பாடல் #1291

பாடல் #1291: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

அறிந்த பிரதமை யோடாறு மறிஞ்சு
அறிந்தவச் சத்தமி மேலிவை குற்றம்
அறிந்தவை யொன்றுவிட் டொன்றுபத் தாக
அறிந்த வலமது வாக நடவே.

விளக்கம்:

உலக நடப்பில் அறிந்து கொண்ட சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிக்கும் திதிகளில் முதல் திதியாகிய பிரதமையோடு துவிதியை திருதியை சதுர்த்தி பஞ்சமி சஷ்டி ஆகிய ஐந்து திதிகளையும் சேர்த்து மொத்தம் ஆறு திதிகளையும் அவை வருகின்ற கால அளவுகளையும் அறிந்து கொண்டு அந்த திதிகளில் ஏழாவதான சப்தமி திதியிலிருந்து அதற்கு மேல் இருக்கும் ஒன்பது திதிகளில் சிறப்பில்லாத சப்தமி நவமி ஏகாதசி திரயோதசி ஆகிய திதிகளை விட்டு விட்டு சிறப்பான அஷ்டமி தசமி துவாதசி சதுர்த்தசி ஆகிய நான்கு திதிகளுடன் முதல் ஆறு திதிகளையும் சேர்த்து மொத்தம் பத்து திதிகளிலும் மூச்சுக் காற்றை வலது நாடியின் வழியாக உள்ளிழுத்து வெளிவிட்டு பைரவரை நினைத்து வழிபடலாம்.

வளர்பிறை திதிகள்:

  1. பிரதமை
  2. துவிதியை
  3. திருதியை
  4. சதுர்த்தி
  5. பஞ்சமி
  6. சஷ்டி
  7. சப்தமி
  8. அஷ்டமி
  9. நவமி
  10. தசமி
  11. ஏகாதசி
  12. துவாதசி
  13. திரயோதசி
  14. சதுர்த்தசி
  15. பெளர்ணமி

தேய் பிறை திதிகள்: மேலுள்ள முதல் 14 திதிகளுடன் சேர்ந்து அமாவாசையில் முடிவது.

பாடல் #1292

பாடல் #1292: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

நடந்து வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த வுயிரது வுண்ணும் பொழுது
படர்ந்த வுடல்கொடு பந்தாட லாமே.

விளக்கம்:

பாடல் #1291 இல் உள்ளபடி குறிப்பிட்ட திதிகளில் முறைப்படி தியானம் செய்து பைரவரை மானசீகமாக வழிபடும் போது திரிசூலத்தையும் கபாலத்தையும் தமது திருக்கைகளில் ஏந்திக் கொண்டு சாதகருக்குள்ளிருந்து பைரவர் வெளிப்பட்டு இதுவரை சாதகர் கடந்து வந்த அனைத்து தீய கர்மங்களையும் தமது திருக்கண்களால் சுட்டெரித்து அழித்து அருள்வார். அதன் பிறகு இனி வரும் தீய சக்திகளும் சாதகரை பாதிக்காதவாறு தடுத்துக் காப்பாற்றும் சக்கர அமைப்பை சாதகரைச் சுற்றி படர்ந்து இருக்கும் படி செய்து அருள்வார். இனி சாதகர் தமது வழிபாட்டைத் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அவரைச் சுற்றி படர்ந்து இருக்கும் சக்கர அமைப்பின் மூலம் இனி வரும் தீய கர்மங்களையும் நெருங்க விடாமல் பந்தாடி சாதகரால் விரட்ட முடியும்.

பாடல் #1293

பாடல் #1293: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

ஆமேவப் பூண்டரு ளாதி வயிரவ
னாமே கபாலமுஞ் சூலமுங் கைக்கொண்டங்
காமே தமருக பாசமுங் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே.

விளக்கம்:

பாடல் #1292 இல் உள்ளபடி சாதகரைச் சுற்றிப் படர்ந்து சாதகர் தரித்து இருக்கும் பைரவச் சக்கரமானது ஆதி மூலமாகிய பைரவர் கொடுத்து அருளியது. பைரவரது அருளானது பைரவச் சக்கரத்தை தரித்த சாதகரின் கைகளில் சூட்சுமமாக இறப்பில்லாத தன்மையை அருளும் கபாலமாகவும் தீய சக்திகளை தடுத்து நிற்கும் திரிசூலமாகவும் நன்மை தீமை ஆகிய இரண்டு வினைகளையுமே சேர விடாமால் இரண்டு பக்கமும் வருகின்ற நாதத்தால் காத்து அருளுகின்ற தமருகமாகவும் உலகப் பற்றுக்களை அறுக்கின்ற பாசக் கயிறாகவும் பிறவி எடுப்பதற்கான கர்மங்களை அழிக்கின்ற சிரமாகவும் இனி வரும் பிறவிகளையும் அறுக்கின்ற வாளாகவும் இருக்கின்றது.

கருத்து: பைரவர் அருளால் சாதகர் பெற்ற பைரவச் சக்கரத்தின் மூலம் சாதகர் இறப்பில்லாத தன்மையையும் தீய சக்திகளை அண்ட விடாமல் தடுத்தும் பிறவி எடுப்பதற்கு காரணமாகிய நன்மை தீமை ஆகிய இரண்டு வினைகளுமே இருக்கக்கூடாது என்பதனால் அதை தடுத்தும் உலகப் பற்றுக்களை நீக்கியும் பிறவி எடுப்பதற்கான கர்மங்களை அழித்தும் ஏற்கனவே இருக்கின்ற கர்மங்களினால் இனி எடுக்க வேண்டிய பிறவிகளை அறுத்தும் பயன் பெறுகிறார்.

பாடல் #1294

பாடல் #1294: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

கையவை யாறுங் கருத்துற நோக்கிடு
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்யரு ளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

விளக்கம்:

பாடல் #1293 இல் உள்ளபடி சாதகரிடம் சூட்சுமமாக இருக்கின்ற ஆறு கைகளிலும் ஏந்தி இருக்கின்ற பைரவர் கொடுத்து அருளிய ஆறு ஆயுதங்களையும் எண்ணத்தில் வைத்து ஆராய்ந்து பார்த்தால் சாதகரின் உடலுக்குள்ளேயே வந்து செம்மையான அருள் வடிவமாக வீற்றிருக்கும் பைரவரை அறிந்து கொள்ளலாம். அதன்படி சாதகருக்குள் வந்து வீற்றிருக்கின்ற பைரவர் தமது தூய்மையான அருளை சாதகருக்குக் கொடுத்து அவருக்குள் இருக்கின்ற ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கி பேருண்மையாக விளங்குகின்ற பரம்பொருளை உணரும்படி அருள்வார். அதன் பிறகு பொய்யான மாயை அகங்காரம் ஆகியவற்றை விட்டுவிட்டு சாதகர்கள் பைரவரை பூஜித்து வழிபாடு செய்வார்கள்.

பாடல் #1295

பாடல் #1295: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

பூசனை செய்யப் பொருந்தியோ ராயிரம்
பூசனை செய்ய மதுவுட னாடுமால்
பூசனை சாந்து சவாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.

விளக்கம்:

பாடல் #1294 இல் உள்ளபடி பைரவரை பூஜித்து வழிபடுவதற்கு அவருக்கு ஏற்ற மந்திரத்தை ஒரு ஆயிரம் முறை மானசீகமாக உச்சரிக்க வேண்டும். தூய்மையான தேனாலும் நீராலும் அபிஷேகம் செய்ய வேண்டும். சந்தனம் ஜவ்வாது புனுகு ஆகிய நறுமணம் வீசும் பொருட்களை பூச வேண்டும். நெய் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறெல்லாம் செய்து வழிபட்ட பிறகு திருநீறு எடுத்து பூசிக் கொள்ள வேண்டும்.

பாடல் #1296

பாடல் #1296: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

வேண்டிய வாறு கலகமு மாயிடும்
வேண்டிய வாறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய வாறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகுங் கருத்தே.

விளக்கம்:

பாடல் #1295 இல் உள்ள முறைகளின் படி பைரவரை பூஜித்து வழிபாட்டின் மூலமாகவும் பாடல் #1293 இல் உள்ளபடி ஏற்கனவே பெற்ற ஆறு விதமான அருள்களின் மூலமாகவும் சாதகர்கள் தம்மை நாடி வருகின்ற தீமைகளையும் நன்மைகளாக மாற்றி விட முடியும். அந்த ஆறு விதமான அருள்களுக்கு உள்ளிருக்கும் பேருண்மையான பரம்பொருளையும் தமக்குள் பெற்று உணர்ந்த பிறகு சாதகர்களுக்குள்ளிருந்து பரம்பொருள் கொடுக்கின்ற வழியைப் பின்பற்றி அவர்கள் சாதகம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் அவர்கள் என்ன நினைத்தாலும் அது அப்படியே நடக்கும்.