பாடல் #1226

பாடல் #1226: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி யம்பொற் றிருவொடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
ஆனவை யோமெனு மவ்வுயிர் மார்க்கமே.

விளக்கம்:

பாடல் #1225 இல் உள்ளபடி பரசிவமாகவே ஆகிவிட்ட சாதகருடைய தலை உச்சிக்கு மேல் இருக்கின்ற பரவெளியில் பேரொளியாக வீற்றிருக்கும் சிவத்தின் சடை முடியாக வருகின்ற ஒளிக்கீற்றுகளே பேரின்பத்தில் அசைந்து ஆடுகின்ற சக்தியாகவும் அவளது தூய்மையான பொன் போன்ற திரு உருவமாகவும் இருக்கின்றது. இவர்கள் இருவரையும் முதன்மையாக வைத்து ஓதுகின்ற அனைத்து மந்திரங்களுக்குள்ளும் சரிசமமான பாகமாக இருப்பது அனைத்துமாகிய ஓம் எனும் பிரணவ மந்திரமாகும். இந்தப் பிரணவ மந்திரத்துக்குள் அடங்கி இருக்கின்ற அனைத்து உயிர்களுக்கும் இறைவனை நோக்கி சென்று அடைகின்ற வழியாக அதுவே இருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.