறிவார் (அறிவார்கள்) மற்றை (மற்ற உலக வழிகளாகிய) அல்லாத (நல்லது இல்லாத வழியை மட்டுமே) அவரே (அறிந்தவர்கள்).

விளக்கம்:

இறைவனை பக்தியோடு வணங்கும் முறையை அறிந்தவர்கள் இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருக்கும் போது, இறையருள் ஒரு குற்றமும் அறியாத புனிதமான இறை நிலையை அடைந்த குருவை அவருக்கு காட்டி அருளும். அந்த குருவின் மூலம் இறைவனை அடையும் வழியை அறிந்து கொண்டவர்களே நல்ல வழியை அறிந்து கொண்ட பக்குவர்கள் ஆவார்கள். நல்லது இல்லாத மற்ற ஆசைகளின் வழியே போகின்றதை மட்டுமே அறிந்து கொண்டவர்கள் மீண்டும் மீண்டும் இறந்து பிறப்பதற்கான வழியையே அறிந்தவர்கள் ஆவார்கள்.

பாடல் #1691

பாடல் #1691: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

பதைத் தொழிந்தேன் பரமாவுன்னை நாடி
யதைத் தெழுந்தேற் றினியாரோடுங் கூடேன்
சிதைத் தடியேன் வினை சிந்தனைதீர
வுதைத் துடையா யுகந்தாண்டரு ளாயே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பதைத தொழிநதென பரமாவுனனை நாடி
யதைத தெழுநதெற றினியாரொடுங கூடென
சிதைத தடியென வினை சிநதனைதீர
வுதைத துடையா யுகநதாணடரு ளாயெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பதைத்து ஒழிந்தேன் பரமா உன்னை நாடி
அதைத்து எழுந்து ஏற்றி இனி யாரோடும் கூடேன்
சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர
உதைத்து உடையாய் உகந்து ஆண்டு அருளாயே.

பதப்பொருள்:

பதைத்து (உன்னை எப்போது அடைவேன் என்ற துடிதுடிப்பில்) ஒழிந்தேன் (உன்னை அடைவதற்கு தடையாக இருக்கின்ற ஆசைகளை ஒழித்தேன்) பரமா (பரம்பொருளே) உன்னை (உன்னை) நாடி (தேடி)
அதைத்து (அலைந்து திரிந்து) எழுந்து (நீ எழுந்தருளிய இடத்திற்கெல்லாம் சென்று) ஏற்றி (உன்னை போற்றி வணங்கி அடைந்தேன்) இனி (இனி) யாரோடும் (வேறு யாரோடும்) கூடேன் (சேர மாட்டேன். உன்னிடம் மட்டுமே சேருவேன்)
சிதைத்து (நீ கருணை கொண்டு சிதைத்து) அடியேன் (அடியேனுடைய) வினை (நல் வினை தீ வினை ஆகிய இரு வினைகளையும் அழித்து) சிந்தனை (உன்னைத் தவிர வேறு எதிலும் எனது சிந்தனை போகாத படி) தீர (மற்ற அனைத்து சிந்தனைகளும் தீர்ந்து போகும் படி)
உதைத்து (உதைத்து) உடையாய் (அவற்றை உடைந்து போகும் படி செய்ய மாட்டாயா?) உகந்து (அடியேனை மனமுவந்து) ஆண்டு (உன் தொண்டனாக ஆட்கொண்டு) அருளாயே (அருள மாட்டாயா?).

விளக்கம்:

உன்னை எப்போது அடைவேன் என்ற துடிதுடிப்பில் உன்னை அடைவதற்கு தடையாக இருக்கின்ற ஆசைகளை ஒழித்தேன். பரம்பொருளே உன்னை தேடி அலைந்து திரிந்து நீ எழுந்தருளிய இடத்திற்கெல்லாம் சென்று உன்னை போற்றி வணங்கி அடைந்தேன். இனி வேறு யாரோடும் சேர மாட்டேன். உன்னிடம் மட்டுமே சேருவேன். நீ கருணை கொண்டு அடியேனுடைய நல் வினை தீ வினை ஆகிய இரு வினைகளையும் சிதைத்து அழித்து உன்னைத் தவிர வேறு எதிலும் எனது சிந்தனை போகாத படி மற்ற அனைத்து சிந்தனைகளும் தீர்ந்து போகும் படி உதைத்து அவற்றை உடைந்து போகும் படி செய்ய மாட்டாயா? அடியேனை மனமுவந்து உன் தொண்டனாக ஆட்கொண்டு அருள மாட்டாயா?

பாடல் #1692

பாடல் #1692: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேனின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
யிசைக்கின்ற வன்பருக் கீயலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பதைககினற பொதெ பரமெனனும விததை
விதைககினற விததினை மெனினறு நொககிச
சிதைககினற சிநதையைச செவவெ நிறுததி
யிசைககினற வனபருக கீயலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பதைக்கின்ற போதே பரம் என்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல் நின்று நோக்கி
சிதைக்கின்ற சிந்தையை செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே.

பதப்பொருள்:

பதைக்கின்ற (இறைவனை அடைய வேண்டும் என்று துடிதுடிக்கின்ற) போதே (போதே) பரம் (பரம்பொருள்) என்னும் (என்று அறியப்படும்) வித்தை (அனைத்திற்கும் மூல விதையான இறைவன்)
விதைக்கின்ற (அடியவருக்குள் விதைக்கின்ற) வித்தினை (மாயை நீங்கி உணரக்கூடிய இறை சக்தியை குருவின் அருளால்) மேல் (தலை உச்சிக்கு மேல்) நின்று (மூச்சுக்காற்றை எடுத்துச் சென்று) நோக்கி (அங்கே வீற்றிருக்கும் இறை சக்தியை தரிசித்து)
சிதைக்கின்ற (இறைவனை அடைவதற்கு தடையாக வேறு வழிகளில் சிதைந்து போகின்ற) சிந்தையை (சிந்தனைகளை) செவ்வே (சீர்படுத்தி) நிறுத்தி (அவற்றை இறைவன் மேல் மட்டும் எப்போதும் இருக்கும் படி நிறுத்தி)
இசைக்கின்ற (இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற) அன்பருக்கு (பக்குவமுள்ள அன்பர்களுக்கு) ஈயலும் (இறைவன் தமது அருளை கொடுத்து) ஆமே (அருளுவான்).

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டும் என்று துடிதுடிக்கின்ற போதே பரம்பொருள் என்று அறியப்படும் அனைத்திற்கும் மூல விதையான இறைவன் அடியவருக்குள் விதைக்கின்ற மாயை நீங்கி உணரக்கூடிய இறை சக்தியை குருவின் அருளால் தலை உச்சிக்கு மேல் மூச்சுக்காற்றை எடுத்துச் சென்று அங்கே வீற்றிருக்கும் இறை சக்தியை தரிசித்து இறைவனை அடைவதற்கு தடையாக வேறு வழிகளில் சிதைந்து போகின்ற சிந்தனைகளை சீர்படுத்தி அவற்றை இறைவன் மேல் மட்டும் எப்போதும் இருக்கும் படி நிறுத்தி இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற பக்குவமுள்ள அன்பர்களுக்கு இறைவன் தமது அருளை கொடுத்து அருளுவான்.

பாடல் #1693

பாடல் #1693: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

கொள்ளினு நல்ல குருவினைக் கொள்ளுக
வுள்ள பொருளுட லாவி யுடனீய்க
எள்ளத் தனையு மிடைவிடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொளளினு நலல குருவினைக கொளளுக
வுளள பொருளுட லாவி யுடனீயக
எளளத தனையு மிடைவிடா தெநினறு
தெளளி யறிய சிவபதந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கொள்ளினும் நல்ல குருவினை கொள்ளுக
உள்ளம் பொருள் உடல் ஆவி உடன் ஈய்க
எள் அத் தனையும் இடை விடாதே நின்று
தெள்ளி அறிய சிவ பதம் தானே.

பதப்பொருள்:

கொள்ளினும் (ஏற்றுக் கொண்டாலும்) நல்ல (ஒரு நல்ல) குருவினை (குருவை) கொள்ளுக (தேடி ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்)
உள்ளம் (உங்களுடைய உள்ளம்) பொருள் (பொருளாகிய ஆன்மா) உடல் (உடல்) ஆவி (ஆவியாகிய உயிர்) உடன் (ஆகிய நான்கும் சேர்ந்து) ஈய்க (குருவிற்கே உடமையாக கொடுத்து சரணாகதியாகி விடுங்கள்)
எள் (எள்) அத் (அதனுடைய சிறிய) தனையும் (அளவிற்கு கூட) இடை (சிறிதளவும் மனம் தவற) விடாதே (விடாமல்) நின்று (குருவிடமே சரணாகதியாக நின்று)
தெள்ளி (குருவின் அருளால் உண்மை ஞானத்தை தெளிவாக) அறிய (அறிந்து கொண்டால்) சிவ (இறைவனின்) பதம் (திருவடியை) தானே (நீங்கள் அடையலாம்).

விளக்கம்:

ஏற்றுக் கொண்டாலும் ஒரு நல்ல குருவை தேடி ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய உள்ளம் பொருளாகிய ஆன்மா உடல் ஆவியாகிய உயிர் ஆகிய நான்கும் சேர்ந்து குருவிற்கே உடமையாக கொடுத்து சரணாகதியாகி விடுங்கள். எள்ளின் அளவிற்கு கூட சிறிதளவும் மனம் தவற விடாமல் குருவிடமே சரணாகதியாக நின்று குருவின் அருளால் உண்மை ஞானத்தை தெளிவாக அறிந்து கொண்டால் இறைவனின் திருவடியை நீங்கள் அடையலாம்.

பாடல் #1694

பாடல் #1694: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

சோதி விசாகந் தொடர்ந்திருந் தேள்நண்டு
வோதிய நாளே யுணர்வது தானென்று
நீதியு ணீர்மை நினைந்தவர்க் கல்லது
வாதியு மேது மறியகி லானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சொதி விசாகந தொடரநதிருந தெளநணடு
வொதிய நாளெ யுணரவது தானெனறு
நீதியு ணீரமை நினைநதவரக கலலது
வாதியு மெது மறியகி லானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சோதி விசாகம் தொடர்ந்து இரும் தேள் நண்டு
ஓதிய நாளே உணர்வது தான் என்று
நீதி உள் நீர்மை நினைந்தவர்க்கு அல்லது
ஆதியும் ஏதும் அறிய கிலானே.

பதப்பொருள்:

சோதி (பௌர்ணமி அன்று) விசாகம் (விசாக நட்சத்திரம் வருகின்ற நாளில் இருந்து) தொடர்ந்து (ஆரம்பித்து) இரும் (அடுத்து வருகின்ற) தேள் (விருச்சிக இராசியிலிருந்து) நண்டு (கடக இராசி வரை உள்ள நாள்களில்)
ஓதிய (குருவிடமிருந்து பெற்ற மந்திரத்தை ஓதிக் கொண்டு இருந்தால்) நாளே (ஒரு நாளில்) உணர்வது (உணர்ந்து கொள்ள முடியும்) தான் (தாமாக இருப்பது) என்று (இறைவனே என்று)
நீதி (அதன் பிறகு இதுவரை தாம் செய்கின்ற அனைத்து செயல்களுக்கு) உள் (உள்ளும்) நீர்மை (இறைவனே இருந்து செய்கின்றான் என்பதை உணர்ந்து தான் என்கின்ற தன்மை) நினைந்தவர்க்கு (இல்லாமல் இறைவனை நினைக்க முடிந்தவர்களைத்) அல்லது (தவிர வேறு யாருக்கும்)
ஆதியும் (இறைவன் முதலாகிய) ஏதும் (அனைத்து உண்மைகளையும்) அறிய (அறிந்து கொள்ளுவது) கிலானே (இயலாது).

விளக்கம்:

பௌர்ணமி அன்று விசாக நட்சத்திரம் வருகின்ற நாளில் இருந்து ஆரம்பித்து அடுத்து வருகின்ற விருச்சிக இராசியிலிருந்து கடக இராசி வரை உள்ள நாள்களில் குருவிடமிருந்து பெற்ற மந்திரத்தை ஓதிக் கொண்டு இருந்தால் ஒரு நாளில் தாமாக இருப்பது இறைவனே என்று உணர்ந்து கொள்ள முடியும். அதன் பிறகு இதுவரை தாம் செய்கின்ற அனைத்து செயல்களுக்கு உள்ளேயும் இறைவனே இருந்து செய்கின்றான் என்பதை உணர்ந்து தான் என்கின்ற தன்மை இல்லாமல் இறைவனை நினைக்க முடிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் இறைவன் முதலாகிய அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ளுவது இயலாது.

பாடல் #1695

பாடல் #1695: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

தொழிலார மாமணி தூயான சிந்தை
யெழிலா ரிறைவ னிடங்கொண்ட போத
வழலார் விறகாம் வினையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தொழிலார மாமணி தூயான சிநதை
யெழிலா ரிறைவ னிடஙகொணட பொத
வழலார விறகாம வினையது பொகக
கழலார திருவடி கணடரு ளாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தொழில் ஆர மா மணி தூய் ஆன சிந்தை
எழில் ஆர் இறைவன் இடம் கொண்ட போதம்
அழல் ஆர் விறகு ஆம் வினை அது போக
கழல் ஆர் திரு அடி கண்டு அருள் ஆமே.

பதப்பொருள்:

தொழில் (இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செய்கின்ற சாதகத்தில்) ஆர (முழுமை பெற வேண்டுமென்றால்) மா (மாபெரும்) மணி (மணியாக இருக்கின்ற இறைவனின் மேல் தமது சிந்தனைகளை வைத்து அவனருளால்) தூய் (தூய்மையாக) ஆன (ஆகி விட்ட) சிந்தை (சிந்தனையோடு)
எழில் (பேரழகு) ஆர் (நிறைந்து இருக்கின்ற) இறைவன் (இறைவன்) இடம் (வீற்று) கொண்ட (இருக்கின்ற) போதம் (குருவிடமிருந்து தாம் பெற்ற போதனைகளை கடை பிடித்தால்)
அழல் (நெருப்பில்) ஆர் (மூடிய) விறகு (விறகு கட்டையும் எரிந்து நெருப்பாகவே) ஆம் (ஆகி விடுவது போல) வினை (தம்முடைய வினைகள்) அது (அனைத்தும்) போக (தம்மை விட்டு விலகி அழிந்து போய் விடும்)
கழல் (அதன் பிறகு சிலம்புகளை அணிந்து) ஆர் (பேரழகோடு இருக்கும்) திரு (இறைவனின் திரு) அடி (அடிகளை) கண்டு (தரிசித்து) அருள் (அவனது அருளை) ஆமே (பெறலாம்).

விளக்கம்:

இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செய்கின்ற சாதகத்தில் முழுமை பெற வேண்டுமென்றால், மாபெரும் மணியாக இருக்கின்ற இறைவனின் மேல் தமது சிந்தனைகளை வைத்து அவனருளால் தூய்மையாக ஆகி விட்ட சிந்தனையோடு பேரழகு நிறைந்து இருக்கின்ற இறைவன் வீற்றிருக்கின்ற குருவிடமிருந்து தாம் பெற்ற போதனைகளை கடை பிடித்தால், நெருப்பில் மூடிய விறகு கட்டையும் எரிந்து நெருப்பாகவே ஆகி விடுவது போல தம்முடைய வினைகள் அனைத்தும் தம்மை விட்டு விலகி அழிந்து போய் விடும். அதன் பிறகு சிலம்புகளை அணிந்து பேரழகோடு இருக்கும் இறைவனின் திருவடிகளை தரிசித்து அவனது அருளை பெறலாம்.

பாடல் #1696

பாடல் #1696: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

சாத்திக னாய்ப்பல தத்துவந் தானுன்னி
யாத்திக வேதநெறி தோற்ற மாகியே
யார்த்த பிறவியி னஞ்சி யறனெறி
சாத்தவல் லானவனே சற்சீட னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாததிக னாயபபல தததுவந தானுனனி
யாததிக வெதநெறி தொறற மாகியெ
யாரதத பிறவியி னஞசி யறனெறி
சாததவல லானவனெ சறசீட னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாத்திகன் ஆய் பல தத்துவம் தான் உன்னி
ஆத்திக வேத நெறி தோற்றம் ஆகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அற நெறி
சாத்த வல்லான் அவனே சற் சீடன் ஆமே.

பதப்பொருள்:

சாத்திகன் (நன்மை தீமை எது நடந்தாலும் அதனால் பாதிக்கப் படாமல் சாத்வீக) ஆய் (குணத்தோடு) பல (குருநாதர் அருளிய பல) தத்துவம் (தத்துவங்களை) தான் (தனது) உன்னி (மனதிற்குள் வைத்து நினைத்து தியானித்து)
ஆத்திக (இறைவன் உண்டு என்று நம்பி அவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு) வேத (அதற்காக வேதம் சொல்லுகின்ற) நெறி (வழிமுறைக்கான) தோற்றம் (தோற்றமாகிய தவ வேடமாகவே) ஆகியே (தாம் ஆகி)
ஆர்த்த (வினைகளின் பயனால் கிடைக்கப் பெற்ற இந்த) பிறவியின் (பிறவிக்கும் இனி எடுக்கப் போகின்ற பிறவிகளுக்கும்) அஞ்சி (பயந்து) அற (இனி பிறவியே எடுக்காமல் இருப்பதற்கு வேண்டிய தர்மத்தின்) நெறி (வழிமுறையை கடை பிடித்து)
சாத்த (தமது ஆசைகள் பற்றுக்கள் அனைத்தையும் குருவிடம் சரணடைந்து சமர்ப்பிக்க) வல்லான் (முடிந்தவன் எவனோ) அவனே (அவனே) சற் (சிறந்த உண்மையான) சீடன் (சீடன்) ஆமே (ஆவான்).

விளக்கம்:

நன்மை தீமை எது நடந்தாலும் அதனால் பாதிக்கப் படாமல் சாத்வீக (சாந்தம் / அமைதி) குணத்தோடு குருநாதர் அருளிய பல தத்துவங்களை தனது மனதிற்குள் வைத்து நினைத்து தியானித்து, இறைவன் உண்டு என்று நம்பி அவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அதற்காக வேதம் சொல்லுகின்ற வழிமுறைக்கான தோற்றமாகிய தவ வேடமாகவே தாம் ஆகி, வினைகளின் பயனால் கிடைக்கப் பெற்ற இந்த பிறவிக்கும் இனி எடுக்கப் போகின்ற பிறவிகளுக்கும் பயந்து இனி பிறவியே எடுக்காமல் இருப்பதற்கு வேண்டிய தர்மத்தின் வழிமுறையை கடை பிடித்து, தமது ஆசைகள் பற்றுக்கள் அனைத்தையும் குருவிடம் சரணடைந்து சமர்ப்பிக்க முடிந்தவன் எவனோ அவனே சிறந்த உண்மையான சீடன் ஆவான்.

பாடல் #1697

பாடல் #1697: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

சத்து மசத்துமெவ் வாறெனத் தானுன்னிச்
சித்தை யுருக்கிச் சிவனருள் கைகாட்டப்
பத்தியில் ஞானம் பெறப்பணிந் தானந்தச்
சத்தியி லிச்சை தருவோன்சற் சீடனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சதது மசததுமெவ வாறெனத தானுனனிச
சிததை யுருககிச சிவனருள கைகாடடப
பததியில ஞானம பெறபபணிந தானநதச
சததியி லிசசை தருவொனசற சீடனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தும் அசத்தும் எவ்வாறு என தான் உன்னி
சித்தை உருக்கி சிவன் அருள் கை காட்ட
பத்தியில் ஞானம் பெற பணிந்து ஆனந்த
சத்தியில் இச்சை தருவோன் சற் சீடனே.

பதப்பொருள்:

சத்தும் (நிலையானதும்) அசத்தும் (நிலை இல்லாததும்) எவ்வாறு (எவ்வாறு இருக்கின்றது) என (என்பதை) தான் (தனக்குள்ளேயே) உன்னி (ஆராய்ந்து அறிந்து நிலையான இறைவனை உணர்ந்து)
சித்தை (அவன் மேல் உண்மையான அன்பினால்) உருக்கி (உருகும் போது) சிவன் (இறைவன்) அருள் (தனது திருவருளால்) கை (ஒரு உண்மையான குருவினை) காட்ட (காட்டி அருள)
பத்தியில் (அந்த குருவின் மீது கொண்ட பக்தியின் மூலம்) ஞானம் (உண்மை ஞானத்தை) பெற (பெறுவதற்கு) பணிந்து (அவரது திருவடிகளை பணிந்து) ஆனந்த (குருவின் அருளால் கிடைக்கின்ற பேரானந்த)
சத்தியில் (சக்தியே) இச்சை (வேண்டும் என்று) தருவோன் (தன்னையே முழுவதுமாக குருவிடம் ஒப்படைத்து தருபவனே) சற் (உண்மையான) சீடனே (சீடன் ஆவான்).

விளக்கம்:

நிலையானதும் நிலை இல்லாததும் எவ்வாறு இருக்கின்றது என்பதை தனக்குள்ளேயே ஆராய்ந்து அறிந்து, நிலையான இறைவனை உணர்ந்து அவன் மேல் உண்மையான அன்பினால் உருகும் போது, இறைவன் தனது திருவருளால் ஒரு உண்மையான குருவினை காட்டி அருளுவான். அப்படி இறைவன் காட்டி அருளிய குருவின் மீது கொண்ட பக்தியின் மூலம் உண்மை ஞானத்தை பெறுவதற்கு அவரது திருவடிகளை பணிந்து, அந்த குருவின் அருளால் கிடைக்கின்ற பேரானந்த சக்தியே வேண்டும் என்று தன்னையே முழுவதுமாக குருவிடம் ஒப்படைத்து தருபவனே உண்மையான சீடன் ஆவான்.

பாடல் #1698

பாடல் #1698: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

அடிவைத் தருளுதி யாசானின் றென்னாய்
வடிவைத்த மாமுடி மாயாப் பிறவி
யடிவைத்த காய வருட்சத்தி யாலே
யடிபெற்ற ஞானத்த னாசற்று ளானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அடிவைத தருளுதி யாசானின றெனனாய
வடிவைதத மாமுடி மாயாப பிறவி
யடிவைதத காய வருடசததி யாலெ
யடிபெறற ஞானதத னாசறறு ளானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அடி வைத்து அருளுதி ஆசான் நின்று என் ஆய்
அடி வைத்த மா முடி மாயா பிறவி
அடி வைத்த காய அருள் சத்தி ஆலே
அடி பெற்ற ஞானத்தன் ஆசு அற்று உளானே.

பதப்பொருள்:

அடி (தங்களின் திருவடியை) வைத்து (என் தலை மீது வைத்து) அருளுதி (அருளுங்கள்) ஆசான் (குருநாதரே) நின்று (என்று வேண்டி நிற்கின்ற) என் (தனது) ஆய் (உடல் பொருள் ஆவியெல்லாம் குருவிற்கே உடமையாக்கிய சீடனின்)
அடி (வேண்டுகோளுக்கு இணங்கி அதன் படியே திருவடியை) வைத்த (வைத்த) மா (மாபெரும்) முடி (தலைவனாகிய இறைவனாகவே இருக்கின்ற குருவின் திருவருளால்) மாயா (மாயையாகிய) பிறவி (பிறவி நீங்கப் பெற்று)
அடி (அவரின் திருவடியை) வைத்த (வைத்த) காய (சீடனின் உடல்) அருள் (இறைவனது திருவருள்) சத்தி (சக்தியின்) ஆலே (மூலம் முழுமையடையும் போது)
அடி (குருவின் திருவடியினால்) பெற்ற (பெற்ற) ஞானத்தன் (ஞானத்தினால் உண்மை ஞானியாகி) ஆசு (ஒரு குற்றமும்) அற்று (இல்லாமல்) உளானே (இருப்பவனே உண்மையான சீடன் ஆவான்).

விளக்கம்:

தங்களின் திருவடியை என் தலை மீது வைத்து அருளுங்கள் குருநாதரே என்று வேண்டி நிற்கின்ற, தனது உடல் பொருள் ஆவியெல்லாம் குருவிற்கே உடமையாக்கிய சீடனின் வேண்டுகோளுக்கு இணங்கி, அதன் படியே திருவடியை வைத்த மாபெரும் தலைவனாகிய இறைவனாகவே இருக்கின்ற குருவின் திருவருளால் மாயையாகிய பிறவி நீங்கப் பெற்று, அவரின் திருவடியை வைத்த சீடனின் உடல் இறைவனது திருவருள் சக்தியின் மூலம் முழுமையடையும் போது, குருவின் திருவடியினால் பெற்ற ஞானத்தினால் உண்மை ஞானியாகி, ஒரு குற்றமும் இல்லாமல் இருப்பவனே உண்மையான சீடன் ஆவான்.

பாடல் #1699

பாடல் #1699: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

சீராரு ஞானத்தி னிச்சை செலச்செல
வாராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதக நான்குந்தன் பாலுற்றா
ராராயு ஞானத்த னாமடிவைக் கவே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சீராரு ஞானததி னிசசை செலசசெல
வாராத காதல குருபரன பாலாகச
சாராத சாதக நானகுநதன பாலுறறா
ராராயு ஞானதத னாமடிவைக கவெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சீர் ஆரும் ஞானத்தின் இச்சை செல செல
வாராத காதல் குரு பரன் பால் ஆக
சாராத சாதக நான்கும் தன் பால் உற்றார்
ஆராயும் ஞானத்தன் ஆம் அடி வைக்கவே.

பதப்பொருள்:

சீர் (சீரும் சிறப்பும்) ஆரும் (மிகுந்து இருக்கின்ற) ஞானத்தின் (உண்மையான ஞானத்தை பெற்றதால்) இச்சை (உலக பற்றுக்களின் மேல் இருந்த ஆசைகள்) செல (விலகிப் போக) செல (விலகிப் போக)
வாராத (அவற்றின் மேல் இனி வராத) காதல் (பற்றானது) குரு (குருநாதர்) பரன் (இறைநிலையில் இருக்கின்றவரின்) பால் (மேல்) ஆக (கூடி வர)
சாராத (இதுவரை தமது கைக்கு சரிவர கிடைக்காத) சாதக (சாதகங்கள்) நான்கும் (சாந்தி, தாந்தி, உபாதனை, தீட்சை ஆகிய நான்கும்) தன் (தமது) பால் (கைவசப் படும்படி) உற்றார் (பேறு பெற்று)
ஆராயும் (அக புற ஆராய்ச்சியின் மூலம்) ஞானத்தன் (ஞானத்தின் உச்ச நிலைக்கு சென்று கொண்டே இருப்பார்) ஆம் (சாதகர்) அடி (தமது தலையின் மேல் குருநாதரின் திருவடிகள்) வைக்கவே (வைத்த பொழுதிலிருந்து).

விளக்கம்:

பாடல் #1698 இல் உள்ளபடி குருவின் திருவடியினால் பெற்ற ஞானத்தினால் உண்மை ஞானியாகிய சாதகரிடம் இதுவரை உலக பற்றுக்களின் மேல் இருந்த ஆசைகள் விலகிப் போக விலகிப் போக அவற்றின் மேல் இனி பற்று வராது. அந்த பற்றானது இறைநிலையில் இருக்கின்ற தமது குருநாதரின் மேலேயே அதிகமாக கூடி வரும். அதன் பிறகு இதுவரை அவரது கைக்கு சரிவர கிடைக்காத சாந்தி, தாந்தி, உபாதனை, தீட்சை ஆகிய நான்கு விதமான சாதகங்களும் அவரது கைவசப் படும்படி பேறு பெறுவார். அதன் பிறகு அக (உள்ளுக்குள்ளும்) புற (வெளியிலும்) ஆராய்ச்சியின் மூலம் ஞானத்தின் உச்ச நிலைக்கு சென்று கொண்டே இருப்பார்.

நான்கு விதமான சாதகங்கள்:

  1. சாந்தி – அசைவற்ற நிலையில் சாதகம் செய்தல் / பேரமைதி
  2. தாந்தி – எண்ணங்களற்ற நிலையில் சாதகம் செய்தல் / மன அடக்கம்
  3. உபாதனை – வினைகளை சாதகம் செய்து எரித்து தீர்த்தல்
  4. தீட்சை – சந்தேகம் வரும் போது சாதகத்தின் மூலம் ஒரு கண நேரத்தில் குரு வார்த்தை கேட்டல்

மேலுள்ள நான்கு விதமான சாதகங்களைப் பற்றிய குறிப்புகள் சுவடியில் உள்ளது.