பாடல் #1495

பாடல் #1495: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

மேவிய சற்புத்திர மார்க மெய்த்தொழில்
தாவிப் பதாஞ்சக மார்கஞ் சகத்தொழி
லாவ திரண்டு மகன்று சகமார்கத்
தேவியோ டொன்றல் சன்மார்கத் தெளிவே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெவிய சறபுததிர மாரக மெயததொழில
தாவிப பதாஞசக மாரகஞ சகததொழி
லாவ திரணடு மகனறு சகமாரகத
தெவியொ டொனறல சனமாரகத தெளிவெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேவிய சற் புத்திர மார்கம் மெய் தொழில்
தாவிப்பது ஆம் சக மார்கம் சக தொழில்
ஆவது இரண்டும் அகன்று சக மார்க
தேவியோடு ஒன்றல் சன் மார்க தெளிவே.

பதப்பொருள்:

மேவிய (உறவினால்) சற் (உண்மையான தந்தையாக இறைவனையும்) புத்திர (அவருக்கு பிள்ளையாக தம்மையும் பாவிக்கின்ற) மார்கம் (வழி முறையானது) மெய் (உடலால் செய்கின்ற) தொழில் (அனைத்து விதமான செயல்கள் மற்றும்)
தாவிப்பது (சரியாக செய்ய வைக்க) ஆம் (இறை சக்தி உடனிருந்து) சக (தோழமை) மார்கம் (வழி முறையில்) சக (மனதுடன் எப்போதும் சேர்ந்து இருந்து செய்கின்ற) தொழில் (அனைத்து விதமான செயல்கள்)
ஆவது (ஆகிய இந்த) இரண்டும் (இரண்டு விதமான செயல்களையும் நாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணமும் நமது உடலும் மனமும் இவற்றை செய்கின்றன என்கின்ற எண்ணமும்) அகன்று (நீங்கும் படி செய்து) சக (தோழமை) மார்க (வழி முறையில்)
தேவியோடு (தம்மோடு எப்போதும் தொடர்ந்து வருகின்ற இறை சக்தியோடு) ஒன்றல் (ஒன்றாக சேர்ந்து அனைத்தையும் இறை சக்தியே செய்கிறது என்கின்ற எண்ணத்தில் இருப்பதே) சன் (உண்மை) மார்க (வழி முறையில் மேன்மையான நிலையில்) தெளிவே (கிடைக்கின்ற தெளிவு ஆகும்).

விளக்கம்:

உறவினால் உண்மையான தந்தையாக இறைவனையும் அவருக்கு பிள்ளையாக தம்மையும் பாவிக்கின்ற வழி முறையானது உடலால் செய்கின்ற அனைத்து விதமான செயல்கள் மற்றும் சரியாக செய்ய வைக்க இறை சக்தி உடனிருந்து தோழமை வழி முறையில் மனதுடன் எப்போதும் சேர்ந்து இருந்து செய்கின்ற அனைத்து விதமான செயல்கள் ஆகிய இந்த இரண்டு விதமான செயல்களையும் நாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணமும், நமது உடலும் மனமும் இவற்றை செய்கின்றன என்கின்ற எண்ணமும் நீங்கும் படி செய்து, தோழமை வழி முறையில் தம்மோடு எப்போதும் தொடர்ந்து வருகின்ற இறை சக்தியோடு ஒன்றாக சேர்ந்து அனைத்தையும் இறை சக்தியே செய்கிறது என்கின்ற எண்ணத்தில் இருப்பதே உண்மை வழி முறையில் மேன்மையான நிலையில் கிடைக்கின்ற தெளிவு ஆகும்.

பாடல் #1496

பாடல் #1496: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

பூசித்தல் வாசித்தல் போற்றல் சேவித்திட
லாசற்ற நற்றவம் வாய்மை யழுக்கின்மை
நேசித்திட் டன்னமு நீர்சுத்தி செய்தல்மற்
றாசற்றல் சற்புத்திர மார்க மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பூசிததல வாசிததல பொறறல செவிததிட
லாசறற நறறவம வாயமை யழுககினமை
நெசிததிட டனனமு நீரசுததி செயதலமற
றாசறறல சறபுததிர மாரக மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பூசித்தல் வாசித்தல் போற்றல் சேவித்திடல்
ஆசு அற்ற நல் தவம் வாய்மை அழுக்கு இன்மை
நேசித்து இட்ட அன்னமும் நீர் சுத்தி செய்தல் மற்று
ஆசு அற்றல் சற் புத்திர மார்கம் ஆமே.

பதப்பொருள்:

பூசித்தல் (பூஜை செய்தல்) வாசித்தல் (மந்திரங்களை பாடுதல்) போற்றல் (போற்றி வணங்குதல்) சேவித்திடல் (தரிசனம் செய்தல்)
ஆசு (குற்றம்) அற்ற (இல்லாத) நல் (நன்மையான) தவம் (தவத்தை மேற்கொள்ளுதல்) வாய்மை (உண்மையே பேசுதல்) அழுக்கு (அழுக்கு) இன்மை (இல்லாமல் சுற்றுப் புறத்தையும் தம்மையும் சுத்தமாக வைத்தல்)
நேசித்து (அன்போடு) இட்ட (சமைத்து வைத்த) அன்னமும் (உணவை நைவேத்யமாக படைத்தல்) நீர் (நீரினால்) சுத்தி (சுத்தம்) செய்தல் (செய்து சமர்ப்பணம் செய்தல்) மற்று (ஆகிய இவை அனைத்தையும்)
ஆசு (தாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணம்) அற்றல் (இல்லாமல் இருந்து செய்வதே) சற் (உண்மையான தந்தையாக இறைவனையும்) புத்திர (அவரின் பிள்ளையாக தன்னையும் பாவித்து) மார்கம் (அவனை அடைகின்ற வழி முறை) ஆமே (ஆகும்).

விளக்கம்:

இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவருக்கு பூஜை செய்தல், மந்திரங்களை பாடுதல், போற்றி வணங்குதல், தரிசனம் செய்தல், குற்றம் இல்லாத நன்மையான தவத்தை மேற்கொள்ளுதல், உண்மையே பேசுதல், அழுக்கு இல்லாமல் சுற்றுப் புறத்தையும் தம்மையும் சுத்தமாக வைத்தல், அன்போடு சமைத்து வைத்த உணவை நைவேத்யமாக படைத்தல், நீரினால் சுத்தம் செய்து சமர்ப்பணம் செய்தல் ஆகிய இவை அனைத்தையும் தாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணம் இல்லாமல் இருந்து செய்வதே இறைவனின் பிள்ளையாக தன்னை பாவித்து அவனை அடைகின்ற வழி முறை ஆகும்.

பாடல் #1497

பாடல் #1497: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

அறுகாற் பறவை யலர்தேர்ந் துழலு
மறுகால் நரையன்னந் தாமரை நீலங்
குறுகார் நறுமலர் கொய்வன கண்டுஞ்
சிறுகா லரனெறி செல்லுகி லாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறுகாற பறவை யலரதெரந துழலு
மறுகால நரையனனந தாமரை நீலங
குறுகார நறுமலர கொயவன கணடுஞ
சிறுகா லரனெறி செலலுகி லாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறு கால் பறவை அலர் தேர்ந்து உழலும்
மறு கால் நரை அன்னம் தாமரை நீலம்
குறுகார் நறு மலர் கொய்வன கண்டும்
சிறு கால் அரன் நெறி செல்லு கிலாரே.

பதப்பொருள்:

அறு (ஆறு) கால் (கால்களைக் கொண்ட) பறவை (தேனீக்கள்) அலர் (தேனுள்ள மகரந்த மலர்களை) தேர்ந்து (ஆராய்ந்து தேடி) உழலும் (அலைந்து தேனை சேகரிப்பதையும்)
மறு (இன்னொரு) கால் (வகையில்) நரை (வெள்ளை நிறத்தில் உள்ள) அன்னம் (அன்னப் பறவைகள்) தாமரை (தாமரை மலர்களையும்) நீலம் (நீலோற்பல மலர்களையும் தேடிச் சென்று அதன் தண்டுகளில் இருக்கும் பாலை சேகரிப்பதையும்)
குறுகார் (இறைவனின் அடியவர்கள்) நறு (நறுமணம் மிக்க) மலர் (மலர்களை) கொய்வன (கொய்து மாலையாக கோர்த்து இறைவனுக்கு சாற்றி வணங்கி அருளை சேகரிப்பதையும்) கண்டும் (பார்த்தும்)
சிறு (சிறுது) கால் (காலம் கூட) அரன் (தமக்கு தந்தை போல அரனாக இருக்கின்ற இறைவனின்) நெறி (அருளைப் பெறும் வழியில்) செல்லு (செல்லாமல்) கிலாரே (இருக்கின்றார்கள்).

விளக்கம்:

ஆறு கால்களைக் கொண்ட தேனீக்கள் தேனுள்ள மகரந்த மலர்களை ஆராய்ந்து தேடி அலைந்து தேனை சேகரிப்பதையும் இன்னொரு வகையில் வெள்ளை நிறத்தில் உள்ள அன்னப் பறவைகள் தாமரை மலர்களையும் நீலோற்பல மலர்களையும் தேடிச் சென்று அதன் தண்டுகளில் இருக்கும் பாலை சேகரிப்பதையும் இறைவனின் அடியவர்கள் நறுமணம் மிக்க மலர்களை கொய்து மாலையாக கோர்த்து இறைவனுக்கு சாற்றி வணங்கி அருளை சேகரிப்பதையும் பார்த்தும் சிறுது காலம் கூட தமக்கு தந்தை போல அரனாக இருக்கின்ற இறைவனின் அருளைப் பெறும் வழியில் செல்லாமல் இருக்கின்றார்கள்.

பாடல் #1498

பாடல் #1498: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

அருங்கரை யாவது அவ்வடி நீழல்
பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணை
வருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லா
மொருங்கரை வாயுல கேழினொத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அருஙகரை யாவது அவவடி நீழல
பெருஙகரை யாவது பிஞஞக னாணை
வருஙகரை யெகினற மனனுயிரக கெலலா
மொருஙகரை வாயுல கெழினொத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அரும் கரை ஆவது அவ் அடி நீழல்
பெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை
வரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம்
ஒரும் கரை ஆய் உலகு ஏழின் ஒத்தானே.

பதப்பொருள்:

அரும் (சென்று சேருவதற்கு மிகவும் அரியதான) கரை (எல்லையாக) ஆவது (இருப்பது) அவ் (இறைவனின்) அடி (திருவடிகளின்) நீழல் (நிழலாகும்)
பெரும் (பிறப்பு இல்லாத மாபெரும் நிலையை) கரை (பெறுகின்ற எல்லையாக) ஆவது (இருப்பது) பிஞ்ஞகன் (பிறை நிலாவை சூடிக்கொண்டு இருக்கும் இறைவனின்) ஆணை (ஆணைகளாகும்)
வரும் (தத்தமது வினைகளுக்கு ஏற்றபடி வருகின்ற கர்மங்களின்) கரை (எல்லைகளுக்கு) ஏகின்ற (ஏற்றபடி இந்த உலகத்தில்) மன் (நிலை பெற்று வாழுகின்ற) உயிர்க்கு (உயிர்களுக்கு) எல்லாம் (எல்லாம்)
ஒரும் (அவற்றின் வினைகளை தீர்த்துக் கொண்டு சென்று சேரும்) கரை (கரையாக) ஆய் (இருக்கின்ற) உலகு (உலகங்கள்) ஏழின் (ஏழு விதத்திற்கும்) ஒத்தானே (ஒத்து இருக்கின்ற தந்தையாக இறைவனே இருக்கின்றான்).

விளக்கம்:

சென்று சேருவதற்கு மிகவும் அரியதான எல்லையாக இருப்பது இறைவனின் திருவடிகளின் நிழலாகும். பிறை நிலாவை சூடிக்கொண்டு இருக்கும் இறைவனின் ஆணைகளே பிறப்பு இல்லாத மாபெரும் நிலையை பெறுகின்ற எல்லையாக இருக்கின்றன. தத்தமது வினைகளுக்கு ஏற்றபடி வருகின்ற கர்மங்களின் எல்லைகளுக்கு ஏற்றபடி இந்த உலகத்தில் நிலை பெற்று வாழுகின்ற உயிர்களுக்கு எல்லாம் அவற்றின் வினைகளை தீர்த்துக் கொண்டு சென்று சேரும் கரையாக இருக்கின்ற உலகங்கள் ஏழு விதத்திற்கும் ஒத்து இருக்கின்ற தந்தையாக இறைவனே இருக்கின்றான்.

கருத்து:

உயிர்கள் தங்களின் கர்மங்களை தீர்த்துக் கொள்ளவே ஏழு விதமான உலகங்களிலும் தத்தமது வினைகளுக்கு ஏற்ப பிறவிகள் எடுத்துக் கொண்டே இருக்கின்றன. இந்த ஏழு விதமான உலகங்களிலும் எடுக்கின்ற அனைத்து பிறவிகளிலும் தந்தையாக இருந்து காக்கின்ற இறைவனே முக்தி எனும் எல்லையாகவும் இருக்கின்றான்.

பாடல் #1499

பாடல் #1499: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

உயர்ந்து பணிந்து முகந்துந் தழுவி
வியந்து மரனடிக் கைமுறை செய்யின்
பயந்தும் பிறவிப் பயனது வாகும்
பயந்தும் பரிக்கிற் பான்நன்மையி னாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உயரநது பணிநது முகநதுந தழுவி
வியநது மரனடிக கைமுறை செயயின
பயநதும பிறவிப பயனது வாகும
பயநதும பரிககிற பானநனமையி னாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உயர்ந்து பணிந்தும் உகந்தும் தழுவி
வியந்தும் அரன் அடி கை முறை செய்யின்
பயந்தும் பிறவி பயன் அது ஆகும்
பயந்தும் பரிக்கில் பான் நன்மையின் ஆகுமே.

பதப்பொருள்:

உயர்ந்து (ஒழுக்கத்தில் உயர்ந்து நின்றும்) பணிந்தும் (இறைவனின் திருவடிகளை பணிந்து தொழுதும்) உகந்தும் (அவனுக்கு செய்கின்ற பணிவிடைகளை விரும்பி செய்தும்) தழுவி (இறைவனின் திருவுருவத்தை தழுவிக் கொண்டும்)
வியந்தும் (அதனால் கிடைக்கின்ற இறையனுபவத்தால் வியப்பு அடைந்தும்) அரன் (இறைவனின்) அடி (திருவடிகளுக்கு) கை (தமது கைகளால்) முறை (தொண்டுகளை) செய்யின் (செய்தால்)
பயந்தும் (கிடைக்கின்ற) பிறவி (பிறவிக்கான) பயன் (மேலான பயனாக) அது (அந்த) ஆகும் (தொண்டே இருக்கும்)
பயந்தும் (கிடைத்த அருளினால்) பரிக்கில் (இறைவனை தந்தையாக பாவித்து தொடர்ந்து அந்த தொண்டுகளை செய்து கொண்டே வந்தால்) பான் (தந்தையாக இருந்து அதை செய்ய வைக்கின்ற இறைவனே) நன்மையின் (அதனால் கிடைக்கின்ற அனைத்து நன்மையாகவும்) ஆகுமே (இருக்கின்றான்).

விளக்கம்:

ஒழுக்கத்தில் உயர்ந்து நின்றும் இறைவனின் திருவடிகளை பணிந்து தொழுதும் அவனுக்கு செய்கின்ற பணிவிடைகளை விரும்பி செய்தும் இறைவனின் திருவுருவத்தை தழுவிக் கொண்டும் அதனால் கிடைக்கின்ற இறையனுபவத்தால் வியப்படைந்தும் இறைவனின் திருவடிகளுக்கு தமது கைகளால் தொண்டுகளை செய்தால் அந்த தொண்டே தாம் எடுத்த பிறவிக்கு கிடைக்கின்ற மிகப் பெரும் பயனாக இருக்கும். அப்படி கிடைத்த அருளினால் இறைவனை தந்தையாக பாவித்து தொடர்ந்து அந்த தொண்டுகளை செய்து கொண்டே வந்தால் தந்தையாக இருந்து அதை செய்ய வைக்கின்ற இறைவனே அதனால் கிடைக்கின்ற அனைத்து நன்மையாகவும் இருக்கின்றான்.

பாடல் #1500

பாடல் #1500: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னை
யென்று தொழுவ னியற்பரஞ் சோதியைத்
துன்று மலர்தூவித் தொழுமின் றொழுந்தோறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினறு தொழுவன கிடநதெம பிரானறனனை
யெனறு தொழுவ னியறபரஞ சொதியைத
துனறு மலரதூவித தொழுமின றொழுநதொறுஞ
செனறு வெளிபபடுந தெவர பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நின்று தொழுவன் கிடந்து எம் பிரான் தன்னை
என்றும் தொழுவன் இயற் பரஞ் சோதியை
துன்று மலர் தூவி தொழுமின் தொழும் தோறும்
சென்று வெளிப்படும் தேவர் பிரானே.

பதப்பொருள்:

நின்று (மனதை ஒருநிலைப் படுத்தி) தொழுவன் (தொழுகின்றேன்) கிடந்து (எதை செய்தாலும் அதை இறைவனை நினைத்தே செய்கின்றேன்) எம் (எம்) பிரான் (தந்தையாகிய) தன்னை (இறைவனை)
என்றும் (எப்போதும்) தொழுவன் (தொழுது கொண்டே இருக்கின்றேன்) இயற் (தானாகவே இருக்கின்ற) பரஞ் (பரம்பெரும்) சோதியை (சோதியாக இருக்கின்ற இறைவனை)
துன்று (மாசு இல்லாத) மலர் (மலர்களைத்) தூவி (தூவி) தொழுமின் (நீங்களும் தொழுங்கள்) தொழும் (அப்படி தொழுது கொண்டே) தோறும் (எப்போதும் இருக்கின்ற போது)
சென்று (நீங்கள் செய்கின்ற அனைத்திற்குள்ளும் சென்று) வெளிப்படும் (சோதியாக வெளிப்பட்டு அருள்வான்) தேவர் (தேவர்களுக்கும்) பிரானே (தந்தையாக இருக்கின்ற இறைவன்).

விளக்கம்:

எம் தந்தையாகிய இறைவனை மனதை ஒருநிலைப் படுத்தி தொழுகின்றேன் எதை செய்தாலும் அதை அவனை நினைத்தே செய்கின்றேன். தானாகவே இருக்கின்ற பரம்பெரும் சோதியாக இருக்கின்ற அந்த இறைவனை எப்போதும் தொழுது கொண்டே இருக்கின்றேன். உங்களுக்கும் தந்தையாகிய அந்த இறைவனை மாசு இல்லாத மலர்களைத் தூவி நீங்களும் தொழுங்கள் அப்படி தொழுது கொண்டே எப்போதும் இருக்கின்ற போது நீங்கள் செய்கின்ற அனைத்திற்குள்ளும் சென்று சோதியாக வெளிப்பட்டு அருள்வான் தேவர்களுக்கும் தந்தையாக இருக்கின்ற இறைவன்.

பாடல் #1501

பாடல் #1501: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

திருமன்னுஞ் சற்புத்திர மார்க சரிதை
யுருமன்னி வாழு முலகத்தீர் கேண்மின்
கருமன்னு பாசங் கைகூப்பத் தொழுது
விருமன்னு நாடோறு மின்புற் றிருந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

திருமனனுஞ சறபுததிர மாரக சரிதை
யுருமனனி வாழு முலகததீர கெணமின
கருமனனு பாசங கைகூபபத தொழுது
விருமனனு நாடொறு மினபுற றிருநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

திரு மன்னும் சற் புத்திர மார்க சரிதை
உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்
கரு மன்னு பாசம் கை கூப்ப தொழுது
இரு மன்னு நாள் தோறும் இன்பு உற்று இருந்தே.

பதப்பொருள்:

திரு (இறை சக்தியானது ஆன்மாவிற்குள்) மன்னும் (நிலை பெற்று இருக்கும்) சற் (இறைவனை தந்தையாக பாவித்து) புத்திர (தம்மை மகனாக பாவிக்கின்ற) மார்க (வழி முறையே) சரிதை (இறைவனை அடைவதற்கு மூல காரணமாக செயல் படுகின்ற வழிமுறையை சொல்லுகிறேன்)
உரு (உடல் இருக்கும் வரை) மன்னி (நிலை பெற்று) வாழும் (வாழுகின்ற) உலகத்தீர் (உலகத்தவர்களே) கேண்மின் (கேளுங்கள்)
கரு (கருவிலேயே) மன்னு (நிலை பெற்று வருகின்ற) பாசம் (பாசத் தளைகளை நீக்கி இறைவனை அடைவதற்கு) கை (இரண்டு கைகளையும்) கூப்ப (ஒன்றாக கூப்பி) தொழுது (இறைவனை தொழுது வணங்கி)
இரு (இறைவனை நினைத்துக் கொண்டே இருப்பதில்) மன்னு (நிலை பெற்று) நாள் (தினம்) தோறும் (தோறும்) இன்பு (அதன் மூலம் கிடைக்கின்ற பேரின்பத்தை) உற்று (அனுபவித்துக் கொண்டே) இருந்தே (இருங்கள்).

விளக்கம்:

இறை சக்தியானது ஆன்மாவிற்குள் நிலை பெற்று இருக்கும் இறைவனை தந்தையாக பாவித்து தம்மை மகனாக பாவிக்கின்ற வழி முறையே இறைவனை அடைவதற்கு மூல காரணமாக செயல் படுகின்ற வழி முறையை சொல்லுகிறேன் உடல் இருக்கும் வரை நிலை பெற்று வாழுகின்ற உலகத்தவர்களே கேளுங்கள். கருவிலேயே நிலை பெற்று வருகின்ற பாசத் தளைகளை நீக்கி இறைவனை அடைவதற்கு அவனை இரண்டு கைகளையும் ஒன்றாக கூப்பி தொழுது வணங்கி அவனை நினைத்துக் கொண்டே இருப்பதில் நிலை பெற்று தினம் தோறும் அதன் மூலம் கிடைக்கின்ற பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டே இருங்கள்.