பாடல் #1458

பாடல் #1458: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)

ஊழி தோறூழி யுணர்ந்தவர்க் கல்லது
யூழி தோறூழி யுணரவுந் தானொட்டா
ராழி யமரு மரியய னென்றுளோ
ரூழி முயன்று மோருச்சியுள் ளானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஊழி தொறூழி யுணரநதவரக கலலது
யூழி தொறூழி யுணரவுந தானொடடா
ராழி யமரு மரியய னெனறுளொ
ரூழி முயனறு மொருசசியுள ளானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஊழி தோறும் ஊழி உணர்ந்தவர்க்கு அல்லது
ஊழி தோறும் ஊழி உணரவும் தான் ஒட்டார்
ஆழி அமரும் அரி அயன் என்று உளோர்
ஊழி முயன்றும் ஓர் உச்சி உள்ளானே.

பதப்பொருள்:

ஊழி (ஊழிக்காலம்) தோறும் (ஒவ்வொன்றிலும்) ஊழி (ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை) உணர்ந்தவர்க்கு (யோகத்தின் வழியால் சென்று தமக்குள் உணர்ந்தவர்களை) அல்லது (தவிர வேறு யாராலும் உணர இயலாது)
ஊழி (ஊழிக்காலம்) தோறும் (ஒவ்வொன்றிலும்) ஊழி (ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை) உணரவும் (தமக்குள் உணர்ந்து கொண்ட யோகியர்கள்) தான் (அந்த ஊழிக்காலத்தோடு தானும்) ஒட்டார் (ஒட்டாமல் விலகி இறைவனை மட்டுமே சார்ந்து இருப்பார்கள்)
ஆழி (பாற் கடலில்) அமரும் (பள்ளி கொண்டு அமர்ந்து இருக்கும்) அரி (திருமால்) அயன் (அவரது தொப்புள் கொடியில் இருக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மன்) என்று (என்று இருக்கின்ற) உளோர் (தெய்வங்களும் ஊழிக்காலத்தோடு ஒட்டாமல் இருக்கின்றார்கள்)
ஊழி (ஊழிக்காலம்) முயன்றும் (எவ்வளவுதான் இவர்களை அழிக்க முயற்சி செய்தாலும்) ஓர் (அதனால் அழிக்க முடியாத ஒரு மாபெரும்) உச்சி (உயரத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கின்ற அரனாக) உள்ளானே (இறைவன் இருக்கின்றான்).

விளக்கம்:

ஊழிக்காலம் ஒவ்வொன்றிலும் ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை யோகத்தின் வழியால் சென்று தமக்குள் உணர்ந்தவர்களை தவிர வேறு யாராலும் உணர இயலாது. ஊழிக்காலம் ஒவ்வொன்றிலும் ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை தமக்குள் உணர்ந்து கொண்ட யோகியர்கள் அந்த ஊழிக்காலத்தோடு தானும் ஒட்டாமல் விலகி இறைவனை மட்டுமே சார்ந்து இருப்பார்கள். பாற் கடலில் பள்ளி கொண்டு அமர்ந்து இருக்கும் திருமால் அவரது தொப்புள் கொடியில் இருக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மன் என்று இருக்கின்ற தெய்வங்களும் ஊழிக்காலத்தோடு ஒட்டாமல் இருக்கின்றார்கள். ஊழிக்காலம் எவ்வளவுதான் இவர்களை அழிக்க முயற்சி செய்தாலும் அதனால் அழிக்க முடியாத ஒரு மாபெரும் உயரத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கின்ற அரனாக இறைவன் இருக்கின்றான்.

கருத்து: பாடல் #1457 இல் உள்ளபடி யோகம் செய்து தமக்குள் இறைவனை உணர்ந்து அவனை மட்டுமே சார்ந்து இருக்கின்றவர்களை ஊழிக்காலம் எவ்வளவு முயன்று பார்த்தாலும் அழிக்க முடியாத அளவு பாதுகாக்கின்றான் இறைவன்.

பாடல் #1457

பாடல் #1457: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)

நெறிவழி யேசென்று நேர்மையி லொன்றித்
தறியிருந் தாப்போலத் தம்மை யிருத்திச்
சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்
குறியறி வாளர்குக் கூடலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நெறிவழி யெசெனறு நெரமையி லொனறித
தறியிருந தாபபொலத தமமை யிருததிச
சொறியினுந தாககினுந துணணென றுணராக
குறியறி வாளரகுக கூடலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நெறி வழியே சென்று நேர்மையில் ஒன்றி
தறி இருந்தால் போல தம்மை இருத்தி
சொறியினும் தாக்கினும் துண் என்று உணரா
குறி அறிவாளர்கு கூடலும் ஆமே.

பதப்பொருள்:

நெறி (இறைவனை அடைவதற்கு என்று குருநாதர் அருளிய நெறிமுறைகளின்) வழியே (வழியாகவே) சென்று (மனதை செலுத்தி) நேர்மையில் (அந்த வழிமுறையில் சிறிது அளவும் குறை இல்லாமல் முறைப்படி செய்து) ஒன்றி (அதிலேயே மனதை ஒன்றி வைத்து)
தறி (தரையில் ஊன்றி வைத்த கழி) இருந்தால் (அசையாமல் இருப்பதைப்) போல (போலவே) தம்மை (தாமும்) இருத்தி (எதனாலும் அசையாமல் இருந்து)
சொறியினும் (மழை பொழிந்தாலும் / மனது எங்கோ உள்ளுக்குள் அழைத்து சென்றாலும்) தாக்கினும் (காற்று அடித்தாலும் / சுற்றுப் புறத்தில் எது நடந்தாலும்) துண் (அசையாத கழியைப் போலவே அதனால் பயம்) என்று (என்ற) உணரா (உணர்வே சிறிது அளவும் இல்லாமல்)
குறி (இறைவனை அடைவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு) அறிவாளர்கு (அவனை தமக்குள் அறிந்து தெளிந்தவர்களுக்கு) கூடலும் (இறைவனோடு ஒன்றாக கூடுவது) ஆமே (இயலும்).

விளக்கம்:

இறைவனை அடைவதற்கு என்று குருநாதர் அருளிய நெறிமுறைகளின் வழியாகவே மனதை செலுத்தி அந்த வழிமுறையில் சிறிது அளவும் குறை இல்லாமல் முறைப்படி செய்து அதிலேயே மனதை ஒன்றி வைத்து தரையில் ஊன்றி வைத்த கழி அசையாமல் இருப்பதைப் போலவே தாமும் எதனாலும் அசையாமல் இருந்து, மழை பொழிந்தாலும் காற்று அடித்தாலும் அதனால் சிறிதும் அசையாத கழியைப் போலவே தம்மை சுற்றி எது நடந்தாலும் அதனால் பயம் என்ற உணர்வே சிறிது அளவும் இல்லாமல் இறைவனை அடைவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அவனை தமக்குள் அறிந்து தெளிந்தவர்களுக்கு இறைவனோடு ஒன்றாக கூடுவது இயலும்.

Thirumandhiram – Fourth Thandhiram

Complete Songs with their meanings from Thirumandhiram Fourth Thandhiram is given as PDF eBook in the following link for download. You can also view the actual book below that in an embedded viewer.

பாடல் #1456

பாடல் #1456: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)

அன்பி னுருகுவ னாளும் பணிசெய்வன்
செம்பொன் செய்மேனிக் கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கரு
ளென்பினுட் சோதியி லிங்கு நின்றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அனபி னுருகுவ னாளும பணிசெயவன
செமபொன செயமெனிக கமலத திருவடி
முனபுநின றாஙகெ மொழிவ தெனககரு
ளெனபினுட சொதியி லிஙகு நினறானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அன்பின் உருகுவன் நாளும் பணி செய்வன்
செம் பொன் செய் மேனி கமலத் திருவடி
முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்கு அருள்
என்பின் உள் சோதியில் இங்கு நின்றானே.

பதப்பொருள்:

அன்பின் (இறைவன் மேல் கொண்ட உண்மையான அன்பினால்) உருகுவன் (உருகுபவனும்) நாளும் (தினந்தோறும்) பணி (செய்கின்ற அனைத்து விதமான செயல்களையும்) செய்வன் (இறைவனுக்காக செய்வதாகவே நினைத்துக் கொண்டு செய்பவனும்)
செம் (தூய்மையான பசும்) பொன் (பொன்னால்) செய் (செய்யப்பட்டது) மேனி (போல பிரகாசிக்கின்ற திருமேனியையும்) கமலத் (செந்தாமரை மலர் போன்ற) திருவடி (திருவடிகளையும் கொண்டு தமக்குள் இருக்கும் சோதி வடிவான இறைவனாகவே)
முன்பு (தமக்கு முன்பு) நின்று (நின்று) ஆங்கே (அங்கு இருக்கின்ற அனைவரையும் பார்ப்பவனும்) மொழிவது (அவர்கள் சொல்லுகின்ற அனைத்துமே) எனக்கு (தமக்கு இறைவன்) அருள் (கொடுத்த அருளாக எடுத்துக் கொள்கின்றவனும் ஆகிய பக்தனின்)
என்பின் (எலும்புகளால் மூடியிருக்கும் உடலுக்கு) உள் (உள்ளே) சோதியில் (தங்கம் போல பிரகாசிக்கின்ற சோதியாக) இங்கு (பக்தன் இருக்கின்ற இடத்திலேயே) நின்றானே (நிற்கின்றான் இறைவன்).

விளக்கம்:

இறைவன் மேல் கொண்ட உண்மையான அன்பினால் உருகுபவனும் தினந்தோறும் தாம் செய்கின்ற அனைத்து விதமான செயல்களையும் இறைவனுக்காகவே செய்வதாகவே நினைத்துக் கொண்டு செய்பவனும் தூய்மையான பசும் பொன்னால் செய்யப்பட்டது போல பிரகாசிக்கின்ற திருமேனியையும் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளையும் கொண்டு தமக்குள் இருக்கும் சோதி வடிவான இறைவனாகவே தமக்கு முன்பு நிற்கின்றவர்கள் அனைவரையும் பார்ப்பவனும் அவர்கள் சொல்லுகின்ற அனைத்துமே தமக்கு இறைவன் கொடுத்த அருளாக எடுத்துக் கொள்கின்றவனும் ஆகிய பக்தனின் எலும்புகளால் மூடியிருக்கும் உடலுக்கு உள்ளே தங்கம் போல பிரகாசிக்கின்ற சோதியாக பக்தன் இருக்கின்ற இடத்திலேயே நிற்கின்றான் இறைவன்.

பாடல் #1455

பாடல் #1455: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)

பத்தன் கிரிகை சரிதை பவில்வுற்றுச்
சுத்த வருளாற் றுரிசற்ற யோகத்தி
லுய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்
சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பததன கிரிகை சரிதை பவிலவுறறுச
சுதத வருளாற றுரிசறற யொகததி
லுயதத நெறியுற றுணரகினற ஞானததாற
சிததங குருவரு ளாறசிவ மாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பத்தன் கிரிகை சரிதை பவில் உற்று
சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்
உய்த்த நெறி உற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே.

பதப்பொருள்:

பத்தன் (பக்தியின் முறைமையை கடைபிடிக்கின்ற பக்தன்) கிரிகை (கிரியையும்) சரிதை (சரியையும்) பவில் (முறைப்படி கற்று அதனை கடைபிடிப்பதையே) உற்று (குறிக்கோளாகக் கொண்டு செய்யும் போது)
சுத்த (இறைவனின் தூய்மையான) அருளால் (அருளால்) துரிசு (ஒரு குற்றமும்) அற்ற (இல்லாத) யோகத்தில் (யோகம் கிடைக்கப் பெற்று)
உய்த்த (தமக்கு கிடைத்த மேன்மையான) நெறி (வழியை) உற்று (குறிக்கோளாகக் கொண்டு செய்யும் போது) உணர்கின்ற (அதன் பயனால் தமக்குள் உணர்கின்ற) ஞானத்தால் (உண்மை ஞானத்தின் வழியாக)
சித்தம் (சித்தம் தெளிவு பெற்று) குரு (குருவாக இருக்கின்ற இறைவனின்) அருளால் (அருளால்) சிவம் (தமது சித்தம் சிவமாகவே) ஆகுமே (ஆகி விடும்).

விளக்கம்:

பாடல் #1454 இல் உள்ளபடி பக்தியின் முறையை கடைபிடிக்கின்ற பக்தன் கிரியையும் சரியையும் முறைப்படி கற்று அதனை கடைபிடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செய்யும் போது இறைவனின் தூய்மையான அருளால் யோகம் கிடைக்கப் பெறும். அப்படி தமக்கு கிடைத்த மேன்மையான யோக வழியை குறிக்கோளாகக் கொண்டு ஒரு குற்றமும் இல்லாமல் செய்யும் போது அதன் பயனால் தமக்குள் உண்மை ஞானத்தை உணரலாம். அப்படி உணர்ந்த உண்மை ஞானத்தின் வழியாக சித்தம் தெளிவு பெற்று குருவாக இருக்கின்ற இறைவனின் அருளால் அவர் தமது சித்தம் சிவமாகவே ஆகி விடும்.

பாடல் #1454

பாடல் #1454: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)

இதுபணிந் தெண்டிசை மண்டல மெல்லா
மதுபணி செய்கின்ற வாளது கூறி
னிதுபணி மானிடர் செய்பணி யீசன்
பதிபணி செய்வது பத்திமை காணே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இதுபணிந தெணடிசை மணடல மெலலா
மதுபணி செயகினற வாளது கூறி
னிதுபணி மானிடர செயபணி யீசன
பதிபணி செயவது பததிமை காணெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இது பணிந்து எண் திசை மண்டலம் எல்லாம்
அது பணி செய்கின்ற வாள் அது கூறின்
இது பணி மானிடர் செய் பணி ஈசன்
பதி பணி செய்வது பத்திமை காணே.

பதப்பொருள்:

இது (கிரியை வழிமுறையை கடைபிடிக்கின்றவர்கள் இந்த உடலுக்குள் இருப்பது இறை சக்தியே) பணிந்து (என்பதை அறிந்து கொண்டு அதை பணிந்து வணங்கி) எண் (எட்டு) திசை (திசைகளிலும்) மண்டலம் (இருக்கின்ற மண்டலங்கள்) எல்லாம் (அனைத்திலும்)
அது (அங்கு நிகழ்கின்ற) பணி (அனைத்து விதமான செயல்களையும்) செய்கின்ற (செய்கின்ற) வாள் (ஒளியாக இருக்கின்றதும்) அது (அதுவே என்பதை) கூறின் (எடுத்துச் சொன்னால்)
இது (இந்த உலகத்தில்) பணி (தாம் செய்ய வேண்டிய செயல்கள் என்று) மானிடர் (மனிதர்களால்) செய் (செய்யப் படுகின்ற) பணி (அனைத்து செயல்களும்) ஈசன் (இறைவனே செய்கின்றான் என்பதை அறிந்து கொண்டு)
பதி (அனைத்திற்கும் அதிபதியாக இருக்கின்ற இறைவனுக்கே) பணி (தாம் செய்கின்ற அனைத்து செயல்களையும் செய்வதாக எண்ணிக் கொண்டு) செய்வது (அதை அன்போடு செய்வது) பத்திமை (கிரியை வழியில் செல்லுகின்ற பக்தியின் முறைமை) காணே (என்று கண்டு கொள்ளுங்கள்).

விளக்கம்:

கிரியை வழிமுறையை கடைபிடிக்கின்றவர்கள் இந்த உடலுக்குள் இருப்பது இறை சக்தியே என்பதை அறிந்து கொண்டு அதை பணிந்து வணங்கி எட்டு திசைகளிலும் இருக்கின்ற மண்டலங்கள் அனைத்திலும் நிகழ்கின்ற அனைத்து விதமான செயல்களையும் செய்கின்ற ஒளியாக இருக்கின்றதும் அதுவே என்பதை எடுத்துச் சொன்னால், இந்த உலகத்தில் தாம் செய்ய வேண்டிய செயல்கள் என்று மனிதர்களால் செய்யப் படுகின்ற அனைத்து செயல்களும் இறைவனே செய்கின்றான் என்பதை அறிந்து கொண்டு அனைத்திற்கும் அதிபதியாக இருக்கின்ற இறைவனுக்கே தாம் செய்கின்ற அனைத்து செயல்களையும் செய்வதாக எண்ணிக் கொண்டு அவற்றை அன்போடு செய்வது கிரியை வழியில் செல்லுகின்ற பக்தியின் முறைமை என்று கண்டு கொள்ளுங்கள்.

பாடல் #1453

பாடல் #1453: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)

கோனக்கன் றாயே குரைகழ லேத்துமின்
ஞானக்கன் றாயே நடுவே யுமிழ்தரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழு
மானைக்கன் றீசனருள் பள்ள மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொனககன றாயெ குரைகழ லெததுமின
ஞானககன றாயெ நடுவெ யுமிழதரும
வானககன றாகிய வானவர கைதொழு
மானைகன றீசனருள பளள மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கோன கன்று ஆயே குரை கழல் ஏத்துமின்
ஞான கன்று ஆயே நடுவே உமிழ் தரும்
வான கன்று ஆகிய வானவர் கை தொழும்
ஆனை கன்று ஈசன் அருள் பள்ளம் ஆமே.

பதப்பொருள்:

கோன (நேர் வழியில் செல்ல முடியாமல் வினைகளால் அலைக்கழிக்கப்பட்டு விதி வழியே செல்லுகின்ற) கன்று (பிள்ளையாக) ஆயே (இருந்தாலும்) குரை (ஒலி பொருந்திய சிலம்புகளை அணிந்திருக்கும்) கழல் (இறைவனின் திருவடிகளை) ஏத்துமின் (போற்றி வணங்கிக் கொண்டே இருங்கள்)
ஞான (அப்படி இருந்தால் அவனது அருளால் ஞானம் பெற்ற) கன்று (பிள்ளையாக) ஆயே (மாறி) நடுவே (தமக்கு நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியில் இருந்து) உமிழ் (அமிழ்தம் சுரக்கும் படி) தரும் (கொடுக்கும் அதை அருந்திக் கொண்டு இருந்தால்)
வான (வானத்தில்) கன்று (இருக்கும் பிள்ளைகள்) ஆகிய (ஆகிய) வானவர் (தேவர்களும்) கை (சென்று கைகூப்பி) தொழும் (தொழுகின்ற)
ஆனை (ஆன்மாவைக் கொண்டு இருக்கின்ற) கன்று (பிள்ளைகளாகிய உயிர்களுக்கு எல்லாம்) ஈசன் (அதிபதியாகிய இறைவனின்) அருள் (திருவருள் மழையை) பள்ளம் (வாங்கிக் கொள்ளுகின்ற பாத்திரமாக) ஆமே (நீங்கள் ஆகிவிடுவீர்கள்).

விளக்கம்:

நேர் வழியில் செல்ல முடியாமல் வினைகளால் அலைக்கழிக்கப்பட்டு விதி வழியே செல்லுகின்ற பிள்ளைகளாக இருந்தாலும் ஒலி பொருந்திய சிலம்புகளை அணிந்திருக்கும் இறைவனின் திருவடிகளை போற்றி வணங்கிக் கொண்டே இருங்கள். அப்படி வணங்கிக் கொண்டே இருந்தால் அவனது அருளால் ஞானம் பெற்ற பிள்ளைகளாக ஆகி தமக்கு நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியில் இருந்து அமிழ்தம் சுரக்கும் படி கொடுக்கும். அந்த அமிழ்தத்தை அருந்திக் கொண்டு இருந்தால் வானத்தில் இருக்கும் பிள்ளைகளாகிய தேவர்களும் சென்று கைகூப்பி தொழுகின்ற ஆன்மாவைக் கொண்டு இருக்கின்ற பிள்ளைகளாகிய உயிர்களுக்கு எல்லாம் அதிபதியாகிய இறைவனின் திருவருளை நிரம்புகின்ற பாத்திரமாக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.

பாடல் #1452

பாடல் #1452: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமல ரிட்டு வணங்கினு
மூனினை நீக்கி யுணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கானுறு கொடி கடிகமழ சநதனம
வானுற மாமல ரிடடு வணஙகினு
மூனினை நீககி யுணரபவரக கலலது
தெனமர பூஙகழல செரவொண ணாதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கான் உறு கோடி கடி கமழ் சந்தனம்
வான் உறு மா மலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது
தேன் அமர் பூம் கழல் சேர ஒண்ணாதே.

பதப்பொருள்:

கான் (காட்டில் இருக்கும் மரங்களை) உறு (ஊடுறுவிச் சென்று) கோடி (கோடி காத தூரம் பரவுகின்ற) கடி (நறுமணம்) கமழ் (கமழ்கின்ற) சந்தனம் (சந்தனத்தை பூசி வழிபட்டாலும்)
வான் (வானத்தை) உறு (ஊடுறுவும் அளவிற்கு) மா (மிகப் பெரிய அளவு) மலர் (மலர்களால் கட்டிய மாலையை) இட்டு (சூட்டி) வணங்கினும் (வழிபட்டாலும்)
ஊனினை (தான் எனும் எண்ணத்தையும் உடல் சார்ந்த பற்றுக்களையும்) நீக்கி (நீக்கி விட்டு) உணர்பவர்க்கு (இறைவனை உணர்ந்து வழிபடுபவர்களுக்கு) அல்லது (மட்டும் அல்லது)
தேன் (சுவையான தேனினை / தெகிட்டாத தேனைப் போன்ற பேரின்பத்தை கொண்டு இருப்பதால்) அமர் (வண்டுகள் விரும்பி வந்து அமருகின்ற / அடியவர்கள் வந்து சரணடைகின்ற) பூம் (மென்மையான பூவைப் போன்ற) கழல் (இறைவனின் திருவடிகளை) சேர (சென்று சேரும் பெரும் பேறு) ஒண்ணாதே (வேறு யாருக்கும் கிடைக்காது).

விளக்கம்:

காட்டில் இருக்கும் மரங்களை ஊடுறுவிச் சென்று கோடி காத தூரம் பரவுகின்ற நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தை பூசி வழிபட்டாலும் வானத்தை ஊடுறுவும் அளவிற்கு மிகப் பெரிய அளவு மலர்களால் கட்டிய மாலையை சூட்டி வழிபட்டாலும், தான் எனும் எண்ணத்தையும் உடல் சார்ந்த பற்றுக்களையும் நீக்கி விட்டு இறைவனை உணர்ந்து வழிபடுபவர்களுக்கு மட்டுமின்றி சுவையான தேனை போன்ற பேரின்பத்தை கொண்டு இருப்பதால் வண்டுகள் போன்ற அடியவர்கள் விரும்பி வந்து சரணடைகின்ற மென்மையான பூவைப் போன்ற இறைவனின் திருவடிகளை சென்று சேரும் பெரும் பேறு வேறு யாருக்கும் கிடைக்காது.

பாடல் #1451

பாடல் #1451: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)

பத்துத் திசைக்கும் பரமொரு தெய்வமுண்
டேத்துக் கிலரில்லை யெனபத மலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரணெனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பததுத திசைககும பரமொரு தெயவமுண
டெததுக கிலரிலலை யெனபத மலரக
கொததுத திருவடி நீழல சரணெனத
தததும வினைககடல சாராது காணுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பத்து திசைக்கும் பரம் ஒரு தெய்வம் உண்டு
ஏத்துக்கு இலர் இல்லை என பத மலர்க்கு
ஒத்து திரு அடி நீழல் சரண் என
தத்தும் வினை கடல் சாராது காணுமே.

பதப்பொருள்:

பத்து (பத்து விதமான) திசைக்கும் (திசைகளுக்கும்) பரம் (பரம்பொருளாக இருக்கின்ற) ஒரு (ஒரு) தெய்வம் (தெய்வம்) உண்டு (இருக்கின்றது)
ஏத்துக்கு (அந்த தெய்வத்தை எந்த விதத்திலும் போற்றி வணங்குவதற்கு) இலர் (இயலாதவர்கள் என்று) இல்லை (எவரும் இல்லை) என (எனவே) பத (தூய்மையான தாமரை) மலர்க்கு (மலருக்கு)
ஒத்து (இணையாக இருக்கின்ற) திரு (அவனது மேன்மைக்கும் மரியாதைக்கும் உரிய) அடி (திருவடிகளின்) நீழல் (அமைதியையும் குளிர்ச்சியையும் தருகின்ற நிழலே) சரண் (சரணாகதி) என (என்று சரணடைந்தால்)
தத்தும் (மாயையில் சிக்கிக்கொண்டு தத்தளிக்கின்ற) வினை (வினைகளால் சூழ்ந்த) கடல் (கடல் போன்ற இந்த உலக வாழ்க்கையை) சாராது (சார்ந்து இல்லாமல்) காணுமே (அந்த இறை சக்தியை தமக்குள் தரிசிக்கலாம்).

விளக்கம்:

பத்து விதமான திசைகளுக்கும் பரம்பொருளாக இருக்கின்ற ஒரு தெய்வம் இருக்கின்றது. அந்த தெய்வத்தை எந்த விதத்திலும் போற்றி வணங்குவதற்கு இயலாதவர்கள் என்று எவரும் இல்லை (அனைவராலும் இயலும்). ஆகவே தூய்மையான தாமரை மலர் போன்று இருக்கின்ற அவனது மேன்மைக்கும் மரியாதைக்கும் உரிய திருவடிகளின் அமைதியையும் குளிர்ச்சியையும் தருகின்ற நிழலே சரணாகதி என்று சரணடைந்தால் மாயையில் சிக்கிக்கொண்டு தத்தளிக்கின்ற வினைகளால் சூழ்ந்த கடல் போன்ற இந்த உலக வாழ்க்கையை சார்ந்து இல்லாமல் அந்த இறை சக்தியை தமக்குள் தரிசிக்கலாம்.

கருத்து: இறைவனை அடைவதற்கு அருளப்பட்ட சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு விதமான வழிமுறைகளில் சரியை செய்வதற்கு ஊனமில்லாத ஆரோக்கியமான உடல் வேண்டும். யோகம் செய்வதற்கு உறுதியான உடலும் மனமும் வேண்டும். ஞானம் மூலம் இறைவனை அடைவதற்கு குருவருளும் திருவருளும் இருக்க வேண்டும். ஆனால் கிரியையை எவரும் எந்த விதத்திலும் செய்ய முடியும்.

பாடல் #1450

பாடல் #1450: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

சமயம் பலசுத்தி தன்செய லற்றிடு
மமையும் விசேடமு மரன்மந்திர சுத்தி
சமய நிருவாணங் கலாசுத்தி யாகு
மமைமன்னு ஞானமார்க் கம்மபி டேகமே.

பதம் பிரித்தது:

சமயம் பல சுத்தி தன் செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன் மந்திர சுத்தி
சமய நிருவாணம் கலா சுத்தி ஆகும்
அமை மன்னு ஞான மார்க்கம் அபிடேகமே.

பதப்பொருள்:

சமயம் (சமயம் சொல்கின்ற முறைப்படி அமைக்கப்பட்ட) பல (பலவிதமான கோயில்களுக்கு) சுத்தி (சென்று அவற்றை சுற்றி வந்தால்) தன் (தன்னுடைய முயற்சியால்) செயல் (எல்லா செயல்களும்) அற்றிடும் (நடக்கின்றன என்ற எண்ணம் நீங்கி விடும்)
அமையும் (அதன் பிறகு அந்த கோயில்களில் அமைந்து இருக்கின்ற) விசேடமும் (சிறப்பானதும்) அரன் (பாதுகாக்க கூடியதும் ஆகிய) மந்திர (மந்திர உச்சாடனங்களால்) சுத்தி (தம்மை தூய்மை படுத்தி விடும்)
சமய (அதன் பயனால் சமயம் என்று சொல்லப்படுகின்ற எந்த விதிமுறைகளும்) நிருவாணம் (அதனைச் சார்ந்த எண்ணங்களும் நீங்கும் படி) கலா (அறிவை) சுத்தி (சுத்தம்) ஆகும் (ஆக்கி விடும்)
அமை (அதன் பிறகு தன்னுடை சுத்தமான அறிவில்) மன்னு (இறைவனை நிலைபெறும் படி செய்து) ஞான (இறையருளால் பெற்ற ஞானத்தின்) மார்க்கம் (வழியில்) அபிடேகமே (தாம் செய்கின்ற அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றார்).

விளக்கம்:

சமயம் சொல்கின்ற முறைப்படி அமைக்கப்பட்ட பலவிதமான கோயில்களுக்கு சென்று அவற்றை சுற்றி வந்தால் தன்னுடைய முயற்சியால் எல்லா செயல்களும் நடக்கின்றன என்ற எண்ணம் நீங்கி அனைத்தும் இறைவனாலே நடக்கின்றது என்ற எண்ணம் வந்து விடும். அதன் பிறகு அந்த கோயில்களில் அமைந்து இருக்கின்ற சிறப்பானதும் பாதுகாக்க கூடியதும் ஆகிய மந்திர உச்சாடனங்கள் தம்மை தூய்மை படுத்தி விடும். அதன் பயனால் சமயம் என்று சொல்லப்படுகின்ற எந்த விதிமுறைகளும் அதனைச் சார்ந்த எண்ணங்களும் நீங்கும் படி அறிவை சுத்தம் செய்து விடும். அதன் பிறகு தன்னுடை சுத்தமான அறிவில் இறைவனை நிலைபெறும் படி செய்து இறையருளால் பெற்ற ஞானத்தின் வழியில் தாம் செய்கின்ற அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றார்.

குறிப்பு: இந்தப் பாடல் சுவடிகளில் இல்லாததால் பிற்சேர்க்கை பாடலாக இருக்கலாம்.